ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பாஜகவினர் மக்களை படுத்திய பாடு கொஞ்சமா? நஞ்சமா? அடக்குமுறை, வெறுப்பு அரசியல், சனாதன முன்னெடுப்பு ஆகியவற்றால் பாரதீய ஜனதா கட்சி, இரு மாநிலங்களிலும் மக்களின் கோபத்தை எந்த அளவுக்கு பெற்று பின்தங்கியுள்ளது என்பதை பார்ப்போம்;
ஹரியானாவை பொறுத்த வரையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா ஜ க கடுமையான மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது என்பது ஒன்பது வருடங்களாக ஹரியானா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாரை தேர்தல் பரப்புரையிலோ போஸ்டரிலோ பா ஜ க மேலிடம் அனுமதிக்க வில்லை என்பதிலிருந்து விளங்கும்.
புதிதாக முதல்வரான நயாப் சைனியைத் தவிர வேறு எந்த பாஜ க தலைவரும் – மோடி உட்பட- பேருக்கு கூட பாஜ க மூன்றாவது முறையாக ஆட்சியிலமரும் எனப் பேசவில்லை.
பெறப்போகும் தோல்வியின் பரிமாணத்தை எப்படி சமாளிப்பது என்பதில் தான் அவர்கள் கவனம் இப்பொழுது திரும்பி உள்ளது.
முந்தைய ஹூடா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி முறைகேடுகளையும் , ஜாட் வகுப்பு மக்களின் அளவில்லா அதிகார ஆளுமையையும் முன்னிறுத்தி சமூகத்திலுள்ள பிற வகுப்பினரை ஒன்று திரட்டி 2014ல் தேர்தலை சந்தித்தது பா ஜ க. அத்துடன் அன்று நிலவிய மோடியின் ஈர்ப்பும் சேர்ந்து கொண்டதால், ஹரியானா மக்கள் பாஜ க விற்கு வெற்றியை வழங்கினர்.
ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் மோடி- ஷா தலைமை ஹரியானா மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் தங்களது சனாதன வேலை திட்டத்தை நிறைவேற்றுவதில் கண்ணும், கருத்துமாக இருந்தனர்.
சட்ட மன்றத்திற்கு கூட தேர்ந்தெடுக்கப்படாத ஆர்.எஸ். எஸ். காரியகர்த்தாவான மனோகர்லால் கட்டாரை மோடி ஹரியானா முதல்வராக்கினார். பசு பாதுகாப்பு, லவ் ஜிகாத் , மத மாற்ற எதிர்ப்பு போன்ற இஸ்லாமிய வெறுப்பு கோட்பாடுகளை அரசின் கொள்கைகளாக மாற்றிய கட்டார் அரசு கௌ ரட்சகர்கள் என்ற போர்வையில் ஏழை எளிய இஸ்லாமிய மக்களை நர வேட்டையாடுவதை அனுமதித்து கொண்டிருந்தது.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி மடுக்காமல் கிண்டலடித்ததும், விவசாயிகளின் போராட்டத்தை காவலரின் வன்முறை மூலம் அடக்கி ஒடுக்க முயன்றதையும் விவசாயிகள் மறக்கவோ, மன்னிக்கவோ தயாராய் இல்லை.
இன்றுங்கூட லட்சக்கணக்கான டன் நெல் கொள்முதல் செய்யப்படாமல் வீதிகளிலும், களத்து மேட்டுகளுலும், வயல் வெளிகளிலும் காய்ந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
அடுத்து ஹரியானாவில் இளைஞரிடையே தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம் லட்சக்கணக்கான இளைஞர்களின் , அவர்தம் குடும்பத்தினரின் கோபத்தை அதிகரித்துள்ளது.
பளுதூக்கும் விராங்கனை வினேஷ் போகாட் போன்ற ஹரியானா மண்ணின் புதல்விகளை மோடியும் ஒன்றிய அரசு நடத்திய விதம் ஹரியான மக்களின் உணர்வுகளை வெகுவாக காயப்படுத்தி உள்ளது.
புதிய தொழில்கள், புதிய பள்ளிகள் என எந்த வளர்ச்சியையும் கடந்த பத்து ஆண்டுகளில் கண்டிராத ஹரியானா மக்கள் பாஜ க வை வீட்டிற்கு அனுப்ப காத்து கிடந்தனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியோடு களம் கண்ட காங்கிரஸ், இத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.
கெஜ்ரிவால் ‘வெளியில்’ வந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டாலும், மக்கள் பா ஜ க வை தோற்கடிக்க தகுதியான கட்சியாக காங்கிரசை பார்ப்பதால் வாக்குகள் பிரிய வாய்ப்பில்லை என்கிறார்கள்.
