நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா? நம்மை ஆட்சி செய்பவர்கள் நாம் ஓட்டு போட்டு அனுப்பியவர்கள் தானா…? அல்லது வானத்தில் இருந்து குதித்த அவதார புருஷர்களா? கிட்டத்தட்ட 600 நாட்களாக ”நாங்கள் வாழும் நிலத்தை அபகரிக்காதீர்கள்” எனப் போராடும் விவசாயிகள் பல முறை முயற்சித்தும் முதல்வரை பார்க்க முடியவில்லை..
உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கவன ஈர்ப்பு பேரணி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை துறக்கும் போராட்டம்.. ஆகிய பலகட்ட போராட்டங்களை நடத்திய மேல்மா விவசாயிகள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவி, ஏகப்பட்ட வழக்குகள், குண்டர் சட்டம், சிறை அடைப்புகள்..என சித்திரவதை செய்யும் அமைச்சர் எ.வ.வேலுவின் நோக்கம் என்ன..?
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செழித்தோங்கியுள்ள விவசாய நிலங்களை கொண்டது தான் மேல்மா. இந்த மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு சிப்காட் தொழிற் கேந்திரங்கள் உள்ளன. அதிலேயே சுமார் 1200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பயன்படாமல் வறண்டு கிடக்கும் நிலையில் அதிரடியாக 3,174 ஏக்கர் விளைநிலத்தை சிப்காட்டிற்கு கையகப்படுத்தப் போவதாக தமிழ் நாடரசு அறிவித்ததும் அந்தப் பகுதி விவசாயிகள் அதிர்ந்து போனார்கள்!
தமிழகத்தில் விவசாயம் வீஇழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் பசுமை சூழ் விளை நிலத்தை விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்து சிப்காட் அமைக்கும் திட்டத்தை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ஏற்க மறுக்கிறார்கள்! தாங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் – பல தலைமுறைகளாக தங்களுக்கு உணவளித்து வரும் – பாரம்பரிய நிலத்தை இழக்க மறுக்கிறார்கள்!
அவர்கள் வைக்கும் கோரிக்கை எல்லாம், ‘எங்களை வாழ்விடுங்கள்! உங்கள் பணம் வேண்டாம். எந்தச் சலுகைகளும் வேண்டாம், இந்த நிலத்தில் வாழும் எங்கள் உரிமை பறி போகாமல் எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்பது தான்! இந்த அறிவிப்பு வந்தது தொடங்கி ஒன்றல்ல, இரண்டல்ல தொடர்ந்து 600 நாட்கள் போரடி வருகிறார்கள் என்றால், அவர்களின் அழுகைக்கு, கதறல்களுக்கு, கவலைகளுக்கு சற்றேனும் மதிப்பு தருவது தானே மக்கள் ஆட்சியாக இருக்க முடியும்.
ஏன் உள்ளூர் எம்.எல்.ஏ ஜோதியோ, அந்த தொகுதி எம்.பியான தரணியோ, அந்த மாவாட்ட அமைச்சர் எ.வ.வேலுவோ அந்த விவசாயிகளை நேரில் சென்று பார்த்தால் குறைந்து போய் விடுவார்களா? ”நீங்கள் வரவில்லை, எனவே உங்களை தேடி வருகிறோம்” என வந்தவர்களைக் கூட பல நாட்கள் சந்திக்க மறுத்து, அலைக்கழித்து கடைசியாக அவமானப்படுத்தி அனுப்பினீர்கள் என்றால்.. இந்த அதிகார தோரணைகளையும்., ஆணவப் போக்கையும் எவ்வாறு புரிந்து கொள்வது..?
சரி, ‘முதலமைச்சரை சந்தித்து முறையிடலாம்’ என சென்னை வந்து காத்திருந்து காவல்துறையால் நைச்சியமாக அப்புறப்படுத்தினார்களே ஒழிய முதலமைச்சரின் தரிசனமும், கரிசனமும் அவர்களுக்கு கிடைக்கவேயில்லையே!
இந்தியாவிலேயே விளைநிலத்தை காக்கப் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தமிழ்நாட்டில் தான்! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னணியில் நின்ற 7 விவசாயிகள் மீது வழக்கு குண்டர் சட்டம் பாய்ந்ததோடு, அவர்கள் தமிழகத்தின் வேவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட அவலங்களும் அரங்கேறின!
