காசு, பணம், துட்டு, மணி, மணி …என கல்வித் துறையை களவாணித் துறையாக்கிவிட்டார்கள் ஆட்சியாளர்கள்! துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் என்பது ஒட்டுமொத்த கல்வித் துறையையும் உலுக்கி எடுக்கிறது! உயர் கல்வித் துறையை ஊழல் கல்வித் துறையாக்கிடும் ‘பெரிய மனிதர்கள்’!
தமிழக பல்கலைக் கழகங்களில் கடந்த இருபதாண்டுகளாக ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது.பல்கலைக் கழகத்தின் சகல மட்டங்களில் மட்டுமின்றி, அனைத்து கல்லூரிகளிலும் கிளைபரப்பி ஊழலை வளர்க்கிறது. பல்கலைக் கழகத் துணைவேந்தர் நியமனத்திற்கு என்று பல்கலைக் கழக மானியக் குழு சில வரையறைகளை நிர்ணயித்து உள்ளது. அதன்படி துணைவேந்தராக ஒரு பல்கலைக் கழகத்திற்கு நியமிக்க படுபவர் பேராசிரியராக குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவிலான ஆய்வு கட்டுரைகள் எழுதி இருக்க வேண்டும்…உள்ளிட்ட கல்வித் தகுதிகளுடன் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் இருக்கக் கூடாது!
ஆனால், 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது சசிகலா உறவினர் என்ற தகுதியில் மட்டுமே சாதாரண துணை பேராசிரியராக உள்ளவர் கூட துணைவேந்தரானார்கள்! அப்போது தொடங்கிய ஊழல் அதன் பிறகான திமுக ஆட்சியில் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டது. இறுதியாக அதிமுக ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளில் இந்த அசிங்கங்கள் விஸ்வரூபமெடுத்து விரும்பத்தாகாத சம்பவங்கள் பலவற்றுக்கு வழிகோலின!

இத்தனைக்கும் துணைவேந்தர்கள் நியமனத்திற்கு என்று பல விதிமுறைகள் உள்ளன. பலரிடம் இருந்தும் வெளிப்படையாக விண்ணப்பங்களை கேட்டு பெற வேண்டும். அதை பரிசீலித்து அதில் இருந்து பத்து பேரை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதில் இருந்து மூவரைத் தேர்ந்தெடுத்து ஆளுனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கென்று ஒரு தேர்வு குழுவும் உள்ளது. அந்த மூவரில் இருந்து ஒருவரை ஆளுனர் தேர்வு செய்வார்! அட, இவ்வளவு புரசிஜர் உள்ளதே? பிறகு எப்படி பணம் தந்து பதவி பெற முடியும் என ஆச்சரியமாக இருக்கலாம்!
இதில் துணைவேந்தர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து தேர்வு செய்வதற்கான குழுவிலேயே ஊழல் பேர்வழிகளை புகுத்திவிடுவார்கள் ஆட்சியாளர்கள்! அவர்கள் தகுதியான விண்ணப்பங்களை எல்லாம் சிரத்தையாக நிராகரித்து விடுவார்கள்! தகுதியற்ற குறிப்பிட்ட ஒரு நபரை தேர்வு செய்யும் விதமாக சட்டவிதிகளையே தளர்த்தி விடுவார்கள்! இறுதியாக மூன்று நபர்கள் கொண்ட பட்டியல் ஆளுனருக்கு தரப்படும் போது, அதில் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கான குறிப்பிட்ட ஒரு நபரை தேர்வு செய்யச் சொல்லி வேண்டுவார்கள்! தங்களுக்கு எதுக்கு வீண்வம்பு? என ஆளுனர்களில் பெரும்பாலானவர்கள் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கையெழுத்திட்டு கொடுத்து விடுவார்கள்!
