அமெரிக்க வரலாற்றில் ஒரு தனி மனிதர் அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் அங்கீகாரமின்றி, எமர்ஜென்சி அதிகாரங்களை கையிலெடுத்து, சட்டத்திற்கு புறம்பாக வரிவிதிப்பு செய்வது இதுவே முதல் முறையாம். பொருளாதார வரிவிதிப்பிற்காக எமர்ஜென்சி அதிகாரங்களை அதிபர் டிரம்ப் கையிலெடுக்க முடியாது என்கின்றனர் அமெரிக்க சட்ட வல்லுனர்கள்;
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள “விடுதலை நாள் வரி விதிகள்” (Liberation Day Tariffs) அகில உலகிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலுமுள்ள வர்த்தக உறவுகள் அதிர்ச்சிக்குள்ளானதால் பங்குச் சந்தைகள் படு வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
ஏன் இந்த கிறுக்குத்தனம்?
அமெரிக்க நாட்டின் உற்பத்தி துறையில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஏற்பட்ட சரிவை சரி செய்து மீண்டும் அமெரிக்க உற்பத்தி துறையை உலகின் முதன்மையாக ஆக்கவும்
பிற நாடுகளுடனான வணிகத்தில் அமெரிக்கா இன்றடைந்துள்ள வணிக பற்றாக்குறையை (Trade deficit) சரி செய்யவும் இந்த வரிவிதிப்பு யுத்தத்தை டிரம்ப் துவக்கி உள்ளார்.
முதலில் அனைத்து நாடுகளிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 10% வரியை விதித்தது. கூடவே, அதிகப் பற்றாக்குறை உள்ள ஒரு சில நாடுகளின்மீது அதிக வரி விதித்தது அமெரிக்கா.
அதை பரஸ்பர வரி விதிப்பு(reciprocal tariff) என ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியான வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தார். இதன்மூலம் உலக நாடுகள் மத்தியில் ஏற்படும் அமெரிக்க வரிவிதிப்பிற்கெதிரான ஒற்றுமையை குலைக்க டிரம்ப முயற்சித்துள்ளார். இதன்மூலம் அனைத்து நாடுகளுடனும் தனக்கு சாதகமாக வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுக் கொள்ள டிரம்ப் எத்தனிப்பது தெரிகிறது.
போலியான தரவுகளின் அடிப்படையில் நாடுகளின் மீது வேறுபாடு நிறைந்த வரிகளைப் (Differential tariff) போடுவது, பிறகு ஒத்துவராத நாடுகளின் மீது தண்டிக்கும் நோக்கில் வரியை (Punitive tariff) சுமத்துவது என்ற கொள்கையின் வெளிப்பாடாக ‘லிபரேஷன் டே வரிச்சுமை ‘ வந்துள்ளது!
அதிபர் டிரம்பின் கூட்டாளியும், டிரம்ப் நிருவாகத்தின் முக்கிய அங்கமான பகாசுர பணக்கார்ரான எலோன் மஸ்க் இந்த வரி யுத்தத்தை வெகுவாக சாடியுள்ளார். எலோன் மஸ்கின் சகோதரர் கிம்பல் மஸ்க் ’’இவ்வரி விதிப்பு அரைக் கிறுக்கனின் செயல்’’ என சாடியுள்ளார்.
இந்த நிலையில் புதன் கிழமை – லிபரேஷன் டே வரி விதித்த 24 மணி கழித்து- பெரும்பாலான நாடுகளின் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு ‘நிறுத்தி’ (pause) வைத்துள்ளார் டிரம்ப்! இது முழுமையான அந்தர் பல்டியா அல்லது கோமாளிதனமான குறும்பா?
சீனப்பொருட்களின் மீது 125% வரி விதித்து அறிவித்துள்ளார். ஏற்கனவே அமெரிக்கா விதித்த 104% வரியை எதிர்த்து சீனா ,
‘இந்நடவடிக்கை தவறுக்கு மேல் தவறிழைக்கும் செயல் ‘ என கண்டித்து அமெரிக்க பொருட்களின் மீது 84% வரியை பதிலாக உயர்த்தியது. இதை பொறுக்காத டிரம்ப் ,
“எல்லா நாடுகளும் என் ……….ஐக்கொஞ்சி நாங்கள் அமெரிக்கா சொல்வதை கேட்டு புது வணிக ஒப்பந்தம் போட தயாராய்உள்ளோம் என்று கெஞ்சுகையில் சீனா மட்டும் மரியாதை செலுத்த தயாரில்லை “ என்பதால் வரி விதிப்பை 125% மாக உயர்த்தியதாக டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார்.
