பப்பாளி சாப்பிடுங்க, நோய் பயமின்றி வாழலாம்!

-அண்ணாமலை சுகுமாரன்

ஆப்பிளும் ஆரஞ்சும்  பெறும் மதிப்பை, அதிக சத்து வாய்ந்த பப்பாளி ஏனோ பெறவில்லை. ஆரோக்கிய வாழ்வுக்கு பப்பாளி தரும் பலன்களுக்கு ஈடு இணையே கிடையாது. பப்பாளி பழத்தின் விலையோ குறைவு. பலன்களோ கணக்கில் அடங்காதது. இதைக் குறித்து சில தவறான கருத்துக்கள் உள்ளன. உண்மை அறிவோம்;

நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக் கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும்  ஒரு  அற்புத மரம் இது. பப்பாளி இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பப்பாளி பழம் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 16 ஆம் நூற்றண்டில் டச்சு வணிகர்களால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பச்சையும், மஞ்சளும் கலந்த பப்பாளிப் பழங்களில் “என்ஸைம்” எனப்படும் நொதிகள் அடங்கியுள்ளன. இவை நமது  தோலிலுள்ள செல்களை மிருதுவாக்கி, அழுக்குகளையும் இறந்த செல்களையும் போக்கக் கூடியவை.

பழத்தின் மஞ்சள் நிற சதைப் பகுதியை எல்லா விதமான சருமம் கொண்டவரும் முகத்திற்கு மாஸ்க்காகப் போடலாம். மற்றைய பழங்களை விட பப்பாளியில் கரோட்டின், வைட்டமின் ‘ஏ’, ‘சி’ சத்துகள் நிறைந்துள்ளன. குறைந்த கலோரியில் நிறைந்த சத்துகளைக் கொடுக்கக் கூடிய எளிய மிகவும் மலிவான பப்பாளி எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் இனிய பழமாகும்.

பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்னும் நொதிப் பொருள் ஜீரண சக்திக்கு ஏற்றது.  “ஆல்ஃபா ஹைடிராக்ஸி ஆஸிட்” எனப்படும் பழ ஆசிட் பப்பாளியில் இருப்பதால் இது சருமத்தை மிருதுவாக்கும். சருமத்தில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை அகற்றும்.
‘பப்பாயினில் இருந்து  பெக்டின் என்ற உயர் பொருள் தயாரிக்கப்படுகிறது. அது வணிக ரீதியில் மதிப்புள்ளது .

பப்பாளி மரத்தின் இலை, காய், பழம், பால் எல்லாமே மருத்துவ பயன்கள் உடையது.


பப்பாளிப் பழத்திற்கு உடல் வலிமை, ஆண்மை தரும் சக்தி உண்டு. சொறி, சிரங்கு, காயம் ஆகியவற்றைப் போக்கி விடும். கண்பார்வை கூர்மையடையவும், நீரடைப்பு குணமாகவும், இரத்தம் ஊறவும், பல் சம்பந்தமான கோளாறுகள் நீக்கவும் இது பயன்படுகிறது.

பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர் தாமரை குணமாகும்.

சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும். இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு. பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும். பெண்கள் சிவப்பழகை பெற செய்ய வேண்டியது மிக சுலமமான சிகிச்சை. அழகு கலை நிலையங்கள் இரகசியம் சொன்னதற்கு  கோபம் கொள்ளக்கூடாது.


கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையுடன் – அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப் போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

பப்பாளிக் காயால் உடலில் ஏற்படும் வாதவலி நீங்கும். இதை பாலூட்டும் தாய்மார்கள் சமைத்து உண்டு வர தாய்ப்பால் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் மாத விலக்கு சிக்கல் தீரும். மேலும் வயிற்றிலுள்ள கிருமிகள் அழியும். பப்பாளிக் காயின் பாலை தேள் கொட்டிய இடத்தில் தேய்க்க விஷம் இறங்கும். இந்த பாலை நமைச்சல் உண்டாக்கும் படைகளுக்கு தடவி வர நமைச்சல் அடங்கி விரைவில் மறைந்து விடும்.

வாரம் இருமுறை பப்பாளிக் காயை சமைத்து உண்டு வர உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது. மலிவான ஒரு காய் இது . இதை அதிகமாக வேக வைத்தால் வைட்டமின் ‘இ’ சத்து குறைந்து விடும்.

பப்பாளி வைட்டமின் ‘ஏ’ என்ற உயிரிச்சத்து நிறைந்தது. உடலில் அதிக இரத்தத்தை உண்டு பண்ணும். மனித உடல் வளர்ச்சியடையவும், உடல் பலம் பெறவும், இரத்தத்தை விருத்தி செய்யும் நரம்புகளுக்கு உறுதியைக் கொடுக்கவும், கண் பார்வையைக் கூர்மைப் படுத்தவும், பற்களைப் கெட்டிப்படுத்தி ஈறுகளுக்கு பலத்தைக் கொடுக்கவும், பல் சம்பந்தமான நோய் வராமல் தடுக்கவும், நல்ல ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் கூடிய அபார சக்தி வைட்டமின் ‘ஏ’ உயிரிச் சத்துக்குத் தான் உண்டு.


35 கிராம் இறைச்சியைச் செரிப்பதற்கு ஒரு கிராம் பப்பாயின் போதும் என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள். அதனால் தான் மாமிச உணவுத் தயாரிப்புக்களை மென்மைப் படுத்த பப்பாயின் பயன்படுத்தப்படுகின்றது.

