அறிவிக்கப்பட்டது குழு! ஆத்திரமடைந்தது பாஜக அரசு!

-சாவித்திரி கண்ணன்

உலகில் வளர்ந்த நாடுகளே கூட இது போன்ற அதிகார குவிப்பை செய்வதில்லை;மாநில உரிமைகளை வலுப்படுத்த ஒரு  அதிரடி தேவை இன்றைக்கு உருவாகி உள்ளது. மத்தியில் அதிகாரம் குவிக்கப்படுவதும், மாநிலங்கள்  டம்மிகளாக ஆக்கப்படுவதையும் கேள்விக்கு உள்ளாக்கினால் பாஜக தலைவர்களுக்கு ஏன் இத்தனை கோபம்..? 

இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியமாகும். வெவ்வேறு மொழி, இனம், கலாச்சாரம் கொண்ட மாநிலங்கள் கூட்டாட்சி தத்துவத்தால் தான் பிணைக்கப்பட்டதாக நம்புகின்றன. ஆனால், அந்த நம்பிக்கை சிதையும் வண்ணம் கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேஷனுக்கு உள்ள அதிகாரங்கள் மட்டுமே இன்றைய தினம் இந்திய கூட்டாட்சியில் மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒர் மாநில அரசை அதிகாரமற்றதாக்க இரண்டு வழிமுறைகளை கையாள்கிறது அரசு.

அதில் ஒன்று மாநில பட்டியலில் உள்ள கல்வி, மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை கன்கரண்ட் லிஸ்ட் என  மத்திய- மாநில என இரு அரசுகளுக்குமான அதிகாரம் உள்ளதாக மாற்றிவிட்டு, நடைமுறையில் முழுக்க, முழுக்க மத்திய அரசே அதன் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு மா நில அரசின் அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்டே அதை நிறைவேற்றி விடுவதாகும்.

அடுத்த வழிமுறை எதைச் செய்வது என்றாலும், கவர்னர் அதற்கு அனுமதித்தால் மட்டுமே செய்ய முடியும் எனத் தடை ஏற்படுத்துவது. இந்த வகையில் இரண்டு லகான்களை கையில் வைத்துக் கொண்டு, மத்திய அரசு மாநிலங்களை தன்னாட்சி உரிமையற்றவர்களாக நடத்தி வருகிறது.

அந்த வகையில் ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரைக் கூட நியமிக்க முடியாத நிலைமையை நாம் பார்த்தோம். கவர்னருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டதால் மா நில அரசு பரிந்திரைத்த மூவரில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க கூட விருப்பமற்றவராக அவர் காலம் கடத்தியதன் மூலம் தமிழகத்தில் எட்டு பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களே இல்லாமல் உயர் கல்வித் துறை மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டது.

அதே போல சித்த மருத்துவத்திற்கு ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் என்ற தமிழர்களின் விருப்பத்திற்கு நீண்ட காலமாக கவர்னர்களைக் கொண்டு தடை போட்டு அந்த மசோதாவையே நிறுத்தி வைத்துவிட்டனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் அரசை விடவும், ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த விருப்பத்தை விடவும் கவர்னரின் அதிகாரம் தான் பெரியது. அவர் நினைத்தால் எதையும் அனுமதிக்காமல் எத்தனை காலமும் இழுத்தடிக்கலாம் என்ற நிலையே உள்ளது.

இதைவிட அவலம் சென்ற ஆட்சியில் ஊழலில் திளைத்த அமைச்சர்கள் மீதான விசாரணைக்கே கவர்னர் அனுமதி தேவை என்ற அவலமாகும்.

ஆக, இது ஏதோ தமிழ் நாட்டின் பிரச்சினை மாத்திரமன்று. அனைத்து இந்திய மாநிலங்களில் பிரச்சினையும் கூட. ஆனால், இதில் தமிழ் நாடு மட்டுமே குரல் கொடுக்கும் நிலை உள்ளது என்பது தான் விசித்திரமாகும்.

உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில்  ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன், திட்டக்குழு முன்னாள் தலைவர் நாகநாதன், ஆகியோர்களை குழுவின் உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்படும் உயர்நிலைக் குழு மாநிலங்களின் நியாயமான உரிமைகளை வலுப்படுத்த பரிந்துரைக்க உள்ளது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தியாகும். இக் குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளிவரும் போது, அது அனைத்து இந்திய கவனத்தையும் ஈர்த்து மற்ற மாநிலங்களும் நம்மோடு கைகோர்க்கும் சூழல்கள் உருவாகலாம்.

கல்வி, மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை முழுக்க,முழுக்க மாநில அரசு தான்  நிர்வகிக்க வேண்டும். இராணுவம், வெளி உறவுத் துறை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் மத்திய அரசிடம் இருந்தாலே போதுமானது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை என்பது மாநிலங்கள் மீதான  பொருளாதாரச் சுரண்டலாகும். இதை கொண்டு வந்தபோதே தமிழ்நாடு தவிர பிற மாநிலங்கள் பெரிதாக எதிர்க்கவில்லை.  மத்திய அரசின் ஜிஎஸ்டி முறையால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருவது கேள்விக்கில்லாமல் தொடர்கிறது.

மாநில சுயாட்சி குறித்து 75 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக தெளிவாக குரல் கொடுத்த  மாநிலம் தமிழகம் தான்!

அறிஞர் அண்ணா  அவர்கள் வழியில்  முதன் முதலாக கலைஞர் கருணாநிதி முதல்வராக பதவியேற்ற காலத்தில் செப்டம்பர் 22, 1969 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி  பி.வி. ராஜமன்னார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார் , மற்றொரு நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

அந்தக் குழுவின் பரிந்துரைகள் அன்று இந்தியாவில் பரவலான கவனம் பெற்றது.

திட்ட குழுவினை கலைக்க வேண்டும்

அனைத்திந்திய பணிகளான ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் போன்ற்வை நீக்கப்பட வேண்டும்.

மத்திய பட்டியலில் உள்ள சில அதிகாரங்களையும், மத்திய- மாநில அரசு பட்டியலில் உள்ளவற்றையும் மாநில அரசு வசம் தர வேண்டும்.

நிதிக் குழுவை நிரந்தப்படுத்த வேண்டும்.

மத்திய – மாநில அரசுகளுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். ஆகியவற்றை ராஜமன்னார் கமிட்டி வழங்கியது.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இந்திய அரசியலில்  ஒரு தொடர் விவாதமாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் பல்லாண்டுகளாக பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

1969 ல் வெளியான முதல் நிர்வாக சீர்திருத்த ஆணைய அறிக்கை (ARC),

மத்திய-மாநில உறவுகள் ஆணையம் (1988),

அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையம் (2002)

மத்திய-மாநில உறவுகள் ஆணையம் (2010)

ஆகியவை இந்த விஷயத்தை ஆராய்வதற்காக பற்பல காலகட்டங்களில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட அமைப்புகளாகும்.

இவ்வளவு முயற்சிகளையும், நல்ல முன்னெடுப்புகளையும் கடந்த 11 ஆண்டு கால பாஜக ஆட்சி சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது.

மாநில உரிமைகளுக்கான முதல் குரல் தமிழகத்தில் இருந்து தான் ஒலிக்கத் தொடங்கும் என்றும்,. அனைத்து மாநிலங்களின் நலன் கருதி இந்த உயர்மட்ட குழு அமைக்கப்படுகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது ஆச்சரியமல்ல.  வரவேற்போம்.

நீட்டிற்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு, தொகுதி வரையறைக்கு எதிர்ப்பு, மத்தியில் அதிகார குவிப்பிற்கு எதிர்ப்பு…எனத் தொடர்ந்து தலைவலியைத் தருகிறாரே ஸ்டாலின் என பாஜகவினர் பயங்கர கடுப்பில் உள்ளார்களாம். இதன் விளைவு தான் இன்று இந்தக் குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்ததாகும். மத்திய ஆட்சியாளர்களின் கோபம் கூடிய சீக்கிரம் வெளிப்படலாம்.

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time