தமிழ் நிலத்தில் வாழ்வோரிடையே பல முரண்களை உருவாக்கி, பிரித்தாளும் சூழ்ச்சியாக இங்கே தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்பட்டு வருகிறது! தமிழ்த் தேசியம் என்ற பெயரால் உருவாக்கப்படும் ஜாதியப் பெருமிதங்கள், திராவிட வெறுப்பு மற்றும் வன்மத்தின் பின்னணி என்ன? அவற்றின் மூலம் என்ன? நோக்கம் என்ன..?
நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, ஆளும் பாஜகவை பார்த்து நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து, ‘அது சோழ மன்னனுடையது’ என்றீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா உங்களுக்கு? சாதாரண மக்களை கைவிட்ட போது செங்கோல் எரிந்தது! எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தைப் படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது” என்று காட்டமாக கூறினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறைந்த சிலம்பு செல்வர் மா. பொ. சிவஞானம் அவர்களை மேற்கோள்காட்டி, ”சிலப்பதிகாரம் நாம் திராவிடர் அல்ல, தமிழர்கள்! நமது தாயகத்தின் பெயர் திராவிடம் அல்ல தமிழகம்! இதன் எல்லை விந்திய மலை அல்ல, திருவேங்கடம் (திருப்பதி)! மற்றும் தமிழகத்தில் வாழும் அந்தணர்கள் (பிராமணர்கள்) ஆரியர்கள் அல்லர், தமிழர்கள்! நமது பண்பாடு,பழக்க வழக்கங்கள் போன்றவை வேங்கடத்திற்கு வெளியே வாழ்பவர்களில் இருந்து வேறுபட்டது’’ என்று கூறுவதாக கூறினார். நிர்மலா சீதாராமனனின் இந்த கோட்பாட்டை நாம் பாஜகவின் கோட்பாடாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், சிலப்பதிகராத்தில் திராவிடம் பற்றி எதுவும் கூறப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், வேறு பல இலக்கியங்களில் திராவிடம் என்பது கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் தமிழ் நிலம் திணைகளாக இயற்கை சூழல்களுக்கு ஏற்ப இருந்ததை தான் இயம்புகிறது. மேலும், தென்றமிழ் நன்னாடு என்று தமிழ் நாட்டை புகழ்கிறது! பாஜகவினரோ, ”தமிழ்நாடு என சொல்லாதீர் தமிழகம் எனச் சொல்வீர்” எனக் கூறுபவர்கள்! தமிழ்நாட்டில் உள்ள சில தமிழ் தேசியவாதிகளும் இதற்கு ஒத்த ஒரு கோட்பாடை தான் முன் வைக்கின்றனர். ஆனால், சிலப்பதிகாரத்தில் ‘ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்’ எனக் கூறப்பட்டிருப்பதை வசதியாக மறந்து பேசுகிறார்கள்!
2009 இலங்கை உள்நாட்டு போரில், இந்தியா அரசானது இலங்கைத் தமிழர்களை முழுவதுமாக கைவிட்டு விட்டது என்ற ஆதங்கம் இளம் தமிழர்களிடையே உள்ளது. இதன் விளைவாக 2009 ஆம் ஆண்டுக்கு பின் தமிழகத்தில் தமிழ் தேசிய உணர்வு பெருமளவில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வளர ஆரம்பித்தது. இந்த தமிழ் தேசிய உணர்வு காங்கிரஸ் கட்சிக்கும், இந்திய தேசிய உணர்வுக்கும் எதிரான போக்கை மேற்கொண்டது. இந்த தமிழ் தேசிய உணர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக திட்டமிட்டது. அன்றைக்கு ஜெயலலிதாவும் திமுகவை எதிர்க்க, தமிழ் தேசியவாதிகளை மறைமுகமாக ஊக்குவித்தார். இதற்காக இவர்கள் பல போலித் தமிழ் தேசியவாதிகளை களத்தில் இறக்கினர். இவர்கள் நோக்கம் திராவிடத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஒழிப்பதாகும்.
