கண்ணதாசனை தற்போது வானாளவப் புகழ்கிறார் இளையராஜா! ஆனால், அன்று அவரை பெருமளவு விலக்கியே வைத்தார். சில முட்டல், மோதல்கள் இருந்தன. கண்ணதாசனுக்கு மிகக் குறைவே வாய்ப்பளித்தார் ராஜா. இதன் பின்னணி என்ன? கண்ணதாசனின் பேராளுமையால் இளையராஜாவிற்குள் நிகழ்ந்த உளவியல் சிக்கல்களை அலசுகிறது இந்தக் கட்டுரை;
தமிழகத்தின் சமகால வரலாற்றில், வாழும் காலத்திலேயே மக்களால் பெரிதும் போற்றப்பட்ட கவிஞர் என்றால், அது கவியரசர் கண்ணதாசன் தான்! அவர் மீது மக்களுக்கு அப்படியோர் ஈர்ப்பு இருந்தது. தமிழக மக்கள் அவரை கொண்டாடி மகிழ்ந்தனர். சதா சர்வ காலமும் சலிப்பின்றி அவரைப் பேசிப் பேசி குதூகலித்தனர்.
அந்தக் காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி, பல் விழுந்த முதியோர்கள் வரை கண்ணதாசன் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தது. ”இது எம்.ஜி.ஆர் பாட்டு” ”இது சிவாஜி பாட்டு” எனச் சொல்லிய பாமர்கள் கூட, ”இது கண்ணதாசன் பாட்டுப்பா, என்னாமா எழுதி இருக்கான் பாருய்யா..” எனப் பேசிச் செல்வதுண்டு. இந்தக் காரணத்திற்காகவே எம்ஜிஆர் கண்ணதாசனை விலக்கி வைத்தார்.
அவரது திரைப்பாடல்கள் மீது மக்களுக்கு தீரா மயக்கமே இருந்தது. அது 50 வயதுக்கு மேற்பட்டோரிடம் இன்றளவும் மாறவில்லை. இது தான் அன்றைக்கு வாழ்ந்த கோடிக்கணக்கான தமிழர்களின் அனுபவமாகவும் இருந்தது. கவிஞர் பேச வருகிறார் என்றால், அங்கே மக்கள் கூட்டம் அலைமோதும், கரகோஷங்கள் விண்ணைப் பிளக்கும். இதற்கு நானே நேரடி சாட்சி.
ஆனால், என்னவோ தெரியவில்லை. இப்பேர்ப்பட்ட கண்ணதாசனுக்கு தான் இசை அமைக்கும் படங்களில் மிகக் குறைவான வாய்ப்புகளையே வழங்கினார் இளையராஜா.
இளையராஜா தன் படங்களில் கவிஞர் வாலிக்கே அதிக வாய்ப்புகளைத் தந்தார். அடுத்ததாக கவிஞர் முத்துலிங்கம், புலமை பித்தன் , ஆலங்குடி சோமு, தம்பி கங்கை அமரன்.. என வாய்ப்புகள் தந்தார்.
பாரதிராஜா தான் தன்னுடைய முதல் படமான 16 வயதினிலேவுக்கு கவிஞர் கண்ணதாசனிடம் எழுதி வாங்க வேண்டும் என இளையராஜாவை நிர்பந்தித்து கவிஞரிடம் மூன்று பாடல்கள் எழுதி வாங்கினார்.
அதிலே கண்ணதாசன், ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததுன்னு ‘பாடலை எழுதி தந்து சென்றுவிட்ட போது, அதில் சின்ன ‘டெவலப்மெண்ட்’ செய்ய ஆசைப்பட்ட பாரதிராஜாவும் , இளையராஜாவும் அடுத்த நாள் காலை கவிஞர் இல்லம் சென்று அவரை சந்தித்த போது, கண்ணதாசனே அவர்களைப் பார்த்து, ”நேற்றைய பாட்டிலே ஓரிடத்தில், ‘பழைய நினைப்பு தான் பேராண்டி பழைய நினைப்பு தான்…’ என வந்தால் அங்கே நன்றாக இருக்கும்..” எனச் சொல்லவும் இளையராஜாவும்,பாரதிராஜாவும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்து, ”இதைத் தான் உங்க அனுமதி பெற்று சேர்த்துக் கொள்ளலாம் என நினைத்து கேட்க வந்தோம்” என்றார்களாம்..!
