அணுக்கனிம அகழ்வு: பேராபத்தில் குமரி மாவட்டம்!

-சுப. உதயகுமாரன்

கார்ப்பரேட்களின் பேராசைக்காக குமரி மாவட்ட இயற்கை வளம் சூறையாடப்பட்டு வருகிறது..! முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. அரசின் கதைப்பாடோ வளர்ச்சி என்கிறது! மக்களின் நிலைப்பாடோ அதிர்ச்சியாகியுள்ளது. இதோ சுற்றுச் சூழல் குறித்த ஒரு தெளிவான புரிதல்;

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில்  இயங்கிவரும் ஐ.ஆர்.இ.எல். நிறுவனத்துடன் கைகோர்த்து  (indian Rare Earths Limited – IREL) கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம் புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு போன்ற பல்வேறு பகுதிகளில் 1144.06 ஹெக்டேர் (2,827 ஏக்கர்) நிலப்பரப்பில் மோனோசைட், சிர்கான், இல்மனைட், ரூடைல், சிலிமானைட், லுகோக்சின், சிர்கான், கார்னெட் போன்ற அரியமணல் வகைகளை அகழ்வு செய்வதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் திட்டமிடுகின்றன. நாளொன்றுக்கு 5,000 டன் மணல் வீதம், ஓராண்டில் 15 லட்சம் டன் மணல் அகழ்வு செய்யப்படுமாம்.

வளர்ச்சி என்பது என்ன? யாருடைய வளர்ச்சி? எத்தகைய வளர்ச்சி? அதற்கு என்ன விலை கொடுக்கிறோம்..?

‘மக்கள்—அரசு—நிதியாதாரம்’ எனும் மூன்று அங்கங்களுக்கு இடையேயான முக்கோண உறவு தான் ஒரு நாட்டின் அடிப்படை. எசமானர்களாகிய மக்கள் தங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். வேலைக்காரரான அரசு அவற்றை செய்து முடிக்கும். அவற்றைச் செய்வதற்கான ஆற்றலை நிதியாதாரம் வழங்கும். இது தான் சிறந்த ஏற்பாடு.

ஆனால் ‘பணம், பணம், பணம்’ என்று எல்லாமே பணமயம் ஆக்கப்பட்டுவிட்ட இன்றைய முதலாளித்துவ உலகில் நிலைமைத் தலைகீழாக மாறிவிட்டது. நிதியாதாரத்தை உருவாக்கித் தரும் பெருமுதலாளிகள், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், உலக நிதி நிறுவனங்கள், இடைத்தரகர்கள் போன்றவர்கள் தங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அதிகாரக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசியல் கட்சிகள், அதிகாரிகள், முகவர்கள் போன்றோர் அவற்றைச் செய்து கொடுத்து, தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். இந்த முறையற்ற கள்ள உறவால் மக்கள் புறந்தள்ளப்படுகிறோம்.

நம் நாட்டில் கொண்டுவரப்படும் பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்களை மேற்படி நிதியாதார அமைப்புக்களும், அரசும் சேர்ந்து திட்டமிட்டு, மக்கள்மீது திணிக்கின்றன. இந்த கள்ள உறவைத் தட்டிக் கேட்டு, தங்கள் நலன்களைக் காத்துக் கொள்வதற்காக குரல் கொடுக்கும் மக்களை, மக்கள் இயக்கங்களை, போராளிகளை நக்சல்கள், மாவோயிஸ்டுகள், தேசத் துரோகிகள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், அந்நிய நாட்டுக் கைக்கூலிகள், வெளிநாட்டுப் பணம் பெறுபவர்கள் என்றெல்லாம் அரசு தரப்பு அவதூறு பரப்புகிறது. மக்கள் தரப்பு நியாயங்களை முற்றிலுமாக நிராகரிக்கிறது.

