நேர்மையை பலியிட நிர்பந்திக்கபடும் நீதித் துறை!

‘ஆட்சியாளர்களுக்கு பயந்து சாதகமாக தீர்ப்பு தர வேண்டும் நீதித் துறை..’ என நிர்பந்திக்கும் விதமாக பாஜகவினர் அடுத்தடுத்து என நீதித் துறை மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்…ஜெகதீப் தன்கர், நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா, ராகேஷ் குமார்..எனச் சிலர் அதிகார அச்சுறுத்தல் தருவது எங்கே போய் முடியப் போகிறதோ..?

தன்னாட்சி கொண்ட துறைகளான சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை..ஆகியவற்றை சின்னாபின்னப்படுத்தி தன் அரசியல் எதிரிகளை பழி வாங்கும் ஆயுதமாக்கி செயல்பட்டு வருகிறது பாஜக அரசு. இது மட்டுமின்றி கவனர், குடியரசுத் தலைவர் போன்றோர்களையும் தங்கள் கைப்பாவையாக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் இயற்றும் சட்ட  மசோதக்களை காலவரம்பின்றி நிறுத்தி வைக்கும் பாசிச பாஜக அரசு.. தற்போது நீதித் துறையையும் தன் ஏவல் நாயாக்க நினைக்கிறது.

பல முறை பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களை, செயல்பாடுகளை கேள்வி கேட்காமல் கடந்து சென்ற நீதிமன்றங்கள்..தொடர்ந்து மக்கள் பாதிக்கப்படும் நிலை உணர்ந்து சில சமயங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு கடிவாளம் போடுவதும் நடக்கிறது. அந்த வகையில் பாதிக்கபடுவோரின் நியாயக் குரலுக்கு உச்ச நீதிமன்றம் செவி சாய்க்கும் போது பாஜக ஆட்சியாளர்கள் பதறுகிறார்கள்! அரசின் அதிகார அத்துமீறல்களை சுட்டிக் காட்டும் போது கொந்தளிக்கின்றனர்.

இந்த வகையில் நீதித் துறையின் மீதான பாஜகவின் பகை உணர்வு நாளுக்கு நாள் கொழுந்துவிட்டு எரிந்த வண்ணம் உள்ளது.

நீதித் துறை, மன்னர்களான தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், நீதித் துறை மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவிட்டது, – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கில்!

அப்போது முதல் ஆரம்பித்தது இந்த நீதித் துறைக்கு எதிரான வன்மம்!

முதலில் தன்கர் வந்து தாக்குதலை ஆரம்பித்து வைத்தார்!

நாம் எங்கே போகிறோம்..?

என்ன நடந்து கொண்டிருக்கிறது..?

நீதிமன்றங்கள் என்ன சூப்பர் நாடாளுமன்றமா?

ஆளுநர், குடியரசுத் தலைவர்களுக்கெல்லாம் யாருமே உத்திரவிட முடியாது..!

எனவரம்பு மீறிப் பேசி நாட்டின் குடியரசுத் துணைத் தலைவரே ஒரு தாதாவைப் போல உச்ச நீதிமன்றத்தை சாடினார்….! அத்துடன் விடாமல் தீ பிடித்த வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட  நீதிபதி அலகாபாத் கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட விவகாரத்தையும் கிளப்பினார். ஜாக்கிரதை, உங்க பலவீனங்கள் எங்களுக்கு தெரியாதா? என்ற ஸ்டைலில் உக்கிரதாண்டவமாடினார்.

நிஷிகாந்த் துபே (பாஜக எம்.பி)

அடுத்த ஆட்டத்தை நிஷிகாந்த் துபே என்ற எம்.பி ஆடி நீதி துறையை மிரட்டினார்;

நாட்டின் மதரீதியிலான போரை உச்ச நீதிமன்றம் தூண்டி வருகிறது. தனது எல்லை வரம்பை தாண்டி உச்ச நீதிமன்றம் செல்கிறது.

“உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம்.

நீதிபதிகள் ஒருபோதும் சட்டம் இயற்றும் நாடாளுமன்றமாகிவிட முடியாது. இன்றைய சூழலில் எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம்.

எல்லாவற்றுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றால் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் எதற்கு? அவற்றை இழுத்து மூடி விடலாம்”

அவரையடுத்து தினேஷ் சர்மா என்ற எம்.பி தினவெடுத்த சிங்கம் போல கர்ஜித்தார்!