இந்த வழிமுறையை எதிர்த்தவர் பன்வாரிலால் புரோகித் தான்! இது குறித்து நான்காண்டுகளுக்கு முன்பே அவர் பேசியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில்அக்டோபர் -6,2018ல் நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அன்றைய ஆளுனர் பன்வாரிலால் புரோகித்,‘‘தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டதை ஆளுனராக பதவியேற்ற பின்னர் நான் அறிந்து கொண்டேன். பல கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு தான் துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை நான் நம்பவில்லை. பின்னர் அது உறுதியானவுடன் நான் மிகவும் வருத்தமடைந்தேன். அதன்பிறகு விழிப்புணர்வு பெற்று 9 துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பேச்சு அப்போதே சர்ச்சையானது. இதன் தொடர்ச்சியாகத் தான் அவர் அண்ணா பல்கலைக்கு சூரப்பாவை துணைவேந்தராக அதிரடியாக நியமித்தார்! ஏனென்றால், அதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கு விஸ்வநாதன், ராஜாராம் போன்ற படுமோசமான ஊழல்பேர் வழிகள் துணைவேந்தர் பொறுப்பேற்று கல்லா கட்டினர்! அதே போல சென்னை பல்கலையிலும் திருவாசகம், கெளரி, தாண்டவன் ஆகியோர் பல்கலைக் கழகத்தின் மாண்பையே படுகுழிக்கு தள்ளினர்.
இதனால் தான் 2016 ஆம் ஆண்டு கண்ணியத்திற்குரிய கல்வியாளர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் துணைவேந்தர்கள் நியமனத்தில் விதிமுறைகள் மீறப்படுவதையும்,ஊழ்ல் தலைவிரித்தாடுவதையும் எதிர்த்து, உயர்நீதிமன்றம் சென்றார் என்பது நினைவிருக்கலாம்!
தமிழகத்தில் 21 அரசு பல்கலைக் கழகங்கள் உள்ளன! இவற்றில் கடந்த சில ஆண்டுகளாகவே துணைவேந்தர் பதவிகள் பல கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்படி பதவி வாங்கி வந்தவர்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் பல லட்சங்கள் லஞ்சம் வாங்க தலைப்பட்டனர். இது இப்போதும் நடைபெற்று வருகிறது.
முறைகேடான பணி நியமனங்களில் பண வசூல்,
பல்கலை மானியக்குழு (யுஜிசி) விதிகளுக்கு புறம்பாக கல்லூரிகள் செயல்படவும், காசு பண்ணுவதற்காகவே பாடப்பிரிவுகள் தொடங்கவும் அனுமதி வழங்குவது,
தேர்வு முடிவுகள் வெளியிட தேவையில்லாமல் தனியார் நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டு பணம் பார்ப்பது…,
என பல்கலைக் கழகத்தையே கொள்ளைக் கூடாரமாக்கிவிட்டார்கள் ஊழல் துணைவேந்தர்கள்!
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து தகுதியற்ற பலர் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்ததும், நூலகர், ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கும் கூட தகுதியற்ற நபர்கள் நியமிக்கப்பட்டதும் செய்திகளில் அடிபட்டன!
காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை ஆடாத ஆட்டங்கள் ஆடியதின் விளைவாய் சென்னை உயர்நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை பணம் தந்து பெற்ற ஈவு இரக்கமற்ற ஊழல் பேர்வழி கணபதி கணக்கற்ற வகையில் சகல விதங்களிலும் கையூட்டு வாங்கியதாக கைது செய்யப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடைசியாக தன் பதவியைத் தக்க வைக்க அன்றைய ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தைப் பார்த்து கூழைக் கும்பிடு கெஞ்சிப் பார்த்தார். ஒன்றும் பலனில்லை, கைதானார்.
பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன் கூச்ச நாச்சமின்றி ஊழலில் புழுபோல திளைத்து நெளிந்தார்! இவருக்கு ஒத்தாசை செய்த அங்கமுத்து என்ற பதிவாளர் தற்கொலை செய்து சாகக் காரணமானார். கடைசியில் கைதாகி சிறைச்சாலை சென்றார்! தஞ்சை தமிழ் பல்கலையில் சசிகலா சிபாரிசில் க.பாஸ்கரன் நியமிக்கப்பட்டார். அவரும் மிகுந்த கெட்ட பெயர் வாங்கி கைதானார்.
