சட்ட சபை உரையில் தன் கொள்கைக்கு ஒவ்வாதவற்றையும், திமுக அரசு தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதாக தயாரித்து தந்த உரையையும் ஆளுநர் ஆன்.என்.ரவி தெளிவாக தவிர்த்ததோடு, தன் கொள்கைபடி ‘ஜெய்ஹிந்த்’ கோஷத்தையும் போட்டு, வெளி நடப்பு செய்துள்ளார்.
இது வரை ஆளுநர் எவ்வளவு மசோதாக்களை கிடப்பில் போட்டாலும், எவ்வளவு ஆட்சேபகரமாக பேசினாலும் மெளனம் சாதித்து வந்த ஸ்டாலினுக்கு இன்று சுய மரியாதை உணர்வு பீறிட்டு வந்து, கவர்னரை அவையில் வைத்துக் கொண்டே அவருக்கு எதிரான கண்டணத் தீர்மானத்தை வாசித்தார்! அந்த வகையில் மக்கள் எதிர்ப்பையும் மீறி, தொடர்ந்து ஒன்றிய அரசின் சட்ட திட்டங்களை அமல்படுத்தி, பாஜக அரசின் தாசானுதாசனாக இருந்த ஸ்டாலினின் சுயமரியாதை வெளிப்பட்டதில் உண்மையிலேயே நாமும் மகிழ்ச்சி அடையலாம்!
கவர்னர் எந்தெந்த வார்த்தைகளை தவிர்த்தார் என்று ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்!
தன் அரசை, இது வளர்ச்சியுடன் கூடிய திராவிடமாடல் அரசு என்றும், அம்பேத்கார், பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் பயணிக்கும் திராவிட மாடல் அரசு என்றும் தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்ட ஸ்டாலின் அரசு தயாரித்து கொடுத்த உரையை அவர் தவிர்த்துள்ளார்! இதன் மூலம் ‘இது வளர்ச்சியுடன் கூடிய அரசு’ என்ற கருத்தாக்கத்தை அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதும், ‘மேற்படி பெரியவர்களின் வழியில் நடக்கும் அரசு’ என்பதோ, ‘திராவிட மாடல்’ என்ற சொல்லோ அவருக்கு உவப்பில்லை என நமக்கு அவர் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி உள்ளார் என்பது தான் செய்தி! இதில் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை! ‘ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை, பேச்சுக்களை கவனிக்கும் யாருக்கும் திமுக அரசின் இந்த சொல்லாடலில் அவருக்கு ஏற்பு இருக்கும்’ என நம்ப இடமில்லை!
சரி, அடுத்ததாக, ”ஆளுநரின் சொந்தக் கருத்து எதையும் அவர் வெளிப்படுத்தக் கூடாது! அரசு எழுதித் தந்ததை அவர் அப்படியே படிப்பது தான் மரபு. அவர் மரபை உடைத்துவிட்டார். இதை ஏற்கமுடியாது” என்கிறார்கள்! இது மரபாக இருந்தால், அந்த மரபு ஆளுனரின் ஜனநாயக உணர்வையும், கருத்து சுதந்திரத்தையும் அழுத்துகிறது தானே! ஆகவே, அந்த மரபை அவர் மீறி இருக்கிறார்!

