துணைவேந்தர் மாநாட்டை தடுப்பது முதல்வர் கையில்தான்!

-சாவித்திரி கண்ணன்

துணைவேந்தர் மாநாடு நடக்குமா? நடக்காதா? என்ற விவாதம் கல்வி புலத்தில் கனஜோராக போய்க் கொண்டுள்ளது. முதல்வர் இதில் வாய் திறக்காமல் உள்ளார். என்ன செய்ய வேண்டும் ஸ்டாலின்…? தெலுங்கானாவில் தமிழிசையின் கொட்டத்தை  அடக்க சந்திரசேகர ராவ்  செய்தது என்ன..? நினைவுபடுத்துகிறேன்;

நான் சொல்வதெல்லாம் முதல்வர் முடிவெடுத்தாலே போதும், அது நடக்காது!

இதில் முதல்வர் இரண்டுங்கெட்டானாக இருந்தால், ஆளுநர் அடித்து சாதித்து விடுவார்…! அப்படி நடந்து விடக் கூடாது என்றே இதை எழுதுகிறேன்.

ஏனென்றால், ஆளுநருக்கு எப்போதும், எந்த தயக்கமும், குழப்பமும் இருந்ததில்லை –மனிதர்களை பிரித்தாளும் சனாதனக் கருத்தியலை பரப்புவதில்!

பதவியேற்ற நாள் முதலாய்  நாள்தோறும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்.

திருவள்ளுவருக்கு காவி உடை போட்டார்! சனாதனத்தை அம்பலப்படுத்திய வள்ளலாரையே சனாதனி என்றார்!

பெரியார் பல்கலைக் கழகத்தில் பெரியார் குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் சுப்பிரமணியனை சொல்லொணா துன்பத்திற்கு ஆளாக்கினார்..!

வருடா வருடம் ஊட்டியில் துணைவேந்தர் மாநாடுகள் நடத்தி உயர்கல்வியில் சனாதனத்தை திணித்தார்..!

ஆனால், மாநில அரசு விரும்பாவிட்டால், ஆளுநரால் துணைவேந்தர் மாநாட்டை நினைத்து கூட பார்க்க முடியாது.

ஆனால், மாநில அரசோ கடந்த காலங்களில் மெளனித்து தான் கிடந்தது.

இப்படி நாளும், பொழுதும் கவர்னர் ஆடிய ஆட்டத்தை கண்டும் காணாமல் போகிறதே திமுக அரசு என நானும் தொடர்ந்து எழுதி வருகிறேன். ..!

ஆரம்பத்திலேயே அரசு தரப்பில் ‘’கல்வியில் மத நம்பிக்கைகளை திணிக்கக் கூடாது’’ என ஆளுநருக்கு கடுமையாக அறிவுறுத்தி இருக்க வேண்டும்…சொல்லவில்லையே…!

நம்ம ஆட்சியாளர்களோ, திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, அதை நடைமுறைப்படுத்த துணிவின்றி, கவர்னர் ஆடிய ஆட்டத்தையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்தனர் என்பது தான் இந்த நான்காண்டு அனுபவம்! ஆளு நர் ஆர்.என்.ரவிக்கு மேடையிலேயே பதில் அளித்த உயர் கல்வி அமைச்சர் பொன்முடி பிறகு உயர்கல்வித் துறையில் இருந்து விலக்கப்பட்டார்.

ஆளுநரின் தவறுகளை உரிய நேரத்தில் சுட்டிக் காண்பிக்கத் துணிவின்றி ஆரம்பத்தில் இருந்தே கூட்டணிக் கட்சித் தலைவர்களை அறிக்கைவிட வைப்பது, கூட்டணிக் கட்சிகளை போராடச் சொல்லி பம்மி பதுங்கி வேடிக்கை பார்ப்பது…. என்ற கோழைத்தனமான அணுகுமுறையை கையாள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தன்னுடைய கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கவர்னரின் தேனீர் விருந்தை புறக்கணித்த நிலையிலும் கூட, முதல்வர் அமைச்சர் பரிவாரங்களுடன் கிண்டி மாளிகை சென்று கலந்து கொள்வார். எனில், மக்களுக்கு நீங்க என்ன மெசேஜ் தருகிறீர்கள்..? குழப்பம் தானே ஏற்படும்.

இது போன்ற எதிர் அரசியலை கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் செய்த போது, அங்கு மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தெருவில் இறங்கி கவர்னரை எதிர்த்து போராடினர். துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் உத்தரவுகளை மீறிச் செயல்பட்டனர். வெளி நாட்டுப் பயணங்களை மேற்கொண்ட போது கவர்னரை சந்தித்து தெரியபடுத்த வேண்டும் என்ற மரபை மீறினார் பினராயி விஜயன். ”கவர்னரை விமர்சித்த அமைச்சரின் பதவியை பறிக்க வேண்டும்” என்ற ஆரிப் முகமதுகான் அலறலை துச்சமாக புறந்தள்ளினர்.

