80 வயது துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும், 70 வயது ஸ்டாலினும் தான் மீண்டும், மீண்டும் பொறுப்புக்கு வர முடியுமா? 90 சதமான நிர்வாகிகள் அதே பழைய முகங்களா? புதியவர்கள் யாவரும் வாரிசுகளா? எனில், கட்சிக்கு முதியோர் முன்னேற்றக் கழகம், இளைஞர் அணிக்கு வாரிசுகள் வளர்ச்சிக் கழகம் என்பதே சரியாகும்!
நடப்பது நல்லாட்சியாம்! தமிழகத்தை திமுக தான் நிரந்தரமாக ஆளப் போகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லையாம்! இதில் திமுகவினரை விட மக்கள் உறுதியாக உள்ளனராம்! கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம்! இது தான் ஸ்டாலினின் பயமாம்! ஏனென்றால்,மக்கள் அளித்த நற்பெயரைக் காப்பாற்ற வேண்டுமாம்!
எவ்வளவு பெரிய பகல் கனவு! கண்ணைத் திறந்து கொண்டே கனவு காண்பவர்களுக்கு, எதிரில் என்ன நடக்கிறது என்ற யதார்த்தம் கூடத் தெரியாது தானே! அது தான் திமுக தலைமையின் நிலை!
மனசாட்சியைத் தொட்டு சொல்லட்டும் முதலமைச்சர் ஸ்டாலின்! உங்கள் அகராதியில் நல்லாட்சி என்பதற்கு ஊழற்ற ஆட்சி என்ற பொருள் இருக்காது என அறிவோம். ஆனால், ‘ஊழல் குறைந்த ஆட்சி’ என்றாவது மதிப்பிட முடியுமா? இன்றைய ஆட்சியை!
ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து குவாரிகளை அதிகப்படுத்தி, ஆற்று மணல் பிரதேசங்களை எல்லாம் இன்னும் பள்ளத்தாக்குகளாக்கி, மணல் அள்ளும் மாபியா கூட்டத்தை வளர்ப்பதும், உயர்ந்தோங்கிய மலைகளை எல்லாம் தரைமட்டமாக்கி ‘ஸ்வாகா’ செய்து கொண்டிருக்கும் துரைமுருகன் தொடங்கி மின்வாரியத்தை மேன் மேலும் கடனாளியாக்கி, டாஸ்மாக்கை வீதிகள் தோறும் விரிவுபடுத்தி கொள்ளையடிக்கும் செந்தில் பாலாஜி வரை ஒவ்வொரு அமைச்சரும் அளவில்லாமல் ஊழலில் ஊறித் திளைப்பது தான் நல்லாட்சியா?
‘காவல்துறையோ தமிழக ஆட்சியாளர்களின் கட்டுபாட்டிலேயே இல்லை’ என்பது கடைசி தமிழன் வரை தெரிந்துள்ளதே கள்ளக் குறிச்சி மாணவியின் மர்ம மரண விவகாரத்திலேயே! தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்களை அருணா ஜெகதீசன் அறிக்கை கிடைத்த பிறகும் இன்னும் தண்டிக்கத் துப்பில்லை! ஊழலில் திளைத்த முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடிக்கடி ரெய்டு நடத்தியதோடு அமைதியாகிவிட்டீர்களே! யாரையேனும் கைது செய்ய முடிந்ததா..?
அப்படியானால் பேரம் நடந்துள்ளதா என மக்கள் சந்தேகிப்பார்களே என்ற குற்ற உணர்வு ஒரு சிறிதும் இல்லையே!