அதே சமயம் அவர் மரபை உடைத்ததும், மிக இயல்பாக தானும் மரபை உடைத்து, அவர் பேசியதற்கு அல்லது பேச தவிர்த்ததற்கு தன் வருத்ததையும் , கண்டணத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படுத்தியது மிகச் சரியே! ஆனால், தான் மரபை உடைக்கும் போதும், எதிர் கருத்து வைக்கும் போதும் அமைதி காத்த சபைக்கு கொஞ்சம் கூட நன்றி உணர்வு இல்லாதவராகவும், முதலமைச்சரின் வருத்ததையும், கண்டணத்தையும் ஒரு ஜனநாயகச் செயல்பாடாக எதிர் கொள்ளத் திரானியற்றவராகவும் கவர்னர் வெளி நடப்பு செய்துள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இறுதியில் தேசிய கீதம் பாடப்படும். அதற்கு மரியாதை தந்தே வெளியேற வேண்டும் என்பதைக் கூட உணராமல், ஆத்திரம் மேலிட கவர்னர் சபையில் இருந்து வெளி நடப்பு செய்ததானது, அவர் வகிக்கும் உயர் பதவிக்கு அழகல்ல! ‘ஒரு வகையில் கவர்னர் இன்று சட்ட சபையில் உண்மையான எதிர்கட்சித் தலைவராக தன்னை அடையாளம் காட்டிவிட்டார்’ என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், எதிர்கட்சியான அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எதிர்கட்சி பாத்திரத்தை உணராமல், கவர்னரின் கூஜா தூக்கியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் துர் அதிர்ஷ்டவசமானதாகும்!

அதே சமயம் திமுகவின் தோழமை கட்சிகள் இன்று மிக காத்திரமாக ஆளுநருக்கு சபையில் கண்டணம் தெரிவித்தன் மூலம், ‘தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்’ என்று தான் சொல்ல வேண்டும்.
எது எப்படியானாலும், தொலைந்து போன திமுக தலைவர் ஸ்டாலினின் தன்மானம் இன்றாவது வெளிப்பட்டமைக்கும், கவர்னரை நேருக்கு நேராக அவர் எதிர்க்க துணிந்தமைக்கும் நாம் நம் மகிழ்ச்சியையும், பாராட்டையும் வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.
Also read
ஆளுநர் ஆர்.என்.ரவி ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் ஒரே நேரத்தில் அவர் கவர்னராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் இருக்க முடியாது! இதை அவர் உணராவிட்டால் திமுக அவருக்கு உணர்த்த வேண்டும்.
கவர்னர் நினைத்திருந்தால், தனக்கு நான்கு நாட்களுக்கு முன்பே கொடுக்கப்பட்ட உரையில் தனக்கு ஆட்சேபகரமானயான வார்த்தைகளை அரசே நீக்கிவிட சொல்லி அறிவுறுத்தி இருக்க முடியும். ஆனால், அதை தவிர்த்து, சட்ட சபைக்கு வந்து, தன் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி உள்ளார் என்பது அவர் வெளிப்படையான மோதலுக்கு தயாராக உள்ளார் என்பதைத் தான் காட்டுகிறது!
பார்க்கலாம், இனியாவது திமுக அரசின் பாஜக உறவு எப்படி போகப் போகிறது என்பதை!
சாவித்திரி கண்ணன்!
அறம் இணைய இதழ்
திமுகவிற்கு தான் தெரியுமா வெளி நடப்பு செய்ய. இவர்கள் சொல்வதை அப்படியே சொல்ல அவர் என்ன கிளிப்பிள்ளையா என்ன? இது தான் சரி. மரபை தூக்கி எறிவது . அது போல கவர்னர் என்னும் மரபும் தூக்கி எறிய பட வேண்டும்.இந்த மரபு என்னும் பெயரில் தங்களின் சட்டையை தாங்களே தூக்கி விட்டு கொள்ளும் மரபும் தூக்கி எறிய பட வேண்டும்.
தங்களது கருத்துசரியல்ல
மறைமுக மோதல் இன்று வெளிப்படையாகியுளளது
சரியான பார்வை. தி.மு.க அரசு தன்னைத்தானே புகழ்ந்து கொள்ள அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கார் பெயர்களை குறிப்பிட்டுள்ளது. அனைத்து செய்திகளிலும் விவாதங்களிலும் இவர்களது பெயரைத் தவிர்த்தார் என்று மட்டுமே சொல்லப்பட்டது. எப்படி இருப்பினும் ஆளுநருக்கு பொறுமை இல்லை. தன் உரையை கேட்ட சபைக்கு மரியாதை செய்யத் தவறி விட்டார்.. முதல்வர் முதல் முறையாக ஒரு எதிர்ப்பை சரியாக பதிவு செய்துள்ளார். மகிழ்ச்சி தான். ஆளுநர் உரை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில் தனது கருத்தை முன் கூட்டியே சொல்லியிருக்கலாமே.