இதென்ன நீதித் துறையையே சாடுகிறீர்கள் என எதிர்கட்சிகள் கேட்ட போது,

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா “பாஜக எப்போதும் நீதித்துறையை மதித்து வருகிறது,  அதன் பரிந்துரைகளையும் உத்தரவுகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளது.  நீதிமன்றங்கள் நமது ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத பகுதி ” என்று கூறி, நட்டா சமாளித்தார். அதே  சமயம் பிரதமர் இது போல பாஜக எம்.பிக்கள் நீதித் துறையை நிந்திப்பது குறித்து வாய் திறக்காமல் அமைதி காத்து வருகிறார்.

முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள் தன் பதவி காலத்தில் எத்தனையோ தீர்ப்புகளை இந்துத்துவர்களுக்கு ஆதரவாக கொடுத்தவர் என்று விமர்சிக்கப்பட்டவர். ஆனால், பல விவகாரங்களில் நியாயத்தின் பக்கமும் உறுதியாக நின்றுள்ளார்!

அப்படி நியாயத்தின் பக்கத்தில் நின்றதற்கான விலையை அவர் தர வேண்டாமா…? ஓய்வு பெற்றாலும் சும்மா விடமாட்டோம். இவரை டிஸ்டர்ப் பண்ணுவதன் மூலம் இப்ப பதவியில் இருக்கும் நீபதிகளுக்கும் ஒரு பயம் வர வேண்டும் . அது தான் ஒன்றிய பாஜகவின் திட்டம்.

இத்தனைக்கும் பதவியில் இருந்த போது இவர் வீட்டு விநாயகர் பூஜைக்கு  அன்று அழையா விருந்தாளியாகச் சென்று பிரதமர் மோடியே கலந்து கொண்டார்.

‘அவருக்கே கூட இன்றைக்கு ஆப்பு வைக்கும் போது நீங்கள்ளாம் எம் மாத்திரம்..?’ என இன்றைய நீதிபதிகளுக்கு சொல்ல வருகிறார்கள் சங்கிகள்!

விஷயம் இது தான்:

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது! புகார் அளித்தது வேறு யாருமல்ல, மற்றொரு நீதிபதி ராகேஷ் சர்மா! இந்துத்துவ சக்திகளுக்கு நெருக்கமானவர். அவரது குற்றச்சாட்டு இது தான்;

சமூக செயற்பாட்டாளரும்- குஜராத் கலவரத்தில் மோடியின் அட்டுழியங்களை அம்பலப்படுத்திவருமான தீஸ்தா சீதல்வாட்டின் ஜாமீன் மனுவை விசாரிக்க ஜூன் 2023ல் அடுத்தடுத்து இரண்டு அமர்வுகளை விடுமுறை நாளில் அக்கறை எடுத்து செய்தாராம், அன்றைய தலைமை நீதிபதி சந்திர சூட். ஆகவே, அது குறித்து சந்திர சூட்டை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமாம்….!

தீஸ்தா சீதல்வாட் ஒரு உண்மையான சமூக செயற்பாட்டாளர். அவர் அரசியல் நோக்கத்திற்காக பழிவாங்கப்படுகிறார். ஆகவே, அவரது ஜாமீன் மனு மிக நியாயமானது. மேலும், நாட்டின் முதல் அட்டர்னி ஜெனரல் எம்.சி. சீதல்வாட்டின் பேத்தி தான் இந்த தீஸ்தா சீதல்வாட்…!  ‘மோடிஜீயையே அம்பலப்படுத்திய இவரது ஜாமீன் வழக்கில் தலைமை நீதிபதி எப்படி அதீத அக்கறை காட்டலாம்?’  என்பதே சங்கிகளின் நீண்ட நாள் குமுறலாகும்.

அதை சமயம் பார்த்து தற்போது தூசி தட்டி எடுக்கின்றனர்..!

ஒரு நாட்டில் நீதித் துறை சுயேட்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட முடிந்தால் தான் அங்கே நீதி நிலைக்கும், நியாயங்கள் கிடைக்கும். தர்மங்கள் நிலை நாட்டப்படும். ஆனால், நீதித் துறையையே தனக்கு சாதகமாக வளைத்து போட முரட்டுத்தனம் காட்டுகிறது ஒன்றிய பாஜக அரசு.

மக்களாகிய நாம் தற்போது நீதித் துறையின் மீது ஆட்சியாளர்கள் தொடுக்கும் தாக்குதலை வேடிக்கை பார்க்கக் கூடாது. நீதித் துறையை பாதுகாக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்.

நீதித் துறை சுயேட்சையாக செயல்படுவதற்கும், நேர்மையாக செயல்படுவதற்குமான சூழல்கள் உருவாக்கப்பட வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time