ஆளுநர் vs தமிழக அரசு – ஊசலாட்டத்தில் உயர் கல்வி!

--பேராசிரியர் கி கதிரவன்

தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக முயற்சித்து வரும் தமிழக கல்வியாளர்களுக்காக இந்த கட்டுரையை சமர்ப்பிக்கின்றோம்.

கடந்த ஐந்து வருடங்களாக தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்வியாளர்கள் எதிர்த்து வருகின்றோம். தேசிய கல்விக் கொள்கை அதன் செயல்பாடுகளும் திட்டங்களும் தெளிவாக அரசின் அறிவிப்புகளாக வெளிவந்துவிட்டன. ஆகையால் ஒவ்வொரு கல்வியாளரும் அதனைப் புரிந்து அதனை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? அதனால் ஏற்படும் பாதகங்கள் என்ன என்பது பற்றித் புரிந்துள்ளோம் .

கடந்த சில வருடங்களாக அரசின் தவறான கொள்கை முடிவினால் பல்கலைக்கழகங்கள் சீரழிந்து வருகின்றது. மாநில பல்கலைக்கழகங்கள் இன்று தனியார் பல்கலைக்கழகங்களைப்போல் மாறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் நமது கல்வியாளர்களிடையே எழவில்லை, ஏனென்றால் சீரழிவுக்கானத் தகவல்கள் தரவுகள் பொதுவெளியில் இல்லை. இதனைத் தெரிந்து புரிந்து வைத்துள்ள கல்வியாளர்களும் அதனைப் பொதுவெளியில் பதிவிடுவது இல்லை. தமிழகத்தில் உயர்கல்வித்துறை சீரும் சிறப்புமாக கல்வியை அடுத்த தலைமுறைக்கு அரசு எடுத்து செல்வதாக எண்ணி நாம் இன்றளவும் தேசிய கல்விக் கொள்கையை மட்டும் எதிர்த்து வருகின்றோம்.

உண்மை நிலைமை என்னவென்றால் தமிழக உயர்கல்வித்துறைப் குறிப்பாக பல்கலைக்கழகங்கள் படுபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. போதிய நிதியை அரசு அளித்தாலும் இதனை சீர்படுத்துவதற்கு குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகள் தேவைப்படும் என்ற அவலகரமான நிலையில் உயர்கல்வித்துறை உள்ளது என்பதைக் கல்வியாளர்களுக்கு உணர்த்த விரும்புகின்றோம்.

முறையாக செயல்படாத துணைவேந்தர் கூட்டுநர் குழு

தமிழக அரசிற்கும்ஆளுநருக்கும் இடையில் நடைபெறும் துணைவேந்தர் நியமனங்கள் குறித்த சர்ச்சையினால் தமிழகத்தில் உள்ள  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவியானது நீண்ட நாட்களாக காலியாக உள்ளது, இதன் காரணமாகப் பல்கலைக்கழகங்களின் அன்றாட அலுவல்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் மிகுந்த பலனை அடைந்திருப்பது தமிழக அரசு ஆகும். துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் அனைத்திலும் அரசின் செயலாளர்கள் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் துணைவேந்தர் கூட்டுநர் குழுவில் அங்கம் வகித்து தன்னாட்சி மிக்க பல்கலைக்கழகத்தை அரசின் மற்ற துறைகளைப்போல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதனை நிர்வகித்து வருகின்றனர்.

தாங்கள் நினைத்ததை சர்வாதிகாரத்துடன் இன்றுவரை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் செயல்படுத்தி வருகின்றனர்.  பல்கலைக்கழகங்களில் ஜனநாயக முறையில் மாதம் தோறும் நடைபெறும் சிண்டிகேட் கூட்டங்களை கூட முறையாக நடைமுறைப்படுத்துவதில்லை, இதனால் பல்கலைகழகத்தின் கல்வி சார்ந்து எடுக்கும் கொள்கை முடிவுகள் மற்றும் மாணவர்களுக்கான இன்றியமையாத அன்றாடப் பணிகள், பாதிக்கப்படுகின்றன.