’வாழ்வாதாரத்தை பறிக்காதே’ என பேரணி நடத்திய கிராம மக்கள்

மக்களுக்கும்—அரசுக்கும் இடையேயான அடிப்படை முரண்பாடே “வளர்ச்சி” பற்றியது தான். இந்த மண்மீது நாம் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் நாம் இந்த மண்ணிலிருந்து தான் எடுத்தாக வேண்டும். மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் பொன் முட்டையிடும் வாத்தின் முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பயன்படுத்தி, அனைவருமாக உயர்வதா?, அல்லது கார்ப்பரேட் முதலாளிகளின், ஆளும் வர்க்கத்தின், இடைத்தரகர்களின் பேராசையால் வாத்தின் வயிற்றை அறுத்து, அதனைக் கொன்று, அனைத்தையும் இழப்பதா?

இந்த அகழ்வு நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறுமாம். சற்றொப்ப 6 கோடி டன் மணல் எடுக்கப்படுமாம். ஆச்சரியமான ஆச்சரியம் என்னவென்றால், மேற்படி நடவடிக்கையால் யாருக்கும் எதற்கும் எந்த பாதிப்பும் வராதாம், எந்தவிதத் தீங்கும் நிகழாதாம். ஒருசில முக்கியமான வாதங்களைப் பார்ப்போம்:

முதலாவதாக, அரசு—ஆலை—அறிவியலாளர்கள்—தொழிற்நுட்ப நிபுணர்கள் அனைவரும் சேர்ந்து, “எங்களால் கதிர்வீச்சு உருவாகவில்லை, நாங்கள் மணலை அள்ளிச் செல்வதன் மூலம் உண்மையில் கதிரியக்கத்தைக் குறைக்கிறோம்” என்கிறார்கள்.

நாம் “தூங்கும் புலியை இடறாதே” என்கிறோம். இயற்கையாகப் படிந்து கிடக்கும் மண்ணை கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, அள்ளித்தோண்டி, கிளறிவிட்டு கதிர்வீச்சை உருவாக்காதீர்கள், பெரிதாக்காதீர்கள் என்கிறோம். குப்பை மலையைக் குடைந்தாலே, உள்ளேயிருந்து ஆபத்தான வாயுக்கள் வெளிவருகின்றனவே? மலக்குழிகளுக்குள் இறங்கி மனிதர்கள் மரணமடைவதைப் பார்க்கிறோமே? அப்படியிருக்கும்போது, மத்தாப்பு எரிந்து பொறிப் பொறியாய் விழுவது போன்று, கண்ணுக்குத் தெரியாமல், நாற்றம் ஏதுமில்லாமல் பெரும் ஆற்றலை உமிழ்ந்து, நமக்கு நோய்களைத் தரும் கதிரியக்கத்தை உருவாக்காதீர்கள் என்கிறோம் நாம்.

கதிர்வீச்சு என்பது ஒரு பிரச்சினையே அல்ல என்றால், மணவாளக்குறிச்சி மணல் ஆலை நிர்வாகம், தம்முடைய ஊழியர்கள் கதிர் வீச்சுக்குள்ளாகும் அளவை “குறியீட்டு அட்டைகள்” (Film Badge) மூலம் அளந்து, அவற்றை மும்பையில் இயங்கும் அணுசக்திக் கழகத்துக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அனுப்பி, அவற்றை பரிசோதிப்பது ஏன்? கூலித் தொழிலாளிகள் தங்களுக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டிருக்கும் சான்றிதழைச் சமர்ப்பித்தால், அவர்களின் மருத்துவச் செலவில் ஒரு சிறு பகுதியை வழங்குவது எதற்காக?

இரண்டாவதாக, அகழ்ந்தெடுக்கும் மணலிலிருந்து தாதுக்கள் அடங்கிய ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு, எஞ்சியிருக்கும் மணலை அந்தப் பகுதியிலேயேக் கொட்டிச் சரிசெய்து விடுவதால், கடலரிப்பு ஏற்படாது என்று இன்னொரு கதையைச் சொல்கிறார்கள்.

மூன்றாவதாக, மணல் அள்ளுவதால் நூற்றுக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கிறோம், நல்ல சம்பளம் வழங்குகிறோம் என்றெல்லாம் கதையளக்கிறார்கள். மணலை அள்ளிச் சுமப்பதும், லாரிகளில் கொட்டுவதும் எந்தெந்த திறமையைப் பெருக்கும், எதிர்காலத்தை எப்படிச் செதுக்கும் என்று கேட்கிறோம் நாம்? உண்மையில், கடலில் மீன்வளம் அருகிப் போவதால், ஆயிரக்கணக்கான மீனவர்கள் உள்ளூர் வேலைகளை இழந்து, வேலைவாய்ப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகிறது.