”இது எங்கள் மண். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இது எங்கள் ஆட்சி. நீ வெளியில் இருந்து வந்த ஆள்! மரியாதை தந்தால் மட்டுமே உனக்கும் திருப்பி மரியாதை தார்ப்படும்”  என நன்கு ஆரிப் முகமதுகானுக்கு புரிய வைத்தனர் கேரள கம்யூனிஸ்டுகள்! அதன் பிறகு தான் சற்றே அடங்கிப் போனார் கவர்னர்.

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஆளுநர் தமிழிசை வரம்பு மீறி அதிகார ஆட்டம் போட்டார்.  இதனால் சட்ட சபை கூட்டத் தொடருக்கு கவர்னரை பேசவே அழைப்பதில்லை…என உறுதிகாட்டினார் சந்திரசேகர ராவ்!

”நீ என்ன தொடங்கி வைப்பது? எங்களுக்கே தொடங்கவும் தெரியும், முடிக்கவும் தெரியும்” என கவர்னரை அழைப்பதையே முற்றிலும் தவிர்த்து விட்டார் சந்திரசேகர ராவ்! ”நாங்க உனக்கு மரியாதை கொடுத்தால் தான் உனக்கு மவுசு. நாங்களே உன்னை மதிக்காவிட்டால், இந்த தெலுங்கானாவில் ஈ, காக்கா கூட உன்னை மதிக்காது” என தமிழிசையை அரசின் அனைத்து நிகழ்விலும் தவிர்த்தார், சந்திரசேகர ராவ்!

அதன் உச்சமாக கவர்னர் முக்கியத்துவம் பெறும் குடியரசு தினவிழாவை மாநில அரசு நடத்தவே இல்லை. ஆணவப் போக்குள்ள தமிழிசை செளந்திரராஜனோடு உட்கார்ந்து பார்க்க வேண்டிய தலை எழுத்து எனக்கில்லை’ என குடியரசு தின விழாவையே முற்றிலும் தவிர்த்து, அதற்கு கொரானா பரவல் காரணத்தை கூறிவிட்டார் சந்திரசேகர ராவ்! இதற்காக நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து குடியரசு தினவிழா நடத்த உத்தரவு வாங்கப்பட்டது. ஆயினும் துணிச்சலாக, ”தவிர்த்தது, தவிர்த்தது தான், முடியாது ‘ என உறுதிபட இருந்துவிட்டார் சந்திரசேகர ராவ்!

இவற்றை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்  தமிழக முதல்வர் ஸ்டாலின்.

பல்கலைக் கழகங்கள் மாநில அரசால் உருவாக்கப்பட்டவை.

பல்கலைக் கழக நிர்வாகங்கள் என்பவை மாநில அரசால் வழி நடத்தப்படுபவை!

பல்கலைக் கழக துணைவேந்தர்களின்  சம்பளத்தை தருவதும் மாநில அரசு தான்!

அவ்வளவு ஏன்..? ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதற்கான செலவுகளை தருவதும் மாநில அரசு தான்.

ஆக, மாநில அரசுக்கு இதை தடுக்க வேண்டும் என்ற முனைப்பும், உறுதிப்பாடும் இல்லாததே பிரச்சினை!

துணைவேந்தர்கள் ஆளுநர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்பது முதல்வர் விருப்பம் என துணைவேந்தர்களுக்கு உணர்த்தப்பட்டாலே போதும் ஒருவரும் அங்கு தலைகாட்ட மாட்டார்கள்! மாறாக முதலமைச்சர் மெளனித்து இருந்தால், துணைவேந்தர்கள், ’எதற்கு வம்பு, சும்மா அங்கும் தலை காட்டிவிட்டு வரலாமே’ என புறப்பட்டுவிடுவார்கள்.

துணைவேந்தர் மாநாட்டிற்கான செலவுகளை அரசு செய்யாது என்றோ, அதற்கு மாநில அரசு அதிகாரிகள், பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது  என்றோ உணர்த்தி இருந்தாலோ..கூட போதும் ஆளுநர் அன்றே அடங்கி போயிருப்பார்.

சரி, அப்போது தான் இவற்றையெல்லாம் செய்யத் துணிவில்லை என்றால், நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகுமா..?

கூட இருக்கும் பரிவாரங்களை அறிக்கைவிட வைத்து தான் வாய் திறக்காமல் அமைதி காப்பது ஆட்சித் தலைமைக்கு இலக்கணமல்ல, முதல்வரே!

உங்கள் உறுதிபாட்டினை தெரிவியுங்கள்! மக்கள் உங்கள் பக்கம் தான் நிற்பார்கள்!

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time