வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் தாக்குதல் காரணமாக தமிழ் நாட்டில் தென்னை விவசாயிகள் தான்கொணாத துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து ஓராண்டாகவே பல்லாயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் இதனால் வெட்டி வீழ்த்தப்பட்டு வருகிறது. இதனால் தான் வரலாறு காணாத அளவி இள நீர் மற்றும் தேங்காய் விலைகள் அதிகரித்து வருகின்றது;
தமிழக விவசாயிகளின் பிரதான தொழிலாக தென்னை வளர்ப்பு உள்ளது. ஒட்டுமொத்த தமிழகம் என்று பார்க்கும் போது சுமார் 16 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது! தமிழகத்தில் பரவலாக 29 மாவட்டங்களில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது என்ற வகையில் இந்த பாதிப்புகள் மேற்கு மாவட்டங்களிலும், தெற்கு மாவட்டங்களிலும் சற்றுக் கூடுதலாகவே உள்ளது என்கிறார்கள்!
இது குறித்து சட்ட சபையில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், ’’தென்னை மரங்கள் அழிந்துவிட்டால், அதை வெட்டி எடுத்துவிட்டு, வேறு விவசாயம் செய்ய முடியாது. வெள்ளை ஈ தாக்குதல் மட்டுமல்லாது, கேரள மஞ்சள் வாடல் நோய், தஞ்சாவூர் வாடல் நோய், கேரள வாடல் நோய் தாக்குதலும் அதிகரித்துள்ளன.
இதனால், தேங்காய் ஏற்றிச் சென்ற லாரிகளில், தென்னை மரங்களை ஏற்றி, செங்கல் சூளைக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர். வெள்ளை ஈ தாக்குதலுக்கு மருந்து கண்டறியாவிட்டால், 16 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்து விடும்.
காமராஜர் ஆட்சியில் நிலக்கடலை பயிர்களில் கம்பளி பூச்சி தாக்குதல் ஏற்பட்டது. அப்போது, விமானம் வாயிலாக 4 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு மருந்து அடித்து, நிலக்கடலை பயிர்களை காப்பாற்றினர். ஆனால், இப்போது வெள்ளை ஈ தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசு விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் பேரழிவு ஏற்பட்டுக் கொண்டுள்ளது எனப் பேசியுள்ளார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி
”கேரள மாநிலத்தை விட அதிகமாக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், சுல்தான்பேட்டை மற்றும் தஞ்சை உட்பட, 40க்கும் அதிகமான பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது
தற்போது கோவை மாவட்டத்தில் கேரளா வாடல் நோய் காரணமாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேற்கொண்டு 40 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் வெட்டப்பட உள்ளன.
தென்னை மரங்களை ஒரு ஏக்கர் வெட்டி அகற்றுவதற்கு இரண்டு லட்சம் ரூபாய், மீண்டும் நடவு செய்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் என மூன்று லட்சம் ரூபாய் செலவாகிறது. ஆனால் மறு நடவு செய்ய ஹெக்டேர் ஒன்றுக்கு தமிழ்நாடு அரசு 32 ஆயிரம் மட்டுமே வழங்கி வருகிறது, அதிலும் 50 % விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
கேரளாவிலேயே தற்போது கேரளா வாடல் நோய் இல்லை, ஆனால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கடந்த 2019 பொள்ளாச்சி தப்பட்டை கிழவன் புதூரில் நாலு ஏக்கர் தோப்பு பாதிக்கப்பட்டபோது, உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவு இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் ஏற்பட்ட கேரளாவில் இந்த நோயை வெற்றிகரமாக ஒழித்து விட்டார்கள், ஆனால் தமிழ்நாட்டில் தோட்டக்கலைத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் எவ்வித ஆராய்ச்சியும், எவ்வித கண்டுபிடிப்பும் செய்யாமல் தொடர்ச்சியாக அரசு நிதியை மட்டுமே வாங்கி காலத்தை வீணடித்து வருகிறார்கள்.
அடுத்ததாக வெள்ளை ஈ தாக்குதலால் தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை மரங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, உற்பத்தி 60 % குறைந்துள்ளது.
வெள்ளை ஈ தாக்குதலுக்கு வேளாண்மை பல்கலைக்கழக அதிகாரிகளும், வேளாண்மை துறையினரும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் கையாளாமல் கடமைக்கு மட்டுமே தண்ணீர் பீச்சி அடிப்பது, மைதா மாவை தண்ணீரில் கலந்து அடிக்க வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள், ஒரு தோட்டத்தில் விரட்டும்போது வெள்ளை ஈக்கள் அடுத்த தென்னந்தோப்புகளுக்குள் சென்று பதுங்கிக் கொள்கிறது.
ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் வெறும் 12 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு தாலுக்காக்களுக்கு கூட ஒதுக்கப்பட்டுள்ள தொகை போதாது. 29 மாவட்டங்களில் வெள்ளை ஈ கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், தமிழ்நாடு அரசு குறைந்தபட்சம் 800 கோடி ரூபாயை போர்க்கால அடிப்படையில் ஒதுக்கி அரசு உரிய மருத்துவத்தை செய்வதை தவிர வேறு வழியில்லை’’என்கிறார்.
Also read
இது கொங்கு மண்டலம் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் தாலுகாவில் 24 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். தென்னை விவசாயத்தை நம்பி 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. தற்போது அடித்து வரும் கோடை வெயிலின் வெப்ப அலையாலும் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. தென்னை மர குலைகள் முதல் குருத்து வரை பாதித்து மரங்கள் காப்பு திறன் இன்றி உள்ளது.
மேலும் லட்சக்கணக்கான மரங்கள் கருகி அழிந்து வருகிறது. தென்னை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலை துறை பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து ஒரு தென்னை மரத்திற்கு ரூ.15 ஆயிரம் நிவாரணமாக வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தற்போதுள்ள மரங்களை பாதுகாக்க ட்ரோன்கள் மூலம் மரங்களில் போர்க்கால அடிப்படையில் மருந்து தெளிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இது போன்ற நோய்கள் ஏற்பட்டபோது அந்த நாடுகள் இந்த வாடல் நோயை மீண்டும் வராத நோயாக விரட்டி அடித்துள்ளனர். அதையே தமிழகம் ஏன் ஒரு பாடமாக கொள்ளலாகாது என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். இதில் காட்டப்படும் அலட்சியம் இன்னும் இளை நீர் , தேங்காய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் தாறுமாறான விலை உயர்வுக்கும் வழிவகுத்துவிடும்.
அஜிதகேச கம்பளன்
மன்னிக்கவும். ஒரு திருத்தம் தென்னை பயிர் தோட்டக்கலை துறைக்கு கீழ் 2024 ஆம் ஆண்டில் தான் கொண்டு வரப்பட்டது. கவனத்தில் கொள்ளவும். இந்த தவறான புரிதல். நாளை விவசாயிகள் தோட்டக்கலை அதிகாரிகளை வெருப்பதற்கும் வன்முறைக்கும் வழிவகுக்கும் . திருதிக் கொள்ளவும்.நன்றி