துணைவேந்தர் கூட்டுநர் குழு

துணைவேந்தர் பொறுப்புகளை நிர்வகிப்பதற்காக மூன்றுபேர் அல்லது நான்குபேர்

துணைவேந்தர் பொறுப்புகளை நிர்வகிப்பதற்காக குழு உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறையின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஒரு மூத்த உறுப்பினர் இக்குழுவின் உறுப்பினராக உள்ளனர். பல்கலைக்கழகத்தின் அன்றாட அலுவல் பணிகளை மேற்பார்வை இடுவதும் மற்றும் அன்றாடப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதும் இக்குழுவின் செயல்பாடுகளாகும்.

இக்குழுவில் செயல்படும் அரசின் மூத்த செயலாளர்களுக்கு பல்கலைக்கழக அலுவல் பணி மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் இவர்கள் மேற்பார்வையிட வேண்டும். ஆகையால் அரசின் செயலாளர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அலுவல் பணிகளை மேற்கொள்ள வருவதில்லை, இதற்கு பதிலாக ஒவ்வொரு பல்கலைக்கழகமும்  அரசின் செயலாளரிடம் ஒப்புதல் பெறுவதற்காக தினம்தோறும் தலைமைச் செயலகத்திற்கு சென்று அங்கு செயலாளரை சந்தித்து அவர்களின் அரசுசார்ந்த அன்றாட பணிகளை முடித்த பின்னரே கோப்புகளில் ஒப்புதல் பெற்று வருகின்றனர். இதனால் பெரும்பாலானப் பல்கலைக்கழக அன்றாட பணிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன, உதாரணமாக ஒரு ஆராய்ச்சி மாணவருக்கு வாய்மொழி தேர்விற்காகத் தேர்வர்களை தேர்வு செய்வதற்கு துணைவேந்தர் இருந்தால்2 நாட்கள் ஆகும, ஆனால் அரசின் செயலாளர்கள் பார்வையிடுவதற்கு  கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை காலஅவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகின்றன, அதிலும் சில செயலாளர்கள் ஏதாவது அதில் குறிப்போ அல்லது அவர்களுக்கான சந்தேகங்கள் ஏற்பட்டாலோ அதற்கேற்றபடி சில நாட்கள் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளப்படும். இரண்டு நாட்களில் முடிய வேண்டிய கோப்புகள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக எடுத்துக் கொள்ளப்பட்டு தேவையற்ற கால நேரம் வீணாகின்றது. இதன் காரணமாக பல்கலைக்கழகத்தின் அன்றாடப் பணிகள் மற்றும் மாணவர்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன.

காலதாமதமாகும் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்  

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கௌரவ விரிவுரையாளர்கள் வருடத்திற்கு 11 மாதங்கள்  நியமிக்கப்படுகின்றனர்.  வருடம் தோறும் விளம்பரம் அறிவிப்பு வெளியிட்டு  ஜூலை இரண்டாம் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு  துணைவேந்தர் குழுவிடம் ஒப்புதல் பெறுவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகின்றன. அதாவது செப்டம்பர் மாதத்தில்தான் நியமிக்கப்படுவதற்கான ஒப்புதல் வழங்கப்படுகின்றது, ஆக மூன்று மாதங்களில் மாணவர்களுக்கு அந்த குறிப்பிட்டப் பாடத்தை நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாததால் அடுத்த இரண்டு மாதத்திற்குள் பாடத்தினை முடிக்க வேண்டிய சூழ்நிலை கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏற்படுகின்றது.

அதுபோல் நான்கு மாதத்தில் படிக்க வேண்டிய பாடத்தினை இரண்டு மாதத்தில் படித்துத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது போன்ற கால விரயங்களும் மாணவர்களுக்கு இன்னல்களும் தொடர்ந்து ஏற்படுவதற்கு காரணம் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததாகும்.  துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் பொறுப்பு துணைவேந்தர் குழுவிடமும் சென்று ஒப்புதல் பெறுவதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக கால அளவு தேவைப்படுகின்றது. ஆகவே இதற்கு முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டியது துணைவேந்தர் பணியை நிர்வகிக்கும் குழுவை சார்ந்ததே ஆகும்.