இவர்களுடைய தமிழ் தேசியம் திராவிடத்திற்கு எதிரானதாகும். திராவிடமே ஒரு மாயை, திராவிடம் என்று ஒன்றும் இல்லை என்பது இவர்களுடைய வாதம். திராவிடத்திலிருந்து தமிழ் தேசியத்தை பிரிப்பதனால் தமிழ் நாட்டில் தமிழர், தமிழர் அல்லாதவர் என்ற ஒரு பிரிவு ஏற்படும். குறிப்பாக தமிழ்நாட்டில் பலநூறு ஆண்டுகளாக வாழும் தெலுங்கர், கன்னடம் பேசும் மக்களை இவர்கள் ”வந்தேறிகள்” என்றும், ‘தமிழர்களின் நலனுக்கு எதிரானவர்கள்’ என்றும், சித்தரிக்கின்றனர். தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழர்களை மற்ற திராவிடர்களிடம் இருந்து பிரிக்கும் இவர்கள், தமிழர்களிடையே ஜாதி வேறுபாட்டை நியாயப்படுத்தி, ஊக்குவிக்கின்றனர். ஆனால், ஜாதி என்று கூறாமல் ‘குடிகள்’ என்று கூறுகின்றனர்.
தமிழ் குடிகள் என்று இவர்கள் கூறுவது தமிழ்நாட்டில் உள்ள ஜாதிகளைத் தான். அந்த வகையில் ‘பறையர் குடி’, ‘பள்ளர் குடி’, ‘கள்ளர் குடி’ ‘வன்னிய குடி’ என்றேல்லாம் ஜாதிகளுக்கு தமிழ் சார்ந்த புது அங்கீகாரம் தருகிறார்கள்! இந்த குடிகள், ஆரிய பிராமணர்களின் வாரணா சிரம கோட்பாடுகளால் உருவாக்கப்பட்டது அல்ல. இந்த குடிகள் தானாக தோன்றிய தமிழ்க் குடிகள் என்பது இவர்களுடைய வாதம்.
உண்மையில், இவர்கள் கட்டமைக்கும் தமிழ் தேசியத்தில் தமிழை தாய் மொழியாக கொண்ட திராவிடர்களும், தமிழை தாய் மொழியாக கொண்ட ஆரியர்களும் (பார்ப்பனர்கள்) அடங்குவார்கள். ஆனால், இந்த தமிழ் தேசியத்தில் தமிழர்கள் நேரிடையாக பங்கு கொள்ள முடியாது அவர்கள் சார்ந்த குடிகளின் வாயிலாகவே பங்கு கொள்ள முடியும். இந்த தமிழ் தேசிய கயிறு பல தமிழ் குடிகளை (ஜாதிகளை) கொண்டு திரிக்கப்பட்ட கயிறாகும். இந்த தமிழ் தேசிய கயிறை பல நாறுகளாக, குடிகளாக அதாவது ஜாதிகளாக பிரித்து விடலாம். ஒரு குடியை மற்றொரு குடியோடு மோத விடலாம். தேவைப்படும் போது மொத்த கயிறையும், தமிழ் தேசத்தையும் அறுத்து விடவும் முடியும்.
1965 ஆம் ஆண்டு இந்திய எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது அதற்கு அடுத்த பெரிய மக்கள் எழுச்சி என்பது தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த இரண்டும் ஜாதி மதம் கடந்து தமிழர்கள் ஒன்றுபட்ட போராட்டமாகும். தமிழர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களும் எந்தவித வேறுபாடுமின்றி இந்த போராட்டத்தில் பங்கு கொண்டனர்.
இப்படி ஓர் எழுச்சி தமிழ்நாட்டில் வருங்காலத்தில் எப்பொழுதாவது எந்த காரியத்திற்காவது நடந்தால் அப்போது தமிழர்கள் ஜாதி மதம் கடந்து தமிழன் என்ற முறையில் ஒன்று சேர்ந்து அந்த எழுச்சியில் பங்கு கொள்ளாமல் தன் குடி சார்பாக பங்கு கொள்வான். அந்த எழுச்சியில் பள்ளர் குடி, பறையர் குடி, கள்ளக்குடி, வன்னியர் குடி என்று பல குடிகள் ஒன்றிணைந்து அந்தப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள். மற்ற திராவிடர்களான தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்களுக்கு இந்த போராட்டங்களில் எந்தப் பங்கும் இருக்காது இருக்கவும் கூடாது. அப்படி ஒரு போராட்டம் நடந்தால் அது வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட தமிழ் குடிகள் தமிழர் நலனுக்காக எப்போதும் ஒன்று சேர மாட்டார்கள். இவர்கள் தங்களுக்குள்ளேயே ஏற்றத் தாழ்வு, போட்டி, பொறாமை என்று சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.
அந்நிய சக்திகள் இவர்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் கையாளலாம், ஆட்டி வைக்கலாம். இந்திய எதிர்ப்பு போராட்டம், ஈழத் தமிழருக்கான போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் எனப் பல போராட்டங்களில் நம்மோடு தோளோடு தோள் நின்று போராடிய தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளை நாம் இந்த தமிழ் தேசியத்திலிருந்து ஒதுக்கி, அவர்களை நமக்கான எதிரிகளாக்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்!

