பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் சுமார் 50,000 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை! இந்த அதிர்ச்சிகர தகவலின் பின் இருக்கும் உண்மைகளை பார்க்கவோ, உணரவோ அதிகார மையத்தில் இருப்பவர்கள் விரும்புவதில்லை! இதற்கு பல சமூக, பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும், இது ஒரு திட்டமிட்ட சதியாகவே தோன்றுகிறது..
மிகப் பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வெழுதாமல் போனதற்கு ஒரு ஆசிரியராக, சமூக ஆய்வாளராக இங்கே நான் பல காரணங்களைச் சொல்ல முடியும். குடும்பச் சூழல்கள், குடும்ப வருவாய்க்காக உழைப்பில் ஈடுபடுதல், பெற்றோரின் அறியாமை, பெற்றோர்களை இழந்திருத்தல், மது, கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கம், சமூகக் குற்றவாளிகளுடன் சேர்க்கை, அதிகமான செல்பேசிப் பயன்பாடுகள், லும்பன்கள் எனப்படும் உதிரிக் கலாச்சார மனப்போக்கு, அளவுக்கு மீறிய சுதந்திரப் போக்கு என, பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
ஆனால், இவை எல்லாவற்றையும் விஞ்சிய முக்கியமான காரணம், தற்போதைய கல்வித் திட்டமும், அதீத பாடச் சுமைகளுமே! இது தான் பெருவாரியான மாணவர்களைக் கல்விச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தி வைத்துவிட்டது.
பொதுவாக, கல்விசார் கலைத்திட்டம் என்பது மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட வேண்டும். மாணவர்களின் வயது, உடல், உளவியல், சமூகப் பண்பாட்டுப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ப அறிவுசார் நோக்கங்களை அடைய வைப்பதற்கான கற்பித்தல்- கற்றல் செயல்பாடுகள் தான் கல்வி எனப்படுகிறது. அதற்கேற்பத் தான் கல்வித் திட்டமானது காலந்தோறும் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. மாணவர்களுக்கு உகந்த, பெருவாரியான மாணவர்களைப் பங்கேற்கிற வகையில் தான் கடந்த காலத்தியக் கல்வித் திட்டங்கள் அமைந்திருந்தன.
முன்பெல்லாம் ஒவ்வொரு கல்வித்திட்டமும் அனைத்துத் தரப்பு மாணவர்களும் பங்கேற்கும் விதமாக அமைந்திருந்தன. அதாவது, திறமையான மாணவர்கள், சராசரி மாணவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்கள் என மூன்று வகைப்பட்ட மாணவர் தரப்பினர் கல்விச் சூழலுக்குள் இருப்பர். மேற்குறித்த மூன்று தரப்பினரையும் மனதில் வைத்துக் கொண்டு தான் – அவர்கள் அனைவருக்கும் ஏற்றவாறு தான் கல்வித் திட்டப் பாடப் பொருண்மைகள், கற்பித்தல் பயிற்சிகள், வினாத்தாள்கள், தேர்வுகள் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதனால், திறமையான மாணவர்களும், சராசரி மாணவர்களும், மெல்லக் கற்போரும் கற்றல் நோக்கங்களுக்கேற்ப உயர் கல்விக்கான வாய்ப்புகளை எட்டிப் பிடித்து வந்துள்ளனர்.
ஆனால், அண்மையில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் நவீனக் கல்விப் பாடத்திட்ட அமைப்பானது, புதிய பாடத்திட்டம் எனும் பெயரில் மிக அதிகப்படியான பாடப் பொருண்மைகள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருப்பதாகவே மாணவர்களும், ஆசிரியர்களும் கருதுகின்றனர். தலையணை அளவுக்கான ஐநூறு, ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்கள், மிக விரிவான ஆராய்ச்சி கட்டுரைகளைப் போன்ற பாடங்கள் மாணவர்களை மிரள வைக்கின்றன! சின்னஞ்சிறு குருவி தலையில் பூசணிக்காயைச் சுமக்க வைத்திருப்பதைப் போலத் தான் மாணவர்கள் உணர்கிறார்கள். அதே போல, பத்து வண்டிகளில் ஏற்றும் பாரத்தை, ஒரே வண்டியில் ஏற்றி வைத்து, அந்த வண்டியை இழுத்துச் செல்லமுடியாமல் முக்கித் தவிக்கும் வண்டி மாட்டின் பரிதாப நிலையில் தான் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களை உணருகிறார்கள்.
