இளையராஜா பணத்திற்காகவா வழக்கு தொடுத்தார்?

-உதயசங்கரன் பாடகலிங்கம்

இளையராஜாவைப் பற்றி சரியான புரிதல் இல்லாதவர்களே அவரை பணத்தாசை பிடித்தவராக கருதுகின்றனர். உண்மை அதுவல்ல. அவரது ஈகோவை சீண்டிப் பார்த்தால் கோர்ட் , வழக்கு எனச் சென்று அபராதத் தொகை கட்ட வைப்பார். முன் அனுமதி கேட்டால் பணமே கேட்பதில்லை என்பதற்கு இதோ பல உதாரணங்கள்…;

‘இவர் எப்பவுமே இப்படித்தான்’ என்று சில பேர் இளையராஜா குறித்து சமூகவலைதளங்களில் வன்மத்தைக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். வேறொன்றுமில்லை, ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவர் இசையமைத்த மூன்று பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதை எதிர்த்து, 5 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடுத்திருக்கிறார் ராஜா.

’ஒரு திரையிசைப் பாடலின் உரிமை யாருக்கு’ என்று வரையறுப்பதில் திரையுலகம் ஒரு முடிவுக்கு வராமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தான் தயாரித்து இயக்கிய ‘செம்பருத்தி’ படப் பாடல்களைத் தன்னால் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகச் சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார்.

மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மள் பாய்ஸ்’ படத்தில் ‘குணா’வின் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல், திரைக்கதையின் ஒரு அங்கமாகப் பயன்படுத்தப்பட்டு பெரு வெற்றி பெற்றது. அதற்குத் தன்னிடத்தில் அனுமதி பெறவில்லை என்று கூறி இளையராஜா வழக்கு தொடுத்ததும், அதன் பின் படக்குழு அவர் தரப்பில் பேசப்பட்டதில் ரூ 2 கோடி கேட்டதைக் குறைத்துக் கொண்டு 60 லட்சம் பெற்றுக் கொண்டார் இளையராஜா.

அவ்வளவு ஏன், ‘லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்தின் ரசிகராக வரும் தினேஷை காட்ட ‘பொட்டு வச்ச தங்கக்குடம்’ பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டு திரையரங்குகள் அதிர்ந்ததும், அப் படக்குழுவினர் உடனடியாக இளையராஜாவைச் சந்தித்து முன் கூட்டியே அனுமதி பெறாமைக்கு வருத்தம் தெரிவித்த போது, அவர் அவர்களை வாழ்த்தி அனுப்பியதையும் நாம் பார்த்துள்ளோம்.

இப்போது கூட, தன்னுடைய படைப்பில் ‘மறுபடியும்’ படப் பாடல்களைப் பயன்படுத்த அனுமதி கோரி இயக்குனர் வெங்கடேஷ்குமார் என்பவர் இளையராஜாவைச் சந்தித்து அனுமதி பெற்றது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

மேற் சொன்னவற்றில் இருந்து, தான் இசையமைத்த பாடல்களின் உரிமையில் பெரும் பங்கு யாருக்கு என்ற சர்ச்சைகளைக் கடந்து, தனது படைப்புகளைப் பயன்படுத்தத் தன்னிடம் அனுமதி பெற முன் வருபவர்களோடு, பணத்தை டிமாண்டாக்கமலும், நல்லுறவு பேணவும் இளையராஜா தயாராக இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ’காப்பிரைட்’ விவகாரம் தொடர்பாக இளையராஜாவின் சார்பில் பேசியவர்களும் இதையே வலியுறுத்தியிருந்தனர்.

இந்த விஷயத்தில் ‘குட் பேட் அக்லி’யில் என்ன நடந்தது, இனி என்ன நடக்க இருக்கிறது என்பது இனி தான் தெரிய வரும்.

இவை ஒருபுறமிருக்க, இளையராஜாவின் பாடல் இந்தப் படத்தில் கையாளப்பட்ட விதத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

‘குட் பேட் அக்லி’யில் இந்த ‘பழைய பாடல்கள்’ உத்தி கதைக்கு சரியாக பொருந்தவில்லை.

இப்படத்தில் ‘இளமை இதோ இதோ’ பின்னணியில் அஜித் அதிரடியாகச் சண்டையிடுவதாகக் காட்டியது நிச்சயம் ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’ ஆகத்தான் இருக்கும். அதுவும் ஒவ்வொரு ‘ஹேய்.. ஹேய்..’ சத்தத்திற்கும் நடுவே ஒரு குத்து விடுவதாகக் காட்டியிருப்பது ஆக்‌ஷன் படம் பார்க்க வேண்டுமென்ற ஆசையில் வந்தவர்களை அள்ளியெடுத்துக்கொள்ளும் என்பதை மறுப்பதற்கில்லை.