பல்கலைக்கழகத்தின் சொத்துக்களை அபகரித்தல்

தமிழ்நாட்டின் பிற பல்கலைக் கழகங்களின் தாய் சென்னைப் பல்கலைக் கழகம் துணைவேந்தர் இல்லாமலும் நிர்வாகச் சிக்கல்களாலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதுடன், கடும் நிதிநெருக்கடியையும் சந்தித்து வருகிறது.

அண்மையில் சமூக நலத்துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசிய முதலமைச்சர் நகர்ப்புறங்களில் பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கு தோழி மகளிர் விடுதிகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்தார். பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவிகள் தங்கிப் படித்து வரும் விடுதியை இடித்து தள்ளி விட்டு அந்த இடத்தில் தோழி மகளிர் விடுதியை கட்ட ஒப்பந்தப் புள்ளி கோரி இருப்பது வெந்த புண்ணில் வேலைச்சொருகும் விபரீத முடிவாகும்.

பழமை வாய்ந்த  மாணவியர் விடுதியை இடித்துவிட்டுப் புதிதாக மாணவியர் விடுதிகள் கட்டித் தரப்பட வேண்டும் என்பது பல்கலைக்கழகத்தின் கோரிக்கையாகும், ஆனால் பல்கலைக்கழகத்தின் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு அதே இடத்தில் பணிபுரியும் மகளிருக்கான விடுதியை கட்டித்தர சமூக நலத்துறை ஒப்பந்த புள்ளி கோரி விளம்பரப்படுத்தியுள்ளது.

அரசின் செயலாளர் பல்கலைக்கழகத்துடன் எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளாமல் சென்னை பல்கலைக்கழகத்திற்கான இடத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.  அரசு பல்கலைக்கழகத்தின் நிலத்தை எடுத்துக் கொள்ளும் போது  ஒன்று அதற்கான சந்தை மதிப்பீட்டை வழங்க வேண்டும் அல்லது அதே இடத்தில் மாணவியர்களுக்கு விடுதி கட்டிவிட்டு மகளிர் விடுதி கட்டுவதற்கான இடத்தின் தற்பொழுதைய அரசு மதிப்பீட்டை நிர்ணயம் செய்து அதற்கான இழப்பீடை வழங்க வேண்டும்.  ஆனால் எவ்வித உதவியையும் பல்கலைக்கழகத்திற்கு அளிக்காமல் பல்கலைக்கழக இடத்தை அபகரிப்பது என்பது அரசு நில அபகரிப்பு செய்வதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

பல்கலைக் கழக வேந்தர் பதவிக்கு உரிமைக்கோரி சட்டம் நிறைவேற்றிவிட்டு பல்கலைக்கழக சொத்துக்களை அபகரிக்க முயலுவது சமூகநீதிக்கும்,  பெண்கல்விக்கும் எதிரான நடவடிக்கையாகும். சென்னையில் எவ்வளவோ இடம் இருப்பினும் பல்கலைக் கழக மாணவியர் விடுதியைத் தேர்ந்தெடுத்து இடிக்க துணிந்து இருப்பது சமூக அநீதியாகும். துணைவேந்தர் இல்லாமல் தத்தளிக்கும் பல்கலைக் கழக நிர்வாகிகளாக அரசின்  செயலர் பொறுப்பில் உள்ள அலுவலர்களை நியமித்து அவர்களைக் கொண்டே அரசு கச்சிதமாக காரியத்தை சாதித்து விட்டது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக் கழகத்தை இழுத்து மூட நினைக்கும் சதிகார கும்பல்களுக்குத் துணைபோகும் நடவடிக்கை ஆகும்.

பல்கலைக்கழகத்தின் அன்றாட பணிகள் பாதிப்பு

பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதி பற்றாக்குறையால் பல்கலைக்கழகத்தின் அன்றாடப் பணிகள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு அதன் அலுவல்சார் பணிகளுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற அத்தியாவசியானப் பொருட்கள் வாங்க நிதி இல்லாததால்  ஒவ்வொரு ஊழியரும் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர்.அன்றாட பணிகளுக்குத் தேவைகளான பேனா, பென்சில், பேப்பர் , கணினி சார்ந்த பொருள்கள் அதாவது பிரிண்டர் பென்டிரைவ் போன்றவற்றின் பற்றாக்குறைகளால் தினந்தோறும் ஊழியர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர்.