அது வரை இந்த மேல்மா விவசாயிகள் போராட்டத்தில் அலட்சியம் காட்டிய அரசியல் கட்சிகளும், விவசாய இயக்கங்களும் ஒட்டுமொத்தமாக களத்தில் குதித்தன. அப்போதும் தமிழக அரசு அசைந்து கொடுக்கவில்லை.
”நிலமற்றவர்கள் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை” என சட்டசபையில் அப்பட்டமாக பொய் பேசினார் எ.வ.வேலு!

இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து வழி நடத்துபவர் படித்த விபரமான விவசாயி அருள் ஆறுமுகம். இவர் ஐ.டி படித்து வெளி நாட்டில் மிகப் பெரிய சம்பளத்தில் பணியில் இருந்தவர். எட்டு வழிச் சாலைக்கு விவசாய நிலங்கள் விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட போது களத்தில் தங்கள் ஊர் விவசாயிகள் போரடுவதைக் கண்டு வேலையைத் துறந்து தமிழகம் வந்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியவர். அன்றைக்கு பாஜகவின் அடிமையாக இங்கு செயல்பட்ட அதிமுக அட்சி மாறினால், தமிழகத்தில் மாற்றம் வரும் என நம்பி 2021 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பாடுப்பட்ட எந்தக் கட்சியையும் சாராத விவசாயி தான் அருள் ஆறுமுகம். ”இவர் கிருஷ்ணகிரியில் இருந்து ஏன் திருவண்ணாமலை வந்து போராடுகிறார்” என எ.வ.வேலு அடிக்கடி விமர்சிக்கிறார்? வெளி மாவட்ட ஆளுக்கு இங்கு வேலை என்ன? என்கிறார், எ.வ.வேலு.
காந்தி தென் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய காலகட்டத்தில் அவரை அன்று பாமர இந்திய மக்களுக்கு தெரியாது. ஆனால், அப்போது இமயமலை அடிவாரத்தில் நேப்பாளம் அருகே இருந்த சம்ரண் என்ற மாவட்டத்தில் அவுரி விவசாயிகளை பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவான எஸ்டேட் எஜமானர்கள் சுரண்டி கொழுத்து வறுமையில் தள்ளினர். இங்கு தான் காந்தியின் முதல் போராட்டமே துவங்கியது. அப்போது அந்த எஸ்டேட் ஓனர்கள் எல்லாம், ”நீ குஜராத்திக்காரன். உனக்கு இங்கு கேள்வி கேட்க உரிமை இல்லை” என்றனர். ஆனால், காந்தி பின்வாங்காமல் அங்கேயே ஓராண்டுகள் தங்கி அவர்களின் உரிமைகளை பெற்றுத் தந்தே திரும்பினார்.
எ.வ.வேலுவின் சொத்துக்கள் பற்றிய பட்டியலை வாசித்தாலே தலை சுற்றுகிறது. அவ்வளவு சொத்துக்களை சேர்த்துள்ளார். அருணை மருத்துவமனை கூவலூர், அருணை அறிவியல் கல்லூரி, அருணை மருத்துவ கல்லூரி, கம்பன் ஐடிஐ, அருணை மருத்துவமனை காந்திநகர், கம்பன் மருத்துவமனை, குமரன் அறிவியல் கலைக்கல்லூரி, குமரன் ஐடிஐ, குமரன் பாலிடெக்னிக், ஜீவா.வேலு இண்டர்நேசனல் ஸ்கூல், கரண் அறிவியல் கல்லூரி, கம்பன் மகளிர் கல்லூரி, அருணை மெட்ரிகுலேசன் ஸ்கூல், இப்படியாக எட்டு கல்வி நிறுவனங்கள், அருணை கிரானைட்ஸ், அருணை வாட்டர் பிளாண்ட்.. கரூரில் ரூ.500 கோடியில் பைனான்ஸ், ஸ்பின்னிங் மில், தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், திரைப்பட பைனான்ஸ் மற்றும் விநியோகிஸ்தர் தொழில் என பரந்து விரிந்துள்ள சாம்ராஜ்யத்தின் அதிபதி தான் அமைச்சர் எ.வ.வேலு! இவர் திருவண்ணாமலை மாவட்டத்தின் குறுநில மன்னராக வளம் வருகிறார்.

அமைச்சர் எ.வ.வேலு என்ற மல்டி மில்லினர், மாபெரும் கோடீஸ்வரர், பல நூறு ஏக்கர் நிலங்களை வளைத்து போட்டு கல்லூரிகள், உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து என வாழ்பவர். ‘இந்த அப்பாவி சிறு விவசாயிகள் ஏதோ வாழ்ந்துவிட்டு போகட்டுமே..’என பெருந் தன்மை காட்டலாமே!