இத்தகைய முரண்பட்ட , ‘நித்தம் ஒரு நிலையான’ வரிக் கொள்கை அறிவிப்புகளை உதிர்க்கும் டிரம்ப்பிற்கு பொருளாதார செயல்பாடு புரியவில்லையா? அல்லது கூட்டாளி எலோன் மஸ்க்கின் எதிர்ப்பை கண்டு பின் வாங்குகிறாரா என்பது உலகம் முழுவதும் ஊடகங்களால் விவாதிக்கப்படுகிறது. ஆனால், இதனால் அமெரிக்கா தனக்கு தானே இழைத்துள்ள காயமும், தலைக்குனிவும் மோடி பண மதிப்பிழப்பினால் இந்திய பொருளாதாரத்திற்கு கொடுத்த சம்மட்டி அடியை ஒத்ததாகும்.
உலகின் இரண்டாவது பொருளாதார வலிமையுள்ள சீனா அரை கிறுக்கனான டிரம்பையோ, அமெரிக்காவையோ நம்பகத்தன்மைக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் முறையற்ற அமெரிக்க நிபந்தனைகளையும், மிரட்டல்களையும் எதிர்க்கத் துணிந்துள்ளது, 150 நாடுகளுடனான தனது வர்த்தக உறவை விரிவு படுத்தி அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை குறைக்க சீனா ஏற்கனவே பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடனான தனது வணிக உறவுகளை மேலும் விரிவாக்க தன்னை தயார்படுத்தி வருகிறது. இதற்காக இந்திய நாட்டுடனும் இணக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்ள சீனம் விரும்புகிறது.
ரஷ்யா ஈரான் மற்றும் பிரேசில் , தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை முன்னெடுக்க உறுதி பூண்டுள்ளது. உலகின் ஜி டி பி யில் 40 % த்தை தன்னகத்தே கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு வணிக சுதந்திரத்தையும், பணப்பரிமாற்ற நேர்மையையும் பாதுகாக்க பரிவர்த்தனைகளை டாலர் நாணயத்தின் மூலம் நடத்துவதை தவிர்த்து, பல கரன்சிகளின் ( ரூபாய், ரூபிள், ரென்மின் ) வழியாக பரிவர்த்தனை மேற்கொள்ள முன்னெடுப்புகளை முடுக்கி விட்டுள்ளது.
நட்பு நாடு , பகை நாடு என்ற பாகுபாடின்றி , அண்டை நாடு நேச நாடு என்ற பிணைப்பு இன்றி அனைத்து நாடுகளின் மீதும் சகட்டு மேனிக்கு வரி விதிப்பது அமெரிக்காவிற்கு உகந்த பலனைத் தருமா? அல்லது இது ஒரு பைத்தியக்காரச் செயலா?
இந்த வரிவிதிப்பின் மூலமாக ‘அமெரிக்கா உற்பத்தி துறை ‘ மீண்டும் தலை நிமிருமா?
அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டில் பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி பண்ண இயலுமா? வரி விதிப்பின் மூலமாக இறக்குமதி குறைந்தால் அதை ஈடு கட்ட அமெரிக்க முதலாளிகள் அமெரிக்காவிலேயே உற்பத்தியை துவங்குவார்களா? அது சாத்தியமா? அல்லது, வரிவதிப்பினால் பொருட்களின் விலை ஏற்றம் ஏற்படுமா , அது (அந்த விலையேற்றம்) அமெரிக்க மக்களின் தலையில் வந்து விடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன.
புதிய வரி விதிப்பினால் கிடைக்கும் வருவாயை கொண்டு, அமெரிக்க அரசு அந்நாட்டு முதலாளிகளுக்கு கொடுத்த வரிச் சலுகையினால் ஏற்பட்ட அரசு வருவாய் இழப்பை சரி செய்ய டிரம்ப் முயற்சி செய்கிறார் என்பது ஊரறிந்த ரகசியமாக உள்ளது.
சாமானியர்களுக்கு விலையேற்றமும், கொழுத்த முதலாளிகளுக்கு வரிச் சலுகையுமே டிரம்ப்பின் வரி யுத்தத்தின் பின்புலமாகும்.
