ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை பிரதான கட்சிகள் புறக்கணித்த சூழலில் நாம் தமிழர் கட்சிக்கும், திமுகவிற்குமான நேரடி மோதல் உள்ள நிலையில் களச் சூழல் எப்படி உள்ளது..? திமுகவின் அணுகுமுறை, நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரங்கள், பணப்பட்டுவாடா, தேர்தல் ஆணைய செயல்பாடுகள், மக்களின் எதிர்பார்ப்புகள் ஒரு அலசல்;
”பிரதான கட்சிகள் இல்லாத நிலையில், திமுக தொகுதிக்கு வெளியில் இருந்து அதிக ஆட்களை தருவிக்கவில்லை. அமைச்சர்கள் பட்டாளம் களம் காணவில்லை. பரிசு பொருட்கள் விநியோகம் இது வரை நடக்கவில்லை. பட்டியில் அடைப்பதை போல மக்களை அடைக்கவில்லை. தொகுதியில் பரபரப்பான அளவில் திமுகவின் செயல்பாடுகள் இல்லை” என்பது பொதுவாக ஈரோடு மக்கள் கூற்றாக உள்ளது.
அதே சமயம் தன் பண பலத்திலும், அதிகார பலத்திலும் அழுத்தமான நம்பிக்கை வைத்து, திமுக களம் கண்டுள்ளது. எப்படிப் பார்த்தாலும் திமுக என்ற பலமான ஆளும் கட்சிக்கு முன்னால் நாம் தமிழர் கட்சியின் பலம் சிறிது என்றாலும், களத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் இல்லாத நிலையிலும், திமுகவின் தேர்தல் அணுகுமுறை மாறவில்லை.
சென்ற முறை இதே தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் ஆளும் திமுக செய்த அராஜகங்கள், அத்துமீறல்களால் ஏற்பட்ட கசப்புணர்வே முக்கிய கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பு என்ற குற்றச்சாட்டிற்கு பிறகும் திமுகவின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக களம் செல்லாமலே விடுத்த அறிக்கையில், ”பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும்.திமுக அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கழக வேட்பாளருக்கு வழங்கும் மகத்தான ஆதரவு.
2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ‘வெல்வோம் 200 – படைப்போம்’ வரலாறு என்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உடன் பிறப்புகளின் உழைப்பினால் திமுகவின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
ஈரோட்டில் உள்ள நமது நண்பர் ஒருவரிடம் பேசிய போது, ”சென்ற இடைத் தேர்தலில் மிகப் பெரிய பணப்பட்டுவாடாவை நிகழ்த்தி விட்டு, இந்த முறை திமுக கஞ்சத்தனமாக பணம் தருகிறது. இன்று எங்கள் பகுதிக்கு காலை நாலரை மணிக்கு கதவைத் தட்டி எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ஆயிரம் ரூபாய் தந்து சென்றனர். ”என்னங்க, பணம் ரொம்ப குறைவாக தருகிறீங்க..” என மக்களில் பலர் வாய்விட்டே கேட்டுள்ளனர். உண்மையில் இதில் மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்ததை பார்க்க முடிந்தது. தேர்தலில் பணம் என்பது தங்களுக்கான ‘உரிமைத் தொகையாக’ மக்கள் எண்ணத் தலைப்பட்டுவிட்டனர். அதுவும் குறிப்பாக சென்ற தேர்தலில் ஒரு ஓட்டுக்கு தலா 5,000, ‘ப்ளஸ்’ இத்தியாதிகளை பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தப் பணமும் கிடைக்காவிட்டால், மக்கள் வாக்குச் சாவடி பக்கமே கூட போகும் மன நிலையில் இல்லை. ஆக , இன்னொரு முறை பணப்பட்டுவாடா நடக்க கூடும்” என்றார்.
இந்த இடைத் தேர்தலில் சுயேட்சையாக களம் கண்டுள்ள பிரபல பத்திரிகையாளர் தமிழா, தமிழா பாண்டியனிடம் பேசிய போது, ”பெரியாரை இழிவுபடுத்திய சீமானை எதிர்க்க வேண்டும் என்பதால் மட்டுமே களம் கண்டேன். யதார்த்தத்தில் இங்கு மக்கள் பெரியாரை மறந்து விட்டனர் என்பதை உணர முடிந்தது. பெரியார் மண்ணில் பெரியாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து துண்டறிக்கை தந்த தந்தை பெரியார் திராவிடக் கழகத் தோழர்களை நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் இன்று அடித்து விரட்டியதை கண் கூடாகக் கண்டேன்.
