ஆசிரியர்களை பாடம் நடத்தவிட மாட்டீங்களா…?

-வெ.சுதாகர்

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில்  கற்பித்தலும் – கற்றலும் சுதந்திரமாக நடைபெறுவதில்லை. ஆசிரியர்களை பாடம் நடத்தவிடாமல் ஆட்டுவிப்பது தான் பள்ளிக் கல்வித் துறையின் அணுகுமுறையா? வெவ்வேறு பெயர்களில் ஆபத்தான தேசிய கல்வித் திட்டத்தை பள்ளிகளில் திணிப்பதா..? அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி ஆவேசம்.

கொரோனா காலத்தில் மாணவர் கற்றலில் தற்காலிகமாக கொண்டு வரப்பட்ட  எண்ணும் எழுத்தும் திட்டத்தையே இன்னும் தொடரச் செய்வதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் ஆசிரியர்கள்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு கல்வித்துறை எமிஸ் (EMIS) நடைமுறையை புகுத்தி உள்ளது. இதில் கல்வி மற்றும் மாணவர்கள் சார்ந்த பல பதிவேற்றங்களை செய்ய தினமும் நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால் தங்கள் 99% நேரத்தை  அலைபேசிகளுடனேயே, எமிஸ் செயலியைப் பயன்படுத்துவதிலேயே, ஆசிரியர்கள் கழிக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலையால் கடும் மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாகின்றனர்.

இதனால் மாணவர்களுடன் கலந்துரையாட , பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது எதிர்கால சமுதாயத்தைக் கட்டமைக்கும் இன்றைய குழந்தைகளின் மனநலத்திற்கு ஏற்றதல்ல.

வகுப்பறைகளில் மாணவர்களுடன் உரையாடி, அன்பு செலுத்தி கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டு நல்லதொரு கல்வியை வழங்க வேண்டிய ஆசிரியர்களை அதன் எதிர் திசையில் பயணிக்கத் தூண்டுகிறது கல்வித்துறை. இதனால் தங்கள் வசம் உள்ள மாணவர் நலன் குறித்து எந்த அக்கறையும் காட்ட இயலவில்லை என்று மனம் வெதும்புகிறார்கள் ஆசிரியர்கள். இந்த எமிஸ் நடைமுறையால் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஆசிரியை  அன்னாள் ஜெயமேரி   இணைய வழியில் பதிவேற்றம் செய்வதில் இருந்த சிக்கலால் ஏற்பட்ட மன உளைச்சலில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்த நிர்ப்பந்திக்கிறது. எண்ணும் எழுத்தும் திட்டக் கற்பித்தல் அரும்பு, மொட்டு, மலர்  என்ற வகைகளில் கேள்வித் தாள்களை பதிவிறக்கம் செய்து குழந்தைகளது திறனை சோதிக்க வலியுறுத்தி கட்டாயப்படுத்துகிறது. இதற்கு எமிஸ் (EMIS) செயலி பயன்படுத்த வேண்டும் என்று ஆணையிடுகின்றனர்!  கல்வி துறையின் இந்த நடைமுறைகள் யாவும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமேயாகும்.

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும்  ஆன்லைன் வழியாக வினாத்தாள் பதிவிறக்கம் செய்து மதிப்பிட வேண்டும் என்று வழிகாட்டுகிறது. அதையும் மதிப்பீடு செய்து மீண்டும் எமிஸ் வழியாக பதிவிடவும் வலியுறுத்துகிறது.

நேரமின்மையால் எல்லாக் குழந்தைகளுக்கும் ஆன்லைன் வழியாக இத் தேர்வை நடத்த இயலவில்லை . பெற்றோர்கள் இந்த ஆன்லைன் தேர்வு முறையை எதிர்த்து ஆங்காங்கே போராட்டத்தை முன்னெடுத்து வருவது கவனத்திற்கு உரியது.

ஏற்கனவே, ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கின்றது. வகுப்பறைகள் இல்லாத சூழ்நிலைகள் உள்ளன.  இது போன்ற அடிப்படைப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்  தேர்வு முறைகளை இணைய வழியில் நடத்தியே தீர்வோம் என்று கட்டாயப்படுத்துவது முறையற்றது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பங்கும் பகுதியுமான இந்த இணையவழிக் கல்வி மற்றும் தேர்வு முறையை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் ( AISEC) தமிழ்நாடு கிளை.

மேலும், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணிகளை ஏராளமாகக் கொடுத்து வருவதை அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது.

வருங்கால சமூகம் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், நேரடியாக கற்பித்தல்-கற்றல் செயல்பாடுகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். தேர்வுகளும் நேரடியாக நடத்தப்பட வேண்டும்.

ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த முடியாமல் போனால் என்ன? மாணவர்கள் கற்க முடியாமல் போனால் என்ன? பள்ளிக் கல்வித் துறைக்கு தேவையானதெல்லாம் புள்ளிவிபரங்கள் மட்டுமே என்ற அணுகுமுறை ஆரோக்கியமானதல்ல. தனியார் பள்ளிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார்கள். ஆனால், அரசு பள்ளிகளை மட்டும் ஆட்டுவிக்கிறார்கள்!

ஆசிரியர் பணியான கற்பித்தல் பணியை சுதந்திரமாக செய்ய விடுங்கள்., எமிஸ் நடைமுறையை நிரந்தரமாக தடை செய்யுங்கள்! அரசாங்கத்திற்கும், கல்வித் துறைக்கும் அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு கிளையின் வேண்டுகோள் இதுவே!

தமிழக அரசாங்கம் இந்த இணைய வழி தேர்வு முறையை திரும்பப் பெறுவதோடு, எமிஸ் நடைமுறைக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி ஆசிரியர் சங்கங்களும், பெற்றோர்களும், பொது மக்களும் பரந்துபட்ட அளவில் போராட முன் வருமாறு ஏஐஎஸ்இசி அறைகூவி அழைக்கிறது.

வெ.சுதாகர்

அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி,

தமிழ்நாடு

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time