நயவஞ்சக நரிகளின் நடுவில் வாழ்ந்த ஜெயலலிதா!

-சாவித்திரி கண்ணன்

குள்ளநரிக் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, அதில் வெல்லற்கரிய சிங்கம் போல தோற்றம் காட்டிய ஜெயலலிதாவை எப்படியெல்லாம் திட்டம் போட்டு தீர்வை நோக்கி நகர்த்தியுள்ளனர், அவரது கூட்டாளிகள்! அதிர வைக்கும் உண்மைகளை தோலுரித்து காட்டிய நேர்மையான நீதிபதி ஆறுமுகசாமிக்கு சல்யூட் !

மிக நேர்மையோடும், சமரசமின்றியும், உண்மைக்கான தேடுதலைக் கொண்டும் நீதிபதி ஆறுமுகசாமி செயல்பட்டார் என்பதை அவரது விசாரணை போக்கில் இருந்தே, அப்போதே நாம் யூகித்தோம்! இந்த உண்மை அவரது அறிக்கையில் ஒளி வீசுகிறது. அவரது நேர்மையான விசாரணை அணுகுமுறையை அதிமுக ஆட்சியாளர்களே விரும்பவில்லை. ஆகவே விசாரணை கமிஷன் அமைத்த ஆட்சியாளர்களே அவருக்கு ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்ததின் விளைவாக ஆறுமாத அவகாசத்தில் முடிக்க திட்டமிட்ட ஆணையத்தின் வேலையை 60 மாதங்களுக்கு நீட்டிக்க வைத்து விட்டனர். ‘ஏதோ ஒரு கண் துடைப்புக்காக தாங்கள் அமைத்த விசாரணை ஆணையம் தங்களையே காவு கேட்கும்’ என அதிமுக ஆட்சியாளர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள்!

அனைவரையும் அஞ்சி நடுங்க வைக்கும் ஆளுமையாகத் திகழ்ந்த ஜெயலலிதா அதி மோசமாக அவரை சுற்றி இருந்தவர்களாலே மரணத்தை தழுவினார் என்ற உண்மையை உணரும் போது மெய் சிலிர்க்கிறது!

தாய், தகப்பன், கணவன், பிள்ளைகள்..போன்ற உற்ற உறவுகள் இல்லாத சூழலோடு, அவரோடு இருந்தவர்களின் நீண்ட நாளைய அதிகாரப் பசியும் சேர்ந்து கொண்ட நிலையில் தனிமைப்பட்டு விட்ட அவரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை.

ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு வீழ்ந்த நிலையில் சசிகலாவின் அதிகாரத்தின் கீழ் தான் அன்றைய தமிழக அரசின் முழு அதிகாரமும் சென்றுவிட்டது! நீண்ட நெடுங்காலமாக ஜெயலலிதா பின்னணியில் இருந்து அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஆட்டுவித்து பழக்கப்பட்டு இருந்த சசிகலா, நேரடியாக அதிகாரத்தை செலுத்தி பார்க்கும் தருணமாக அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட காலகட்டம் அமைந்து விட்டது. அனைவருக்குமே அதிகாரப் பசி இருந்த காரணத்தால் அவரோடு உடன்பட்டுவிட்டனர்!

சசிகலா சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், அன்றைய பொறுப்பு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை அனைவரும் இருந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான நான்கு வருட ஆட்சி அதிகாரத் தலைமையை கைப்பற்றுவதில் சசிகலா செய்து வரும் சூழ்ச்சியை அறிய வந்த நிலையில், அந்த சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுத் தான் அப்போதே ஒ.பி.எஸ்சை கையில் எடுத்துக் கொண்டது பாஜக தலைமை! பாஜக வசம் ஒ.பி.எஸ் நகர்ந்து சென்றுவிட்டதை அறிந்து பதட்டமான நிலையில் தான் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை கையில் எடுத்துக் கொண்டார். இந்தச் சூழலில் தான் கொடநாடு கொள்ளைக்கு இவர்கள் திட்டமிட்ட விவகாரத்தை கொடநாடு கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் போட்டு உடைத்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

ஜெயலலிதாவை யாரும் சந்திக்கவிடாதபடி தடுக்கும் அதிகாரத்தை சசிகலா தானே கையில் எடுத்துக் கொண்டார்! அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை நிராகரித்து உள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை கொடுக்காமல் தடுத்துள்ளார்! அப்பல்லோ நிர்வாகத்தின் தவறான சிகிச்சைக்கு துணை போயுள்ளார். அப்பல்லோ நிர்வாகமும் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை வேண்டுமென்றே அகற்றி உள்ளது. ஆறுமுகச்சாமி ஆணைய விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமலும் போக்கு காட்டி உள்ளார் சசிகலா!