திமுகவை பொறுத்த அளவில் அவர்கள் பணப் பட்டுவாடா ஒன்றை மட்டுமே நம்புகின்றனர். தொகுதியில் உள்ள கணிசமான மக்களை பணம் தந்து வசப்படுத்தி உள்ளனர். இது தவிர, பிரச்சாரத்திற்காக ஆங்காங்கே ஊர்வலம் என்ற பெயரில் தினசரி மாலை 4 முதல் 7 மணி வரை வருவோருக்கு தலா ரூ 300 தரப்படுகிறது. சுமார் 50 இடங்களில் நடக்கும் இந்த பிரச்சார அணிவகுப்பில் தலா ஆயிரம் பேர் வீதம் தொகுதியில் பல்வேறு இடங்களில் கலந்து கொள்கின்றனர்.
இதை ஒரு தற்காலிக வேலையாகவே பலர் பாவிக்கின்றனர். அன்னை சத்யா காலணியில் உள்ள மக்களில் சுமார் 5,000 அருந்ததி மக்கள் இதை பிரதான வருமானமாக பார்க்கின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு தலா 2,000, தாழ்த்தப்பட்டவர்கள் பகுதிக்கு தலா 1,000 எனத் தருகின்றனர். மிகப் பகிரங்கமாக நடக்கும் பணப்பட்டுவாடாக்களை தேர்தல் அலுவலர்கள் யாரும் பொருட்படுத்துவதே இல்லை.
இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,27000 . இதில் ஒவ்வொரு வாக்காளருக்கும் குறைந்தது 2,000 ஆவது தர முடிவெடுத்து பணப்பட்டுவாடா நடந்துள்ளது…
எந்த ஒரு வெகுஜன பத்திரிகையோ, காட்சி ஊடகமோ திமுகவின் இந்த அத்து மீறல் குறித்து கவனப்படுத்தவே இல்லை. திருமுருகன் காந்தியின் மே-17 இயக்கம் சார்பில் ஒருவர் நிற்கிறார். அவர்கள் பிரபாகரன் படம் போட்டு பிரச்சாரம் செய்கின்றனர். அவரோ திமுகவிற்கு பிரச்சாரம் செய்கிறார்’’ என்றார்.
நாம் தமிழர் கட்சியில் முக்கிய பேச்சாளர் கோவை கார்த்திகாவிடம் பேசிய போது, ”எங்கள் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு தொடர்ந்து நெருக்கடி தருகிறது காவல்துறை. ‘அங்கே போகதே’, ‘இங்கே போகாதே’, ‘இங்கே எதற்கு பேசுகிறாய்..?’ என ஓயாமல் இடைஞ்சல் தருகிறார்கள். தேர்தலில் போட்டியிடக் கூடிய ஒவ்வொரு வேட்பாளருக்கும், வாக்காளர்களை சந்திப்பதற்கான உரிமையும், கடமையும் உண்டு; அதே போல வேட்பாளரை மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பு வாக்காளர்களுக்கு மறுக்கபடலாகாது.
நாங்கள் சட்டப்படி கூட்டம் போட அனுமதி கேட்டால் கடைசி நேரம் வரை அமைதி காத்து கூட்டம் நடப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக இடத்தை மாற்றச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். நாங்கள் திரண்டு மறியல் செய்து போராடி தான் கூட்டம் நடத்த வேண்டி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து தமிழகம் முழுமையும் இருந்து இங்கு தினசரி 500 பேர் வருகின்றனர். ஓரிரு நாட்களோ, ஒரு வாரமோ தங்கி வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கின்றனர். எங்கள் கொள்கையையும், மக்களையும் நம்பி மட்டுமே களத்தில் செயல்படுகிறோம்.
முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி தந்ததாக சொல்கிறார். அப்படியானால் பணப்பட்டுவாடா செய்வது ஏன்? நாங்கள் தமிழர் நலன் சார்ந்து பிரச்சாரம் செய்கிறோம். தமிழகத்தின் சுற்றுச் சூழல் நாசமாவது குறித்தும், இயற்கை வளம் சூறையாடப்படுவது குறித்தும் பேசுகிறோம். ஆனால், திமுகவினர் பிரச்சாரத்தையே முற்றிலும் தவிர்த்து பணப்பட்டுவாடாவில் மட்டுமே குறியாக உள்ளனர். அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் நிற்காத காரணத்தால் அந்தக் கட்சி நிர்வாகிகளிடம் நாங்கள் ஆதரவு கேட்கவில்லை. ஆனால், திமுகவோ மாற்றுகட்சி நிர்வாகிகளுக்கும் பணம் தந்து ஓட்டு வேட்டை நடத்துகின்றனர். இது இடைத் தேர்தல் அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தோல்வியாகத் தான் உள்ளது..’’என்றார்.
திமுக வெற்றி பெறலாம். ஆனால், இது ஜனநாயகத்தின் அப்பட்டமான தோல்வி. இதற்கு தேர்தல் ஆணையத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து, அதன் நடவடிக்கைகளை முடக்கி, அமைதி காக்கும் மத்திய பாஜக அரசுக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.
சாவித்திரி கண்ணன்
ஈரோட்டில் ( கிழக்கில் ) மோகன்தாசு கரம்சந்த் வெல்வார் ( காந்தி – சாதிப்பெயர் ) ஆகவே ஈ வே ரா நாயக்கர் பிறந்த மண்ணில் சாதிப் பெயரை தவிர்க்கிறோம் .LoL
வலிமை மிக்க இந்தியாவில்!வளமான தமிழகம் படைப்போம்!
உலகம் சார்ந்து சிந்திப்போம்!உள்ளூர் சார்ந்து செயல்படுவோம்!
நேர்மையான கொள்கை பிடிப்புள்ள ஊழலற்ற அரசியல் கட்சிகளை உருவாக்க!
கொள்கையே இல்லாத அரசியல் கட்சிகளின் கூட்டணிகளை தடுக்க!
விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை காலத்தின் கட்டாயம்!
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர!…
ஒன்றிய அரசை வலியுறுத்தி!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனி நபர் மசோதா கொண்டு வர!
சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர!
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி.
கோரிக்கை!
________________________
அன்பார்ந்த வாக்காளர்களே! பொதுமக்களே! சிந்திப்பீர்!
கடந்த 2014 ம் ஆண்டு நடந்து முடிந்த 16 – வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 5 கோடியே 50 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தனர். இதில் 4 கோடியே 5 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
39 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIDMK) 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 வாக்குகளை (44.3 சதம்) பெற்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
34 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகம் (DMK) 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 வாக்குகள் பெற்று (23.6 சதம்) ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
39 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி (NCP)17 லட்சத்து 51 ஆயிரத்து 123 வாக்குகள் பெற்று (4.3 சதம்) ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
14 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (DMDK) 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 வாக்குகள் பெற்று (5.1 சதம்) ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
7 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி (BJP) 22 லட்சத்து 22 ஆயிரத்து 90 வாக்குகளை (5.5 சதம்) பெற்று ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
8 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி (PMK) 18 லட்சத்து 4 ஆயிரத்து 812 வாக்குகள் பெற்று (4.4 சதம்) ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
7 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (MDMK) 14 லட்சத்து 17 ஆயிரத்து 535 வாக்குகள் பெற்று (3.5 சதம்)ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
9 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி (CPIM)2 லட்சத்து 20 ஆயிரத்து 614 வாக்குகள் (0.5 சதம்)
பெற்றும், 8 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 2 லட்சத்து 19 ஆயிரத்து 866 வாக்குகள் (0.5 சதம்) பெற்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு 6 லட்சத்து 6 ஆயிரத்து 110 வாக்குகள் (1.5 சதம்) பெற்றும்,
புதிய தமிழகம் கட்சி(NTK)1 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து 62 ஆயிரத்து 812 வாக்கு (0.6 சதம்) பெற்றும், மனித நேய மக்கள் கட்சி (MMK) 1 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து 36 ஆயிரத்து 679 வாக்குகள் (0.6 சதம்) பெற்றும், 1 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) 2 லட்சத்து 3 ஆயிரத்து 175 வாக்குகள் (0.5 சதம்) பெற்றும், 39 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் பார்ட்டி (BSP) 1 லட்சத்து 55 ஆயிரத்து 964 வாக்குகள் (0.4 சதம்) பெற்றும் தோல்வியை தழுவியுள்ளது.