என்ன நல்லாட்சி தருகிறீர்கள்? அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் நொந்து நூலாகியுள்ளனர். இவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எல்லா அரசு துறைகளிலும் நிரந்தர ஊழியர்கள் என்ற நிலையை காலி செய்து, குறைந்த சம்பளம், தற்காலிக ஊழியர்கள் என்று அத்துக் கூலிகளாக, அடிமைகளாக பல்கலைக் கழக பேராசிரியர்கள் தொடங்கி பள்ளிக் கூடம் மற்றும் பாலிடெக்னிக் வரை நடத்தப்படுகிறார்களே..? நாளும், நாளும் நகரத்தை சுத்தப்படுத்தும் கடை நிலை ஊழியரான துப்புரவு தொழிலாளர்களுக்கு கூட எவ்வளவு போராடியும், கண்ணியமான ஊதியம் தந்து பணி நிரந்தரம் செய்ய முடியவில்லையே…? இவை எல்லாம் அநிதீயின் உச்சம் அல்லவா? போராடும் ஆசிரியர்களின் பிரதிகளோ, தொழிலாளர்களின் பிரதிநிதிகளோ முதல்வரை சந்திக்கவே முடியவில்லையே!
முதல்வரானது தொடங்கி மக்களிடம் இருந்தும், கட்சிக்காரர்களிடம் இருந்தும் ,கூட்டணி கட்சித் தலைவர்களிடம் இருந்தும், பத்திரிகையாளர்களிடம் இருந்தும் தன்னத்தானே அந்நியப்படுத்திக் கொண்டு… நாட்டில் எது நடந்தாலும் உங்களுக்கு சம்பந்தமில்லாதது போல வலம் வருகிறீர்களே எப்படி ஐயா?
மூச்சுக்கு முன்னூறு தரம், ”பெரியார், அண்ணா, திராவிட மாடல்” என்கிறீர்கள்! ஆனால், நடைமுறையிலோ, அதற்கு முற்றிலும் எதிரான ஒரு ஆட்சியைத் தான் தந்து கொண்டு உள்ளீர்கள்! ஊழலில் ஊறித் திளைக்கும் காரணத்தால் மத்திய ஆட்சியாளர்களிடம் மறைமுகமாக மண்டியிட்டு, அவர்களின் அத்தனை மக்கள் விரோத சட்டதிட்டங்களையும் அமலப்படுத்தி வருகிறீர்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தேசிய கல்வி கொள்கையில் சுமார் 70 சதவிகிதத்தை தமிழகத்தில் கமுக்கமாக அமல்படுத்தி விட்டீர்கள்!
உயர் நீதிமன்றமே ”கோவில் கும்பாபிஷேகங்களை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் சம பங்களிப்பில் நடத்த வேண்டும்” என ஆணையிட்டும் ஏன் இந்த திராவிட மாடல் ஆட்சியாளர்களால் அதை அமல்படுத்த முடியவில்லை. ‘100 சதவிகிதம் பார்ப்பனர்களை வைத்து சமஸ்கிருதத்தில் தான் கோவில் கும்பாபிஷேகங்களை நடத்துவோம்’ எனச் செயல்படுவது தான் திராவிட மாடலா? அதுவும், உங்கள் குடும்பமே வெளிப்படையாக வேள்விகள், யாகங்கள் என்று கோவில் கோவிலாக சென்று செய்து கொண்டிருப்பதை திராவிட உணர்வுள்ள எந்த திமுககாரனாலும் ஏற்க முடியாது. கடவுள் நம்பிக்கை என்பது பாதகமில்லை. ஆனால், மூட நம்பிக்கையில் முதல்வர் குடும்பமே திளைப்பது அவமானமில்லையா?
திமுக பொதுக் குழுவில் இந்த ஆட்சியின் தோல்விகள் தொடர்பாகவும், ஆட்சித் தலைமை பாஜகவினரைக் கண்டு பயந்து நடுங்கும் விதமாக நடந்து கொள்வது குறித்தும் எந்த ஒரு விவாதமும், முணுமுணுப்பும் கூட இல்லையே!