இது போன்றே சௌதாலாவின் இந்திய தேசிய லோக்தல் கட்சியும், துஷ்யந்த சௌதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியும் ஜாட் மக்களின் கட்சியாக அறியப்பட்டாலும், பா ஜ க வின் தொங்கு சதையாக இருப்பதால் ஜாட் இன மக்களின் நம்பிக்கையை இழந்தவர்களாக ஆகி விட்டனர்.
25 விழுக்காட்டிற்கும் அதிக எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ள ஹரியானாவில்அவர்களது வாக்குகளை பிரித்து அள்ளுவதற்கு மாயாவதியும், ஆசாத் சமாஜ் கட்சி யின் நிறுவன தலவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரசேகர் ஆசாத்தும் சௌதாலாக்களுடன் இணைந்து முயல்கின்றனர்.
ஆனாலும், ஹரியானாவை சேர்ந்த, தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த குமாரி செல்ஜா ( முன்னாள் ஒன்றிய அமைச்சர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்) காங்கிரஸ் கட்சியின் தூண்களில் ஒன்றாக இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு வலு கூடியுள்ளது.
ஆட்சி அதிகாரம் மக்களின் சேவைக்கா? அல்லது வேண்டாதவர்களை அடக்கி ஒடுக்கவா? என்ற கேள்வி ஹரியானா மக்களிடையே எழுந்துள்ளது. இதில் லத்தியையும் தண்டாவையும் விவசாயிகள் மீதும், இஸ்லாமிய மக்கள் மீதும் , ஏழை எளிய மக்கள் மீதும், எதிர்கட்சியினர் மீதும் ஏவி அடக்கி வந்த பாஜ க ஆட்சியை தோற்கடிக்க மக்கள் தயாராகி விட்டனர்.
மக்களின் சேவைக்காகவே அதிகாரம் என்ற நிலைப்பாட்டை ராகுல் காந்தி முன் வைத்ததால், ஹரியானா மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் குறைகள் இருப்பினும், கோஷ்டி பூசல்கள் அதிகமிருப்பினும் அக்கட்சிக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்க தயாராகி விட்டனர் என்பதே உண்மை.
இந்த வெற்றியின் பரிசை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் எப்படி கையாள்கிறது என்பது வரும் நாட்களில் அவதானிக்கப்படும்.
ஆனால், பா ஜ க வின் தோல்வி , மோடியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது!
ஜம்மு காஷ்மீர்
2014 க்குப்பின் பத்து ஆண்டுகள் தேர்தலையே சந்தித்திராத ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இப்பொழுது தேர்தல்களில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
2019 ல் அம்மாநிலம் துண்டாடப்பட்டு, இரண்டு ஒன்றிய பகுதிகளாக (Union Territory) முறையே ஜம்மு காஷ்மீர் , லடாக் என பிரிக்கப்பட்டது, லடாக் பகுதிக்கு சட்ட சபை மறுக்கப்பட்டது.
ஆக, மாநில சட்ட மன்றம் என்பது தரந்தாழ்த்தப்பட்டு, ஒன்றிய பகுதியின் சட்ட மன்றத்திற்கு இப்பொழுது தேர்தல் – உச்ச நீதி மன்றத்தின் கண்டிப்பான அறிவுறுத்தலால்- நடைபெறுகிறது.
அரசியல் பிரிவு 370 ஐ ரத்து செய்து, நிலம் , வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசியல் பிரிவு 35Aஐ ரத்து செய்த மோடி ஆட்சியின் மீதான மக்களின் எண்ணப்பாடுகளை இத்தேர்தல் எதிரொலிக்கும்.
2019 ல் தொடங்கி, மாநிலத்தில் உள்ள எதிர்கட்சிகள் அனைத்தையும் – அதன் தலைவர்கள் தொண்டர்கள் அனைவரையும் – குறிப்பாக மாநில கட்சிகளான தேசீய மாநாட்டு கட்சி (NC),
மக்கள் ஜனநாயக கட்சி (PDP) மற்றும் ஜேகேபிசி , ஹூரியத் கட்சி தலைவர்கள், தொண்டர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர் மத்திய ஆட்சியாளர்கள்.
PSA என்ற ஜம்மு மற்றும் காஷ்மீரின் பொது பாதுகாப்பு சட்டம் என்ற கருப்பு சட்டத்தின் மூலம் அம்மாநில மக்களின் அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளை ஒன்றிய அரசு முடக்கி,
எண்ணற்றோரை இச்சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணையின்றி சிறையிலடைத்திருப்பதற்கு நல்ல பலனை பாஜக இந்த தேர்தலில் பெறும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கை விடுத்து, ஜம்மு பகுதியிலும், கார்கில்லை தவிர்த்த லடாக் பகுதியிலும்
ஒன்றிய அரசின் நடவடிக்கைகளான – காஷ்மீரை துண்டாடுதல், 370 மற்றும் 35A பிரிவுகளை நீக்குதல்- போன்றவை ஆரம்பத்தில் வரவேற்கப்பட்டாலும், இப்பொழுது ஜம்மு மக்களும் தங்களது தனித்தன்மை பறிக்கப்பட்டதை உணருகின்றனர் எனலாம்.