இவருடைய இடங்களில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினரே இவரது சொத்து மதிப்புகளையும், கட்டுக்கட்டாய் குவித்து வைத்திருந்த பணக்கட்டுகளையும் கண்டு அரண்டு போயினர். உடனே டெல்லி தலைமைக்கு கப்பம் கட்டி இதற்கு மேல் தன் மீது நடவடிக்கை பாயாமல் காத்துக் கொண்டார் எ.வ.வேலு! ஆனால், இந்த ஆட்சி முடிந்த பிறகு பாஜக ஆட்சியாளர்கள் இவரை சும்மா விடுவார்களா என்பது சந்தேகமே!
ஏற்கனவே இயங்கும் சிப்காட்களில் பயன்படுத்தப்படாத நிலங்களை முதலில் பயன்படுத்திய பிறகு, தேவைப்படுமானால், மாவட்டத்தில் எந்தெந்த இடங்கள் தரிசாக உள்ளன என்பதை ஜியோ மேப் மூலமாக சுலபத்தில் கண்டறியலாமே! அதற்கெல்லாம் அந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தாமல், இருக்கின்ற பசுமை வயல்களை ”தரிசு நிலம் தான், நான் ஜியோ மேப்பில் பார்த்தேன்..” என அண்டப் புளுகை அள்ளி விடுகிறீர்களே..! உங்களால் நேரடியாக அந்த இடம் சென்று பார்க்கக் கூட தைரியம் இல்லை தானே!
கலெக்டர் தொடங்கி காவல்துறையினர், வட்டாட்சியர், பலவேறு அரசுத் துறை அலுவலர்கள், கட்சிக்கார்கள் ஆகியோர்களைக் கொண்டு இந்த எளிய விவசாயிகளை எந்த அளவுக்கு இம்சை செய்ய வேண்டுமோ, அந்த அளவுக்கு செய்து பார்த்து விட்ட அமைச்சர் எ.வ.வேலு கடைசியாக திருட்டுத்தனமாக வருவாய்த் துறை அலுவலர்களையும் ,காவல்துறையினரையும் அனுப்பி நிலத்தை அளவீடு செய்ய அனுப்பி விவசாயிகளை ஆழம் பாத்துள்ளார். ஆயினும், விவசாயிகள் உறுதியாக களத்தில் நின்று அவர்களை திருப்பி அனுப்பி உள்ளனர்.
Also read
சொந்த மக்களை துன்பத்தில் ஆழ்த்தி யாரும் கேட்காத சிப்காட்டுக்கு அமைச்சர் இப்படித் துடிப்பானேன்..? திருவண்ணாமலை இருக்கும் சிப்காட்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட வட இந்திய இளைஞர்கள் தான் வந்து வேலை செய்து கொண்டுள்ளனர். இப்போது அமைய உள்ள சிப்காட்டிலும் அது போல வட இந்திய இளைஞர்களுக்கு தான் பெருமளவு வேலை வாய்ப்பு போகவுள்ளது. தமிழ் நாட்டு இளைஞர்களைத் தான் சாராயக் கடையே கதி என சாய்த்துவிட்டீர்களே. அது போதாது என சொந்த மண்ணின் விவசாயிகளையும் ஏன் வதைத்து வட இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கத் துடிக்கிறீர்கள்! அமித்ஷா- மோடியிடம் ஏதாவது ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த அட்டுழியத்தை நடத்துகிறார்களா..? என்றும் தெரியவில்லை.
அடக்குமுறைகளுக்கு அளவே இல்லையா? அநீதிகளுக்கு எல்லையே இல்லையா? ‘தரிசு நிலங்கள் தாரளமாக இருக்க, விளை நிலங்களைத் தான் பறிப்பேன்’ என்பது வில்லாதி வில்லத்தனம் இல்லையா? ஒரு அமைச்சரின் அதிகார ஆட்டத்தை அறிந்து கொள்ளவே மனமின்றி, மக்களை சந்திக்க மறுத்து, காதுகளை பொத்திக் கொண்டு நல்லாட்சி தருவதாக சொல்லிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் இருக்கும் வரை நமக்கு என்ன தீர்வு கிடைக்கும்..?
சாவித்திரி கண்ணன்
Leave a Reply