யதார்த்தம் துளி அளவு இல்லாதபோதும், ஒரு கமர்ஷியல் திரைப்படத்தில் இது போன்ற விஷயங்கள் இடம்பெறுவதைத் தவறென்று சொல்ல முடியாது.

ஆனால், இப்படிப் பழைய பாடல்கள் ஒலிக்கும்போது இத் திரைக்கதையிலுள்ள பாத்திரங்கள், அதில் நடித்த நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் எப்பேர்பட்ட வரவேற்பை அளிப்பார்கள் என்பதை மட்டுமே யோசித்து அந்த உத்தியைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. அதனாலேயே, ‘ஒத்த ரூபா தாரேன்’, ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல்களை அதில் இணைத்திருந்த விதம் நமக்கு எரிச்சலைத் தருகிறது.

சரி, விஷயத்திற்கு வருவோம். இப்படிப் பழைய திரையிசைப் பாடல்களை புதிய திரைப்படமொன்றில் பயன்படுத்துவது இப்போது தான் நிகழ்கிறதா?

 ’பழைய பாடல்கள்ட்ரெண்ட்!

‘குறும்பு’ படத்தில் ‘ஆசை நூறு வகை’ பாடலை யுவன் சங்கர் ராஜா ‘ரீமிக்ஸ்’ செய்தது அந்த காலகட்டத்தில் பெரிய விஷயமாகப் பேசப்பட்டது. சில படங்களில் அதனைத் தொடர்ந்தவர், ஒருகட்டத்தில் ‘போதும்’ என்று முடிவு செய்து நிறுத்தி விட்டார். ‘கோட்’ படத்தில் கூட ‘சொர்க்கமே என்றாலும்’ பாடலைப் பயன்படுத்தியிருந்தார். அவற்றில் பல வரவேற்பைப் பெறவில்லை. உண்மையில் அது போலப் பல ’ரீமிக்ஸ்’ பாடல்கள் ராஜாவின் தீவிர ரசிகர்களைப் புண்படுத்தியிருக்கின்றன.

இப்படிப் பழைய பாடல்களை ‘ரீமிக்ஸ்’ செய்வது அல்லது ‘அந்தாக்‌ஷரி’ பாணியில் சில வரிகள் மட்டும் படங்களில் பயன்படுத்தப்படுவது ஏற்கனவே திரையுலகில் வழக்கத்தில் இருந்திருக்கிறது.

சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் ‘ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்’ பாடலை விசு ஏற்ற அம்மையப்பன் பாத்திரத்திற்கு ஏற்ப ‘ரீமிக்ஸ்’ செய்திருந்தது சங்கர் – கணேஷ் கூட்டணி. அப்போது இளையராஜா எந்த எதிர்ப்பையும் தெரிவித்ததாக நாம் கேள்விப்படவில்லை.

அப்போதிருந்த அவரது பணிச்சுமையும், சக இசையமைப்பாளர்கள் உடனான மரியாதையும் நல்லுறவும் கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

ரீமிக்ஸ் செய்வது ‘பழசாகிப்’ போன பிறகு, ‘பழைய பாடல்களை அப்படியே திரைக் கதையில் பயன்படுத்தும் உத்தி’ பிரபலமானது. கிட்டத்தட்ட ‘நான் எம்ஜிஆர் ரசிகன்’, ‘ரஜினி ரசிகன்’, ‘கமல், அஜித், விஜய் ரசிகன்’ என்று திரைப்படங்களில் புதிதாக வரும் நாயகர்கள் சொல்லிக் கொள்வதற்கு ஒப்பானது இது.

’மாநகரம்’ படத்தில் ‘தேவாமிர்தம் ஜீவாமிர்தம்’, ‘இரவினில் ஆட்டம்’ பாடல்கள்,

’கைதி’யில் ‘ஆசை அதிகம் வச்சு’, ‘ஜும்பலக்கா ஜும்பலக்கா’, ‘மெட்ரோ சேனல்’, ‘புது ரோட்டுலதான்’ உள்ளிட்ட சில பாடல்கள்,

’மாஸ்டர்’ படத்தில் ’கருத்த மச்சான்’, ‘வெத்தல போட்ட சோக்குல’, ’விக்ரம்’மில் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’, ‘கல்வியா செல்வமா வீரமா’, ‘லியோ’வில் ‘தாமரைப் பூவுக்கும்’, ‘கரு கரு கருப்பாயி’, ‘நான் பொல்லாதவன்’ பாடல்களைப் பயன்படுத்தியிருப்பார் லோனா கானா.

