அரசு கல்லூரி முதல்வர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். ஆனாலும் அதில் திருப்தி அடையாமல் ஏழை, எளிய மாணவர்களிடம் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பேனரில் வசூல் வேட்டை நடத்தி கல்லா கட்டி வருகின்றனர். இது கல்லூரி கல்வி இயக்குநரகத்திற்கு தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா…?
கல்லூரி கல்வி இயக்குநரகம் தமிழகத்தில் இயங்குகின்ற அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம், ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனம், நீதி ஆகியவற்றினை வழங்கி அதனை கண்காணித்தும் வருகின்றது.
மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை கல்லூரி கல்வி இயக்குநரகம் ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு கடிதம் மூலமாக அல்லது அரசாணை மூலமாக அறிவுறுத்தி வருகின்றது. கல்லூரி கல்வி இயக்குனரகம் அரசாணை வழங்குவதோடு, தன் கடமை முடிந்து விட்டதாக கருதி, அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடைபெறும் குளறுபடிகளையும், அரசு விதிமுறைகளைமீறி செயல்படுவதையும் கண்காணிக்காமல், மாணவர்களின் புகார்களை தீர்க்காமல், கல்வி கட்டணத்தை அதிகமாக பெறும் கல்லூரி முதல்வர்களை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கின்றது.
இதனால் ஏழை,எளிய மாணவ மாணவியர்கள் மிகுந்த இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்ற்னர். இதன் விளைவாய் சிலர் கல்லூரியிலிருந்து விலகி இடை நிற்றலுக்கு ஆளாகின்றனர்.
கல்வி கல்லூரி கல்வி இயக்குநரகம் கல்விக் கட்டணத்தை ஒவ்வொரு கல்வி ஆண்டும் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கடிதங்கள் வாயிலாக அரசு கல்லூரிகளுக்கு வழங்கி அதனை நடைமுறைப்படுத்த அறிவுறுத்துகின்றனர்.
இதில் நகரங்களில் உள்ள கல்லூரிகள் ஓரளவுக்கு அரசின் ஆணைகளை பின்பற்றி கல்விக் கட்டணத்தை பெற்று வருகின்றனர். ஆனால், நகரப்புறங்களல்லாத இடங்களில் அமைந்திருக்கும் பெரும்பாலான அரசு கலை கல்லூரிகள் அரசின் ஆணைகளை பின்பற்றுவதில்லை. அங்கிருக்கும் கல்லூரி முதல்வர்கள் தங்களை அந்த கல்லூரியின் மன்னனாக நினைத்துக் கொண்டு, தாறுமாறாக கல்லூரி கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து ஏழை எளிய மாணவர்களிடம் அட்டைப் பூச்சிகள் ரத்தத்தை உறிஞ்சுவது போல பணம் வசூலிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் கல்வி கட்டணங்கள்;
இளங்கலை பாடங்களுக்கு 525 ரூபாயிலிருந்து 1025 ரூபாய் வரை
முதுகலை பாடப்பிரிவிற்கு 885 ரூபாய் வரை!
அதிகாரபூர்வமாக நிர்ணயிக்கப்பட்டதாகும்.
இந்த கல்விக் கட்டணத்தை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளும் தங்களுடைய கல்லூரி இணையதளத்தின் வழியாக தெரிவிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர்கள் வருடம் தோறும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை வழங்கி வருகின்றனர்.
சில கல்லூரிகள் இந்த கல்வி கட்டணத்தை இணையதளத்தில் பதிவிட்டு இருக்கின்றனர், ஆனால், பெரும்பாலான கல்லூரிகள் இதனை பதிவிடாமல் கல்லூரி கல்வி இயக்குநரகத்தை ஏமாற்றுகின்றன. இதனால் மாணவர்கள் தாங்கள் என்ன விதமான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரியாமல் கல்லூரி கூறுகின்ற அதிகப்படியானக் கல்விக் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.
