தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் ஆண்டுக்கு ஆண்டு ஆண்களின் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது பெண்களின் தற்கொலைகளைக் காட்டிலும் இரண்டு மடங்காக உள்ள நிலையில் ஆண்கள் பாதுகாப்பிற்கு ஆணையம் அமைக்க வேண்டும் எனக் கூறப்படுவதை அலசுகிறது இந்தக் கட்டுரை;
நாட்டில் பெண்களுக்கு எப்படி மகளிர் ஆணையம் உள்ளதோ அது போல ஆண்களுக்கும் ஆடவர் ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மகேஷ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தகவல்களின் படி, 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்து உள்ளனர். அவர்களில் 81,063 பேர் திருமணம் முடிந்த ஆண்கள் ஆவர். 28,680 பேர் திருமணம் ஆன பெண்கள் ஆவர்.
இந்த ஆண்டில் மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 979 ஆண்கள் தற்கொலை செய்து உள்ளனர். இது 72 சதவீதம் ஆகும். பெண்களில் 45,026 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இது 27 சதவீதம் ஆகும் என அந்த மனு தெரிவிக்கின்றது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களின் புகார்களை ஏற்று கொள்ள வேண்டும் என்றும், திருமணம் ஆன ஆண்கள் புகார்களை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்…என்றும் அவர் உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை மனு தந்துள்ளார்.
இப்படியும் ஒரு காலம் ஏற்படும் என்றோ, நம் காலத்திலேயே நிலைமைகள் தலைகீழாகும் என கால் நூற்றாண்டுக்கு முன்பு ஆண்கள் நினைத்திருப்பார்களா..? தெரியவில்லை.
கால சுழற்சி ஆண்கள் பெண்களை அதிகம் துன்புறுத்தி வந்த நிலைமைகள் படிப்படியாக மாற்றம் கண்டு வருகிறது. தற்போது படித்த ஆண்கள் பெண்களை சமத்துவமாக மதிக்கின்றனர். கணவனும், மனைவியும் வேலைக்கு செல்லும் பல குடும்பங்களில் வீட்டு வேலைகளில் சரி பாதியை ஆண்களும் செய்கின்றனர்.
கன்ஸ்யூமரிசம் எனப்படும் நுகர்வு கலாச்சாரம் நவீன பெண்களில் பலரை மிகவும் தொற்றிக் கொண்டுள்ளது. ஆகவே, கணக்கற்ற புடவைகள், சுடிதார்கள், நகைகள், அலங்கார பொருட்கள் இவற்றின் மீது அதிக நாட்டம் கொள்கிறார்கள். இது குடும்பங்களின்பொருளாதாரச் சுமையை அதிகரிக்கிறது.
தற்போதும் ஆணாதிக்க சூழல் நம் சமூகத்தில் பெரிய மாற்றம் கண்டுவிடவில்லை. சாதி அமைப்பும், சடங்குகளின் மீதான நம்பிக்கைகளும் சூட்சுமமாக பெண்களை அடிமை சங்கிலியில் பிணைக்கவே செய்கின்றன. வரதட்சிணைக் கொடுமைகள் குறைந்துள்ளனவே தவிர, அறவே தடுக்கப்படவில்லை. இந்தச் சூழலிலும் பல முன்னோடி பெண்களின் போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கு பிறகும் பெண்களுக்கு தற்போது கிடைத்துள்ள சுதந்திரத்தை அவர்களில் சிலர் தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதையே மேற்சொன்ன புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டுக் குடும்ப அமைப்புகள் மாறி, தனிக் குடும்பங்கள் தான் தற்போது அதிகரித்துள்ளது. தனிக் குடும்பங்களில் பெண்களின் குரல்களே ஓங்கி ஒலிக்கின்றன..! அவர்களை கட்டுப்படுத்த மாமியார், நாத்தனார் என்ற உறவுகள் இல்லை. முன்பு மாமியார், நாத்தானார் உறவுகள் தான் கல்யாணம் ஆன பெண்களுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. தற்போது அதில் இருந்து அவர்கள் விடுபட்டுள்ளனர்.