ஒ.பி.எஸ்சை பொறுத்த வரை ஒரு திறமையும் இல்லாத தன்னை முதல்வராக்கி அழகு பார்த்த ஜெயலலிதா படுக்கையில் வீழ்ந்ததும், ஜெயலலிதாவைவிட பவர்புல்லான மத்திய பாஜகவின் அதிகார மையத்திற்கு தன் விசுவாசத்தை மாற்றிக் கொண்டார். அப்பல்லோ மருத்துவமனைக்கு நாளும்,பொழுதும் சென்று வந்த அந்த காலகட்டத்தில் எல்லாம் வாய் மூடி மவுன சாட்சியாகத் தன் தலைவிக்கு இழைக்கபடும் அநீதியைப் பார்த்தும் தடுக்காமால் விட்டுவிட்டு தன் முதல்வர் பதவி பறிக்கப்படும் வரையில் அமைதி காத்து பிறகு தர்மயுத்தம் என்று பேசி ஜெயலலிதாவின் மரணத்தை கேள்விக்கு உட்படுத்தி அரசியல் ஆதாயம் அடைந்து கொண்டார்!

ஆறுமுகச் சாமி ஆணையம் ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் போகாதவராக போக்கு காட்டி வந்ததில் இருந்தே ஒ.பி.எஸ்சின் குற்றமுள்ள மனசு குறுகுறுத்து அவரை தடுத்துள்ளதை நாம் அறியலாம்! எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக் கூடிய உச்சபட்ச அதிகாரத்தில் இருந்த ஒ.பி.எஸ் ஆணையம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தெரியாது,தெரியாது என ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிய விதத்திலேயே இவர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் என ஆறூமுகச்சாமி அவர்கள் கண்டுபிடித்துள்ளார். அடுத்த முதல்வாரக அமர்வதற்கான தவிப்பிலும், தயாரிப்பிலும் தான் பன்னீர் இருந்துள்ளார் என்பதையும் ஆறுமுகச்சாமி ஆணையம் பட்டவர்த்தனமாக அறிவித்து உள்ளது! நல்லவனாகத் தோற்றம் காட்டி, நயவஞ்சகமாகவே வாழும் கலையில் உலகமகா வித்தகர் ஒ.பி.எஸ் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் இந்த அறிக்கையாகும்!

அன்றைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மருத்துவராக இருந்தும், தன் தலைவிக்கு இழைக்கப்பட்ட மருத்துவ அநீதிக்கு துணை போயுள்ளார்! சுகாதாரத் துறை செயலாளரான ராதாகிருஷ்ணனும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேர்ந்த அனைத்து மருத்துவ அத்துமீறல்களுக்கும் மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு துணை போயுள்ளார்! தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் பற்றி கேட்கவே வேண்டாம், தன் பதவி காலம் முழுமைக்கும் காசு பார்ப்பதில் தான் கண்ணும்,கருத்துமாக இருந்தார்! இவர்கள் அனைவருமே சேர்ந்து ஜெயலலிதாவின் மரணத்திற்கு துணை போனதோடு, அவரது மரணத்தையே ஒரு நாள் முழுக்க தள்ளிப் போட்டு அறிவித்துள்ளனர்!

ஆக, தன்னைச் சுற்றிலும் ஆரோக்கியமான மனிதர்கள் இல்லாத ஆபத்தான மனிதர்களைக் கொண்ட கூட்டத்தை ஜெயலலிதாவே கட்டமைத்து இருந்ததின் விளைவு அவரது மரணத்திற்கு காரணமாகிவிட்டது. நல்லோர் சகவாசத்தை முற்றிலும் தவிர்த்து, நயவஞ்சக கூட்டம் எனத் தெரிந்தும் கூட பணிந்தும், குனிந்தும் அவர்கள் செய்யும் அடிமைச் சேவகத்தில் அகமகிழ்ந்து கிடந்த ஜெயலலிதா கடைசி காலத்தில் அதற்கான பலனை அனுபவித்து விட்டார் என்பதை தவிர வேறென்ன சொல்வதற்கு இருக்கிறது?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time