ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய கட்டாயம் எப்படி உருவானது…? ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களின் தன்மை என்ன? அதிமுக அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்களை விசாரிக்க தடையாக ஆளுநர் இருந்ததை உச்ச நீதிமன்றம் எப்படி பார்க்கிறது…? – நீதிபதி ஹரிபரந்தாமன் அலசல்;
மக்களால் தேந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தன் மாநில மக்களின் நலன்களை காக்க இயற்றிய சட்ட மசோதாக்களை நடைமுறைப்படுத்த முடியாமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எப்படியெல்லாம் தடை போட்டார் என்பது இந்த வழக்கில் தெளிவாக அம்பலப்பட்டது. 2020 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டசபை இயற்றிய 10 சட்டங்களை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு. அந்த 10 சட்டங்களில், 2 சட்டங்கள் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள்.
ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தாலே சட்டசபை இயற்றிய சட்டம் , சட்டமாக ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில், துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரிடம் இருந்தது . பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் ஆவார்.
துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து மாற்றி தமிழ்நாடு அரசிடம் அளிப்பதே மேற் சொன்ன 10 சட்டங்கள்.
ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட அந்த சட்டங்களின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார் ஆளுநர்.
எனவே, அக்டோபர் -2023 இல் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் பிரிவு 32 இன் கீழ் ரீட் மனு தாக்கல் செய்தது. ஆளுநர் செயல்படாமல் இருப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டது இந்த ரிட் மனு.
இந்த ரிட் மனுவில் மேற் சொன்ன 10 சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் அந்த சட்டங்களை கிடப்பில் போட்டுள்ளதற்கு தகுந்த நியாயம் வேண்டியதுடன் மேலும் 3 மிக முக்கியமான குறைகளையும் தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றத்தை வேண்டியது தமிழ்நாடு அரசு.
அந்த மூன்று குறைகளில் ஒன்று, முன்னாள் மந்திரிகள் மீது லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கை விசாரிப்பதற்கு ஆளுநர் அனுமதி தராமல் இழுத்தடிப்பதால் அனுமதியளிக்க வேண்டும் என்பது.

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மேல் மேற்சொன்ன லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர செப்டம்பர் 12, 2022 அன்று தமிழ்நாடு அரசு ஆளுநரிடம் அனுமதி கோரியது. அதற்கு இது நாள் வரை ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. அதேபோல முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது மேற்சொன்ன லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர மே-15, .2023 அன்று தமிழ்நாடு அரசு ஆளுநரிடம் அனுமதி கோரியது. அதற்கும் இதுநாள் வரை ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. இது ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை கூட நடத்திவிடாமல் அவர்களை பாதுகாக்க முயற்சிக்கும் ஆளுநரின் அரசியல் நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக உள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் பி வி ரமணா மற்றும் டாக்டர் சி விஜயபாஸ்கர் ஆகியோர் மீதும் மேற்சொன்ன லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர டிசம்பர்-12, 2022 அன்று தமிழ்நாடு அரசு ஆளுநரிடம் அனுமதி கோரியது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு நவம்பர் 10, 2023 அன்று அறிவிப்பு அனுப்பிய பின்னரே, நவம்பர் -13, .2023 அன்று ஆளுநர் இந்த குற்ற வழக்கை விசாரிக்க அனுமதி அளித்தார்.
அதே போல, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மே-11,. 2022 அன்று தமிழ்நாடு அரசு ஆளுநரிடம் அனுமதி கோரியது. உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு நவம்பர் 10, 2023 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில் அறிவிப்பு அனுப்பிய பின்னரே நவம்பர்- 18, 2003 அன்று ஆளுநர் இந்த குற்ற வழக்கை விசாரிக்க அனுமதி அளித்தார். இவை உச்ச நீதிமன்றம் குட்டு வைக்காவிடில் ஆளுநர் இந்த ஊழல்வாதிகளை அடை காக்கும் கோழி போல பாதுகாப்பதையே தன் கடமையாக தொடர்ந்து கொண்டிருப்பார் என்பதையே நமக்கு புலப்படுத்துகிறது.
அதிக வருடங்கள் சிறையில் இருந்த சிறைவாசிகளை தண்டனை காலத்திற்கு முன்னரே விடுவிப்பது சம்பந்தமான அரசின் கோப்புகளிலும் ஆளுநர் உரிய உத்தரவு பிறப்பிக்காமல் மிகுந்த காலதாமதம் செய்தார் என்பது, இரண்டாவது குறைபாடாக தனது ரிட் மனுவில் தமிழ்நாடு அரசு கூறி இருந்தது.
ஆளுநர் தரப்போ, அரசு அனுப்பிய 580 கோப்புகளில் 362 கோப்புகள் சம்பந்தப்பட்ட நபர்களை விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும் ,165 கோப்புகள் நிராகரிக்கப்பட்டது என்றும், 53 கோப்புகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்கள் நியமனம் சம்பந்தமான கோப்புகளிலும் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துகிறார் ஆளுநர் என்று மூன்றாவது குறைபாடாக மேற்சொன்ன ரிட் மனதில் தமிழ்நாடு அரசு கூறி இருந்தது. இதன் மூலம் அரசு ஊழியர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் அதீத தாமதங்களும், நிர்வாகம் ஸ்தம்பிப்பதும் எடுத்துச் சொல்லப்பட்டிருந்தது.
வழக்கு தாக்கல் செய்யப்படும் வரை, ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் மொத்தம் உள்ள 14 உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள் மட்டுமே செயல்படுவதாகவும், மற்ற 10 உறுப்பினர்களின் இடங்கள் காலியாக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு அந்த வழக்கில் கூறியிருந்தது.
இதனால் அரசு பணிகளுக்கு நியமனம் செய்வது பெருமளவில் நடைபெற முடியாமல் நிர்வாகம் செயல் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது என்று கூறியது தமிழ்நாடு அரசு.
இந்த விபரங்கள் யாவருக்கும் ஒன்றை தெளிவாக தெரிவிக்கின்றது. அதாவது, எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்கள் எதுவாக இருந்தாலும், அங்கே ஆட்சி நடத்துவதில் மிகுந்த சிக்கலை உண்டாக்குவது என்பதே ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் திட்டம். அந்த திட்டத்தை நிறைவேற்றுபவர்களே ஆளுநர்கள். ஆகவே, பாதிக்கப்படும் மாநிலங்கள் மீதான கரிசனமும், கவலையும் உச்ச நீதிமன்றத்திற்கு ஏற்பட்டது வியப்பில்லை.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேற்சொன்ன வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு- நீதிபதி பரிதிவாலா மற்றும் நீதிபதி மகாதேவன் அமர்வு- வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை. ஏப்ரல் -8, 2025 அன்று வழங்கியது.
Also read
அந்த தீர்ப்பில் ,மேற்படி 10 சட்டங்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என்றும், எனவே அவை சட்டங்கள் ஆகிறது என்றும், அரசமைப்புச் சட்டம் பிரிவு 142 வழங்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் அறிவித்தது.
ஆனால், மற்ற மூன்று குறைகள் சம்பந்தமாக எந்த உத்தரவும் அளிக்கவில்லை.
இந்த தீர்ப்பை ஏன் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று கூறலாம் என்பது பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்
ஓய்வு பெற்ற நீதிபதி
சென்னை உயர் நீதிமன்ற
Leave a Reply