பாரதிராஜாவை பொறுத்த வரை கவிஞர் உயிரோடு இருக்கும் வரை அவரைத் தன் படங்களில் தொடர்ந்து பாட்டெழுத வைப்பதில் பிடிவாதமாக இருந்தார். அந்த வகையில் இளையராஜாவும் அதற்கு உடன்பட்டார். இதே போல சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வலியுறுத்தும் பட்சத்தில் மட்டுமே இளையராஜா கண்ணதாசனுக்கு வாய்ப்பளித்தார்.
மற்றபடி கவிஞரை பெருமளவு தவிர்த்தார். சமீபத்தில் படத் தயாரிப்பாளர் காரைக்குடி நாராயணன் ஒரு நேர்காணலில் தன் அச்சாணி படத்திற்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்த போது, இளையராஜா அவரிடம், ”கவிஞர் வாலியை வைத்து எழுதிக் கொள்கிறேன்” என்ற போது, காரைக்குடி நாராயணன், ”16 வயதினிலே படத்திற்கு கவிஞர் கண்ணதாசனிடம் எழுதி வாங்கி இருக்கீங்களே.. பிறகென்ன” என்ற போது, ”கண்ணதாசனிடம் எல்லாம் என்னால் வேலை வாங்க முடியாது..” என்று மறுத்ததைக் குறிப்பிட்டு இருந்தார்.
கண்ணதாசன் எழுதிய திரையிசைப் பாடல்கள் பிரபலமாகும் போது, அது அதற்கு இசை அமைத்த இசை அமைப்பாளர்களை மீறி, கவிஞர் கண்ணதாசன் பாடல்களாகவே அதிகம் பார்க்கப்பட்டன. இது எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல் என்றோ, கே.வி.மகாதேவன் பாடல்கள் என்றோ மக்கள் மத்தியில் பேசப்படவில்லை. அந்த வகையில் தன் இசையில் வெளியாகும் பாடல்கள் இளையராஜாவின் பாடல்களாக அறியப்பட வேண்டுமேயன்றி, கண்ணதாசன் பாடல்களாக அறியப்படலாகாது என இளையராஜா கருதினார்.
மேலும், கவிஞர் பாட்டெழுத வருகிறார் என்றால், படத் தயாரிப்பாளர்களே அவருக்கு கார் அனுப்பி பிக் அப் செய்வதில் இருந்து, அவர் அமர்ந்து பாட்டெழுதுவதற்கென்று மெத்தை போன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்வதோடு, அவருக்கு ராஜ உபச்சாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அவர் பாட்டெழுத வரும் தோரணையே ஒரு கவி ராஜா வருவது போல பார்ப்பவர்களை உணர வைக்கும். அந்த வெள்ளை வேட்டியும், வெள்ளை அல்லது சந்தன நிறச் சட்டையும், ஜவ்வாது வாசனையும், அவர் முகத்தில் தெரியும் ஒரு லஷ்மி கடாட்சமும் பார்ப்பவர்களை தங்களையும் அறியாமல் மரியாதை கொள்ள வைக்கும்… எனப் பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன். அதாவது இருக்கும் இடத்தில் அவர் தான் கதாநாயகன். அப்படிப்பட்ட கவிப் பேராளுமை அவருக்கு இருந்தது. அவரை ஒரு நடமாடும் ஆண் சரஸ்வதியாகவே இசை அமைப்பாளர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பார்த்தனர் என்பது நிகழ்கால வரலாறாகும்.