ஆளுநர் ஆர்.என்.ரவியும், அண்ணாமலையும் அடித்து முன்னேறி நகர்வதும், திமுகவின் ஆட்சித் தலைமையோ அஞ்சி நடுங்கி பின்வாங்குவதையும் திமுக தொண்டர்களே விரக்தியோடு சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்து வருகிறார்களே! பொதுக் குழுவில் இது தொடர்பாக யாரும் வாய் திறவாது பார்த்துக் கொள்வது சாமார்த்தியமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அடிப்படையில் இந்த கட்சியும் ஆட்சியும் அடித்தளமே பலமில்லாமல் உளுத்துப் போய்க் கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் முகத்தில் அறைவது போல தெரிய வந்த நிலையிலும், எதுவும் தெரியாதவாறு, பாலாறும், தேனாறும் ஓடுவதாக பேசி சந்தோசப்பட்டுக் கொள்வது அறியாமையா? அல்லது அகந்தையா?
கட்சித் தேர்தலையாவது ஜனநாயகமாக நடத்த முடிகிறதா உங்களால்? மக்களிடமும், தொண்டர்களிடமும் செல்வாக்கு பெற்றவர்களை மாவட்டச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறீர்களா? அண்ணா காலத்தில் உட்கட்சித் தேர்தல் எவ்வளவு ஜனநாயகமாக நடந்தது? தலைமையின் தலையீடுகள் இன்றி தங்கள் சொந்த செல்வாக்கில் உள்ளூர் தலைவர்கள் வெற்றி பெற்று வந்தார்களே? இன்று உங்கள் குடும்பத்திற்கு அடிமை சேவகம் செய்பவர்களே கட்சியில் எந்த பொறுப்புக்கும் வர முடியும் என்பதை எழுதப்படாத விதியாக்கிவிட்டீர்களே?
Also read
கலைஞர் காலத்திலாவது பொதுக் குழுவில் தலைமைக்கு மாறுபட்ட கருத்தை கட்சி மற்றும் ஆட்சியின் நலன் கருதி வீரபாண்டி ஆறுமுகம், முரசொலி மாறன், தென்சென்னை அன்பழகன் ஆகியோர் தயக்கமின்றி எடுத்துப் பேசும் சுதந்திரம் பெற்று இருந்தனரே! சுய மரியாதையும், சுய சிந்தனையும் உள்ள பொதுக் குழு உறுப்பினர்களே கட்சியில் இல்லை என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், அதைவிட அறியாமை வேறில்லை. பலரும் பேச முடியாமல் உள்ளார்களே அன்றிப் பேசத் தெரியாமல் இல்லை.
இளைஞர்களுக்கு மாவட்டம் தோறும் திராவிடக் கொள்கைகள் தொடர்பாக பயிற்சி பாசறை நடந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல அம்சம் மட்டுமாவது தொடர்வது ஆறுதல் அளிக்கிறது! இன்னும் மூத்த கொள்கை பற்றாளர்கள் சிலராவது உயிர்ப்போடு செயல்பட முடிந்த இடமாக திமுக திகழ்வதைக் கடந்து, மகிழ்ச்சிடைய எதுவுமில்லை இந்த பொதுக் குழுவில்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
கடைநிலையில் சுத்தம் செய்யும் ஊழியர்களை சுகாதார பணியாளர்கள் என்று ஆட்சிக்கு வந்த பிறகு பெயர் மாற்றம் செய்து அறிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை கூட பணி நிரந்தரம் செய்ய முடியாத அரசு, வருத்தம். மேலும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மிக மிக குறைவாக ரூ 7500 ஊதியம் என்று முடிவு செய்து அறிவித்த போதுதான் கையாலாகாத இந்த அரசின் லட்சனம் மிக நன்றாக தெரிகிறது.
அப்பட்டமான திராவிட ஆட்சியின் செயல்பாடுகளை தோலுரித்துகாட்டியுள்ளீர்கள். இதற்கு அடிமைப்பட்டு போன அடிமைச் சமூகம் உள்ளவரை தமிழகத்தின் தலையில் ஓத்த விதி அரசியலை அனுபவித்து தீர வேண்டியதும், புத்திஜீவிகள் கண்டும் காணாததுபோல் இருப்பதும் தமிழகத்தின் அவலநிலையே.