துணை நிலை ஆளுனரின் அதிகாரங்கள் வரைமுறையின்றி அதிகரிக்கப்பட்டு, சட்ட மன்றங்களின் அதிகாரங்கள், தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர்களின் அதிகாரங்கள் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளன.
அடக்குமுறையும் போலீஸ் மற்றும் ராணுவத்தின் அத்துமீறல்களும் , உரிமை மீறல்களும் பெருகி உள்ள இந்தச் சூழலில், நிருவாக்க்கோளாறும் லஞ்ச லாவண்யமும் ஊழலும் பெருகியுள்ள இந்தச் சூழலில் காஷ்மீர் மக்கள்ள் மட்டுமின்றி ஜம்மு வாழ் மக்களும் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை வலியுடன் உணர்கின்றனர் .
ஆனால், இந்த அன்னியமாதல் காஷ்மீர் பகுதியில் ஒரு விதமாகவும் ஜம்மு பகுதியில் வேறு விதமாகவும் வெளிப்படுகின்றது எனலாம் .
காஷ்மீரில் குறிப்பாக ஶ்ரீநகர் தொகுதியில் வாக்கு விழுக்காடு 29ஐ தாண்ட வில்லை, மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் கிராமப்புற மக்கள் இந்த தேர்தலில் ஓரளவு உற்சாகம் காட்டியுள்ளனர் .
ஜம்மு பகுதியில் இதுவரை இந்து அடையாள அரசியலில் திளைத்தவர்கள் இன்று 35A ஒழிப்பால் தங்களது நிலம் மற்றும் வேலைவாய்ப்பு முன்னுரிமைகள் தட்டி பறிக்கப்படுவதை உணரத் தொடங்கி உள்ளனர், உரிமைகளற்ற ‘மாநில அரசையும், அதிகாரமற்ற சட்டமன்றங்களையும் அவர்கள் விரும்பவில்லை .
இதன் விளைவாக ஆரவாரங்களை , வெற்று கோஷங்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தவர்கள் , வளர்ச்சி வரும் என நம்பியவர்களுக்கு விரக்தி மட்டுமே மிஞ்சியுள்ளதால் இந்து அடையாள அரசியல் சிறிது ஆட்டங் கண்டுள்ளது, குலாம் நபி போன்றோரின் துரோக அரசியல் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காஷ்மீர் மட்டுமின்றி, ஜம்முவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த எழுச்சியை காங்கிரஸ் கட்சி முறையாக பயன்படுத்தி கொண்டதா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது வெளிப்படைத் தன்மையும், அரவணைத்து செல்லும் பாங்கும் , எதிர்காலத்தை பற்றிய பார்வையும் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது தெரிய வருகிறது.
காஷ்மீரில் வேட்பாளர்களை நிறுத்த பாஜகவிடம் ஆட்களோ, செல்வாக்கோ இல்லை என்பது வெளிப்படை. இந்த நிலையில் பா ஜ க ஜம்முவை மட்டுமே நம்பி , இந்துத்துவ அரசியலை நம்பி களத்தில் நிற்கிறது. எதிர்கட்சிகளின் ஒற்றுமையை குறைப்பதனாலும் , வென்றவர்களை விலைக்கு வாங்குவதனாலும் அதிகாரத்தில் அமர்ந்து விடலாம் என பல வழிகளில் முனைகின்றனர்.
தேசீய மாநாட்டு கட்சி காங்கிரசுடன் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது, மஹபூபா கட்சியினருடன் (பி டி பி) இவர்கள் தேர்தல் உடன்பாடு காணவில்லை. அதே போன்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உமர் அப்துல்லாவை தோற்கடித்த இஞ்சினீயர் ரஷீத் இப்பொழுது பிணையில் வெளி வந்துள்ளார் . பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட ஷேக் அப்துல் ரஷீது (இஞ்.ரஷீது) இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடுகிறார் . அவருடைய அவாமி இத்திகாத் கட்சி 25 இடங்களில் தனித்து போட்டியிடுகின்றது.
இந்தியா கூட்டணியில் தே. மாநாட்டு கட்சி 51 தொகுதிகளிலும் காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் மார்கசிஸ்ட் கட்சி மற்றும் சிறுத்தைகள் கட்சி தலா ஒரு தொகுதிலும் போட்டியிடுகின்றனர். ஐந்து தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படாததால் நட்பு ரீதியான போட்டி இருக்கும்.
