திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் -1
அன்றைய வரலாற்றின் தேவையாக உருவான இந்த இயக்கம் காலப் போக்கில் பெயர் மாறி, உருமாறி, திசைமாறி..பயணித்துக் கொண்டிருக்கிறது..! இதன் ஆரம்ப காலம் தொடங்கி இன்று வரை சமூக, அரசியல் தளங்களில் இது ஏற்படுத்திய தாக்கங்களையும், இன்றைய சரிவுகளையும் சமரசமின்றி அலசுகிறார் சுப.உதயகுமாரன்;
சமூக-பொருளாதார-அரசியல் தளங்களில் பார்ப்பனரல்லாத தென்னக மக்கள் அதிகமான வாய்ப்புக்களைப் பெறவும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவுமாக சர். பிட்டி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் போன்றோரால் 1916-ஆம் ஆண்டு தென் இந்திய நல உரிமைச்சங்கம் எனும் அமைப்புத் தொடங்கப்பட்டது. இவர்கள் நடத்திய “ஜஸ்டிஸ்” (நீதி) எனும் ஆங்கில இதழின் பெயர்க் காரணத்தால், இந்த அமைப்பு நீதிக் கட்சி (Justice Party) என்றழைக்கப்பட்டது. மேற்கண்ட பெயர்களில் உள்ள “நலம்,” “உரிமை,” “நீதி” போன்றவை ஆழமான அரசியல் அர்த்தம் கொண்ட வார்த்தைகள்.

பார்ப்பனர்களின், வட இந்தியர்களின் ஆதிக்கத்திலிருந்து தென்னிந்திய மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, ஜஸ்டிஸ் கட்சியை 1944-ஆம் ஆண்டு ‘திராவிடர் கழகம்’ என பெயர் மாற்றி நடத்திய பெரியார், இந்தியாவின் விடுதலை நாளை கருப்பு நாளாக அறிவித்தார். அதனை எதிர்த்த அண்ணாவோ, இந்திய விடுதலை வெறும் ஆரிய வட இந்தியர்களால் மட்டும் பெறப்பட்டதல்ல, அனைத்து இந்தியர்களின் உழைப்பும் அதிலே அடங்கியிருக்கிறது’’ என்று வாதாடினார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய, தான் நினைக்கும் சமூகச் சீர்திருத்தங்களை, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்த முடியாது என்று உறுதியாக நம்பினார் பெரியார். ஆனால், தேர்தலில் பங்கு பெறாமல் திராவிடர் கழகம் விலகி நிற்பது அண்ணாவுக்கும் அவர் தோழர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல், முன்னவர் தன்னைவிட ஏறத்தாழ 40 வயது இளையவரான மணியம்மையாரை மணம்புரிய முடிவு செய்தபோது, உடைப்பாக உருவெடுத்தது. அண்ணாவும் அவர் தோழர்களும் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினர்.
குடந்தை கே. கே. நீலமேகம், இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராஜன், பெரியாரின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்ட அவரது அண்ணன் மகன் ஈ.வி.கே. சம்பத் எனும் “ஐம்பெரும் தலைவர்கள்” புடைசூழ, அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949 செப்டம்பர் 17 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் கனமழைக்கிடையே புதிய கட்சி தொடங்கப்பட்ட போது, குடந்தை கே. கே. நீலமேகம் அவர்கள் தான் கட்சியின் பெயரை அறிவித்ததாகக் கேள்விப்படுகிறோம்.
பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி (தீண்டாமை) ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கொள்கைகளோடு பெரியாரின் திராவிடர் கழகம் இயங்கிக் கொண்டிருக்க, “முன்னேற்றம்” எனும் கருத்தை ஏற்றெடுத்து “திராவிட முன்னேற்றக் கழகம்” என்று தம் கட்சிக்கு பெயர் வைத்தார் அண்ணா. திராவிட இனமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்கவும், தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்தவுமாக, ஏறக்குறைய திராவிடர் கழகத்தின் கொள்கைகளை ஒத்தே தி.மு.க. சிந்தித்தது. தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தால் தான் மாநிலத்தை சீரமைக்க முடியும் என்று உறுதியாக தி.மு.க. நம்பியது.

கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் ‘Dravidian Progressive Federation’ என்று கொள்ளப் பட்டதாகவும், “முன்னேற்றம்” என்பது முற்போக்கு என்ற அர்த்தத்திலேயே அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் மற்றும் அரசியல் பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர் என்கிற முறையில் “முன்னேற்றம்,” “வளர்ச்சி” பற்றியெல்லாம் உறுதியாக சிந்தித்திருப்பார்.
