தமிழக நெல் கொள் முதல் நிலையங்களில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. எந்த நேரம் மழை வந்தாலும் இவை அதோ கதியாகும் அவல நிலையில் உள்ளன. ஒரு மாதமாக தொடரும் கொந்தளிப்பு சூழலும், விவசாயிகள், மற்றும் நெல் கொள்முதல் பணியாளர்களின் கதறல்களும் ஆட்சியாளர்களின் கவனத்தை எட்டவில்லையோ..!
விவசாயம் என்பது தான் இருப்பதிலேயே சவாலான தொழிலாகும். எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் பெருமழை, வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி படை எடுப்புகள் இத்தனையையும் எதிர் கொண்டு தான் விவசாயம் நடக்கின்றது. கடனை வாங்கியோ, அடகு வைத்தோ பெற்ற பணத்தைக் கொண்டு உரம், பூசி கொல்லி மருந்துகள், உழவுக்கும், அறுவடைக்குமான செலவுகள் அனைத்தையும் செய்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால், அங்கு கொள் முதல் நடக்குமா? அல்லது நாம் போட்டுள்ள முதலுக்கே மோசம் செய்யும் சோகம் அரங்கேறுமா? என்பதான தடுமாற்ற நிலை தான் தற்போதைய நிலையாக உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்க இடமின்றி சாலைகளில் மூட்டைகளை இறக்கி வைத்து விட்டு நாள் கணக்கில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.
இந்த சம்பா பருவத்திற்கு என திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமே 3.5 லட்சம் ஏக்கரில் நெல் பயிரடப்பட்டது. தற்போதைய நிலவரப்படி டெல்டா மாவட்டங்களில் 50 சதவிகித அறுவடை பணிகள் கூட முடியவில்லை. ஆனால், நெல் கொள்முதல் நிலையங்களில் மலை போல நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு வாரங்களாக நெல் கொள்முதலே ஸ்தம்பித்துள்ளன. செயல்பாட்டில் உள்ள 532 நெல் கொள் முதல் நிலையங்களில் தினசரி குறைந்தபட்சம் 15,000 நெல் மூட்டைகள் சேர்கின்றன. ஆனால், ரயில் மூலம் மட்டுமே சேமிப்பு கிடங்கிற்கு அனுப்புவது என்ற நடைமுறையில் நாளொன்றுக்கு பத்தாயிரம் நெல் மூட்டைகளே அனுப்ப முடிகின்றது. .. அதனால் தான் இந்த தேக்க நிலை என்கிறார்கள்!
”போதுமான லாரிகள் கொள்முதல் செய்த நெல்லை அனுப்பி வைக்க கிடைப்பதில்லை என கிடைப்பதில்லை” நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் வருத்தப்படுகின்றனர். ”நாங்கள் கொண்டு வந்த நெல்லை எத்தனை நாட்கள் நெல் கொள்முதல் நிலைய வாசலில் வைத்து காத்துக் கொண்டிருப்பது வெயில் மழை,பனி ஆகியவற்றால் ஏற்படும் எடை இழப்பு பாதிப்புகளை அரசு உணர வேண்டாமா?” என விவசாயிகள் புலம்புகிறார்கள்!
ஒட்டு மொத்த டெல்டாவையும் கணக்கில் கொண்டால், தற்போது 30 லட்சம் நெல் மூட்டைகள் குவிந்துள்ளன. இந்தச் சூழலில், ’நெல் மூட்டைகளை இட மாற்றம் செய்வதில் ஏற்படும் கால தாமதத்துக்கும், எடை இழப்புக்கும் நெல் கொள் முதல் பணியாளர்கள் தான் பொறுப்பு’ என அதிகாரிகள் தெரிவித்தைத் தொடர்ந்து நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
காரணம் என்ன?
