மத்திய பாஜக அரசின் தவறான ஜவுளிக் கொள்கையால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் தள்ளாடுகிறது. உற்பத்தியாளர்களுக்கோ போதிய லாபமில்லை. தொழிலாளர்களுக்கோ கடின உழைப்புக்கு தகுந்த ஊதியமில்லை. மீண்டும், மீண்டும் எனத் தொடர்ந்து போராடும் விசைத்தறி நெசவாளர்களுக்கு விடியல் கிடைக்குமா…?
விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பை தரும் தொழிலாக நெசவுத் தொழில் உள்ளது. ஏற்கனவே பல லட்சம் நெசவாளர்கள் இந்த விசைத் தறியில் இருந்து விலகி சென்று விட்டனர். ஆயினும் தமிழகத்தில் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் விதைத்தறி நெய்வை நம்பி வாழ்கிறார்கள்! தமிழகத்தில் 5.5 லட்சம் விசைத்தறிகளும் 2.5 லட்சம் ஆட்டோ லூம்களும் நாளும், பொழுதும் ஓடினால் தான் இவர்கள் வயிறு நிறையும்.
இவர்களின் உற்பத்தியை நம்பித் தான் 5,700 ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்ளன.
தமிழகத்தின் கொங்கு மண்டலம் தவிர்த்து விருது நகர் மாவட்டம் ராஜபாளையம் தளவாய்புரம், திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் தர்மபுரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பரவலாக ஜவுளி உற்பத்தி நடைபெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் விசைத்தறி தொழிலாளர்கள் வேதனையுடன் தான் வேலை பார்த்து வருகின்றனர்.
மிகக் கடின உழைப்பை கோரும் இந்த விசைத்தறி நிறைவான ஊதியத்தை தருவதில்லை என்பது தான் இவர்களின் நீண்டகால போராட்டமாகும். குடிசைத் தொழிலான விசைத்தறிக்கு முதலீட்டையும் போட்டு 12 மணி நேர உழைப்பையும் குடும்பத்தோடு தந்து பாடுபடும் இந்த நெசவாளர்கள் நிம்மதியோடு வாழ் முடிவதில்லை.
இதில் தமிழகத்திலேயே கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகளவு ஓ.இ மில்களும், ஸ்பின்னிங் மில்களும், விசைத்தறி, ஆட்டோ லூம், ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்ளன. நூலை கொள்முதல் செய்து சைசிங், டையிங், நிட்டிங், வீவிங் பிரிண்டிங், காஜா, பட்டன், ஸ்டிச்சிங், பேக்கிங் ஐயனிங் என பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இந்த இருமாவட்டங்களில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. இதிலும் பல லட்சம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் ஆகியவையே இதன் மைய கேந்திரமாகும். இந்த பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்களும் உள்ளன.
இவ்வளவு பரந்து விரிந்த கட்டமைப்பு கொண்டிருந்தும் இந்தத் தொழிலை தொழிலாளர் நலத் துறை தன் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து விசைத்தறி தொழிலில் ஊதிய பிரச்சினையை தீர்ப்பதில்லை.
கடந்த 30 நாட்களாக போராடிக் கொண்டு தற்போது காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் விசைத்தறியாளர்களின் தலைவர் பூபதி ஈஸ்வரன் மற்றும் வேலுச்சாமி ஆகியோரிடம் பேசிய போது, ”சுமார் 12 ஆண்டுகளாக நாங்கள் ஊதிய உயர்வின்றி தொழில் செய்கிறோம். , 2014 இல் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது,” என்றாலும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. அப்படி நடைமுறைபடுத்தாதை கேட்கவும் வழியில்லை என்ற நிலையில் மீண்டும் கடைசியாக 20-23% ஊதிய உயர்வு 2021 இல் முடிவு செய்யப்பட்டது, அது 2022 இல் 15% ஆகக் குறைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
இந்தச் சூழலில், அதிகரிக்கும் மின் கட்டணம், கட்டிட வாடகை, விசைத்தறி உதிரி பாகங்களின் விலைகள் மற்றும் எங்கள் வேலை ஊதியங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே இருந்தாலும், சம்பள உயர்வு என்பது சாத்தியமாகாமலே போவாதால் கடந்த 15 மாதங்களாக ஊதிய உயர்வுக்காக நாங்கள் போராடி வருகிறோம். அதன் கடைசி கட்டமாகத் தான் இந்த காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம். 2022ல் ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதிய உயர்வில் மேலும் 15 -19 சதவிகிதத்தை கூட்டித் தந்தால் எங்களுக்கு கட்டுப்படியாகும். இதுவே எங்கள் கோரிக்கை என்றனர்.