எப்படி போலீஸ் ஸ்டேசன்களில் திருடர்கள் போட்டோ போட்டு எச்சரிக்கை தருவார்களோ, அதே போல கைதான இந்த ஊழல் துணைவேந்தர்களின் புகைப்படங்களை காலாகாலத்திற்கும் அந்த சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தில் மாட்டி எச்சரிக்கை தர வேண்டும். இது அடுத்து ஊழலில் ஈடுபடுவர்களுக்கும் இது தான் நிலைமை என புரிய வைக்க வேண்டும்.

ஒரு பல்கலைக் கழக துணைவேந்தர் தனியாக தவறு செய்ய முடியாது. கூட இருக்கும் பதிவாளர், டீன், சூப்பரவசைர்கள், வினாத்தாள் திருத்துபவர்கள், கணக்கர்கள் என சகலரையும் அதில் இணைத்தே செய்ய முடியும்! அது மட்டுமின்றி, அந்த பல்கலைக் கழகத்தை சார்ந்து இயங்கும் அனைத்து கல்லூரிகளையும் இவர்கள் வேட்டைக்காடாக்கி விடுவார்கள். இவர்களுக்கு கப்பம் கட்ட அவர்களும் முறைகேடுகளை அதிகம் செய்யத் துணிவார்கள்! இதனால் பல லட்சம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்காது என்பது மட்டுமல்ல, பொருளாதார இழப்புகளும் நேர்கின்றன! இதனால் ஆராய்ச்சியின் இருப்பிடமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு ’பட்டம்’ அளித்து பணம் பார்க்கும் வியாபார ஸ்தளங்களாகிவிடுகின்றன!
ஒழுக்கத்தை கற்க வேண்டிய இடத்தில் மாணவர்கள் ஊழலை கற்று வெளியேறுகின்றனர். பெரும்பாலும் பல பல்கலைக்கழகங்களில் எந்த நியமனத்திலும் இட ஒதுக்கீடு முறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தொலைத்தூரக் கல்வி மற்றும் வினாத்தாள் திருத்துதல் ஆகியவையுமே கூட ஊழல் மையங்களாகிவிட்டன!. பி.எச்.டி பட்டங்களையும், டி.லிட் பட்டங்களையும் சர்வசாதாரணமாக விற்பனை செய்தனர். பாலியல் சுரண்டல்களும் இங்கு நடந்தேறின!
முன்பு உயர்கல்வித் துறையில் ஊழலில் கொடிகட்டிப் பறந்த அதிமுக அமைச்சர்கள் பழனியப்பன், கே.பி.அன்பழகன் பல கேடுகளுக்கு வித்திட்டுவிட்டனர். அதற்கு முன்பு திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தான் தற்போதும் உயர்கல்வித் துறை அமைச்சராகி உள்ளார். அவர், ”அதிமுக ஆட்சி ஊழல்களே பரவாயில்லை” என சொல்லத் தக்க வகையில் அவர்களைக் காட்டிலும் ஒருபடி ஏறி விஞ்சி நிற்கிறார்.
Also read
இப்படியாக கேள்வி கேட்பாரே இல்லாத வகையில் ஊழல் தலைவிரித்தாடிய சூழலை தான் தற்போதைய ஆளுனர் ஆர்.என்.ரவி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் மனோபாவத்திற்கான கல்வியாளர்களைக் கண்டெடுத்து பதவி வழங்கி வருகிறார். திமுக ஆட்சியில் கல்வியாளர்களை காவிமயபடுத்த ஆளுனருக்கு ஒரு அரிய வாய்ப்பு ஊழல் ஆட்சியாளர்களால் சாத்தியமாகியுள்ளது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
அண்ணா நாமம் வாழ்க
திமுக ஆட்சியில் ஊழல் என்பது ஆட்சிக்கு வேண்டுமென்றே கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதாகும். முந்தைய திமுக ஆட்சியில் 2007 2008 2009 2011 ஆகிய ஆண்டுகளில் கல்லூரி பேராசிரியர் நியமனம் செய்யப்பட்டார்கள் எந்தவித ஊழலும் இன்றி தகுதியின் அடிப்படையில் நியமனம் நியமிக்கப்பட்டார்கள். தற்போதும் பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் எந்தவித ஊழலுக்கும் இடமின்றி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று டிஆர்பி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும். இது எல்லாம் மறைத்து பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் ஊழல்களை திமுகவின் ஊழல்களாக காட்டுவது உள்நோக்கம் கொண்டது.