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கையாள்வதில் ஏற்படும் கூடுதல் சிரமங்களை சமாளிக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் திறந்தவெளி சோமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது இந்த திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் செயல்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. இதனால், தற்போது கொள் முதல் நிலையங்களிலேயே நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை திறந்த வெளி சேமிப்பு கிடங்குக்கு லாரிகளில் ஏற்றிச் சென்று அடுக்குவதும், மீண்டும் சேமிப்பு கிடங்கிலிருந்து சரக்கு ரயிலுக்கு ஏற்றிச் செல்வதற்கும் இரண்டு லாரி வாடகைகள் தர வேண்டியுள்ளது என்ற அற்ப காரணத்திற்காக, திமுக அரசு, ”கொள் முதல் செய்யப்படுகின்ற நெல் நேரடியாக அரவைக்கு அனுப்பப்படும்” எனக் கூறி, சரக்கு ரயில்களுக்கு நேரடியாக ஏற்றிச் செல்லும் நடைமுறையை கடைப்பிடிப்பது தான் பிரச்சினையே!
திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கிற்கு ஆகும் செலவையும், லாரி வாடகையையும் மிச்சப்படுத்த நினைத்து, பாதுகாப்பின்றி சுமார் 30 லட்சம் மூட்டைகளை அலட்சியப்படுத்தினால், ஒரு திடீர் மழை அனைத்தையும் ஒரே நாள் இரவில் பழாக்கி விடும். அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் பசித்த வயிற்றுக்கும் போய்ச் சேராது. முதலீடு போட்டு, கடும் உழைப்பையும் தந்து நெல்லை உற்பத்தி செய்த விவசாயிக்கு அது சொல்லொண்ணா துயரத்தையே பரிசளிக்கும்.
எவ்வளவோ ஆடம்பரச் செலவுகள் அரங்கேறி வருகின்ற சூழலில், மிக அத்தியாவசியமான உணவு பொருள்களை பாதுகாக்கும் விடயத்தில் திறந்த வெளி சேமிப்பு குடோன்களைக் கூட மூடுவதும், ’லாரி வாடகையை மிச்சப்படுத்துகிறேன்’ என்பதற்காக விலை மதிப்பில்லாத உணவுப் பொருள்களை அலட்சியமாக அழிவுக்கு தாரை வார்ப்பதும் ஒருபோதும் ஏற்புடையதல்ல.
நியாயப்படி ஒவ்வொரு சம்பா மற்றும் குறுவைக்கும் லட்சக்கணக்கில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதால், திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளை விட, நிரந்தரமான – பாதுகாப்பான – நெல் சேமிப்பு கிடங்குகளை கட்ட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் குளறுபடிகளால் பல்லாயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் சேதாரமாகின்றன. இப்படி ஒவ்வொரு ஆண்டும் சேதாரமாகும் நெல் மணிகளை காப்பாற்ற முடிந்திருந்தால், தமிழகம் இந்தியாவிலேயே பசிப்பிணி ஒழித்த நாடாகி இருக்கும். உற்பத்தியான உணவு உயிர்களுக்கு பயனின்றி ஆண்டுதோறும் அழிந்து கொண்டிருப்பதற்கு நிரந்தரமாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இது அத்தியாவசியத் தேவையாகும். இதற்கு ஆகும் செலவு மிகவும் நியாயமானதாகும்.
Also read
தற்போது 50 சதவிகித அறுவடையே முடியாத நிலையில், இந்த அவலச் சூழல் என்றால், இன்னும் சில தினங்களில் அறுவடையாகி வரக் கூடிய நெல்மணிகளின் நிலை என்னவாகும் என்பதை நினைத்தாலே நடுங்குகிறது. ஒரு போர்க்கால நடவடிக்கை போல, தேங்கி நிற்கும் நெல்மணிகள் அனைத்தையும் சேதாரம் இல்லாமல் காப்பாற்றுவதில் தான் இந்த அரசு மக்கள் நலன் பேணும் அரசா? இல்லையா? என்பது உறுதிப்படும்.
– சாவித்திரி கண்ணன்
Leave a Reply