பாடத்திட்டத்தை நவீனப்படுத்துவதையும், தரவேற்றம் செய்வதையும் குறையாக கருதவில்லை. அதே வேளை, அது யாருக்கானது? என்ன தரமுடையது? என்ன பலமுடையது? என்ன விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது? எல்லோருக்குமான வாய்ப்புகள் இருக்கின்றனவா? என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதானே ஒரு தலைமுறைக்கான பாடத்திட்டம்/கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.
ஆனால், புதிய பாடத்திட்ட உருவாக்கமானது, எல்லோருக்குமான வாய்ப்பை வழங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, அந்தத் தரப்பினர் மட்டுமே பங்கேற்கும்படியான வாய்ப்புகளை மட்டுமே வழங்கும் சூழலை உருவாக்கித் தந்திருக்கிறது.
அதாவது, இப்போதைய புதிய பாடத்திட்டப் பொருண்மைகளும், அதையொட்டிய தேர்வு முறைகளும் அதி திறமை மிக்க மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பை வழங்குகின்றன. சராசரி மாணவர்கள் கூட திக்கித் திணறிக் கற்கும் சூழலில் தான் இருக்கின்றனர். மெல்லக் கற்கும் மாணவர்கள் இந்தப் பாடத்திட்டப் பொருண்மைக்குள்ளும், தேர்வு முறைகளுக்குள்ளும் நுழைந்து பார்த்தாலும், நுழையவே முடியாமல் அடிபட்ட பந்து போல வேகமாக பின்வாங்குகின்றனர்.
கல்லூரியிலும், பல்கலைக் கழகத்திலும் வைத்திருக்க வேண்டிய பாடத் திட்டங்களை, பள்ளி மாணவர்களின் பாடப் திட்டகளாக வைக்க வேண்டிய தேவை தான் என்ன? பெருமளவு எளிய மாணவர்களை பள்ளிக் கல்வியோடு முடக்கும் நோக்கமா..? என்ற சந்தேகம் தவிர்க்க இயலாமல் ஏற்படுகிறது.
இதனால் தான் பெருமளவு மாணவர்கள் கல்விப் புலத்தில் இருந்தே அந்நியப்படத் தொடங்குகிறார்கள். மெல்லக் கற்கும் மாணவர்களை, குறைந்தளவு மதிப்பெண் எடுத்தாவது தேர்ச்சி பெற வைக்க முடியாத நிலைதான் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. பாடங்கள் முழுவதையும் படிக்க வைத்தால் தான், அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க முடியும். மெல்லக் கற்கும் மாணவர்களைப் பாடங்கள் முழுவதையும் படிக்க வைக்க முடியாத சூழல்தான் ஆசிரியர்கள் முன்னிருக்கும் சவால்.
மெல்லக் கற்கும் மாணவர்கள், தம்மால் பாடங்கள் முழுமையையும் முற்றும் முழுதாகப் படிக்க முடியாது; இயலாது எனத் தெரிந்த பின்னரும், அடுத்தடுத்த இரண்டு பொதுத் தேர்வுகளிலும் பல்வேறு பாடங்களில் நேரப் போகும் தோல்விகளை எதிர்கொள்வதற்கு அம்மாணவர்கள் விரும்புவதில்லை. அதனால், பள்ளிக்கும் வருவதில்லை; வகுப்புக்கும் வருவதில்லை; தேர்வுக்கும் வருவதில்லை எனத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
பள்ளிக்கும், தேர்வுக்கும் வராமல் போன மாணவர்களில் பெரும்பாலோர் மெல்லக் கற்கும் மாணவர்களே! 9 ஆம் வகுப்பு வரை சிரமமின்றி கட்டாயத் தேர்ச்சி தரப்பட்டு மாணவர்கள் , 10 ஆம் வகுப்பில் தட்டுத் தடுமாறித் தான் தேறுகின்றனர்.
11ஆம் வகுப்பிலும், 12ஆம் வகுப்பிலும் இருக்கின்ற பாடநூல்களின் அதீதச் சுமை, குறைந்தளவுத் தேர்ச்சிகூடப் பெறுவதற்கு வழியில்லாமல் போவதால் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு கற்றலில் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது. புதிய பாடத் திட்டக் கூறுகள் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் நோக்கிலேயே இருக்கின்றன! இதனால்தான், அதிகளவிலான மாணவர்களின் இடை நிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றவை நிகழ்ந்திருக்கின்றன.