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை பிரித்தாண்டதைப் போல, தற்போது திராவிடர்களை குறிப்பாக தமிழர்களை பிரித்து ஆள வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறார்கள். இதற்காக அவர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த போலித் தமிழ் தேசியம். போலி தமிழ் தேசியத்தின் மூலமாகத் தமிழ்நாட்டில் உள்ள ஜாதிகளுக்கு ஒரு தற்பெருமையை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். ஜாதி என்பது ஆரிய பிராமண வருணாசிரம கோட்பாட்டால் உருவாக்கப்பட்டது என்ற புரிதலை மாற்றவே இத்தனை முயற்சிகள்! எனவே, ஜாதிகளைக் குடிகளாக்கி, புதிய மொந்தையில் பழைய கல்லை ஊற்றுகிறார்கள். ஜாதி உணர்வுகளை உயிர்ப்போடு வைக்கும் முயற்சிகளே இவை!
Also read
இதில் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால், உண்மையான தமிழ் தேசியவாதிகளும் இந்த போலி தமிழ் தேசியவாதிகளை அரவணைப்பதே! இவர்கள், ‘திராவிடம், தமிழ் தேசியத்திற்கு எதிரானது’ என்றும், ‘திராவிடம் ஒரு பொய்யான பிம்பம்’ என்றும் கருதுகிறார்கள்.
நமது மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இயற்றியுள்ள தமிழ்த்தாய் வாழ்த்திலேயே, ‘திராவிட நல் திருநாடு’ என வருகிறதே! நமது தேசிய கீதத்தில் ரவீந்திரநாத் தாகூர், ”திராவிட, உத்கல வங்கா” என்கிறார்! ஆக, திராவிடம் என்பது இடத்தையும், அங்கு வாழும் இனத்தையும் குறிப்பதாகும். திராவிட இனம் ஒரு கூட்டு குடும்பமாகும். இதில், திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவை பிரதான மொழிகளாகும். திராவிடத்திலிருந்து தமிழையோ, தமிழிலிருந்து திராவிடத்தையோ பிரிக்க முடியாது.
கட்டுரையாளர்; பா.பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்
துணை ஆணையாளர்
சரக்கு மற்றும் சேவைவரித் துறை
முதலில் இவர் பணியில் இருக்கிறாரா இல்லை ஓய்வு பெற்றவரா ? பணியில் இருப்பவர் இக்கட்டுரையை எழுதியிருந்தால் நன்னடத்தை விதியில் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் ! விடயத்திற்கு வருவோம்
நான் வடகிழக்கில் வாழ்ந்தவன் ( 35 வருடங்களாக இன்னமும் போய் வருகிறேன் ) . நான் பார்ப்பன குடியில் பிறந்தவன் . திராவிடத்தை கட்சிகளை தீவிரமாக ஆதரித்தவன்.
எனக்கு தெரிந்த/ அறிந்த சாதி இரண்டு வகைப்படும் .Tribal or Non Tribal. வட கிழக்கு மாநிலங்களில் குறிப்பாக Tribal States என்று அழைக்கப் படும் மாநிலங்களில் இப்படித்தான் அழைப்பார்கள் அடையாளப் படுத்தப் படுவோம் ( வெளி மாநில த்தவர்கள் ) பல இனக் குழுக்கள் மொழி பேசுபவர்கள் அங்கு இருக்கின்றனர் . அவர்களிடையே பல பிரிவினைகளும் உண்டு .மோதல்கள் முட்டள்கள் உண்டு .But when the Cruses comes to their own identity they are Tribals first and other issues next .அயலான் அயலானே .
எந்த இனமும் ஒருவனின் மொழி கொண்டுதான் அறியப்படுகிறது .
இது உலக இயற்கை .இதில் மாற்றுக்கருத்து இல்லை .
தமிழன் மட்டும்தான் வேறு ஒரு பொருந்தாத மொழியால் அறியப்படுத்தப் படுகுறான்
திராவிடம் ஒரு மொழியா ? திராவிடன் என்பவன் இருக்கின்றானா ?