விவசாயிகளும் தங்கள் தொழிலை இழந்து வருமானமின்றித் தவிக்கின்றனர். கடற்கரை மணல் அகற்றப்படுவதால் கடல்நீர் உட்பகுதிகளுக்குள் ஊடுருவி குடிநீராதாரங்கள் அழிந்து, நிலத்தடிநீர் உப்பாகி, விளைநிலங்கள் உவர் நிலங்களாக மாறி, விவசாயம் பெரும் பாதிப்படைகிறது. மேலும், மணல் ஆலைகளிலிருந்து பரவும் தூசியும், புழுதியும் தோட்டப்பயிர்கள் மீது படிவதால், அவை பூக்காமல், காய்க்காமல், விளைச்சல் குறைந்து, விவசாயம் நொடிந்து போகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் தென்னந்தோப்புக்கள் கருகி அழிகின்றன. பல விவசாயிகள் தங்களின் நிலங்களுக்குச் செல்லும் வழித்தடங்களை இழப்பதன் மூலம், தங்கள் சொத்துக்களையேப் பறிகொடுக்கின்றனர்.

பாலைவனமாகிக் கொண்டிருக்கும் குமரி

# விவசாயிகள் பலர் தங்களின் நிலத்தை குறைந்த விலைக்கு விற்பதற்கு மிரட்டப்படுவோமோ, தங்களின் நிலம் பறிக்கப்படுமோ என்கிற அச்சத்தோடு வாழ்கின்றனர்.

கடலோரமெங்கிலும் ஓங்கி வளர்ந்து, புயற்காற்றைக் கூட தடுத்து நிறுத்தும் வல்லமைப் பெற்ற பனை மரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், நம் மண்ணும், மக்களும் பாதுகாப்பு அரண் ஏதுமின்றி நிர்க்கதியாக நிற்கிறோம்.

ஏற்கனவே விளைநிலங்களை, மலைவளத்தை வேகமாக இழந்துவரும் குமரி மாவட்டம் பாலைவனமாகும் நிலை விரைவில் எழும் என்று அஞ்சுகிறோம்.

#  நான்காவதாக, கல், கிரானைட், ஆற்றுமணல், தாதுமணல் என அனைத்துக் குவாரிகளிலும் அனுமதி வாங்கிய இடங்களில் மட்டுமின்றி, அருகமைப் பகுதிகளில், அரசு புறம்போக்கு மற்றும் வழிப்பாதைகளில் எல்லாம் அகழ்வுப்பணிகள் நடத்துவதும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு அள்ளித்தோண்டி எடுப்பதும், அனுமதி நிபந்தனைகளைப் பட்டவர்த்தனமாக மீறுவதும் வாடிக்கையாக நடக்கும் விடயங்கள். மிகச் சிறிய தொகை ஒன்றை அரசுக்குச் செலுத்திவிட்டு, மிகப் பெரிய லஞ்சத் தொகைகளை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுத்துவிட்டு, கோடி கோடியாகக் கொள்ளை லாபம் பார்க்கும் தொழில்தான் இந்த குவாரித் தொழில். கடந்த 1999-ஆம் ஆண்டிலிருந்து சில தனியார் தாது மணல் நிறுவனங்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.96,120 கோடி என்று பல்துறை வல்லுனர்கள் சிலர் 2013-ஆம் ஆண்டுவாக்கில் கணக்கிட்டனர் (இந்தியா டுடே, 28.08.2013).

இழப்பதற்கு ஏராளம் இருப்பதால், குவாரி அதிபர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள். சில தனியார் தாதுமணல் நிறுவனங்கள் கடலோர ஊர்களை இரண்டாகப் பிளந்து, கைக்கூலிகளை உருவாக்கி, வேலை எதுவும் செய்யாமலே அவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்து, பொது அமைதியைக் கெடுத்து, அபரிமித வளர்ச்சியும், கொள்ளை லாபமும் பெறுகின்றனர். இன்னொரு பக்கம் குவாரிகளால் பாதிக்கப்படும் மக்கள் தங்களின் பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம், நினைவுகள், அடையாளம், எதிர்காலம் அனைத்தையும் இழந்து, ஏதிலிகளாகக் குடிபெயர நேரிடுகிறது. இம்மாதிரியானச் சூழல் அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சிக்கும், சமூக அமைதிக்கும் உகந்ததாக இருக்க முடியாது.