தி.மு.க. படிப்படியாக முன்னேறி ஆட்சியைப் பிடித்தபோது, அண்ணா முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவர் குறுகிய காலமே ஆட்சியில் இருந்த போதும், சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழகத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றினார். சீர்திருத்தத் திருமணங்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளித்தார். தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்தி மொழியை அறவே நீக்கினார். சென்னை, கோவை ஆகிய பெருநகரங்களில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி எனும் திட்டத்தை சோதனை முறையில் அமுல்படுத்தினார். ஏழைகளுக்கு எரியாத வீடுகள் அளித்தார். பேருந்துகளை நாட்டுடமை ஆக்கினார். ஆனால், ஆட்சி அதிகாரத்தின் உதவியுடன் தன் குடும்பத்தையோ, உறவினர்களையோ “முன்னேற்றிக்” கொள்ளவில்லை அவர். அறிஞர் அண்ணா பிப்ரவரி 3, 1969 அன்று இயற்கை எய்தியது தமிழ்நாட்டுக்கு பேரிழப்பாக அமைந்தது.
ஒரு பெரும் அதிகாரப் போட்டி நிகழ்ந்து, கலைஞர் மு. கருணாநிதி அடுத்த முதல்வராகப் பதவியேற்றார். “ஆதிக்கமற்றச் சமுதாயம் அமைத்தேத் தீருவோம்,” “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றெல்லாம் மேம்போக்கான முழக்கங்களை முன்வைத்த தி.மு.க., “முன்னேற்றம்” குறித்த ஆழமான தத்துவார்த்தப் பார்வையோ, அரசியல் பொருளாதாரப் புரிதலோ, சுற்றுச்சூழல் விழிப்புணர்வோ கொண்டிருக்கவில்லை.
கலைஞரின் அரசு நலிவுற்ற, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றியது. குடிசை மாற்று வாரியம், பிச்சைக்காரர் மற்றும் தொழுநோயாளர் மறுவாழ்வு இல்லங்கள், கருணை இல்லங்கள், கண்ணொளி வழங்கும் திட்டம், பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி மற்றும் ஆடைகள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கை ரிக்சாக்களை ஒழித்து, இலவச சைக்கிள் ரிக்சாக்கள் வழங்கியது, ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம், ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம், ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடுகள், மாநில திட்டக்குழு அமைப்பு என பல நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.
சமூகநீதி, இட ஒதுக்கீடு போன்ற விடயங்களிலும் பெரும் பங்களிப்பினைச் செய்தார் கலைஞர்.
தமிழினத்தின் பழைய சிறப்புக்களை நினைவுகூறும் வகையிலும், தமிழ் மொழிக்காக பாடுபட்ட பெரியோர்களின் சேவைகளை நிலைநிறுத்தும் விதத்திலும் பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம், கட்டபொம்மன் கோட்டை, நினைவில்லங்கள் போன்றவற்றை உருவாக்கினார். இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தது, தமிழர்களை `முட்டாள்கள்’ என்று நிந்தித்த நேருவைக் கண்டித்தது, டால்மியாபுரம் தொடர் வண்டி நிலையத்தின் பெயரை ‘கல்லக்குடி’ என்று மாற்றியது போன்ற உணர்ச்சி அரசியலும் மேலோங்கி நின்றது.
மக்களின் உணர்வுகளைத் தூண்டி வழிநடத்தும் குறியீட்டு அரசியலும், கல்வி, வேலை வாய்ப்புக்களில் சலுகைகளைப் பெற்றுத் தருவதும் மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோல முடியாது. அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் சமூக நிலையை உயர்த்திக் கொள்வதற்கும், பொருளாதார மேம்பாட்டினை அடைவதற்கும், அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் தத்துவார்த்த அடிப்படையும், நீண்டகால அரசியல் செயல் திட்டங்களும், தெளிவானப் பொருளாதார நடவடிக்கைகளும் வேண்டும்.