‘ஜெயிலர்’ படத்தில் நெல்சன் இந்த உத்தியைப் பயன்படுத்தி, வில்லன் விநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சுவை கூட்டியிருந்தார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட ‘பஹீரா’வில் ‘பட்டுக்கோட்டை அம்மாளு’ பாடலுக்கு பிரபுதேவாவை ஆட வைத்திருந்தார். ‘பஞ்சுமிட்டாய் சீல கட்டி’ பாடலைப் பயன்படுத்தி, ‘மார்க் ஆண்டனி’யின் இடைவேளைக்குப் பிறகான பகுதியை அதகளமாக்கியிருந்தார்.

இப்படி ஒரு தலைமுறை ரசித்துக் கேட்ட திரையிசையையை அடுத்த தலைமுறைக்கு மடை  மாற்றுவது, சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் திரைக்கதைகளை செறிவானதாக மாற்றத் துணை நிற்கிறது.

சொல்லப் போனால், அந்த உத்தி எளிதாகப் படம் பார்ப்பவர்களைத் திரையோடு ஒன்றிணைக்கவல்லது. டீசர், ட்ரெய்லரில் அது போன்ற பழைய பாடல்கள் இடம்பெறுவது, அது பற்றி ஊடகங்களில் தகவல்கள் வெளியாவது ரசிகர்களின் கவனத்தைச் சட்டென்று ஈர்க்கும்.ஏற்கனவே பிரபலமான ஒரு விஷயத்தை மீண்டும் பயன் படுத்தும் போது கிடைக்கும் ’அதீத கவனக் குவிப்பு’தான் இதற்குக் காரணம்.

‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் ‘சிறு பொன்மணி அசையும்’ பாடலைப் பயன்படுத்தியிருந்தார் சசிகுமார். இதே போன்று பசங்க, 96, நெடுநல்வாடை படங்களில் இளையராஜாவின் பாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் இளையராஜா பிரச்சினை ஏற்படுத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நினைவூட்டப்படும் காலத் துளி!

‘நாஸ்டல்ஜியா’ எனப்படுகிற வார்த்தை, புதிய திரைப்படங்களில் பழைய திரையிசைப் பாடல்களைப் பயன்படுத்துவதன் பின்னே இருக்கிறது. அதாவது, அவை குறிப்பிட்ட காலத்தின் ஒரு துளியை நினைவூட்ட உதவுகின்றன.

ஒரு திரைக்கதையில் குறிப்பிடப்படுகிற காலகட்டத்தை விளக்க, கொஞ்சம் பின்னோக்கிச் சென்று கடந்த காலத்தை அசைபோட, அதிலிருக்கும் சிறப்புகளை அல்லது அவலங்களை விளக்க, ‘பழைய பாடல்கள்’ பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இது உலகம் முழுக்க வழக்கத்தில் இருந்து வருவது தான்.

‘ஆரண்ய காண்டம்’ படத்தில் ‘என்ன டொக்காயிட்டீங்களா’ என்ற கேள்வியால் சூடாகிக் கொலை வெறி ஆன ஜாக்கி ஷெராஃப் பாத்திரம் கிளைமேக்ஸ் பகுதியில் அடிமை போலத் தான் கையாண்டு வரும் ஆண், பெண் பாத்திரங்கள் முன்னால் அப்பாடலைப் பாடும் வகையில் தொலைக் காட்சியில் அப்பாடல் ஓடுவதாகக் காட்டப்பட்டிருக்கும்.

அந்த பாடல் வரிகளின் அர்த்தமானது, சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் குணாதிசயங்களை, அதில் நிகழ்ந்திருக்கிற மாற்றங்களை நமக்கு குறிப்பால் உணர்த்தும்.

இப்படி ஏதோ ஒரு தொடர்பை திரைக்கதையோடு குறிப்பிட்ட ‘பழைய பாடல்கள்’ கொண்டிருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே அந்த உத்தி பார்வையாளர்களை ஈர்க்கும்.

சமீபகாலமாகவே இது போன்ற இந்த உத்தி நம்மை பாடாய் படுத்தி வருகிறது.

கதை நிகழும் காலகட்டம், கதாபாத்திரத்தின் குணாதிசயங்கள், காட்சிகளின் தன்மை மற்றும் திரைக்கதையில் பின்னே வரும் சம்பவங்களை முன்னுணர்த்துதல் உட்படச் சில காரணிகளை முன் வைத்து ’பழைய பாடல்களை’ப் படங்களில் பயன்படுத்தப்படுவதே சரியானது.

அதை விட்டுவிட்டு, பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ‘ஸ்வீட் நல்லாயிருக்கு’ என்றவுடன், இலை முழுக்க அந்த இனிப்பைக் கொட்டிவிட்டு ‘சாப்பிடுங்க’ என்றால் எப்படியிருக்கும்? பழைய பாடல்களைப் பயன்படுத்துகிற உத்தியும் இன்று அப்படித்தான் மாற்றம் கண்டு வருகிறது.

உதயசங்கரன் பாடகலிங்கம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time