#  ஐந்தாவதாக, இந்த தாதுமணல் திட்டம் கடற்கரை மற்றும் உட்பகுதிகளின் சூழியல் சமன்பாட்டைத் தகர்த்தழிக்கும். முதலில் கடற்கரையோரங்களில் வளரும் நீர் மற்றும் நிலத்தாவரங்கள் அழிக்கப்படும். இவற்றை அழிப்பதன் மூலம் வண்ணத்துப் பூச்சிகள், நண்டு, நத்தை, ஆமை போன்ற ஓட்டுடலிகள், பூச்சிகள், அவற்றின் குஞ்சுகள், முட்டைகள் போன்றவை அழித்தொழிக்கப்படும். பல உயிரினங்கள் கடற்கரையோரம் வந்து முட்டையிடுவதும், குஞ்சு பொரிப்பதும் தடுக்கப்படும். கடற்கரைகள் அழிக்கப்படுவதால், கடல் நீரோட்டங்கள் மாற்றப்படும். கடலுக்குள் அமைந்திருக்கும் கார்னெட் கனிமம் குவிந்திருக்கும் பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டால், கடல்வாழ் உயிரினங்களின் உயிரியல் பன்மயச் சூழல் அழிக்கப்படும்.

அரிய மணல்களைப் பிரித்தெடுக்க அதிகமாக தண்ணீர் தேவைப்படுவதால், கடல் நீரையும், (ஆழ்குழாய்களை நிலத்துக்குள் இறக்கி) நிலத்தடி நீரையும் உறிஞ்சி எடுப்பார்கள். அதே போல, மணல் ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், கடலில் விடப்படுகிறது. மணல் ஆலைக் கழிவுகள் கடலையும், நிலத்தையும், நிலத்தடி நீரையும், காற்றையும், ஒட்டு மொத்த சுற்றுச் சூழலையும் பாதிக்கின்றன. கடல்நீர் மாசுபட்டு நஞ்சாக மாறுவதால், மீன்வளம் அருகிப் போகிறது.

#  ஆறாவதாக, கன்னியாகுமரி மாவட்டம் எதிர்கொண்டு நிற்கும் பெரும் பிரச்சினைகளுள் ஓன்று கடலரிப்பு. கடலோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளைத் தொடர்ந்து இழந்து வருகிறோம். கடலோர கிராமங்களை இணைத்து நிற்கும் சாலை ஆங்காங்கே துண்டிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய மணல் அள்ளும் திட்டத்தால் கடல் அலைகளைத் தடுத்து பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடிய மணல் திட்டுக்கள், மணற்குன்றுகள் முற்றிலுமாக நீக்கப்படும். எனவே, கடலரிப்புப் பிரச்சினை மேலும் மோசமாகும். ஏற்கனவே கடல்நீர் உட்புகுதல் பல கிராமங்களில் அன்றாட நிகழ்வாக மாறியிருக்கிறது. கடலரிப்பைத் தடுப்பதற்காக கடலோரமெங்கும் கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்புச் சுவர்கள் மற்றும் தூண்டில் வளைவுகள் தற்போதைய மணல் அள்ளும் திட்டத்தால் முற்றிலுமாகத் தகர்த்தழிக்கப்படும்.

#  ஏழாவதாக, குமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரை சுமார் 48 மீனவ கிராமங்களைக் கொண்டிருக்கிறது. மேற்படி கிராமங்களில் பனிரெண்டு லட்சம் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்விடப் பாதிப்புக்கள் அதிகரிக்கும். ஏற்கனவே கடற்கரைகள் காணாமற்போய் மீனவர்களின் படகுகளை நிறுத்துவதற்கு, உபகரணங்களை வைப்பதற்கு, வலைகளை உலர்த்துவதற்கு போதிய இடவசதி இல்லாமலாகிவிட்டது. கடல்நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்துத் தள்ளும்போது, மீனவ மக்கள் வாழ்விடங்களை இழக்கிறோம்.