மற்றொரு பக்கம் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 10,000 நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாத மீட்டருக்கு ரூ.10 ஊதிய உயர்வினை வழங்கி அவர்களும் போராடி வருகின்றனர்.
இது தொடர்பாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்களிடம் பேசிய போது, விசைத்தறி என்பது கொங்கு மண்டலத்தின் வாழ்வாதாரமாகும். ஜவுளி தொடர்பான மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே தற்போது நெருக்கடிகள் தோன்றியுள்ளன. 2014 வரை அதிக அன்னிய செல்வாணியை ஈட்டித் தரும் ஜவளித் தொழிலை ஊக்குவிக்க ஏற்றுமதி வரியில் 8 சதவிகிதம் திரும்ப ஜவுளி உற்பத்தியாளர்களுக்கே ஊக்கத் தொகையாக தரப்பட்டது. தற்போது அதை இரண்டு சதவிகிதமாக்கிவிட்டார்கள். இதே போல வாங்கிய கடனுக்கான வட்டியில் 5 சதவிகிதம் குறைக்கப்பட்டது மிகவும் உதவிகரமாக இருந்தது. அதுவும் இல்லாமலாகிவிட்டது.
ஏற்றுமதி வணிகத்தில் ஏற்பட்ட சரிவும் ஜவுளி உற்பத்தியாளர்களை பெரிதும் பாதித்துவிட்டது. இந்த பாதிப்புகள் தொழிலாளர்களின் பாதிப்பாகவும் மாறிவிட்டது. ஆர்டர்கள் குறைவதால் மாதம் முழுக்க வேலை இருந்த நிலைமை மாறி, பாதி நாட்கள் மட்டுமே வேலை என்று வரும் போது கூலியையும் குறைக்கிறார்கள்! குறைத்த கூலியை அதிக ஆர்டர் வரும் போது ஏற்ற மறுக்கிறார்கள் என்பதே தொழிலாளர்களின் குற்றச்சாட்டாகும்.
கொள்கை மாற்றங்களை கொண்டு வந்து விசைத்தறி தொழிலை காப்பாற்றுவதற்கு மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கும் கோரிக்கை வைத்து விசைத்தறி தொழிலுக்கு ஆதரவான கொள்கைகளை வகுக்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் நேரடியாக தலையிட்டு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நான் சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளேன். அந்த வகையில் முதல்வரும் இரு அமைச்சர்களை நேரடியக களத்திற்கு சென்று சூமுக்க பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணக் கூறியுள்ளார். விரைவில் பிரச்சினை முடிவுக்கு வரும் என நம்புகிறேன்’’ என்றார்.
மானம் காக்கும் உடையை நெய்து தருகின்ற – பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை தருகின்ற – விசைத்தறி தொழில் வீழ்ந்து விடாதபடிக்கு அதை பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.
சாவித்திரி கண்ணன்.
அருமையான புரிதலோடு விசயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அறம் இணைய இதழுக்கும் மற்றும் தோழர் சாவித்திரி கண்ணன் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
விசைத்தறி தொழில் நெருக்கடி பற்றிய நல்ல திறனாய்வு