இன்னும் இப்படி இருக்கீங்களே… ரொம்ப கஷ்டமா இருக்கு.
Yes ! Today also, we are living in the same conditions.
For example , in 2019 the last govt called for recruitment of AP positions , for 36 departments. It is based on UGC qualification . Nearly 35000 guest lecturers have not qualified at the time advertisement.so , this govt disqualifying the applicants and asking to aply 2022.
ஆளுநர் பன்வாரிலால் ஊழல் காரணமாக அண்ணா பல்க்லைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவிலிருந்து சூரப்பாவை நியமித்ததற்கு மாறாக தமிழ்நாட்டில் இருந்து நியமிக்க யாரும் இல்லையா? நடுவன் அரசு உத்தரவு படிதான் நியமனம் செய்தாரா?
அண்ணாமலைப் பல்கலைக்கழக இப்போதைய துணைவேந்தர் எண்ணற்ற இயக்குனர்களையும், இணை மற்றும் துணை இயக்குனர்களையும், இணை மற்றும் துணை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளையும் , புலமுதல்வர் மற்றும் துறைத்தலைவர் போன்ற முக்கிய பதவிகளையும்எந்த பணிமூப்பு தகுதிகளும் இன்றி பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நியமனம் செய்திருக்கிறார். பல கோடி பணம் இதில மட்டும் வசூல் வேட்டை. தகுதியற்ற நபர்கள் முக்கிய இடங்களில் அமர்ந்ததால் பல்கலைக்கழக நாக் எ++ போச்சு. DDE தொலைநிலைக் கல்வி போச்சு. என்ஐஆர்எப் ரேங்க் போச்சு. என்பிஎ போச்சு. ஐசிஎஆர் போச்சு. எல்லாமே போச்சு. ஆனால ரூ 1 கோடியில் 2 கார். தொகுப்பூதியர்கள் மட்டும் வீட்டுக்கு அனுப்ப கடும் முயற்சி.இவை அனைத்தும் தமிழக அரசிற்கு தெரியுமா? நடவடிக்கைகள் என்ன?
2014ல் மத்தியில் தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் இந்துத்துவ பிரச்சாரம் என சொல்வதை விட அப்போது இருந்த காங்கிரஸ் ஆட்சியின் யோக்கியதையும் அந்த கூட்டணியில் இருந்த திமுகவினர் போட்ட ஆட்டமும் தான். தமிழ் நாட்டில் மீடியா நேர்மையாக இருந்திருந்தால் இதை அலசி இருப்பார்கள்.அப்படி இல்லை என்பது வேதனைக்கு உரியது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் ஊழல் மையங்களாக மாறி வெறுமனே பட்டம் கொடுக்கும் வணிக மையங்களாக உள்ளன. மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழ்நாடு பின் தங்கி இருப்பதற்கு இங்கிருக்கும் கல்வியின் தரமும் ஊழலும் தான் முக்கிய காரணம். இப்போது இருக்கும் மத்திய அரசு இந்த ஓட்டையை பயன்படுத்தி எல்லாவற்றையும் ஆர்எஸ்எஸ் மயம் ஆக்கி வருகிறது.