மேலும் அந்த காலத்தில் இளையராஜா தான் இசையமைக்கும் படங்களுக்கு 5,000 முதல் 8,000 வரை சம்பளம் வாங்கினார் என்றால், கவிஞரோ பாடல் ஒன்றுக்கு ரூ 5,000 சன்மானம் வங்கினார். ஐந்து பாடல்கள் என்றால், அதுவே ரூ 25,000 சன்மானம் பெற்றுக் கொள்வார். இது தவிர அவருடைய உதவியாளருக்கு தனியாக ரூ 500 தர வேண்டும். இதையும் இளையராஜாவால் ஜீரணிக்க முடியவில்லை.
இதையெல்லாம் விட கவிஞர் கண்ணதாசன் பாட்டெழுத வருவது குறித்த ஒரு பேட்டியில் இளையராஜா இவ்வாறு கூறியுள்ளார். நான் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக இருந்த போது, ஒரு சிச்சுவேஷனுக்காக பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்தார். அவர் அங்குள்ள இயக்குனரையோ, இசை அமைப்பாளரையோ சற்றும் பொருட்படுத்தவில்லை. சிகரெட் பற்ற வைத்து ஊதியபடி சிச்சுவேஷன் கேட்டார். உடனே, ஆஷ்ட்ரேயில் தூ, தூவென்று துப்பிவிட்டு, வாயைத் துடைத்துக் கொண்டு, டியூனைக் கேட்டு விட்டு கண்ணை மூடியபடி பாடல் வரிகளை சொன்னார். உதவியாளர் அதை எழுதி தந்தார். எல்லாம் சில நிமிஷங்களில் முடிந்தன. கிளம்பிப் போனார். எனக்கோ என்னடா இவர் இப்படி பிகேவ் பண்ணுகிறாரே என்றிருந்தது. அந்தப் பாடல் தான் ’’தேன் சிந்துதே வானம், உனை, எனை தாலாட்டுதே என்றார்.
குடிப்பதும், சிகரெட் பிடிப்பதும் கண்ணதாசனின் இயல்பாகும். சிகரெட் முடிந்தவுடன் வாயில் இருந்த புகையிலை துகள்களைத் தான் அவர் ஆஷ்ட்ரேயில் துப்பி உள்ளார். மேலும் எழுதக் கூடிய பாடல் குறித்து தான் கண்ணதாசன் தன் முழு கவனத்தை குவித்திருந்தாரேயன்றி, அங்குள்ள முக்கியஸ்தர்களுக்கு முகஸ்துதி செய்யவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
கண்ணதாசனை அவரது அத்தனை பலவீனங்களுடன் தான் சகல இசை அமைப்பாளர்களும், இயக்குனர்களும் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்கள். காரணம், அவரது கவிதையின் பேராற்றல், அதில் வெளிப்படும் கவித்துவம், தமிழ் இனிமை, வாழ்க்கை அனுபவம், தத்துவச் செறிவு எல்லாவற்றுக்கும் மேல் படத்தின் சூழலுக்கு மிகப் பொருந்தி வருவதும் தானே.
இளையராஜாவின் புறக்கணிப்பு கவிஞரை மிக அதிகமாகவே காயப்படுத்தியது. ”புதிய இசை அமைப்பாளர்களின் இசையில் கனம் இருக்கிறதோ, இல்லையோ தலையில் அதிக கனம் இருக்கிறது” என்று ஒரு பத்திரிகையில் கவிஞர் சொல்லும் அளவுக்கு நிலைமை போனது. போதாக்குறைக்கு எம்.எஸ்.வி அவர்களுக்கும் வாய்ப்பு குறைந்ததால் அதுவும் கண்ணதாசனை பெரிதும் பாதித்தது. ”தம்பி எம்.எஸ்.விஸ்வ நாதனை விஞ்ச இங்கு யாருமில்லை” என்றும் பேசினார். இவை போதாதா இளையராஜாவிற்கு கண்ணதாசனை ஒதுக்கி வைக்க!