Better late than never
ஃ தமிழ்நாடு ஃ
தமிழ்நாடு அலுவல் பெயர் தமிழகம் வழக்குச் சொல் அவ்வளவே.
இது தமிழறிந்த அனைவருக்கும் அத்குப்படி.
தமிழ் தெரியாத ஆளுநர் போன்றவர்களுக்கு தாம் ஏதோ
வேறுபடுத்தி விட்டோம் என்ற இணைப்பில் தமிழகம் என்று பிரயோகம் செய்கிறார். இது அவருடைய அறியாத்தனம். இதன் மீது நாம் விவாதம் செய்வது தமிழர்களாகிய நமக்கு அர்த்தமற்ற ஒன்று.
தமிழ் மொழியில் ஒரு விரிவான சொல்லுக்கு அல்லது பெயருக்கு அதனுடைய சுருக்கமும் வழக்கில் உண்டு என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அறம் இணைய இதழ் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் கூறியது போல் தஞ்சாவூர் – தஞ்சை என்றும், கும்பகோணம் – குடந்தை என்றும், மயிலாப்பூர் – மயிலை, கோயம்புத்தூர் – கோவை, மயிலாடுதுறை – மாயவரம், பாண்டிச்சேரி – பாண்டி , காரைக்கால் – காரை, திருநெல்வேலி – நெல்லை,
நாகப்பட்டினம் – நாகை, திருச்சிராப்பள்ளி – திருச்சி, திருத்தணி – தணிகை, செங்கல்பட்டு-செங்கை. .. இது மாதிரி வழக்காடு பெயர் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இது தமிழர்களுக்கே கிடைத்த கொடை.
தமிழ்நாடு என்றாலும் தமிழகம் என்றாலும் நம்மை தான் குறிக்கும்.
தமிழ்நாட்டில் பல ஊர் பெயர்கள் கூரைநாடு, செட்டிநாடு, வளநாடு, ஒரத்தநாடு, பாப்பா நாடு, என்று தமிழ்நாட்டில் இத்தனை நாடுகள் உள்ளன என்பதை ஆளுநருக்கு அவரைச் சுற்றியுள்ளவர்கள் புரிய வைக்க வேண்டும்.
ஆளுநர்களின் அடாவடித்தனம் எல்லா மாநிலங்களும் அரங்கேறிக் கொண்டு வருகிறது கூடிய விரைவில் தாடி இல்லா ஆடுகள் ஆளுநர் நாடுகள் உருவாகும் காலம் விரைவில் வரும். எல்லா மாநிலங்களும் ஏகோபித்த வகையில் ஆளுநர் பதவி அவசியம் இல்லாத பதவி வெள்ளை யானைக்கு தீனி போடும் வீண் செலவு, எனவே ஆளுநர் பதவியை அகற்றுவோம் என்ற தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்புதல் அவசியம் காலத்தின் கட்டாயம் .
கீழ்காணும் ஆளுநரில்லா
அரசியலமைப்பு எல்லாவற்றிற்கும் தீர்வாக அமையும்.
ஃ சமத்துவ மக்களாட்சி ஃ
சம பரப்பளவு உள்ள பகுதி, தொகுதி அடங்கிய
சமத்துவ அரசியலமைப்பு:
ஐயுயர்நிலை மக்கள் மன்றங்கள் அரசியலமைப்பு:
முதன்மை மக்கள் மன்றம்
(பகுதிகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டது)
வட்ட மக்கள் மன்றம்
(முதன்மை மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
மாவட்ட மக்கள் மன்றம்
(வட்ட மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
மாநில மக்கள் மன்றம்
(மாவட்ட மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
இந்திய உச்ச மக்கள் மன்றம்.
(மாநில மக்கள் மன்றங்கள் ஒன்றியம்.)
“ஆகச்சிறந்ததொரு பகுதிப்பிரதிநிதி
அகிலஇந்திய அரும்பெரும் தலைவராகும் அரசியலமைப்பு”