துணைவேந்தர் நியமனத்தின் வழி கவர்னர் உயர் கல்வித் துறையை கையில் எடுதுள்ளதன் விளைவால் நிலைமை இன்னும் மோசமாகி காவி கார்பொரேட் பாசிசப் போக்குகள் செனட், சிண்டிகேட் வழிகாட்டுதலை புறம் தள்ளும் வகையில் வளர்ந்துள்ளன. ஜிஎஸ்டி வரி போட்டு இன்னும் கூடுதலாகக் கல்வி, தேர்விற்கான மாணவர் கட்டணங்களை உயர்த்தி உயர் கல்வியின் ஆராய்ச்சித் தளத்தில் யுஜிசி என்ற சாக்கில் தன்னிச்சையாக பல உத்தரவுகளைப் பிறப்பித்து ஆசிரியர் மாணவர்களின் ஆய்வுச் செயல்பாடுகளைக் கடுமையாக முடக்கியும் பல குழப்பங்களையும் கவர்னர் மாளிகை ஆணை அல்லது வழிகாட்டுதல் என்ற பெயரில் தரதிற்கான முன்னெடுப்பு என்கின்ற வகையில் மாநிலப் பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. தன்னார்வலர்கள், ஆசிரியர் சங்கங்களின் வலுவற்ற ஒருங்கிணைப்பு இல்லாத முயற்சிகளும் போராட்ட வடிவங்களும் உயர் கல்வி, ஆய்வுச் சூழலை சீர்குலைத்து வருகின்றன. இதனையும் இணைத்து பார்க்க வேண்டும். நன்றி
இந்த கட்டுரையில் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையாவின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. அவரது ஊழல்கள் ஜூனியர் விகடனில் வந்தது. இதே போன்று அப்போதைய ஆளுநர் பன்வாரில் மற்றும் அவரது தலைமை செயலாளர் பற்றியும் ஜூவி கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது
ஆளுநர்கள் தங்களுக்குரிய பணியை ஒழுங்காக செய்வதில்லை. ஆளுநரின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றக்கூடிய தற்காலிக பணியாளர்களிலும் ஊதியத்திலிருந்தே ஊழல்கள் தொடங்க ஆரம்பிக்கின்றன. பெரும்பாலான ஆளுநர்கள் உயர்கல்வித்துறைக்கு குரல் கொடுப்பதை காட்டிலும் அரசியல் பிரச்சனைகளுக்கு மட்டுமே குரல் கொடுக்கின்றனர். ஆளுநரை சந்திப்பதற்காக தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் சார்பில் சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தபாடில்லை. ஆனால் அரசியல் கட்சியினர் ஓரிரு நாட்களில் சந்திக்க முடிகின்றது. நான் அறிந்தவரை உயர்கல்வித்துறை முக்கியத்துவம் தராத ஆளுநர்களை தான் தமிழகம் அதிகம் கண்டிருக்கிறது.
வருத்தத்துடன்
முனைவர் வெ. தங்கராஜ்
மாநில தலைவர்
தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம்.
தேசிய செயலாளர்
தேசிய அளவிலான பல்கலைக்கழக மற்றும் கல்லூரி தற்காலிக ஆசிரியர் சங்கம்.
8122167259, 8667712227
இந்த நெட் , ஸ்லெட் ஆகிய சான்றிதழ்களுக்கு என்ன மரியாதை, என்ன பலன் என யாராவது ஆராய்ந்து சொன்னால் தேவலாம். மேற்படி தேர்வுகளில் தேர மாங்கு மாங்கு என படித்து மனநோயாளிகள் ஆனவர்கள் தான் அதிகம் ஆனால் மேற்படி சான்றிதழ்களுக்கு எந்த மரியாதையும் தமிழகத்தில் இல்லை.
தமிழ் நாட்டை மட்டும் எடுத்துக் கட்டாமல் அகில இந்தியா அளவில் பிஜேபி ஆளும் மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் நிலவும் கட்சி பாகுபாடு, மத வேறுபாடு ஆகியவற்றையும் மக்களுக்குத்தெரியப்படுத்தினால் நன்றிங்க
ஊழல் இல்லையென்று இந்த ஆட்சி சொல்லுமேயானால் தகுதி வாய்ந்த கௌரவ விரிவுரையாளர்களை (40 வயது அல்லது 45 வயது உடைய ) அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 2019ல் நடைபெற்ற (டி .ஆர்.பில்) தேர்வு பெற்ற அனைவரையும் அவர்களின் வயதினை கருத்தில் கொண்டு பணிநிரந்தரம் செய்ய முன் வரவேண்டும்.