ஓய்வுக்கால பலன்களைப் பெறாத ஆசிரியர் மற்றும் அலுவலர்கள்

சென்னை பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை இதுவரை வழங்கவில்லை, ஓய்வு பெற்ற 125 பேராசிரியர்களும் 129 ஆசிரியர் அல்லாத அலுவலர்களும் இன்றுவரை எந்த பணப் பலன்களையும் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 30 முதல் 35 வருடங்கள் பல்கலைக்கழகத்திற்காகவும் மாணவர்களுக்காகவும் பணி செய்துவிட்டு ஓய்வு பெறும்போது  மிகுந்த மனஅழுத்தத்துடன் ஓய்வு பெறுகின்றனர்.

பல்கலைக்கழகம் கடந்த 2018 இல் இருந்து இன்று வரை  ஓய்வூதிய பணப்பலன்களை அளிக்காதது அவர்களை நீண்ட மனச்சுமையில் ஆழ்த்தியுள்ளது. கிட்டத்தட்ட ஓய்வு ஊதிய பலன்களை பெறாமலேயே இதுவரை குறைந்தது 40க்கு மேற்பட்ட பல்கலைக்கழக ஊழியர்கள் மரணமடைந்து விட்டனர். தாங்கள் உயிரோடு இருக்கும் காலத்திலேயே வராத ஓய்வு ஊதியப் பலன்கள் அவர்கள் இறந்த பிறகு வந்து யாருக்கு என்ன பயன்? இத்தகைய நெருக்கடிகளுக்கு அரசு 2018ல் இருந்து இன்று வரை பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியினை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காமல் இருந்து வருவதே காரணமாகும்.

ஆய்வக வசதி பாதிக்கப்படுதல்

பல்கலைக்கழகத்தில் ஆண்டிற்கான வரவு செலவு மார்ச் மாதம் இறுதியில் ஆட்சிமன்றக்குழுவில் முடிவு செய்யப்படும். அதில் ஒவ்வொரு துறைக்கும் ஆய்வகத்திற்கான நிதி, வேதியியல் பொருட்களுக்கான நிதி, புத்தகங்களுக்கான நிதி மற்றும் அன்றாடம் அலுவலகத்திற்கு தேவைப்படுகின்ற நிதி முடிவு செய்யப்படும். கல்வியாண்டின் தொடக்கமான ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே ஆய்வகம் மற்றும் நூலகத்திற்கு தேவையானப் பொருட்களை  வாங்குவதற்கான நடைமுறைகள் துவங்கும். பல்கலைக்கழகத்திற்கு தமிழகஅரசு நிதி வழங்காத காரணத்தினால் குறித்த நேரத்தில் இந்த நிதி துறைகளுக்கு விடுவிக்கப்படுவதில்லை.

நிதியானது கல்வியாண்டின் டிசம்பர் மாதத்தில் அல்லது ஜனவரி மாதத்தில் துறைகளுக்கு வழங்கப்படுகின்றது. அதுவும் முழு நிதியையும் வழங்காமல் குறைத்து வழங்கப்படுகிறது, இதனால் மாணவர்களுக்குத் தேவையான ஆய்வக வசதிகளை வழங்க இயலாமல் துறைத்தலைவர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர்.

பெரும்பாலான ஆய்வக உபகரணங்கள் மற்றும் குளிர்சாதனங்கள் பராமரிப்பு இல்லாததால் உபயோகிக்கக்கூடிய நிலையில் இல்லை. இதனை சரி செய்வதற்கான நிதியையும் வழங்குவதில்லை. புதிதாக வாங்குவதற்கும் பல்கலைக்கழகங்களிடம் நிதி இல்லை. இதன் காரணமாக கடந்த நான்கு வருடங்களாகவே மாணவர்களுக்கு ஆய்வகத்தில் ஆய்வக வகுப்புகள் தொடர்ந்து குறைந்து வருவது உயர்கல்வித்துறையில் பெரும் பின்னடைவை உருவாக்குவதுடன் நாட்டின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த ஆய்வுகள் முற்றிலும் தடைபடும் ஆபத்து எழுந்துள்ளது.