தமிழனை தமிழன் என்று அடையாளப்படுத்துவதில் குழப்பம் ஏன்? மலையாளி தெலுங்கன் கன்னடத்தான் எப்படி தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறான்
பெயரில் சாதியை ஒழித்தவர்கள் ( தி குரூப் )மற்ற மாநிலத் தலைவர்களை சாதி பெயர் கொண்டு இருப்பது ஏன் ?நாயுடு ராவ் நாயர் பிள்ளை மேனன்கவுடா ரெட்டி பானர்ஜீ முகர்ஜீ யாதவ் காந்தி நேரு படேல் மோஃ* இவர்களை இப்படி அழைப்பது ஏன் ? சாதியை அழித்தும் என்று தம்பட்டம் அடித்தவர்கள் ்பாராளுமன்றத்தில் இதை ஒழிக்க ( பெயரில் சாதியை எடுப்பதற்கு ) ஏதேனும் முயற்சி எடுத்தார்களா ? சாதி பிரிவு தமிழர்களிடம் மட்டும் உள்ளதா ? மற்றவர்களிடம் இல்லையா ) இந்து மதம் சாதிய கட்டமைப்புதான் அஸ்திவாரம் ்அதன் மீதுதான் தற்போதைய இந்தியா உள்ளது
பாசக வை தமிழ்நாட்டில் வளர்த்து விட்டது யார் ? தமிழ் தேசிய உணர்வாளர்களா இல்லை தி குரூப்பா ? பாசக தி குருப் போலத்தான் அரசியல் செய்கிறது ! தமிழ் என்று தம்பட்டம் அடிப்பது தமிழை மறுபக்கம் ஒழிப்பது இது தான் ஆரிய பார்ப்பன மற்றும் திராவிட சித்தாந்தம் . நடந்த விடயம் ( நாங்குநேரி )மிக கேவலமானது மனித இனத்திற்கு இழக்கு .
இதுதிருட்டு திராவிடத்தின் தோல்வி .உங்களைப் போன்ற கருத்தாளர்கள் இல்லாத திராவிடத்தை தூக்கிபிடிப்பது கேவலம். 3000 கீமி தூரத்தில் இருக்கும் மணிப்பூருக்கு துடிக்கும் திருட்டு திராவிடம் இங்கே தமிழ் தேசியத்தை காவிகளுடன்ஒப்பிடுவது காவிகள் என்றழைப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்
இது ஒரு சிறந்த கட்டுரை. கட்டுரையாளருக்கும் வெளியீட்டாளருக்கும் நன்றி.
2010ஆம் ஆண்டில் திராவிட ஆய்வு மையத்தை தொடங்கி வைத்து பேராசிரியர் ஆற்றிய உரையிலிருந்து…
“நாம் தமிழர் என்று சொல்லும்போது கிடைக்காத உரிமையும், பெருமையும்- திராவிடர் என்ற சொல்கிறபோது கிடைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எதற்காக தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்று பெயர் வைக்க வேண்டும்? தமிழர் என்ற பெயர் இருந்தால் போதாதா?என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கெல்லாம் சொன்ன ஒரு விளக்கம்-நம் மீது ஆதிக்கம் செலுத்திய-செலுத்துகின்ற பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழன்; பார்ப்பனரை விலக்கிய பெயர் திராவிடன்.
திராவிடத்திலிருந்து தமிழைப் பிரிக்க முடியாதென்பதற்கு என்ன எடுகோள்? ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்றுதான் பாடினார்கள், திராவிடன் கண்டாய் எனப் பாடவில்லை, நிரம்ப பிற்காலத்தில் வந்த திராவிடம் என்றச் சொல்லைக் காட்டிக் கூறுவது கேலிக்குரியது. மனோன்மணியம், ரவீந்திரநாத்தின் பாடல்கள் காலத்தில் பின் தங்கியது. இங்கே பிறமொழியாளர்களை யாரும் எந்த தமிழ்த்தேசியரும் எதிரியாக காட்டவுமில்லை,சொல்லவுமில்லை. குழந்தைக்குக்கூட பாசகவின் இச்சொல்லாடல்கள் உண்மையில்லை, தந்திரம் செய்கிறார்கள் என்று கண்டுபிடித்துவிடும். இவ்வளவு படித்தவர் யாரின் கூற்றிற்கு என்ன பொருள் என்பதைக் கூட அறியாமல் அப்படியே நம்பிவிடுபவராக உள்ளார். இங்கே பிறமொழி முதலாளிகளின் ஆதிக்கம் உள்ளதைக் கூறினால் உடனே ஒற்றுமை, சமத்துவம் என உளற வேண்டியது. ஒவ்வொரு மொழிவழி மாநிலமும் தங்களின் இனம், பண்பாடு முதலியவற்றிற்குப் பாதிப்பு வேற்றினத்தவரால் ஏற்படுமானால் அதனைக் கட்டுப்படுத்த சட்டரீதியாக உரிமைப் பெற்றவர்களே! கீழ்வெண்மணியில் கிசான் போலீசை அனுப்பி விவசாயிகளைக் கொன்றது தமிழ்த்தேசியர்களா? மேலவளவில் படுகொலை செய்தது தமிழ்த்தேசியர்களா? திண்ணியத்தில் பீயை வாயில் வைத்தது தமிழ்த்தேசியர்களா? சாதிப்பார்த்துக் கட்சிப் பதவி,தேர்தல் வேட்பாளர்கள் நிறுத்துவது தமிழ்த்தேசியர்களா? வறட்டுச் சொல்லாடல்களால் தமிழ்த்தேசியத்தை அளப்பது முட்டாள்தனம்