ஒருகாலத்தில், சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் தீண்டாமையைச் சாதியால் நடைமுறைப்படுத்தினர். தற்போதோ, சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் நவீனத் தீண்டாமையைப் பாடத்திட்டங்களும், தேர்வுமுறைகளும் செய்கின்றன.
பெருவாரியான மாணவர்களின் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை குறித்து அரசும் சமூகமும் உண்மையிலேயே அக்கறைப்படுவதாக இருப்பின், அதி திறமையான மாணவர்களுக்கு மட்டுமே உரியதாகப் பாடத்திட்டங்களும், தேர்வுமுறைகளும் வடிவமைக்கப்படாமல், மெல்லக் கற்கும் மாணவர்களையும் உள்ளடக்கியப் பாடத்திட்டங்களும், தேர்வுமுறைகளும் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்குரிய கல்வித்திட்டச் சீரமைப்புகளைக் கல்வித்துறை உடனடியாகச் செய்திடல் வேண்டும். இத்தகையச் சீரமைப்பில் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்கும்படியான சுதந்திரமான சனநாயக அமைப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளை அளித்திடல் வேண்டும்.
கல்வித்திட்டச் சீரமைப்பின் முதற்கட்டமாக, எல்லா வகுப்புகளிலும், எல்லாப் பாடங்களிலும் பாடப் பொருண்மைகளின் அளவைக் குறைத்திடல் வேண்டும். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய பிறகு, மறுபடியும் 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டு பொதுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர் கொள்வதில் நிறைய உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆகையால், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறையை இரத்து செய்து, 12ஆம் வகுப்பிற்கு மட்டுமே பொதுத் தேர்வாக நடத்திட கல்வித் துறை நடவடிக்கை எடுத்திடல் வேண்டும்.
தேர்வு முறைகளில் வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print) என்கிற ஒரு நடைமுறை இருந்து வந்தது. அந்த நடைமுறை புதிய பாடத்திட்ட உருவாக்கத்தின்போது நீக்கப்பட்டது. இதனால், ஒரு பாடத்தில் எங்கிருந்து கேள்வி கேட்பார்கள்? எத்தனை மதிப்பெண்கள் எந்தெந்தப் பாடங்களில் கேட்பார்கள்? எதைப் படிக்க வேண்டும்? புத்தகப் பயிற்சி வினாக்களில் (Book back Questions) எத்தனை மதிப்பெண்கள் வரும்? புத்தக உள்நிலையிலிருந்து (Interior Questions) எத்தனை மதிப் பெண்கள் வரும்? என்கிற வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print Method) ஆசிரியருக்கும், மாணவருக்கும் தெரிவதில்லை. அவை தெரிந்தால் மட்டுமே, அதற்கேற்றவாறு மூவகைப்பட்ட மாணவர்களையும் பயிற்சி பெற வைக்க முடியும். குறிப்பாக, மெல்லக் கற்கும் மாணவரையும் தேர்ச்சி நோக்கிப் பங்கேற்க வைக்க முடியும். ஆகையால், உடனடியாக வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print Method) நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
இவற்றோடு, ஆசிரியர்களைச் சமூகமும், கல்வித்துறையும், அவமதிப்புக்கு உள்ளாக்காத வகையில் முழுமையான பணிப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல் வேண்டும். மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
Also read
அடிக்கடி பள்ளிகளில் பல நிகழ்வுகளை நடத்தச் சொல்லி நிர்பந்திப்பது, கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு நிகழ்வுகளில் ஆசியர்களின் கவனத்தை சிதறடிப்பது போன்ற்வற்றை தவிர்த்தால் கற்பித்தலில் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். அலுவல் காரணங்களுக்காகவும், தரவுகள் பதிவேற்றங்களுக்காகவும் வெகு தீவிரமாகப் புழக்கத்திலிருக்கும் செல்பேசிப் பயன்பாடுகளை பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர்களுக்கு அனுமதிப்பதை உடனடியாகத் தடைசெய்திடல் வேண்டும். கற்றல், கற்பித்தல் சார்ந்த கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்கும் ஆசிரியர்களின் உள்ளக் குரலை மனம் திறந்து கேட்கவும், அதன் நியாயங்களை உணர்ந்து கொள்ளவுமான கல்வித்துறை அதிகாரிகள் முன் வருதல் வேண்டும். இதெல்லாம் நடந்தால், ஓரளவுக்கேனும் கல்வித்துறை சீரமைய வாய்ப்பிருக்கிறது.