முடக்கப்படும் இணைய தளம்

பல்கலைக்கழகங்களில் முதுகலை மாணவர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பெரும்பாலும் இணையத்தை சார்ந்தே ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்கின்றனர். தங்களின் ஆராய்ச்சிக்குத் தேவையான தரவுகளைப்பெற வெளிநாட்டில் இருக்கின்ற ஆராய்ச்சியாளர்களைத் தொடர்பு கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகள் போன்றவற்றை இணையத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து  தங்களின் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர்.

பல்கலைக்கழகமும் கடந்த 20 வருடங்களாக இணையத்தின் மூலமாக துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவுகள் அல்லது அறிக்கைகளைக் கொடுத்து அன்றாட அலுவல் பணிகளை செயல்படுத்தி வருகின்றது. இணையதளப் பயன்பாடு என்பது பல்கலைக்கழகத்தில் தவிர்க்க முடியாததாகும்.  கடந்த மாதத்தில் இணையத்தைப் புதுப்பிப்பதற்குப் பல்கலைக்கழகத்தில் நிதி இல்லாததால் இரண்டு மாதங்களுக்கு மேலாக பல்கலைக்கழகத்தின் துறையில் இணையங்கள் செயல்படவில்லை.

ஒரு பல்கலைக்கழகத்தில் இணையதள பயன்பாட்டிற்கானப் கட்டணத்தை செலுத்த இயலாத காரணத்தினால் அன்றாட வேலைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நெருக்கடிகளுக்கு தமிழக அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

தொலைபேசி முடக்கம்

கடந்த சில ஆண்டுகளாகவே தொலைபேசி பெரும்பாலான இடங்களில் வேலை செய்வது இல்லை, ஏனென்றால் மாதாந்திர தொலைபேசி கட்டணத்தை செலுத்த இயலாததால் தொலைபேசி செயலிழந்து விட்டது, இதன் காரணமாக பெரும்பாலான பல்கலைக்கழக ஊழியர்கள் தங்களின் கைபேசியின் மூலமாக அனைவரையும் தொடர்பு கொண்டு அன்றாட அலுவல்களை செயல்படுத்தி வருகின்றனர். தொலைதூர கல்வியை நிர்வகிக்கும் துறையில் வேலை பார்க்கின்ற பெண் ஊழியர்கள்  தங்களின் கைபேசி மூலமாக மாணவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் குறைகளையும் அல்லது தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றனர்.

சில சமயங்களில் அலுவலக நேரத்தில் மாணவர்களை தொடர்பு கொள்ள இயலாத சூழல் உள்ளது. மாணவர்களோ அலுவலக நேரத்திற்கு அப்பால்  ஊழியர்களின் கைப்பேசியின் வாயிலாகத் தங்களின் தேவைகளுக்காகத் தொடர்பு கொள்கின்றனர்.இதன் காரணமாக   தேவையற்ற குழப்பங்கள் சிக்கல்களும் ஏற்படுகின்றன. தொலைபேசி பணத்தை கட்ட இயலாததால் பல்வேறு இன்னல்களை பல்கலைக்கழக ஊழியர்கள் சந்திக்கின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது.

ஆசிரியர் பற்றாக்குறையினால் மூடப்படும் பழமை வாய்ந்த துறைகள்

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில் தமிழ்மொழி மற்றும் நாட்டுப்புறக் கலைகளைப் பயிற்றுவிக்க 2025 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 15 வருடங்களாகவே எவ்வித பேராசிரியர் நியமனங்களும் நடைபெறாத காரணத்தினால் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அடுத்த இரண்டு வருடங்களில் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான துறைகளில் ஒன்றிரண்டு பேராசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர், இவர்களும் அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் பணி ஓய்வு பெற உள்ளனர். பழமை வாய்ந்த தாய்ப்பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்திற்கு இது போன்ற ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகின்ற சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களிலும் இதே சூழ்நிலை ஏற்படும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கற்பிக்கும் மனநிலையில் இல்லாத ஆசிரியர்கள்