Yes ! Today also, we are living in the same conditions.
For example , in 2019 the last govt called for recruitment of AP positions , for 36 departments. It is based on UGC qualification . Nearly 35000 guest lecturers have not qualified at the time advertisement.so , this govt disqualifying the applicants and asking to aply 2022.
வட்டம் தோறும் 20 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பட்டப் படிப்பு மாணவர்களை சேர்க்கும் வகையில் வட்ட கல்லூரிகள் ஒவ்வொரு கல்வித் துறைக்கும் தனித்தனியாக இயக்கப்பட வேண்டும்.
மாவட்டந் தோறும்
ஒவ்வொரு கல்வி துறை சம்பந்தப்பட்ட கல்லூரி பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் அவரவர்கள் துறையில் ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாக ஆராய்ச்சி கூடங்கள் அமைக்க வேண்டும்.
மாவட்ட ஆராய்ச்சி கூடங்களின் தலைவர் பதவி அந்தந்த கல்வித்துறை உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்களில் ஒருவரை மக்களாட்சி
தேர்தல்
முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள பல்கலைக்கழகம் வேந்தர் நியமனம் ஒழிக்கப்பட வேண்டும்.
அதிகாரம் நீர்த்துப்போக பரவலாக்கப்பட்ட நிர்வாக நடைமுறை காலத்தின் கட்டாயம்.
அதிகாரம் நீர்த்துப்போகும் நிர்வாக நடைமுறை லஞ்ச லாவண்யத்தை அடியோடு ஒழிக்கும்.
“வேலைவாய்ப்பு வாரியான பட்டப்படிப்பு மற்றும் துறை வாரியான ஆராய்ச்சி, வளர்ச்சி வென்றெடுப்போம்!”
இந்த கட்டுரையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழல்கள் விடுபட்டுள்ளன. நிதிச்சுமையில் சிக்கி அழிவின் விளிம்பில் இருந்து மீண்டுவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியிட மாறுதல்கள், அயற்பணியிட நியமனங்களில் ஊழல், தவறிழைத்தோர் தப்பிக்க பணம், தொலைதூரக்கல்வியில் MoU ஊழல்கள், அனைத்துவகை டெண்டர்கள் மற்றும் பொருட்களை வாங்குவதில் ஊழல் என இங்கும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதை கட்டுரையாளருக்கு எடுத்துரைக்க விரும்புகிறோம்.
Yes ! Today also, we are living in the same conditions.
For example , in 2019 the last govt called for recruitment of AP positions , for 36 departments. It is based on UGC qualification . Nearly 35000 guest lecturers have not qualified at the time advertisement.so , this govt disqualifying the applicants and asking to aply 2022.
அமைச்சர் ணற்றும் கல்லூரிகல்வி இயக்கநர் அரசு கல்லூரிகளில் முதல்வர்களாக உள்ள பெரும்பாலானவர்கள் ஊழலில் திளைக்கின்றனர். பல பேராசிரியர்களும் தங்கள் பங்கிற்கு நேர்மை அற்றவர்களாக இருப்பதோடு வகுப்புகளுக்கு செல்லாமலும் பாடம் பாதிக்காமல் இருப்பதும் வாடிக்கை ஆகிவிட்டதை ஊடகங்கள் வழியாக தெரிந்து கொள்கிறோம்
அனைத்து துறைகளிலும் ஊழல்..அப்படி ஊழல் புரிந்து நீக்கப்பட்டவர்களின் அல்லது கைது செய்யப்பட்டவுடன் புகைப்படங்களை பல்கலைக்கழக வளாகத்தில் அனைவரும் பார்க்கும் வண்ணம் மாட்டலாம்..வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்யாமல் தவிர்க்கலாம்..
This article opened my eyes, I can feel your mood, your thoughts, it seems very wonderful. I hope to see more articles like this. thanks for sharing.