இதில் ஆம் ஆத்மி கட்சி(AAP), இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (UCPI) உட்பட 626 சுயேச்சைகளுக்கு 8 லட்சத்து 66 ஆயிரத்து 550 வாக்குகளும் கிடைத்துள்ளன.
23.6 சதவீதம் வாக்குகள் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம்(DMK), 5.1 சதவீதம் வாக்குகள் பெற்ற தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்(DMDK), 4.3 சதவீதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி,(NCP) 3.5 சதவீதம் வாக்குகள் பெற்ற(MDMK) ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை எனில், இந்தக் கட்சிகளுக்கு வாக்களித்த 1 கோடியே 48 லட்சத்து 23 ஆயிரத்து 900 – ம் வாக்காளர்களின் வாக்குகள் மதிப்பிழந்து செல்லாத வாக்குகள் கணக்கில் சேருகின்றன.
இது என்ன தேர்தல் ஜனநாயகம் இது ஜனநாயகத்திற்கு விரோதமானது அல்லவா? ….
வாக்காளர்கள் கட்சிகளுக்காக அளிக்கும் ஒவ்வொரு வாக்கிற்கும் மதிப்பளிக்கப்பட வேண்டுமெனில், தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி, கட்சிகள் பெறும் வாக்குகளின் விகித அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நம் நாட்டிற்கு ஏற்றவாறு கொண்டு வருவதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் கடந்த 2014 – ம் ஆண்டு நடந்து முடிந்த 16 – வது நாடாளுமன்ற தேர்தலில் 4 கோடியே 5 ஆயிரம் வாக்குகள் கட்சிகளுக்கு பதிவாகியுள்ளது.
பதிவான மொத்த வாக்குகளையும், மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விகிதாச்சாரப்படி கட்சிகள் தேர்வு செய்யப்பட வேண்டுமெனில், பதிவான மொத்த வாக்குகளை (40000005÷39 = 10,25,769) ஆல் வகுத்து வரும் ஈவு வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் 1 நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய 10 லட்சத்து 25 ஆயிரத்து 769 வாக்குகளை பெற வேண்டும்.
அண்ணா திமுக (AIDMK) 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 வாக்குகளை பெற்றுள்ளதால் அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 5,45,095 வாக்குகள் மீதமுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம்(DMK) 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்தக் கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 9 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதுபோக 3,43,929 வாக்குகள் மீதமுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்(DMDK) 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 27,854 வாக்குகள் மீதமுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி(BJP) 22 லட்சத்து 22 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 1,70,552 வாக்குகள் மீதமுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி(PMK) 18 லட்சத்து 4 ஆயிரத்து 812 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 1 நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து கொள்ளலாம். அதுபோக 7,79,043 வாக்குகள் மீதமுள்ளது.
காங்கிரஸ் கட்சி (NCP)17 லட்சத்து 51 ஆயிரத்து 123 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 1 நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 7,25,354 வாக்குகள் மீதமுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(MDMK) 14 லட்சத்து 17 ஆயிரத்து 535 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 1 நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 3,91,766 வாக்குகள் மீதமுள்ளது.
கட்சிகள் பெற்ற வாக்குகள் விகிதப்படி அதிமுக(AIADMK )17 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், திமுக(DMK) 9 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தேமுதிக(DMDK) 2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ,பாரதிய ஜனதா கட்சி(BJP)2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பாட்டாளி மக்கள் கட்சி(PMK)1 நாடாளுமன்ற உறுப்பினரையும், காங்கிரஸ் கட்சி(NCP)1 நாடாளுமன்ற உறுப்பினரையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்(MDMK) 1 நாடாளுமன்ற உறுப்பினரையும் ஆக மொத்தம் 33 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
மீதமுள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்வது என்ற கேள்வி எழுமானால்?….