கட்சிக்காரர்கள் தம்மையும், தம்மைச் சார்ந்தோரையும் “முன்னேற்றிக் கொள்ள” அனுமதிப்பதன் மூலம் தான், அவர்களின் தொடர்ந்த ஆதரவைப் பெற முடியும் என்ற அடிப்படையில் லஞ்சமும், ஊழலும், ஊதாரித்தனமும் முன்னேற்றத்தின் அங்கங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய எம்.ஜி.ஆர். “முன்னேற்றம்” குறித்த மேம்போக்கானப் பார்வை கொண்டவராகவே இருந்தார். ‘அண்ணாயிசம்’ எனும் யாருமறியா தத்துவத்தின் வழியாகவும், சினிமாப் பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலமாகவுமே முன்னேற்றம் மட்டுமல்ல, நல்வாழ்க்கையும்கூட அறியப்பட்டது.
வறுமையிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் குழந்தைகளை மீட்டு, பள்ளிக்குச் செல்ல வைக்க பெருந் தலைவர் காமராசர் இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆர். அதனை சத்துணவுத் திட்டம் என்று பெயர் மாற்றி, முட்டையும் சேர்த்துக் கொடுத்தார். கூடவே மக்களுக்கு இலவசக் காலணியும், பல்பொடியும் கொடுத்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் இலவச கலர் டி.வி. கொடுத்தார். அடுத்து வந்த முதல்வர் ஜெயலலிதா பொங்கல் கொண்டாடுவதற்கு இலவச அரிசியும், பருப்பும், சர்க்கரையும் கொடுத்தார்.
ஆடு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மிதிவண்டி, மடிக்கணினி என தமிழகத்தில் “முன்னேற்றம்’ தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பள்ளிக் குழந்தைகளுக்கு காலையுணவையும் சேர்த்து வழங்குகிறார். ஐம்பதாண்டு காலம் கடந்த “திராவிட முன்னேற்றக்” கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, அந்தத் திட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைமையை அவர்களால் உருவாக்க முடியவில்லை.
விவசாய மேம்பாடோ, தொழில் வளர்ச்சியோ, உற்பத்திப் பெருக்கமோ, வேலை வாய்ப்புக்களோ, வருமான உயர்வோ, மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்போ எதுவும் பெருமளவில் நடக்கவில்லை. மாறாக, இலவசங்கள் வழங்குவது, கமிஷன் பெறுவது, இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொழுப்பது, மக்களின் வாக்குக்களை விலைக்கு வாங்குவது என “திராவிட முன்னேற்றத்தின்” நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டிருக்கிறது.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், மீத்தேன் எரிவாயுத் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை பெரிய “திராவிட முன்னேற்றக்” கட்சிகள் அப்படியே ஏற்றுக் கொண்டன. வைகோ அவர்கள் வழிநடத்தும் ம.தி.மு.க. மட்டுமே இவற்றை எதிர்த்தது. காவிரி டெல்டா பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்புச் சோதனைகள் தான் அண்மை அவலத்துக்கு அடித்தளமாக அமைந்தன. இந்த கால கட்டத்தில் இரண்டு “முன்னேற்றக்” கழகங்களும் தான் மாறி, மாறி ஆட்சியில் இருந்தன என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
கடந்த ஐம்பதாண்டுகளாக இரண்டு பெரிய திராவிட முன்னேற்றக் கழகங்களின் முன்னேற்றம், வளர்ச்சி, நல்வாழ்வு பற்றிய புரிதலை அவதானித்தால் இந்த சொலவடை தான் நினைவுக்கு வருகிறது. “குங்குமம் என்பதை நானறிவேன், அது மஞ்சள் போல வெண்மையாய் இருக்கும்!”. அதாவது, புரியாத ஒன்றை புரிந்தது போல பாவனை செய்வது!
எதிர்க் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், ஆளும் கட்சியாக இயங்கும் போது அதற்கு நேரெதிர் நிலைப்பாடும் என்பதே திராவிட முன்னேற்ற கழகத்தின் வழிமுறையாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் ஓர் அண்மைய எடுத்துக்காட்டு.
Also read
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் கைக்கொள்ளும் ‘முன்னேற்றம்’ குறித்த நிலைப்பாடு ஊன்றி கவனிக்கத்தக்கது. உள்ளூர் எதிர்ப்புகளால் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, கெயில் குழாய் பதிப்பு, ஸ்டெர்லைட் போன்ற பல்வேறுத் திட்டங்களை அவர் எதிர்த்தாலும், பரந்தூர் விமான நிலையம், மேல்மா சிப்காட் விரிவாக்கம் போன்ற பல திட்டங்களை மக்களின் எதிர்ப்புகளை நசுக்கி, கடுமையாக நின்று அமல்படுத்த முயற்சிக்கிறார்.