உலக நாடுகள் அனைத்தும், இரண்டாவது பெரிய பொருளாதார வலிமை கொண்ட சீனாவும் , ரஷ்யாவும் , இந்த வரி விதிப்பை ஒருதலை பட்சமானது என கண்டிக்கும் வேளையில், நேச நாடுகளான பிரிட்டன் , மற்றும் ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆஸ்திரேலியா , தென்கொரியா போன்றவையும் டிரம்ப்பின் வரி விதிப்பை கண்டித்து எதிர்வினை ஆற்றியுள்ளனர். கனடா மெக்சிகோ போன்ற அண்டை நாடுகளும் இவ்வரி விதிப்பை எதிர்த்து எதிர் வரிகளை போட்டுள்ளனர்.
உலகின் மிகச்சிறிய நாடான சிங்கப்பூரின் பிரதமரின் – சிங்கப்பூர் இவ்வரி விதிப்பால் அதிகம் பாதிக்கப்படவில்லையெனினும்- விமர்சனம் இன்று வைரலாக உலகை வலம் வருகிறது.
உலக நாடுகளை அச்சுறுத்த இத்தகைய நாடகத்தை டிரம்ப் ஆடுகிறார் , தடாலடியாக வரி விதித்தால் நாடுகள் நடுங்கிக் கொண்டு அமெரிக்க அரசுடன் பரஸ்பர வணிக ஒப்பந்தம் காண முன்வருவர் என்பது டிரம்ப்பின் எதிர்பார்ப்பு.
ஆனால், இந்தியா டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பை எதிர்த்து (இந்தியா மீது 27% வரி விதிப்பு) மூச்சே விடவில்லை, இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில், அமெரிக்காவுடனான இந்திய ஏற்றுமதி வெறும் 81 பில்லியன் டாலர்கள் தான் எனவும், இதில் அமெரிக்காவிற்கு துண்டு விழுவது வெறும் 37 பில்லியன் டாலர்கள் தான் என சமாதானம் கூறப்பட்டது.
ஆனால், இத்தகைய வரி விதிப்பிற்கு மூல காரணம் – இன்றைய உலகளாவிய குழப்பத்திற்கு மூல காரணம்- சீனாவின் முறையற்ற வணிக நடவடிக்கைகள் தான் என இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இப்படி இவர் அமெரிக்காவிற்காக ‘ஜால்ரா’ போட்டாலும், மோடி தனது நண்பனான டிரம்பைவிமர்சிக்காமல் இந்திய நலன்களை மறந்து ‘மவுனமாக’ இருந்தாலும், பேட்டை ரவுடியாக வலம் வரும் டிரம்ப் இந்தியாவிற்காக மனமிறங்கப்போவதில்லை என்பது வல்லுனர்களின் கருத்தாகும்.
கோட்டைக்குள்ளே குத்து வெட்டு
இந்தச்சூழலில் இந்திய அரசு தான் இன்னமும் அமெரிக்காவின் கடைக் கண் பார்வையை பெற ‘ சீன எதிர்ப்பை’ கையிலெடுத்துக் கொண்டு சீனத்துடனான நல்லுறவை ஒத்துழைப்பை மறுத்து தனக்கு தானே சூடு போட்டு கொள்கிறது. குளோபல் சௌத் நாடுகளின் ‘தலைவனாக’ நொடிக்கு நூறு முறை கூறிக்கொள்ளும் இந்தியா, குளோபல் சௌத் நாடுகளின் நலன்களை புறந்தள்ளி அமெரிக்காவின் நலன்களுடன் தன்னை இணைத்து கொள்ள இதுவரை விழைந்து வருகிறது . இன்று அதற்கும் வேட்டு வைக்க டிரம்ப தயாராய் உள்ளார் அவருக்கு தெரிந்ததெல்லாம் அமெரிக்க முதலாளிகள் நலன் தான் என்றால் மிகையில்லை.
Also read
இப்பொழுதாவது இந்திய ஆட்சியாளர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் , பிரிக்ஸ் மற்றும் சீனத்துடனான இணக்கமும் வளர்ச்சியும் ஆசியாவிற்கு ஏன் உலகத்திற்கே புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய சீன நல்லுறவும் தொழில் கூட்டுறவும் உலகிற்கு புதிய பாதையை காட்டும்! அதன் மூலம் உலகில் அமைதியும் சமாதான சக வாழ்வும் மலரும், வெள்ளை இன ஆதிக்கம் உதிர்ந்து அனைத்து இனங்களின் வாழ்வும் மலரும் .
ச.அருணாசலம்
Leave a Reply