கட்சிகள் பெற்றுள்ள மீதமுள்ள வாக்குகளின் வரிசை அடிப்படையில் அந்தந்த கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
உதாரணமாக மீதமுள்ள வாக்குகள் வரிசைப்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு(PMK)7,79,043 – ம், காங்கிரஸ் கட்சிக்கு (NCP) 7,25,354 – ம், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு(VCK) 6,06,110 – ம், அஇஅதிமுக வுக்கு (AIADMK) 5,45,095 – ம்,(MDMK) வுக்கு 3,91,766 – ம், புதிய தமிழகம் கட்சிக்கு (NTK) 2,62,812 – ம் வாக்குகள் வரிசைப்படி இருப்பதால், அந்தக் கட்சிகள் தலா 1 நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கலாம்.
அல்லது தமிழ்நாடு முழுவதும் கட்சிகள் பெற்றுள்ள வரிசைப் படியான மீதமுள்ள வாக்குகளை காட்டிலும் சுயேச்சை வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்றிருந்தால், அந்த சுயேச்சை வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கலாம்.
அதற்கும் கீழாக வாக்குகள் பெற்ற கட்சிகள் அல்லது சுயேச்சைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யும் தகுதியை இழந்தவர்களாக அறிவிக்கலாம்.
இது போன்று
விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நம் நாட்டிற்கு ஏற்றவாறு கொண்டு வந்து, கட்சிகள் பெறும் வாக்குகளின் விகித அடிப்படையில் நாடு முழுவதும் மாநில வாரியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யப்படுமாயின் …….
1. இந்தியா முழுவதும் மாநிலங்கள் தோறும், ஒரே மாதிரியான வாக்குச்சீட்டுகளில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்களையும், சுயேட்சை வேட்பாளர்களின் பெயர்களையும் அதற்கு நேராக சின்னங்களையும் அகர வரிசையில் பொருத்தி (அச்சடித்து) வாக்குச்சாவடிகள் தோறும் வாக்களிக்கச் செய்யலாம்.
2. தற்போதுள்ள தேர்தல் முறையைப் போன்று நாடாளுமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் வைப்பு தொகை (டெபாசிட்) செலுத்தி வேட்பு மனு தாக்கல் செய்து கோடிக்கணக்கில் செலவிட வேண்டிய அவசியம் இருக்காது.
3. தற்போதுள்ள தேர்தல் முறையை போன்று சாதி,மதம், இனம், மொழி, பிராந்தியம் போன்ற உணர்வுகளை வாக்காளர்கள் மத்தியில் தூண்டிவிட்டு வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறை தடுக்கப்படும்.
4. தற்போதுள்ள தேர்தல் முறையை போன்று தனி மனிதர்களை துதி பாடுவதோ, தனிமனித விமர்சனங்களோ இல்லாமல் அரசியல் கட்சிகள் தங்களது கட்சிகளின் கொள்கைகளை வாக்காளர்களிடம் எடுத்துக் கூறி வாக்குகள் பெறவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
5. தற்போதுள்ள தேர்தல் முறையை போன்று கொள்கையற்ற கூட்டணிகள் உருவாவது தடுக்கப்படும். அரசியல் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
6. ஒரு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தவறு செய்தாலோ, கட்சி மாறினாலோ அவரது பதவியை அந்த கட்சியால் பறிக்கப்பட்டு வேறு நபருக்கு வழங்கலாம்.
7. ஒரு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தாலோ, இறந்து போனாலோ இடைத் தேர்தல்கள் நடத்த வேண்டிய தேவை இருக்காது அந்தக் கட்சியை சேர்ந்த வேறு ஒரு தகுதி வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை அந்த கட்சிகள் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம்.
8. தற்போதுள்ள தேர்தல் போன்று வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதற்கு அவசியம் இல்லாமல் போகும்.
9. வாக்களித்த வாக்காளர்களுக்கு கட்சிகள் பொறுப்பேற்பதும், கட்சிகளின் நேர்மையான செயல்பாட்டிற்கும், ஊழலற்ற தன்மைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்பதும் படிப்படியாக கட்டாயமாகிவிடும்.
10. நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்கு அரசியல் கட்சிகள் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுத்து மக்களிடம் தங்களது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள ஆக்கப்பூர்வமான போட்டிகள் உருவாகும்.
11. கோடீஸ்வரர்கள் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் என்ற நிலை மாறி மக்களுக்கு சேவை செய்யும் மனோபாவம் கொண்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யலாம்.
12. நேர்மையான கொள்கை பிடிப்புள்ள ஊழலற்ற அரசியல் கட்சிகளை படிப்படியாக உருவாக்க முடியும்.