# எட்டாவதாக, தற்போதையத் திட்டத்தால் அள்ளப்படும் மணல் 25-30 டன் டிப்பர் லாரிகளில் 12-17 கிமீ மற்றும் 30-35 கிமீ தூரம் பயணித்து மணவாளக்குறிச்சி ஆலைக்குக் கொண்டுசெல்லப்படும். மணல் அள்ளும்போதும், லாரிகளில் எடுத்துச் செல்லப்படும்போதும் எழும் புழுதி பொதுமக்களின் மூக்கு, கண், வாய் வழியாக உடலுக்குள் புகுந்து, நுரையீரல் மற்றும் ஈரல் பாதிப்புக்களை உருவாக்கும். குடிநீர் மாசுபாட்டால், ஏராளமானோர் சிறுநீரகப் பிரச்சினைகளால், தோல் நோய்களால், சுவாசக் கோளாறுகளால் துன்புறுவோம். மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் வேலைபார்க்கும் பல ஊழியர்கள், அருகே வசிக்கும் மக்கள் பலர் புற்றுநோயால் மரணமடைந்து வருகின்றனர். கடலோர, கடற்கரையோர ஊர்களில் வாழும் பெண்களில் பலருக்கு கருச்சிதைவு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மனவளர்ச்சியற்ற குழந்தைகள் பிறப்பு விகிதமும் மிக அதிகமாக இருக்கிறது. தற்போதைய விரிவாக்கத் திட்டத்தால் மேற்படி நோய்கள் பல மடங்கு அதிகரிக்கும்.

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கொல்லம் மாவட்டங்களில் இயங்கும் கேரளா மினரல்ஸ் அண்ட் மெட்டல்ஸ் நிறுவனம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் இயங்கும் அதானியின் விழிஞ்ஞம் துறைமுகம், குமரி மாவட்டத்தில் இயங்கும் மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை, திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கும் கூடங்குளம் அணுஉலைப் பூங்கா, உடன்குடி அனல்மின் நிலையம், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை, சேதுசமுத்திரத் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், மிதக்கும் காற்றாலைத் திட்டம் என நம்முடைய தெற்குப் பகுதி கடலையும், கடலோரத்தையும் மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட்டு, மீனவர்களை முழுவதுமாக அப்புறப்படுத்தும் வேலைகள் கர்மசிரத்தையுடன் நடைபெறுகின்றன.

இவையெல்லாம் போதாதென்று, நாடு முழுவதும் 28 பகுதிகளில் 1,36,596 சதுர கிலோமீட்டர் கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு ஒன்றிய அரசு ஏலம் நடத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகே உள்ள ஆழ்கடலில் மூன்று தொகுதிகளும், சென்னைக்கு அருகே ஆழ்கடல் பகுதியில் ஒரு தொகுதியும் அமைந்துள்ளன. மொத்தம் 32,485.29 சதுர கிலோமீட்டர் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

குமரி முனைத் தொகுதிகளின் நடுவே, கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் ஆழ்கடலில் “வாட்ஜ் பேங்க்” (Wadge Bank) எனும் “படுகைக் கரை” ஒன்று அமைந்திருக்கிறது. சற்றொப்ப 10,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்தப் படுகைக் கரை இந்தியாவின் மாபெரும் மீன்வளச் சுரங்கமாகத் திகழ்ந்து வருகிறது.

இங்கே பலமான நீரோட்டங்களோ, அலைகளோ, வெள்ளப்பெருக்கோ ஏற்படுவதில்லை என்பதால், மீன்களுக்குத் தேவையான உணவுகள் உற்பத்தி ஆகின்றன. ஏராளமான பவளப் பாறைகள் படிந்திருக்கும் இப்பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட மீன் வகைகளும், அறுபதுக்கும் மேலான கடல்வாழ் உயிரினங்களும் வாழ்கின்றன. மீன்களும், பிற கடல்வாழ் உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது.