கல்விச் சூழல் குறித்து கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மனம் திறந்து பேசவும், எழுதவும், உரையாடவும் வேண்டிய நேரமிது. தங்களின் கட்டளைகளை நிறைவேற்றும் பணியாளர்களாக மட்டுமே ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும் பார்க்கும் நிலையில் இருந்து கல்வித் துறை அதிகாரிகள் விடுபட வேண்டும்.
கட்டுரையாளர்: ஏர் மகாராசன்,
முனைவர்,
சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.
மக்கள் தமிழ் ஆய்வரண்,
தமிழ்நாடு.
எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கல்வித்துறையில் அரசு மூக்கை நுழைப்பதை விட்டு முடிவெடுக்கும் உரிமை வல்லுநர் குழுவிடம் முழுமையாக வழங்கப்பட வேண்டும்…..!
Super sir.
திறந்த புத்தக தேர்வுகள் வேண்டும்
வழக்கமாகவே ஒரு மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் மேல்நிலை வகுப்பில் கிட்டத்தட்ட 1000 மாணவ மாணவிகள் தேர்வுக்கு வராமல் போவதுண்டு
அவர்கள் ஏதாவதொரு காரணத்துக்காக பள்ளியிலிருந்து இடையில் நின்றிருப்பார்கள்.
நீண்டநாள் பள்ளிக்குவராத அந்த மாணவர்களை மாணவிகளை தேர்வெழுதும் பட்டியலிலிருந்து தலைமையாசிரியர்கள் நீக்கிவிடுவார்கள். அப்படி நீக்கும் அதிகாரம் முன்பெல்லாம் அந்தப்பள்ளியின் தலைமையாசிரியருக்கு இருந்தது.
அதனால் நமக்கு இந்த எண்ணிக்கை தெரியாமல் போயிருக்கலாம்
இப்போது அப்படி நீக்கும் அதிகாரம் அவர்கள் கையில் இல்லை அதனால் இந்த எண்ணிக்கை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இது மாபெரும் துயரம் ஆனால் இதைவிட மாபெரும் துயரம் நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர் பகுதிகளில் நிலவுகிறது.அங்கே ஒன்று முதல் ஒன்பதுவரை பயிலும் பழங்குடி குழந்தைகளில் பாதிக்குமேலானவர்கள் பள்ளிக்கு இன்றும் போவதில்லை.
கற்றலில் இனிமை கற்கண்டு கணக்கு என பல விசயங்கள் இருந்தாலும் அவர்களை அது ஈர்ப்பதில்லை, வேறு ஏதோ பிரச்சினை இருக்கிறது மேலும் வீடுகளில் அவர்களுக்கு கல்வி கற்கும் சரியான சூழல் இல்லை
இப்படியான பகுதிகளில் யுனிக்கான முறைசார கல்வி மையங்கள் ஏற்படுத்தவேண்டும் இக்குழந்தைகளுக்கும் பள்ளிக்கும் ஒரு பாலம் போல் அந்த மையங்கள் செயல்படவேண்டும்.
இப்பகுதிக்கென களமும் கல்விக்கூடமும் இணைந்த தனித்துவமான சிலபஸ்கள் உருவாக்கப்படவேண்டும்
குறிப்பாக பணியர் காட்டுநாயக்கர் பெட்டகுரும்பா இருளா ஆசிரியர்கள் ஏதாவதொரு வகையில் பள்ளியில் நியமிக்கப்படவேண்டும்
தூரங்களை கடப்பதற்கு தனியார் நிறுவனங்கள் மசினங்குடிப்பகுதியில் இலவசமாக வாகனங்களை இயக்குகிறார்கள். அத்திட்டம் அனைத்துப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தவேண்டும்.