பல்கலைக்கழகங்கள் கடந்த சில வருடங்களாக கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது, இதன் காரணமாக உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் முழுவதுமாக உயர்கல்வியை திறம்பட கற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த இரண்டு வருடங்களாகவே ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதியத்தை குறித்த நேரத்தில் வழங்குவதில்லை. பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பொறுப்பில் இருக்கும் காலகட்டத்திலேயே எப்பொழுது, எந்த தேதியில் ஊதியம் வழங்குவார்கள் என்று தெரியாது,  மாத ஊதியம் தருவதிலேயே இவ்வளவு சிக்கல்கள் இருந்தால்  வகுப்புகளுக்கு தேவையான நிதியினை எப்படி தருவார்கள்? கடந்த மூன்று மாதங்களாக மாதாந்திர ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்கவில்லை, அதுபோல ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் கடந்த மூன்று மாதங்களாக ஓய்வூதியத் தொகை வழங்காமல் தற்பொழுது கடந்த வாரம் ஊதியத்தை அளித்துள்ளதாக தெரிகிறது.

பெரும்பாலும் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மாத ஊதியத்தை மட்டுமே வாழ்வாதாரமாக் கொண்டுள்ளனர். தங்களின் அன்றாட வாழ்விற்கு தேவைகளான வீடு, வாகனம் ஆகியவற்றிற்கு கடன் பெற்று அதனை மாதம்தோறும் EMI மூலமாக செலுத்தி வருகின்றனர்.

இது போன்ற சூழ்நிலையில் ஒவ்வொரு ஆசிரியரும் தாங்கள் சேர்த்து வைத்துள்ள நகைகளையோ அல்லது நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கடனைப் பெற்று தங்களின் மாதாந்திர தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.  ஆனால் தமிழக அரசிற்கு இதுகுறித்து எவ்வித கவலையும் இல்லாமல் இருப்பது வேதனையளிக்க் கூடியதாகும்.

தமிழகத்தில் கல்வியாளர்கள் தொடர்ந்து தேசிய கல்விக் கல்வியை எதிர்த்துப் போராடி வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கையை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றம் மற்றும் ஆட்சி மன்ற குழுவின் ஒப்புதல் பெறாமல் எந்த வகையிலும் நிறைவேற்றிட இயலாது என்பதே சட்ட விதிகளாகும்.  ஏனென்றால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தன்னாட்சி பெற்றவை பாடத்திட்டங்களை அல்லது பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரைகளை ஏற்பதும் ஏற்காததும் அந்தந்த பல்கலைக்கழகங்களின் உரிமையாகும். இதை பல்வேறு உயர்நீதி  மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் மூலமாக உறுதி செய்துள்ளது.

பல்கலைக்கழகங்களின் ஆட்சி மன்றமும் ஆட்சி மன்றக் குழுவு மற்றும் பேராசிரியர்களையும் மீறி எவ்விதத்திலும் ஒரு கல்விக் கொள்கையைப் பல்கலைக்கழகத்தில் திணிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

ஆகவே தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் தேசிய கல்விக் கொள்கையைப் பற்றி மட்டும் பேசாமல் தற்பொழுது தமிழகத்தின் உயர் கல்வியின் கழுத்தை நெரித்து கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களின் நிதிச்சுமைக் குறித்துப் பேச வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்களில் தற்போது நிலவி வருகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுணர்ந்தால் தமிழகத்தில் உயர் கல்வி தலை நிமிரும். வருங்கால சந்ததியினரின் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்காக அமையும். தமிழகத்தின் கல்வியாளர்கள் அனைவரும் இதை உணர்ந்து பல்கலைக்கழகங்களை நிதி சுமையிலிருந்து மீட்டெடுக்க அணியமாக வேண்டும்.

-பேராசிரியர் கி கதிரவன்

ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு (TANFUFA)

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time