வெளிநாட்டு மூலதனத்தைக் கவரும் முயற்சிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கட்டியம் கூறி வரவேற்கும் செயல்பாடுகளும், ‘ஸ்டாலினின் முன்னேற்றம் புதிய கோணத்தில் அணுகப்படவில்லை’ என்பதைத் தெளிவாக்குகின்றன. நாடெங்கும் கனிம வளக் கொள்ளை பரவலாக நடந்து கொண்டிருக்கிறது.
ஐம்பது-அறுபது ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, இன்றைய தமிழ்நாட்டின் பரந்துபட்ட நிலைமையை ஒரு தேர்ந்த தலைப்போடு விவரிக்க வேண்டுமென்றால், இப்படிச் சொல்வது தான் சரியாக இருக்கும்: “திராவிடப் பேரரசும், திளைத்து வாழும் சிற்றரசர்களும்!”
(கட்டுரையாளர்; சுப. உதயகுமாரன்
அணுசக்திக்கு எதிரான மற்றும் பசுமை அரசியல் செயல்பாட்டாளர்.)
1953-54ல நான் 3ம் வகுப்பு படித்தேன். இருந்த ஆசிரியர்களைக் கொண்டு காலை/மதியம் இரண்டு ஷிப்ட் வகுப்புகள் நடத்த மாநில அரசு உத்தேசித்தது வீட்டில் இருக்கும் மாணவர்கள் அப்பாவின் தொழிலில் உதவி செய்யணும். என்னுடன் படித்த பலர் வர்த்தகர்கள் தொழில்அதிபர்கள் ஆகினர். டேனரி/ ஜூவல்லரி /மில்ஸ்/ மெக்கானிக் என சிறந்தனர். குலக்கல்வி என திணிக்கப்பட்டது. இன்று அரசியல்வாதி மகன் செய்வதும் அது தானே
ஊழல் என்பது உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ ஜனநாயக கட்டமைப்புக்கு உட்பட்டது தானே திராவிடத்தை மட்டும் குறை கூறுவதால் என்ன பயன்
அண்ணன் சுப.உதயகுமாரனுக்கு வணக்கம். கட்டுரையை முழுமையாக படித்தேன். திராவிட பேரரசும் திளைத்து வாழும் சிற்றரசர்களும் என்று நிறைவு செய்து இருந்தீர்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே என்பதை திராவிட கட்சிகள் தவறாக புரிந்து திராவிட கட்சியில் அனைவரும் மன்னர்களை என்ற நிலை இப்போது உள்ளது.
ஒரு 50 ஆண்டுகால திராவிட ஆட்சியின் நிகழ்வை இந்த கட்டுரையில் சுருக்கமாக கூறி உள்ளீர்கள். திமுகவும் அதிமுகவும் வேறு வேறு அல்ல என்பதை 19 96 ஆம் வருடமே உணர்ந்தேன். கலைஞரும் அம்மையார் ஜெயலலிதாவும் இருந்தவரை திருட்டுத்தனமாக கைகோர்த்து கமிஷனை பங்கு போட்டுக் கொண்ட இவர்கள் அவர்களின் மறைவுக்கு பின்னர் பகிரங்கமாக கைகோர்த்து கமிஷன் பார்த்து வருகின்றனர். ஊர் உலகத்தைப் பொறுத்தவரை திமுகவும் அதிமுகவும் சண்டை போடுவது போல் தோன்றினாலும் உண்மையில் யார் ஆட்சி செய்தாலும் அவர்களுக்கு அதிக பங்கு எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கு குறைவான பங்கு என்றும் பிரித்துக் கொள்கின்றனர். முதலமைச்சர் முதல் கடைசி அமைச்சர் வரை மன்னர்களே.சட்டமன்ற உறுப்பினர்கள் குறுநில மன்னர்கள். மன்னராட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் இன்றைய மன்னர் ஆட்சியில் மன்னர்கள் மட்டும் மகிழ்ச்சியாக. தேர்தல் நேரத்தில் இவர்கள் தரும் பணத்தை பெரிதாக நினைக்கும் மக்கள்.
மக்களைப் பற்றி சிறிது கூட கவலைப்படாமல் திட்டங்கள் போடுகிறேன் என்று ஒவ்வொரு திட்டத்திற்கும் கமிஷன் எடுத்து பங்கு பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
திராவிடத்தை பந்தாட சரியான ஆள் தாங்கள் தான் அண்ணன், அடித்து ஆடுங்கள். களம் சாதகமாக உள்ளது. இந்த தொடர், மக்கள் மனத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கட்டும்.