இருக்கும் 21 அரசு உண்டுறைவிடப்பள்ளிகளை குழந்தைகள் விரும்பும் வண்ணம் மாற்றவேண்டும்
இந்த துயரங்களை தீர்க்க அரசு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் அப்படித்தவறினால் பழங்குடி சமுகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி போய்விடும்.அப்படி போனால் நாம், பூர்வகுடிகளுக்கு செய்யும் அநீதி துரோகம் இதைவிட வேறெதுவும் இருக்கமுடியாது
இந்த கட்டுரையை எழுதிய ஏர் மகாராசன் எப்படி ஆசிரியராக குப்பை கொட்டினார் என தெரியவில்லை. தற்போதைய பாடத்திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன என்பது உண்மை. மாணவர்களுக்கு சுமையாக இருக்கிறது என்பதும் இன்னொரு உண்மை. ஆனால் அதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழக மாநில பாடத்திட்டம், பாட புத்தகங்கள் மற்றும் தேர்வுகள் எப்போதும் குருட்டுத்தனமாக மனப்பாடம் செய்யும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கே சாதகமாக இருந்து வந்துள்ளன. புரிந்து படிக்கும் மாணவர்கள் மிகவும் குறைவான மார்க்கையே வாங்க முடிந்தது. கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட பாடப்புத்தகங்கள் புரிந்து படிக்கும் மாணவர்களுக்கு மிகப் பெரும் தலைவலியாக இருந்தன. அதுவும் சமச்சீர் கல்வி திட்டம் வந்த பின்னர் தமிழ்நாட்டின் கல்வித் தரம் மிகவும் பின்னே போனது. எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் திட்டம், அரசு பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றால் தமிழ்நாட்டில் கல்வி என்பது வெறும் சர்டிபிகேட் பிசினஸ் ஆக மாறிப்போனது. பாடத்திட்டம் என்பது பணக்கார மற்றும் ஏழை மாணவர்களை மையமாக வைத்து தயாரிக்கப்படாமல் மிடில் கிளாஸ் பின்னணி கொண்ட மாணவர்களை மையமாக வைத்து தயாரிக்கப்படுவது தான் சரியானது. இங்கே அரசு பள்ளிகளில் முதலாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பெரிதாக கற்பது கிடையாது. அவர்களின் கற்றல் திறன் அலசப்படுவதும் கிடையாது. இது இன்னொரு முக்கிய காரணம். இப்போது தமிழ்நாடு என்கிற மாநிலம் அகில இந்தியாவோடு போட்டி போட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. ப்ளூ பிரிண்ட் அடிப்படையில் கேள்வித்தாள் தயாரிப்பது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கடந்த காலத்தில் நாம் கண்டோம்.
ஜெர்மனி போல் இரண்டு வகையான பள்ளிகளை நடத்தலாம்.
தீர்வு மிக சுலபம்! கற்பித்தல், கற்றல் திறன் மேம்பட, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, தகுதியான ஆசிரியர்கள் குறைவு! இருப்பினும் அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்கள், வார்டு மெம்பர் முதல் மந்திரி முதல்வர் வரை, கிளர்க் முதல் அதிகாரிகள் முதன்மை செயலாளர் வரை அனைவரின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று சட்டம் போட திராணி இருக்கா? பிறகு பாருங்க உண்மை தன்மை அறிய முடியும்
நாளைய தமிழகம் வளமையாக இருக்க வேண்டுமானால் இன்றைய பள்ளி கல்வி வெகு சிறப்பாக இயங்க வேண்டும்.
ஆனால் இன்றைய நிலை கட்டுரையாளர் தெளிவாக எழுதியுள்ளர்.
அரசியலை கடந்து அரசுகள் செயல்படவேண்டும்.
வார்த்தைகளில் மட்டும் ஒன்றிய அரசுக்கு எதிராக வாய் ஜாலம் காட்டும் இன்ரைய மாநில அரசு , குறைந்த பட்சம் பள்ளி கல்வி துறையிலாவது தன் எதிர்கால மாநில நலனுக்காவது சுயத்தோடு செயல்பட வேண்டும்.
குழு க்களின் அரசான இன்றைய அரசு, இந்த பள்ளி கல்விதுறைக்கு என அமைத்த குழு என்னவானது???
விளையாட்டு சிந்தனையில் இருந்து பள்ளி கல்வி அமைச்சகம், அரசு எப்போது விடுபடும்???