எப்படி ஒரு கட்டத்தில் டி.எம்.எஸ்சை இளையராஜா ஓரம் கட்டினரோ, சிவாஜி படத்திற்கு கூட டி.எம்.எஸ்சுக்கு பதில் மலேசியா வாசுதேவனை பயன்படுத்தினாரோ, அதே போன்ற நிலையை கண்ணதாசனுக்கும் உருவாக்கினார். இயக்குனர் ஸ்ரீதரின் பல படங்களின் வெற்றிக்கு கண்ணதாசன் பாடல்கள் மிகப் பெரிய பங்களிப்பை தந்துள்ளன. அப்படிப்பட்ட ஸ்ரீதர் இயக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களில் முழுக்க, முழுக்க கண்ணதாசனை புறக்கணித்து, அனைத்து பாடல்கள் வாய்ப்பையும் வாலிக்கே வழங்கினார் இளையராஜா.
Also read
இதற்கிடையில் 1978 ஆம் ஆண்டு ஏ.வி.எம்.ராஜேஸ்வரியில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட கண்ணதானைக் கடந்து சென்ற இளையராஜா கவிஞரிடம் நலம் விசாரிக்க, கவியரசரோ சிரித்துக் கொண்டே சூசகமாக சொன்னார், ”ராஜாக்களின் கவனிப்பு இல்லாமல் கவிஞர்கள் எப்போது நலமாக இருந்திருக்கிறார்கள்” என்று.( ஆதாரம்; வாமனன் எழுதிய திரை இசை அலைகள் பாகம்- 3)
கவிஞரின் இந்த எதிர்வினையானது இளையராஜா ஒருவாறு சமாதானமாக வர உதவியது என்றாலும், பிறகும் கவிஞருக்கு ஓரளவே வாய்ப்பளித்தார். ஒரு முழுப் படத்தில் கண்ணதாசனுக்கும் ஒரு பாட்டு என்ற அளவே வாய்ப்பளித்தார். இதையும் கங்கை அமரன் ஒரு பேட்டியில், ”கவிஞரின் ஆசீர்வாதம் நமக்கு வேண்டும்’ என அண்ணனை சமாதானப்படுத்தி ஒரு படத்தில் ஒரு பாட்டேனும் கண்ணதாசனிடம் எழுதி வாங்குவதை நான் தான் வழக்கப்படுத்தினேன்” எனக் கூறியுள்ளது கவனத்திற்கு உரியது.
இதை இளையராஜாவின் தாழ்வு மனப்பான்மையை எனப் புரிந்து கொள்வதா? அல்லது சுப்பிரியாரிட்டி காம்பளக்ஸ் எனக் கருதுவதா? தெரியவில்லை. இருக்கும் போது அலட்சியப்படுத்திவிட்டு, இறந்த பிறகு உலகிலேயே சிறந்த கவிஞன் என்றும் தமிழ் நாட்டின் பெருமைகளில் ஒருவர் கண்ணதாசன் என்றும் பேசிப் புகழ்வதில் என்ன பயனோ..?
சாவித்திரி கண்ணன்
தாங்கள் எடுத்து வைத்துள்ள கருத்துக்கள் மறுக்க முடியாதவையாகவே உள்ளன.
Alex raja oru kirukkan
This is revenge by Raja.
ஆம் உண்மை
என்றாலும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் ஒன்றி போகவில்லையோ???
I agree with your points…there is no doubt about Ilayaraja that he is great music director… however ayya Kannadasan is Himalayas in front of everyone…he should be celebrated by every music director forever…his knowledge has been unmatchable and astonishing poet whe was…I always have enjoyed his lyrics and no words to express his greatness… every song is a writing on the wall…vaazhga Kannadasan pugazh indha vaiyagam ulla mattum
இளையராஜா வின் தாழ்வு மனப்பான்மை தான் காரணம்
” நான் நிரந்தரமான வன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை ” இது கவிஞரின் வாக்கு. கவியரசர் பாடல்கள், புகழ் என்றும் எங்கும் நிரந்தரம்.