தென் மாநிலங்களைச் சார்ந்த லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரமாகவும்,  கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பெட்டகமாகவும் இந்தப் பகுதி அமைந்திருக்கிறது. இங்கே எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பது மேற்படிச் சூழலை முற்றிலுமாக அழித்தொழித்து, மீனவக் குடும்பங்களை வறுமைக்குள் தள்ளிவிடும். அதேபோல, எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலைச் செயல்பாடுகளும், அதனால் ஏற்படும் மாசுபாடும், கடல் சூழலை முற்றிலுமாக அழித்துவிடும். பெரும்பாலான இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு தகர்த்தெறியப்படும்.

ஒரு நாட்டை உருவாக்குகிறவர்கள், கட்டிக்காப்பவர்கள் மக்கள் என்றால், அவர்களின் வாழ்வுரிமைகள், வாழ்வாதார உரிமைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்; பன்னாட்டு நிறுவனங்களுக்கோ, பெருமுதலாளிகளுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ அல்ல. எனவே நமது ஈடுபாடுகளை, தேவைகளை, உரிமைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வோம், அவற்றை அச்சமின்றி உரக்கச் சொல்வோம். நமது சிந்தனையிலோ, மொழியிலோ, செயல்பாடுகளிலோ வன்முறை ஏதுமின்றி பார்த்துக் கொள்வோம்.

இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், சனநாயகத் தன்மையோடும் நடத்தப்படுவதில்லை. “மக்கள் கேள்விகள் கேட்டார்கள், அதிகாரிகள் அற்புதமாக பதிலளித்தார்கள், அனைத்தும் சுபமாக நடந்தேறின, எனவே அனுமதி வழங்கலாம்” என்று முதலாளிகள் கேட்க விரும்புவதையே அதிகாரிகள் அறிக்கையாக எழுதித் தருகிறார்கள்.

மக்களின் சந்தேகங்களை நீக்குங்கள், அவர்களின் அச்சத்தைப் போக்குங்கள் என்றெல்லாம் சிலர் சப்பைக்கட்டுக் கட்டினாலும், வளர்ச்சி என்பது என்ன, யாருடைய வளர்ச்சி, எத்தகைய வளர்ச்சி, அதற்கு என்ன விலை கொடுக்கிறோம் என்பன போன்ற சில எளிய கேள்விகளுக்கு உரிய விடைகள் காண நாம் முற்படுவோம்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம், இனயம் சரக்குப் பெட்டகத் துறைமுக எதிர்ப்புப் போராட்டம், கன்னியாகுமரி சரக்குப் பெட்டகத் துறைமுக எதிர்ப்புப் போராட்டம் போன்ற சாதி-மதம் கடந்த, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய, ஓர் அறவழிப் போராட்டத்தைக் கையிலெடுப்பது தான் நம் முன்னால் இருக்கும் ஒரே வழி.

மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை மற்றும் தனியார் மணல் ஆலைகளால் இதுவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்திருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை, மனித இழப்புக்களை, பல்லுயிர் தாக்கங்களை விரிவாக ஆய்வுசெய்து, ஒன்றிய, மாநில அரசுகள் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோருவோம்.

தற்போதைய மணவாளக்குறிச்சி ஆலை விரிவாக்கத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். கருத்துக்கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு நிபந்தனைகளின்றி நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வோம்.

வளர்ச்சிக் கொள்கைகளில், திட்டங்களில் பொறுப்பான செயல்பாடுகள் வேண்டும். கனிமங்கள் அகழ்வதில் நீடித்த நிலைத்தத் தன்மை (sustainability) வேண்டும். கனிமங்களின் அகழ்வால், பதனிடும் பணிகளால், பயன்பாட்டால் எழும் சுற்றுச்சூழல் தாக்கங்கள், சமூகத் தாக்கங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, கனிமவள அகழ்வுத் திட்டங்களால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் மறுத்தால், அத்திட்டங்கள் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும்.

கட்டுரையாளர்; சுப. உதயகுமாரன்

 

அணுசக்திக்கு எதிரான மற்றும் பசுமை அரசியல் செயல்பாட்டாளர்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

நாகர்கோவில்,

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time