பரபரப்பான மதிமுக நிர்வாக குழு கூட்டம் முடிந்தது. பிரச்சினைக்கு அடி நாதமான காரணம் அப்படியே இருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ளது தீர்வு அல்ல. பிரச்சினையின் தொடக்கமாகவும் இது இருக்கலாம். நிர்பந்திக்கப்பட்ட பிணைப்பு நீண்ட காலம் நிலைக்குமா? மல்லை சத்யாவால் நீண்ட காலம் மெளனித்து இருக்க முடியுமா?;
வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி, “துரை வைகோ – மல்லை சத்யா இடையே கருத்து வேறுபாடு தலையெடுத்தது. கற்பனைகளுக்கு ஏற்றவாறெல்லாம் செய்திகள் வந்தன. இன்று நிர்வாகக் குழு கூட்டத்தில் துரை வைகோவும் மல்லை சத்யாவும் மனம் விட்டு பேசினார்கள். இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர், கைகுலுக்கிக் கொண்டனர். இனி இருவரும் இணைந்து ஒற்றுமையாகப் பணியாற்றுவோம் என்ற சமிக்ஞையை தெரிவித்தனர்” எனத் தெரிவித்துள்ளார்
மதிகவில் கடந்த ஆறேழு ஆண்டுகளாக சாம்பலுக்கு அடியில் இருக்கும் கனல் போல கழன்று கொண்டிருந்த நெருப்பு தற்போது துரை வைகோவின் ராஜுனாமாவால் வெளி வந்தது.
வைகோ என்ற வசீகர ஆளுமையால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்திற்கு சென்று தங்கள் உடல்,பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த இளைஞர்கள் அனேகம். காலப் போக்கில் வைகோவின் அரசியல் தடுமாற்றங்களால் அந்த இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்த போதும் அந்தக் கலத்தில் இருந்து இன்று வரை அவ்ருக்காகவே அந்த இயக்கத்தில் இருப்பவர்கள் உள்ளனர்.
படு பயங்கர தோல்விகளுக்கு பிறகு, அற்ற குளத்து அரு நீர் பறவை போல பலர் மாற்று இயக்கங்களுக்கு போயினர். ’என்ன ஆனாலும் சரி, வைகோவுடன் இறுதி வரை இருப்போம்’ என இருப்பவர்கள் வெகு சிலர். அந்த வெகு சிலரும் வைகோ அதிரடியாய் வாரிசு அரசியலை மதிமுகவில் நுழைத்த போது விலகினார்கள். திருப்பூர் துரைசாமி, கோவை ஈஸ்வரன் ஆகியோர் அதில் முக்கியமானவர்கள். சென்ற ஆண்டு வைகோ வாரிசு அரசியலின் விளைவாய் கணேசமூர்த்தி தன் எம்.பி வாய்ப்பை பறி கொடுத்து மரணத்தை தழுவினார்.
ஆனால், மாறாத கொள்கை பிடிப்புடன், வைகோ மீதான பாசத்துடன் அந்த இயக்கத்தில் தொடர்பவர் மல்லை சத்யா! அவர் துரைவைகோவின் தலைமையை இன்னும் ஏற்கவில்லை. வைகோவை மட்டுமே நெஞ்சில் வரித்துக் கொண்டவர் அவர். அவரை தன் அன்பாலோ, ஆளுமையாலோ வென்றேடுக்க முடியாத துரை வைகோ ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்தார். மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்கினால் பழி விழும்… அவப் பெயர் ஏற்படும்…என்பதால் குயுக்தியாக தானே ராஜுனாமா செய்து ஒரு பிளாக்மெயில் அரசியலை அப்பாவிடம் செய்தார் துரை வைகோ.
எத்தனையோ சீனியர்கள் ராஜுனாமா தந்து போன போதெல்லாம் இப்படி நிர்வாகக் குழுவை கூட்டி சமாதானம் செய்தாரா வைகோ.? தன் மகனை விட்டால் கட்சித் தலைமைக்கு வேறு யாரையும் அவரால் சிந்திக்க முடியாத இயலாமையால் மகனுக்கு அடி பணிந்தார்.
Also read
துரை வைகோ மல்லை சத்யா மீது வைத்த அபாண்ட குற்றச்சாட்டுகள் பொய் என்பதற்கான விளக்கத்தை தர மல்லை சத்யா அனுமதிக்கப்படவில்லை. மல்லை சத்யா மீது துரை வைகோ வைத்த குற்றச்சாட்டை திரும்பப் பெறவுமில்லை. மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என மாவட்டக் குழுக்களை தீர்மானம் இயற்ற வைத்த துரை வைகோ அந்தச் செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரினாரா? நிர்வாகக் குழுவில் துரை வைகோவின் ஆட்கள் மல்லை சத்யாவை வசைபாடியது எப்படி..?
இந்தச் சூழலில் நிர்பந்தப்படுத்தப்பட்ட நிலையில் மல்லை சத்யா மெளனிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
நினைத்ததை சாதித்துக் கொண்டார் துரை வைகோ! துரை வைகோவின் தலைமையை ஏற்காதவர்கள் தொடர முடியாது என்பது அழுத்தமாக கட்சியினருக்கு உணர்த்தப்பட்டுள்ளது.
சாவித்திரி கண்ணன்
திராவிட இயக்க உணர்வாளர்கள் பலர் வைகோ ஈழம் சென்று வந்ததை பார்த்தும்
சுப்பிரமணியசாமி மை டெல்லி மக்களவை வளாகத்தில் மிரட்டியதாகவும் தன் உணர்ச்சி மிகுந்த பேச்சாலும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தார்.
தனிக்கட்சி துவங்கிய பின் செயலலிதா வை ஊழல் ராணி என்றும் கேடு கெட்டவன் என்றும் பேசிவிட்டு பொடா பாறையில் அடைந்ததற்கு பின்னர் அதிமுக வுடன் கூட்டணி வைத்தார்.
பின்னர் திமுகவுடன் கூட்டணி வைத்தார்.
நல்ல மனிதர்.ஆனால் நல்ல தலைவர் அல்ல.
.ஆனால் உணர்ச்சி வசப்பட்டு பல தவறான அரசியல் முடிவுகள் எடுத்து இறுதியில்
கட்சியை குடும்பச் சொத்தாக்கி விட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு இவர் செய்த உதவிகள் கணக்கில் அடங்காதவை.
இவரின் அரசியல் வீழ்ச்சி தமிழகத்திற்கு பேரிழப்பு ஆகும்.இவரின் வீழ்ச்சிக்கு காரணம் இவரின் நடவடிக்கைகளே காரணம்.