நீங்கள் சொல்வதில் ஓரளவுக்கு உடன்பாடு இருந்தாலும் கவிஞரை வைத்து வேலை வாங்குவதில் உள்ள சிரமத்தினாலேயே அவரை உபயோகப் படுத்தவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இளையராஜாவின் மேதமையை வைத்து அவரை எடை போடுங்கள். மற்றவைகளை வைத்து வேண்டாம்.
அனைத்தும் மறுக்க முடியாதாக உள்ளது.
இருப்பினும் ஒன்றை குறிப்பிட வேண்டும்.இதை ராஜாவே கூறியது, ” என் கவனம் முழுதும் என் டியூன் கிட் ஆக வேண்டும்”
அதற்க்கு தோதான நபர்களுடன் பணி புரிந்து உள்ளார் ராஜா அவர்கள்.
கவியரசர் புறகனிப்பு காலத்திற்க்கு செய்த பாதகம்.
இன்றைக்கு கவியரசரை ராஜா கொண்டாட காரணம் மிக முக்கியமாக வைரமுத்தாக கூட இருக்கலாம் என என் கருத்து
ஆம் உண்மை
Don’t compared illyaraja with Kavinjar kannadasan ., he has given lot of good things to the society not making money minded .,
Eventhough Illiyaraja music’s are good but he never comes to the media upto A.R. Rahman entries .,when he is loosing the chance ,that time he entered the out and saying that ” en paatu en paatu ” ,. He has not allow to song the great singer SP Balasubramaniam at final stages, no one will forget all those things ., I will give the respect to illyaraja for music ,but don’t compared with Kannadasan., he is God .
கவிஞர் கண்ணதாசனை இளையராஜா இப்போது புகழ்வதெல்லாம் உண்மை அல்ல. வைரமுத்துவை மட்டம் தட்ட கவிஞர் கண்ணதாசன் புகழ்ச்சி பேச்சை உபயோகப்படுத்தி உள்ளார். அவ்வளவு தான்.
இளைய ராஜா வின் தாழ்வு மனப்பான்மை தான் காரணம்
அது கவிஞர் வைர முத்து மீதான காழ்புணர்சியினினால் வந்த வார்த்தைகளே அன்றி கண்ணதாசன் அவர்களின் மீதான பாசத்தினால் அல்ல..
1)இளையராசாவை விட MSV மிக மிக நெருங்கிய நெருக்கம்
கண்ணதாசனுக்கு.
இளையராசா பஞ்சு அருணாசலத்தால் அறிமுக படுத்தபட்டவர் 1974-75 ல்
பஞ்சு அருணாசலம் கவிஞரின் உதவியாளர்
கண்ணதாசன் இறந்தது 1981 ல்
அரசவை கவிஞர் ஆனது MGR முதல் ஆட்சியில் -1978 ல்
MGR ஐ தீவிரமாக அரசியலில் எதிர்த்த போதிலும்
MGR அரசு பதவி தந்தார்
கலைஞர் இவரை எலந்த பழ கவிஞர் என்று கேலி செய்தார்
அதற்கு பதிலாக நான் கவிஞனில்லை என்று பாட்டெழுதினார்
இவ்வளவும் MGR திமுக வில் இருந்த போது
இளையராசாவை ஒரு பொருட்டாக கருத வில்லை.
ஏன் எனில் MSV மிக மிக நெருக்கம்
பழைய நட்பை பேணி காத்தவர்கள் இருவரும்
இளைய ராசா ஏறுமுகம் கண்டார்
MSV இறங்கு முகம் ஆனால்
இது முதல் காரணம்
மற்றபடி ஈகோ இருவருக்கும் பொதுவானது
அப்படி த்தான் இருக்கும் சினிமாவில் எந்த துறையிலும்.
தாங்கள் அறியாத்தல்ல.
இப்பொது எதனால் இந்த சரச்சை ?
வைரமுத்து வினாலா ?
உண்மை தானே! அதிலென்ன சந்தேகம்?
கவிஞரை நான் 1971முதல் 1975வரை காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவணாக இருந்த காலம் முதல் அறிவேன்.