வன்மத்தை கக்கும் ஊடகம் உங்களை எல்லாம் மதித்து பத்திரிகையாளர் நலவாரியம் மற்றும் கொரோனா நிவாரண நிதி போன்று அரசு வழங்கிய சலுகை அனுபவித்து விட்டு இன்று கட்டு கதை எல்லாம் கட்டு அவிழ்த்து விடுவது தீங்கானது
இந்த திமுகவின் உள்கட்சி ஜனநாயகம் என்பதே உள்கட்சி நாடகமே தவிர வேறு ஒன்றும் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் மக்கள் செல்வாக்கு பெற்ற MGR அவர்கள் கருணாநிதியை பார்த்து கேட்ட கேள்வி கட்சியில் ஜனநாயகம் என்று ஒன்று இருந்தால் பதவிக்கு உங்களை தவிர வேறு ஒருவரை தலைவர் பதவிக்கான தேர்தலில் நிறுத்தலாமே என்று. அன்று அண்ணா நடத்தினர். ஆகையால் அண்ணா வழியில் என்று இட்டு கட்ட பட்ட வெத்து நாடகம் தான் இந்த திமுகவின் தேர்தல் நாடகம்.
வன்மத்தை கக்கும் ஊடகம் உங்களை எல்லாம் மதித்து பத்திரிகையாளர் நலவாரியம் மற்றும் கொரோனா நிவாரண நிதி போன்று அரசு வழங்கிய சலுகை அனுபவித்து விட்டு இன்று கட்டு கதை எல்லாம் கட்டு அவிழ்த்து விடுவது தீங்கானது
நிரந்தரமற்ற 5 வருட பணி உள்ள அரசியல்வாதிக்கு 35-40 வருட நிரந்தர பணி உள்ள அதிகாரிகள்,அடிமை ஆகலாமா?
இந்தியா சுதந்திரம் பெற்றபோது அரசியல்வாதிகள்,அதிகமாக படிக்காவிட்டாலும், நேர்மை, நாணயம், கண்ணியம், கட்டுப்பாடு, கடமை, சுயமரியாதை, சுய ஒழுக்கம், ஆகிய, பண்புகளுடன், பொது வாழ்வில், மக்களுக்கு தன்னலமற்ற சேவை செய்து நற்பெயரோடு விளங்கினர்.
மன்னர் ஆட்சியை ஒழித்து மக்களாட்சியை, “ எல்லோரும் இன்னாட்டு மன்னர்கள்” என்ற கோட்பாடுடன், சுதந்திர இந்தியாவில், பேச்சு உரிமை, எழுத்து உரிமை, தொழில் செய்யும் உரிமை, யாருக்கும் யாரும் இனி அடிமையில்லை, என்று, சாசனம் செய்து கொடுத்து,உள்ளார்கள். அருமையான, சட்ட திட்டங்களை இயற்றி, “ சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம்” என்பதனை பரிபாலனம் செய்வதை, படித்த அதிகாரிகள் வசம் ஒப்படைத்து உள்ளார்கள்.
“For the people ( மக்களுக்காக ) By the People (மக்களால் ) Of the people ( மக்களில் ஒருவராக ) பொது வாழ்க்கையில் ஈடுபட ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டு, இரட்டை ஆட்சி மூலம், சாமானியர்களுக்கு சில சட்டங்களை இயற்றும் அல்லது மாற்றும் அதிகாரமும், அதிகாரிகளுக்கு அந்த சட்டங்களின்படி நாட்டை நிர்வாகம் செய்ய முழு சுதந்திரமும், கொடுக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை, மக்களுக்கு, இடையூறு ஏதும் ஏற்பட்டால், அதை தீர்த்துவைக்க, நீதிமன்றங்கள், தனி அதிகாரத்துடன் செயல்படும்படி, அமைத்து, கொடுத்துள்ளார்கள், நமது முன்னோர்கள்.
உலகிலேயே இந்திய ஜனநாயக அமைப்புதான் சிறந்ததாக கருதப்படுகிறது.மக்களின் பிரதிநிதிகளுக்கு 5 வருடங்களும், அதிகாரிகளுக்கு 60 வயது வரையும் ( 35-40 வருடங்கள்) )வரை, பணி செய்ய, வரிப் பணத்தில் தகுந்த ஊதியங்களை எடுத்துக்கொள்ள,அனுமதியும் கொடுத்து உள்ளார்கள், இந்திய மக்கள்.