குடல் புண், அஜீரணம் போன்ற வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் பப்பாளிக்காய் சாப்பிடலாம். மேலும், உணவுச் சத்துக்களை உறிஞ்சக் கூடிய ஒரு வகையான ஒட்டுயிரிகள் நமது குடலில் சிலசமயம் வளர்கின்றன. அவற்றை இந்தப் பப்பாயின் நொதிமம் கட்டுப் படுத்துகின்றது.

பப்பாளிப் பழம் உடம்புக்கு சூட்டை தரும் என்பார்கள். அதனால் கருவுற்ற பெண்கள் இதைத் தின்றால் கருக்கலைப்பு ஏற்பட்டு விடும் என்று சொல்வார்கள். இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் சாதாரண காலத்தில் இதைத் சாப்பிடலாமே.

புற்றுநோய் செல்களில் பைஃய்ரின் என்ற ஒரு நார்ப் பொருள் இருக்கின்றது. இது தான் புற்று நோயை நமது உடம்பின் மற்ற பகுதிகளுக்கு பரப்புகின்றது. இந்த பைஃப்ரினை கட்டுப்படுத்தும் ஆற்றல் பப்பாயினுக்கு உண்டு. அதனால் புற்று நோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சை எடுப்பவர்கள், பப்பாயினை சேர்த்துக் கொண்டால் சீக்கிரம் குணமடையலாம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.


பப்பாளி மரத்தின் தண்டில் இருந்து எடுக்கப்படும் பாலினால் காயம் கட்டி, பரு போன்ற புண்களைக் குணப்படுத்தலாம். காயத்தின் மீது பப்பாளி துண்டுகளை வைத்து அகலமான பப்பாளி இலைகளால் கட்டுப் போட்டு விடுகிறார்கள். அப்புறம் பப்பாளி மரத்தின் பட்டை இருக்கே, அது பல்வலியைப் போக்கும். அதனால் தான் சூயிங்கம் தயாரிப்பில் பப்பாளிப் பால் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது.

பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்து ரைக்கப்படுகிறது.

பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்ற சத்தும் ஏராளமாக காணப்படுகின்றது. இது சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. பப்பாளியில் பல்வேறு விதமான என்சைம்கள் காணப்படுகின்றன.

பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூல நோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்நாக்கு வளர்ச்சியை (டான்சில்) குறைக்கிறது.

பப்பாயின் குடலில் உள்ள நாடாப் புழுக்களை அழிக்கவும், பூச்சிகளை அழிக்கவும் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள ஆய்வுகள் பப்பாளியின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவை சிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்று நோய் சிகிச்சையின் போது ஏற்படும் தீய பக்க விளைவுகளிலிருந்து விடுபடவும், மூட்டுவாத நோய்களுக்கும் கூட உதவலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

தாமரை போன்ற பாதம் இல்லை என ஏங்குபவரா  நீங்கள்? மென்மையான பாதங்களுக்கு எளியவழி இதோ !
பப்பாளி கூழ்-2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், விளக்கெண்ணை-கால் டீஸ்பூன், மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். உங்கள் பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும்.

பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் கூட சில நாடுகளில் பயன்படுத்தப் படுகிறது. இது மிகச் சிறந்த கறை நீக்கியாக செயல்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.


பப்பாளி இலை ஜூஸ் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. ஆனால், இதை அளவாக உட்கொள்ள வேண்டும். பப்பாளி இலை சாற்றில் அதிக அளவில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, வைட்டமின்-இ மற்றும் வைட்டமின்-கே ஆகியவை உள்ளது. அதே நேரத்தில், பப்பாளி இலைகளின் சாறு குடிப்பதால் மலச்சிக்கல், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. வயிற்றை சுத்தமாக வைத்திருக்கும்.

சில சமயங்களில் உடலின் பல பாகங்களில் வீக்கம் ஏற்படும். இந்நிலையில், பப்பாளி இலைகளை சாறு குடிப்பது கால் மற்றும் முழங்கால்களில் உள்ள வீக்கத்தை நீக்குகிறது. பப்பாளி இலைச் சாறு மூட்டுவலி பிரச்சனையையும் போக்குகிறது.

பப்பாளி இலை ஜூஸ் செய்து குடிப்பதால் டெங்குவால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த இலைகள் டெங்குவால் ஏற்படும் காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல் மற்றும் சோர்வு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. இந்த இலைகளின் சாறு குடிப்பதன் மூலம், பிளேட்லெட் அளவை சரி செய்வதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதில் உள்ள சத்துக்கள் நமது உடலின் தசைகளை பலப்படுத்துகிறது. எனவே, காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி இலைகளின் சாறு குடிப்பது எல்லா வகையிலும் நன்மை பயக்கும். ஆனால், அதை சிறிய அளவில் குடிக்கவும். இந்த ஜூஸை அதிகமாக குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்

பப்பாளி இலைகளில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த ஜூஸை குடிப்பதால் பருவகால நோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது. இந்த சாறு ஆன்டிவைரல் பண்புகள் நிறைந்தது. இந்நிலையில், இந்த ஜூஸை குடிப்பதால், மழைக் காலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

பப்பாளி இலைகளின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த சாற்றை உட்கொள்வதன் மூலம், முடி வேர்களில் இருந்து வலுவடைவதோடு, அது வளர ஆரம்பிக்கும்.

பப்பாளி இலை சாறு குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். பப்பாளி சாறு குடிப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். இந்த சாறு இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது.

ஏதோ இந்தப்பழம் கொஞ்சம் விலை குறைவாக இதுவரை கிடைக்குது. விலை ஏறாமல் இருக்கணும் சாமி !

அண்ணாமலை சுகுமாரன் 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time