பிடிபி கட்சியினரை இந்தியா கூட்டணியில் இணைத்துக் கொள்ளாததை பலரும் கண்டித்தாலும், தேசீய மாநாட்டு கட்சி அதில் உறுதியாக இருந்தது.
இவர்கள் அனைவரது தேர்தல் அறிக்கைகளும், கோரிக்கைகளும் ஜம்மு காஷ்மீரின் “ ஆன்மா”வை மீட்டெடுப்பது , மாநில தகுதியை பெறுவது, அடக்குமுறை சட்டங்களை விலக்குவது, இழந்த மாநில உரிமைகளை மீண்டும் பெறுவது என்பவற்றை வலியுறுத்துகின்றன.
இருந்தும் அன்றைய “ குப்கார் கூட்டணி” கட்சிகளோ அல்லது இன்னாள் இந்தியா கூட்டணி கட்சிகளோ ஓரணியில் தேர்தலை சந்திக்கவில்லை.
ஜம்மு காஷ்மீர் மக்களின் மாண்பை மீட்டெடுக்க , இழந்துவிட்ட மாநிலத் தகுதியை மீட்டெடுக்க , மாநில உரிமைகளை மீண்டும் பெற, இக்கட்சிகள் தேர்தலுக்குப் பிறகாவது ஓரணியில் திரண்டாலே ஆட்சியில் அமர முடியும் என நோக்கர்கள் கருதுகின்றனர்.
குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக முற்போக்கு அவாமி(DPAP) கட்சியும். மற்றொரு ஜால்ராவான சையது முகம்மது அல்தாஃப் புகாரியின் அப்னி கட்சியும் (J&K Apni Party) இத்தேர்தலுக்குப்பிறகு காணாமல் போகும்.
காவல்துறை அதிகாரத்தை முதல்வரிடமிருந்து துணை நிலை ஆளுனருக்கு மாற்றியுள்ள ஒன்றிய அரசு, அரசு அலுவல் நடைமுறையிலும் (State Transaction Rules) மாற்றங்களை கொண்டுவந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை ‘காகிதப் புலியாக ‘ பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மாற்றி உள்ள ஒன்றிய அரசு.
இப்பொழுதே துணை நிலை ஆளுனர் அதிகாரத்தின் கீழ் ஐந்து நபர்களை (தேர்ந்தெடுக்கப்படாத) சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க முயலுகிறது.
Also read
இத்தகைய உள்ளடி வேலைகள் எல்லாம் தனிப் பெருங்கட்சியாக பாஜ க வென்றாலோ, எதிர்கட்சிகளின் ஒற்றுமை குறைந்தாலோ ஶ்ரீநகரில் பாஜ க ஆட்சியை நிறுவுவதற்கான ஆயத்தங்களே என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.
கூச்ச நாச்சமின்றி காஷ்மீரின் தனித்தன்மையை சீரழித்து, நசுக்குவதும் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதும் மோடி அரசின் விருப்பமான செயல்கள், அதை பெருமையாகவும் பறை சாற்ற தயங்க மாட்டார்.
ஆனால் எக்சிட் போல் முடிவுகள் அத்தகைய தருணத்தை மோடி-ஷா கும்பலுக்கு மக்கள் வழங்க மாட்டார்கள் என தெரிவிக்கிறது.
பாரதீய ஜனதா கட்சிக்கும் , மோடி ஆட்சிக்கும் ஹரியானா மக்கள் கொடுக்கப் போகும் அடியை விட ,காஷ்மீர் மக்கள் மோடி ஆட்சிக்கு வழங்கப் போகும் தீர்ப்பு பாரதூர விளைவுகளை இந்திய அரசியலில் தோற்றுவிக்கும் .
தேர்தல் முடிவுகள் மோடி அரசால் மதிக்கப்படுமா இல்லையா என்பதற்கு தெளிவான பதில் நம்மால் இப்பொழுது கூற முடியாது.
ஆனால் அப்படி ஒருவேளை மக்களின் தீர்ப்பு மதிக்கப்படாவிட்டால் அது இந்தியா கூட்டணிக்கு மட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்திற்கும் விடப்பட்ட சவாலாக அமையும்!
ச.அருணாசலம்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் பிரிவினைவாதிகள் ஆட்டம் போட்டபோது பண்டிதர்கள் விரட்டப்பட்ட போது தலித் ஆதிவாசிகள் இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட போது செக்குலரிஸ்ட்டுகள் எங்கே பதுங்கி இருந்தனர் அங்கும் ஊழல் குடும்ப மதவாத ஆட்சி தானே நடந்தது