கல்யாணம் ஆன ஆண்கள் என்னென்னவிதமான பிரச்சினைகளை மனைவியிடம் எதிர் கொள்கிறார்கள் என்று பார்த்தால், ஊரில் உள்ள தன் தாய், தந்தைக்கோ அல்லது கஷ்டப்படும் தன் சகோதர உறவுகளுக்கோ பொருளாதார உதவிகள் செய்வதை பல குடும்பங்களில் மனைவிமார்கள் அனுமதிப்பதில்லை. ஆகவே, மனைவியோடு சண்டை சச்சரவுகள் வருகிறது. இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் தன் உறவுகளுக்கு அவர்கள் உதவ முற்படும் போது, அதை துப்பறிந்து சில மனைவிகள் கண்டுபிடித்து கணவனோடு மல்லுகட்டுகிறார்கள். இது ஆண்களின் நிம்மதியை குலைத்துவிடுகிறது..என்பது பரவலான குற்றச்சாட்டாகும்.
அடுத்ததாக மனைவியைத் தவிர வேறொரு பெண்ணிடம் கணவன் பேசினாலோ, பழகினாலோ மனைவி இன்செக்யூரிட்டியாக உணர ஆரம்பிக்கிறார்கள். இதன் விளைவு கணவை வேவு பார்க்கிறார்கள். அவன் செல்போனை வாங்கி பார்த்து அவன் யார்,யாருடன் பேசியுள்ளான் என அறிந்து அவனை விசாரணைக்கு உள்ளாக்கி கேள்விக் கணைகளால் துளைக்கிறார்கள். வேலை பார்க்கும் இடத்திலோ அல்லது கல்லூரி காலத்திலோ ஏதோ ஒரு வகையில் பெண் நண்பர்களைக் கொண்டுள்ள ஆண்கள் மனைவியின் சந்தேக வளையத்தில் சிக்குகிறார்கள். அப்படி சிக்கிய பிறகு அவர்கள் நிம்மதி இழக்கிறார்கள்.
இன்னும் சில வீடுகளில் திருமணத்திற்கு முன்பு வரை வேலை முடிந்து இஷ்டத்திற்கு ஊர்சுற்றி அரட்டை அடித்துவிட்டு இரவு படுக்க மட்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த ஆண்கள் திருமணத்திற்கு பிறகு நல்ல நட்புகளைக் கூட படிப்படியாக இழந்து கொண்டே வந்து பிறகு முற்றிலும் இழந்து விடுகிறார்கள்.!
Also read
மேலும் தற்போது உணவுகளில் ஏற்பட்டுள்ள கலப்படங்கள் மற்றும் மாறி வரும் உணவு கலாச்சாரத்தால் ஆண்கள் அதிக அளவு ஆண்மைக் குறைபாட்டை சந்திக்கிறார்கள்..அது போன்ற நிலையில் உள்ள ஆண்கள் தங்கள் மனைவியின் அலட்சியத்தை பெறுகிறார்கள். அல்லது புறக்கணிப்பை பெற வேண்டியவர்களாகிறார்கள்.
காதலிக்கும் பெண்கள் ஆண்களால் ஏமாற்றப்படுவது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நடக்கிறது. ஆனால், காதலிக்கும் பெண்கள் ஆண்களை எக்ஸ்பிளாய்டேஷன் செய்து ஏமாற்றுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இதனால், ஆண்களுக்கான வாரியம் தேவையா? என்று தெரியவில்லை. இரு தரப்பிலும் சகிப்புத் தன்மை, அன்பு, அர்ப்பணிப்பு ஆகியவை தேவை. ஒருவரை ஒருவர் பிடிக்காவிட்டால், யாரும் ,யாரையும் துன்புறுத்தாமல் கண்ணியமாக விலகிச் செல்லலாம். கடன் தொல்லை, மேலைதிகாரி டார்ச்சர், பிசினசில் பணத்தை கோட்டை விடுவது.. போன்ற வேறு காரணங்களாலும் ஆண்களின் தற்கொலைகள் அரங்கேறுகின்றன. பெண்கள் மட்டுமே ஆண்களின் தற்கொலைகளுக்கு கரணமாக முடியாது. ஏற்கனவே மனித உரிமை ஆணையம் தான் இருக்கிறதே. அது இரு பாலருக்கும் பொது தானே!
சாவித்திரி கண்ணன்
எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் இரு பாலாருக்கும் வேலை இன்மையும் போதிய வருமானம் இம்மையும் தான். சீனா மற்றும் முன்னேறிய நாடுகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு இது போன்ற பிரச்சனைகள் எழுவதில்லை. மேலும் முதியோருக்கான காப்புறுதி திட்டங்கள் இந்தியாவில் மிக மிகப் பலவீனமாக உள்ளதும் ஒரு காரணமாகும்