அவருடன் நன்குபழகி இருக்கிறேன். வாலியே கவிஞரின் பாடலால் மனம் மாறியவர்தான்
இளையராஜா பாஜக பக்கம் போகாமல் இருந்திருந்தால் அவரை இந்த அளவுக்கு விமர்சனம் செய்து சாவித்திரி கண்ணன் இப்படி ஒரு கட்டுரை எழுதி இருப்பாரா என்பது சந்தேகம். கட்சி மற்றும் அரசியல் கொள்கை சாராமல் யோசிக்கும் போது தமிழ் திரை இசைக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை இளையராஜா என்பதை யாரும் மறுக்க முடியாது. பட்டியல் பிரிவு சாதி பின்னணி கொண்டவர் என்றாலும் இவரின் இசை மற்ற எல்லா தமிழ் பேசும் சாதியினரின் மனதுக்கு நெருக்கமானதாக ஆகிப்போனது. இவர் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதை பிற தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட எல்லா தரப்பு மக்களும் உணர்கிறார்கள். தென்னிந்திய மண்ணின் மணம் கொண்ட இசையை பெருமளவு படைத்தவர் ராஜா தான். ஆனால் குறைகளும் உண்டு. இவரின் பல பாடல்களில் tempo என்பது கிடையாது. ராகம் போட்டு பாடுவதற்கு முன்னுரிமை தராமல் தாளத்துக்கு அதிக அளவில் முன்னுரிமை தரும் பல பாடல்களை உருவாக்கியதால் இப்போது தமிழ் சினிமாவை பீடையாக பிடித்தாட்டும் டப்பாங்குத்து ரக இசைக்கு வழி திறந்தது. தனிப்பட்ட முறையில் அதிக தலைக்கனமும் பொறாமையும் கொண்டவர் எனவும் சொல்லப்படுகிறது.
சாவித்திரி கண்ணன் மிகச் சரியாக உண்மையை கூறியுள்ளார். சில மனிதர்கள் அப்படித்தான். கடந்து போக வேண்டும்
கண்ணதாசன் குறித்து இளையராஜா. அறியாத தகவல்கள்.
பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்ட தலைக்கனம் மிகுந்த எந்த நபரின் சாதனையும் வெற்றியும் போலியானது இதற்கு ஆதாரம் சமீப காலங்களில் ராயல் டி என்ற பெயரில் இளையராஜா கேட்கும் எடுக்கும் ஆட்சேபனை நடவடிக்கைகளை சாட்சி
சாவித்திரி கண்ணன் அவர்களின் கருத்து மறுக்க இயலாத உண்மை…!
இளையராஜாவின் புறக்கணிப்பு பட்டியலில் கவியரசர் திரு,கண்ணதாசன் மட்டுமல்ல திரு, டி.எம்.சௌந்தர்ராஜன்… பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி என்று நீள்கிறது….!
அண்ணன் சாவித்ரி கண்ணனின் கட்டுரையை படித்தேன். அதற்கு பலர் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர். கட்டுரையில் கூறப்பட்டிருந்த பல தகவல்கள் நான் அறியாதவை. இசைஞானி இளையராஜாவையோ அல்லது தனிப்பட்ட இளையராஜாவையோ பண்ணைபுரத்தில் போய் கேட்டால் தனி புத்தகமே போடலாம். எந்த ஒரு தனி மனிதனும் பிரபலமான பின் தான் சார்ந்த சமூகத்தை அல்லது கிராமத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து செயல்படுவார்கள். ஆனால் இதுவரை அவர் அது போன்று செயல்பட்டதாக தெரியவில்லை. மாறாக திரைப்படத்துறையில் உள்ள உயர் பிரிவுகளை சேர்ந்தவர்களோடு தன்னை இணைத்துக் கொண்டு தன்னையும் உயர் பிரிவு என காட்டிக்கொள்ள நினைத்தார். அதில் வெற்றியும் கண்டார். இவர் சான்றிதழ் கொடுத்துத்தான் கண்ணதாசனுக்கு புகழ் சேர வேண்டும் என்ற நிலையில் மறைந்த பின்னரும் அவர் இல்லை.