மக்களின் வரி பணத்தில், நல்ல சம்பளம், (தனியாரை விட இரண்டு மடங்கு) வீட்டு வசதி வாகன வசதி, Pension, Family Pension, பிரசவ கால விடுமுறை, விமான பயண வசதி, பாதுகாப்பு காவல்,பணி இடை நீக்கம் செய்தாலும் பாதி சம்பளம், பணி பாதுகாப்பு,ஆகியவைகளை,அரசு வேலையில், உள்ள்ளவர்கள், அனுபவித்து வருகிறார்கள்.
அதேபோல் மக்கள் பிரதிநிதியான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் முதலமைச்சர், பிரதம மந்திரி, ஜனாதிபதி வரை,” நாங்கள் மக்களின் சேவகர்கள்” என்று கூறிக் கொண்டு, நல்ல சம்பளம், இருக்க வீடு, வாகனங்கள்,வேலை ஆட்கள், பாதுகாப்பு ஆட்கள்,என்று பல வசதிகளை, “ மக்கள் வரிப்பணத்தில்” அனுபவித்து வருகிறார்கள்.
ஆனால் இன்று, மக்களைபற்றி இரு தரப்பினரும் சிந்திப்பதே இல்லை”.அரசியல்வாதிகள்” “அரசியல் வியாதிகளாகி” விட்டனர். அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளுடன், கூட்டு சேர்ந்து, கொள்ளை அடிக்கின்றனர். நல்லவர்களும் இருக்கிறார்கள். ஆனால், மிக குறைவாக தென்படுகிறார்கள். IAS, IPS, IFS, என்று நன்கு படித்துவிட்டு, வெட்கமே இல்லாமல், பல சட்ட விரோத செயல்களை, மக்களுக்கு எதிராக, செய்து வருகின்றனர்.யாரேனும், எதிர்க்கேள்வி கேட்டால், அதிகார துஷ்பிரயோகம் செய்து,அவர்களை, பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்.
“சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது, ஆனால் திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது”- “ திருடராக பார்த்து திருந்தாவிட்டால்,திருட்டை ஒழிக்க முடியாது” – என்றார் பட்டுக்கோட்டையார் தன் பாடலில்.
அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ஒன்று சேர்ந்தால், நீதித்துறையை திசை திருப்பி நீதியை விலை பேசி, வாங்க முடியும்,என்று அதற்கு முயற்சி செய்வதை, இன்று உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காண்பிக்க, தன் உயிரை கொடுத்து நிரூபித்து இருக்கிறாள்,மாணவி ஸ்ரீமதி .
ஏழையாக இருந்தாலும், பணத்திற்கு அடிமையாமல், சுய மரியாதையுடனும், தீரத்துடனும்,குள்ளநரிகள் பலவற்றுடன், போராடுகிறாள்,தமிழ்தாய் செல்வி அவர்கள்.
இது ஒரு சமூக பிரச்சனை. இதை ஆரம்பத்திலேயே, கிள்ளி எரிய வேண்டும். அவர்களின் இரட்டை வேடம், கலைக்கபட வேண்டும். வெட்கம் கெட்ட அரசியல் வாதிகளும், அதிகாரிகளையும்,களையெடுக்க வேண்டும்.
மக்களை (யஜமானர்களை) முட்டாளாக்கும் வேலைக்காரர்களை( அரசியல்வாதிகள், அதிகாரிகள்) வேலைதான், இப்போது, நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது.
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தாய் தகப்பன் சொத்து சேர்த்து கொடுக்கலாம்.
ஆனால் அதை காப்பாற்ற, நிர்வகிக்க அவர் அவர்களுக்கு சொந்த திறமை வேண்டும்.
இல்லையெனில் என்ன செய்வது என பலம்ப வேண்டியதுதான்.