//இந்த தமிழ் தேசிய உணர்வு காங்கிரஸ் கட்சிக்கும், இந்திய தேசிய உணர்வுக்கும் எதிரான போக்கை மேற்கொண்டது. இந்த தமிழ் தேசிய உணர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக திட்டமிட்டது. அன்றைக்கு ஜெயலலிதாவும் திமுகவை எதிர்க்க, தமிழ் தேசியவாதிகளை மறைமுகமாக ஊக்குவித்தார். இதற்காக இவர்கள் பல போலித் தமிழ் தேசியவாதிகளை களத்தில் இறக்கினர். இவர்கள் நோக்கம் திராவிடத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஒழிப்பதாகும்.//
“இப்படி ஓர் எழுச்சி தமிழ்நாட்டில் வருங்காலத்தில் எப்பொழுதாவது எந்த காரியத்திற்காவது நடந்தால் அப்போது தமிழர்கள் ஜாதி மதம் கடந்து தமிழன் என்ற முறையில் ஒன்று சேர்ந்து அந்த எழுச்சியில் பங்கு கொள்ளாமல் தன் குடி சார்பாக பங்கு கொள்வான். அந்த எழுச்சியில் பள்ளர் குடி, பறையர் குடி, கள்ளக்குடி, வன்னியர் குடி என்று பல குடிகள் ஒன்றிணைந்து அந்தப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள். மற்ற திராவிடர்களான தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்களுக்கு இந்த போராட்டங்களில் எந்தப் பங்கும் இருக்காது இருக்கவும் கூடாது. அப்படி ஒரு போராட்டம் நடந்தால் அது வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட தமிழ் குடிகள் தமிழர் நலனுக்காக எப்போதும் ஒன்று சேர மாட்டார்கள். இவர்கள் தங்களுக்குள்ளேயே ஏற்றத் தாழ்வு, போட்டி, பொறாமை என்று சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.”
இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? திராவிட ஆட்சியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை நாங்குநேரி மாதிரி ஏதாவது நடந்து கொண்டு தானே உள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் 2009ல் இலங்கையில் நடந்த இன படுகொலைக்கு எதிரான போராட்டத்திலும் தமிழ் நாட்டில் வாழும் மலையாளிகளில் எத்தனை பேர் பங்கெடுத்தார்கள் என சொல்ல முடியுமா? திராவிடர் என்னும் போர்வையில் இருக்கும் தெலுங்கர் மற்றும் கன்னடர்களில் ஒரு சிலர் மட்டுமே மன சாட்சியுடன் உண்மையான உணர்வுடன் கலந்து கொண்டனர். மற்றவர்கள் தங்கள் குறுகிய அரசியல் நோக்கில் போராட்டத்தை கண்டனர்.
திராவிடர் என்னும் சொல் பார்ப்பனர்கள் அல்லாத தமிழரை அல்லது தென்னிந்தியரை குறிக்கிறது என்பதற்கு எந்த பழைய நூலில் ஆவது ஆதாரம் உண்டா?
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ் நாடு உருவாவதற்கு திராவிடர்களின் பங்கு மிகவும் சொற்பம். அல்லது கை கழுவுவதாக இருந்தது. தமிழ் தேசியம் பேசியவர்கள் தான் போராட்டத்தை பெருமளவு முன்னெடுத்தனர். அவர்களில் ஒருவரான சி.ப. ஆதித்தனார் அவர்கள் தான் நாம் தமிழர் கட்சியை தோற்றுவித்தார். 2009க்கு பிறகு சீமான் அவர்கள் அந்த கட்சியை நடத்தி வருகிறார். அந்த கட்சி ஓட்டு அரசியலிலும் ஈடுபட்டு வருகிறது.