13. தற்போதுள்ள தேர்தல் முறையில் வெற்றி பெறும்,
வேட்பாளர்கள் பெறும் வாக்குகளை காட்டிலும், தோல்வியுறும் வேட்பாளர்கள் பெறுகின்ற வாக்குகளே அதிகம். அந்த வாக்குகள் அனைத்தும் செல்லாத வாக்குகள் கணக்கில் சேருவதை தடுக்கலாம்.
14. வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குக்கும் மதிப்பளிக்கும் நிலை உருவாக்க முடியும்.
15. அரசியலில் ரவுடிகளும், சமூக விரோதிகளும், கோடீஸ்வரர்களும்
நுழைந்து, உட்கட்சி ஜனநாயகத்தை சீர்குலைப்பது தடுக்கப்பட்டு, நேர்மையான சிந்தனையாளர்கள் அரசியலில் சேவை செய்ய வாய்ப்பு ஏற்படும். அரசியல் வியாபாரமோ குதிரை பேரமோ அல்ல. அது சேவை என்பது படிப்படியாக நிலைநாட்ட முடியும்.
16. தற்போதுள்ள தேர்தல் முறையால், அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் செலவுகளுக்கு, முதலாளிகளிடமும் பணக்காரர்களிடமும் கோடிக்கணக்கில் பணமும்,தேர்தல் பத்திரங்களும் பெற்று தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும் ஆட்சி அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் ஊழல் செய்வதும் சொத்து சேர்ப்பதும் தடுக்கப்படும். அதனையும் மீறி ஊழல் செய்யும் அரசியல் கட்சிகள், மக்களிடம் படிப்படியாக தனது செல்வாக்கினை இழந்து தேர்தலில் தோற்கடிக்கப்படும்.
17. தற்போதுள்ள தேர்தல் முறையால் அரசியல் கட்சிகள் சாதி, மத ரீதியாக வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடச் செய்வது தடுக்கப்படும்.
18. தற்போதுள்ள தேர்தல் தேர்தல் முறையை காட்டிலும், தேர்தல் ஜனநாயகத்தை மேலும் சீரழிக்கின்ற ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் இல்லாமல் போகும்.
18.. தேர்தல் செலவுகள் முழுவதையும் அரசே ஏற்று நடத்த முடியும்.
தற்போதுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து, மாநில வாரியாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் பெறும் மொத்த வாக்குகளை சட்டமன்ற; நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து வரும் ஈவு வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில், கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் பெறும் வாக்குகள் விகிதப்படி, சட்டமன்ற; நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் விதமாக விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்டு வர ….
நேர்மையான,கொள்
கை பிடிப்புள்ள, ஊழலற்ற அரசியல் கட்சிகளை உருவாக்கிட ….
தற்போதுள்ள ஜனநாயக மற்ற தேர்தல் முறையை அகற்றிட….
ஜனநாயக முறையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நிலை நாட்டிட ….
மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு பலம் பெற்றிட …..
வலிமை மிக்க இந்தியாவில் வளமான மாநிலங்களை உருவாக்கிட ….
ஒன்றிய அரசை வலியுறுத்தி !
பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிநபர் மசோதாவை கொண்டு வரவும்…
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பவும்…..
தேர்தல் ஜனநாயக த்தை பாதுக்கவும்….
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (யுசிபிஐ) மக்களோடு பங்கேற்று தொடர் போராட்டங்களை நடத்துவோம்.
வெளியீடு.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி.
தமிழ்நாடு.
UNITED COMMUNIST PARTY OF INDIA.(UCPI)
TAMIL NADU.
பதிவு: எஸ்.சுந்தரம்.
மொபைல் எண்: 9443619565.
இந்த நாட்டுல தேர்தல் அரசியல் , ஓட்டு அரசியல் தோற்று போனது என்பதை இன்றைய காட்சிகள் உணர்த்துகிறது. சாதாரண மக்களுக்கு எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லை. எல்லா கட்சிகளும் ஊழலில் ஊறி பெருத்து கொழுத்து போனது.
அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது
கம்யூனிசம் வேறு கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் வேறு என்பது போல் அரசியல் பாதை போய்க்கொண்டிருக்கிற நிலையில் கம்யூனிஸ்டுகள் கருத்துச் சொல்வதற்கு தகுதி இருக்கிறதா?