நலம் தரும் நாவல் பழம்! சர்க்கரை நோய்க்கு சல்யூட்!

-அண்ணாமலை சுகுமாரன்

நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப் பழம் வலிமை தரும் பழம்.  நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை;

இந்தப் பழம் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி இவைகளில் இன்னும் இடம் பெறுவதை காணலாம்.

”சுட்டப் பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா?” என அந்தக் குமரன் அவ்வைப் பாட்டியை அலை கழித்த புராண வரலாறு அனைவரும் தெரியும். அந்தப் பழம் இந்த நாவல் பழம் தான் .
பாருங்கள்! திருமால் கூட திடீர் என ஒரு நாள் நாவல் பழத்தை கேட்டு விட்டாராம், என்ன செய்வார்கள் பக்தர்கள்!

ஆங்கிலத்தில் ஜாமூன் பழம், ஜாவா பிளம், பிளாக் பிளம், ஜம்புல் மற்றும் இந்தியன் பிளாக் பெர்ரி என்றும் அழைக்கப்படுகிறது. உலக அளவில் சீனாவில் நாவற்பழம் அதிக அளவு உற்பத்தி செய்யப் படுகிறது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாவற்பழம் அதிக அளவு உற்பத்தி செய்யப் படுகிறது. அதற்கு அடுத்த படியாக உத்தர பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், அசாம் போன்ற மாநிலங்கள் உள்ளன.

நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது. இந்தப் பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையான பழம்.
நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்து விடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.

மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.

நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது.  பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும்,  இதயத்தை சீராக இயங்கச் செய்யும்.  இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும்.


சிறுநீரகக் கற்கள் கரையவும், இரத்தம் சுத்தமாகி தொழு நோய் முற்றிலும் குணமாகவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும். ஆனால், அளவோடு சாப்பிட வேண்டும்.

100 கிராம் நாவல் பழத்தில் 60 கலோரிகள் உள்ளது. மேலும் 0.2 கிராம் கொழுப்பு, 0.7 கிராம் புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 100 கிராம் நாவல் பழத்தில் 0.17 மி.கி இரும்பு, 6.00 mg கால்சியம் மற்றும் 157 mg பொட்டாசியம் உள்ளன.

இது புற்றுநோய் அபாயத்தைத் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நீரிழிவு நோயைத் தடுக்கிறது, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத் துகிறது மற்றும் கண் பார்வை மேம்படுத்துதல் ஆகும்.

நாவல் பழத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் நார்ச் சத்து நிறைந்துள்ளன. இது  இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

சித்தர்கள் தவ நிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப் போகும் குணங்களுயுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு மருந்தாக்கினர்.


துவர்ப்பிலிருந்தே இனிப்பு உருவாகும் என்பது சித்தர்களின் முடிவாகும். மானுட தேகத்தில் கணையத்தின் தன்மை துவர்ப்பு சுவையின் தன்மையைக் கொண்டது. அங்கிருந்து தான் இன்சுலின் சுரக்கிறது. கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும் பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறைவதால் சர்க்கரை நோய் உண்டாகிறது. துவர்ப்பு அதிகம் சேர்த்தால் சர்க்கரை நோய் குறையும் .

நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது. இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது.
இதனால் நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுபாட்டில் இருக்கும் என்பது லக்னோவில் உள்ள நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்தது.

நாவல் பழத்தை உட்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதாக கூறப்படுகிறது. ஆகையால் குறைவான ரத்தச் சர்க்கரை அளவு கொண்டவர்கள் உள்ளவர்கள் தவறுதலாக கூட இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரம் முன்பே  நாவல் பழம் சாப்பிடக் கூடாது என்பர் .

நாவல் பழத்தில் இரு வகைகள் உள்ளன. ஒன்று உருண்டை ரகம். இன்னொன்று நீள ரகம். இவற்றுள் நீள வடிவில் பெரியதாய் இருக்கும் இந்த  பழவகையில் தான் இனிப்புச் சுவை அதிகம்.  ஆனால், உருண்டை ரகமே மருத்துவ குணம் உடையது.பெரியது நவீன விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட வீரிய ரகம்.


நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

இதில் இருக்கும் வைட்டமின் சி , பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும், வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது.
மேலும் நாவல் பலத்தை அடிக்கடி உட்கொள்வது எலும்பை வலுவாக வைத்து ஆஸ்டியோபோரோசிஸ் நோய் அபாயத்தைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கல்லீரலும் செரிமான உறுப்புகளும் நன்றாய் இயங்க பண்டைய மருத்துவரான சரகர் என்பவர் நாவல் பழத்தை சாப்பிடச் சொல்லியிருக்கிறார். ஆயுர் வேத மருத்துவத்தில் நீரிழிவு நோயாளிகள் குணம் பெற பின்வருமாறு செய்ய வேண்டும்.


அதாவது, நாவற்பழ மரத்தின் பட்டைகளை எரித்துச் சாம்பல் ஆக்கி அதனை பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.  அப்பொடியில் அரை தேக்கரண்டி எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் அருந்த வேண்டும். பிறகு இரவு உணவிற்குப் பிறகு இந்தத் தூளை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்த வேண்டும். இப்படி அருந்தினால் நீரிழிவு குறையும். பிறகு தூளின் அளவை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும்.

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர்ப் போக்குக் குறையும்.
நாவல் பழச் சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.

நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.

நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.

சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால்  கற்களானது கரைந்துவிடும்.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல்  சற்று தேறும்.

மூன்று நாவல் இலையை விழுதாய் அரைத்து கட்டித் தயிரில் கலக்கி அதிகாலையில் விடாமல் மூன்று மாதங்கள் சாப்பிட்டுவர, முத்தான – சத்தான பிள்ளை உங்கள் வயிற்றில் தரிக்கும். இது அனுபவ  வார்த்தையாகும்.நம்புங்க !

அதே சமயம் நாவல் பழம் நன்மை தருகிறது என்பதற்காக அதிகம் உட்கொள்ளக் கூடாது. இது அமிலத் தன்மை கொண்டிருப்பதால் அதிகம் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சலோ, வயிற்றுப் புண்ணோ ஏற்படலாம். குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. நாவல் பழத்தை உண்பதற்கு முன்னும், பின்னும் 30 நிமிடங்களுக்கு பால் அல்லது பால் சார்ந்த உணவை சாப்பிடக் கூடாது. கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக ஐந்தாறு பழங்களுக்கு மேல் சாப்பிடலாகாது.

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்

நம்ம ஊரு மூலிகைகள் உள்ளிட்ட நூலின் ஆசிரியர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time