அரசின் கல்விக் கட்டணத்தை மீறி பெரும்பாலான அரசுக் கல்லூரிகள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக தங்களுடைய விருப்பம் போல் கட்டணத்தை நிர்ணயம் செய்து வசூலித்து வருகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகமானது உயர்கல்வித்துறை மூலமாகவோ அல்லது கல்வி கல்லூரி இயக்குநரகம் மூலமாக எவ்வித அனுமதியும் பெறாத அமைப்பாகும். இதன் மூலமாக பெறப்படும் கட்டணமானது கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறி கல்லூரி முதல்வர்கள் இதனை நடத்தி வருகின்றனர்.
ஆனால் பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்கள் தங்களுடைய இலாப நோக்கத்திற்காக அதிகப்படியான நிதியினை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியானது ரூபாய் ஐம்பதில் இருந்து ரூபாய் 3,500 வரை கல்லூரி முதல்வர்கள் தங்களுடைய தேவைக்கு ஏற்ப பெற்று வருகின்றனர். அதிகப்படியான கட்டணத்தை வசூலிப்பதைப் பற்றி கல்லூரி முதல்வர்கள் கூறும் பொழுது இது பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் வேலை பார்க்கின்ற ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பதாகும்.
கல்வி இயக்குநரகம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கல்லூரிக்கும் சுற்றறிக்கை அனுப்பி ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு கவுரவ விரிவுரையாளர்கள் தேவைப்படுகின்றனர் என்ற புள்ளி விவரத்தின்படி கௌரவ ஆசிரியர்களை நியமிக்கின்றது. அப்படி இருக்கும் பொழுது பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வசூலிக்க வேண்டிய அவசியம் என்ன..?
இதனால் இளங்கலை மாணவர் சேர்க்கையின் போது 1,255 ரூபாய் செலுத்த வேண்டிய இடத்தில் 3,500 இல் இருந்து 4,500 வரை மாணவர்களிடம் கட்டாயமாக நிதி வசூலிக்கப்பட்டு வருகின்றது.
சென்னை போன்ற நகரங்களில் சில அரசு உதவி பெறும் கல்லூரிகள் இன்றளவும் அரசு நிர்ணயித்த கட்டணமான 525 ரூபாய் மட்டுமே வசூலித்து வருகின்றனர், இவர்கள் எவ்வித பெற்றோர் ஆசிரியர் கழக நிதியையும் மாணவர்களிடமிருந்து பெறுவதில்லை. ஆனால், அரசு கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகளை விட பன்மடங்கு கல்விக் கட்டணத்தை வசூலிப்பது தமிழ்நாட்டில் நடைபெறும் சமூக நீதி அரசிற்கு அவப்பெயரை உண்டாக்குவதற்காக கல்லூரி முதல்வர்களால் திட்டமிட்ட செயலாகும்.
மாநிலக் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக இதுவரை 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகின்றது. சில கல்லூரிகளில் 100 இல் இருந்து 150 ரூபாய் வசூலிக்க வசூலித்து வருகின்றனர். இதைக் கூட ஏதாவது அத்தியாவசிய எதிர்பாராத செலவுகளுக்கு பயன்படுத்த கேட்கிறார்கள்.. என்று கருத இடமுண்டு.
ஆனால், பேராசை கொண்ட சில கல்லூரி முதல்வர்களோ, தாங்கள் பணம் ஈட்டுவதற்காக இளங்கலைப் படிக்கின்ற மாணவர்களை சீருடை அணிவதற்கு கட்டாயப்படுத்துகின்றனர்.

இதன் காரணமாக ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 3,500 இல் இருந்து பத்தாயிரம் ரூபாய் வரை சீருடைக்காக கல்லூரி முதல்வர்கள் கைகாட்டுகின்ற தையல்காரரிடம் பணத்தை வழங்கி சீருடைப் பெறுகின்றனர். இதன் காரணமாக கல்லூரி முதல்வர்கள் பெரிய அளவு பணத்தை மாணவர்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெற்று வருகின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் வருடத்திற்கு குறைந்தது ஆயிரம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.ஆயிரம் மாணவர்கள் படித்தால் அவர்களிடம் இருந்து குறைந்தது 500 லிருந்து 1000 ரூபாய் வரை அதாவது ஒரு வருடத்திற்கு குறைந்தது 10 லட்சம் ரூபாய் வரை கல்லூரி முதல்வர்கள் பெற்று வருகின்றனர்.
Also read
கல்லூரி முதல்வர்கள் இவ்வாறு மறைமுகமாகப் வசூலிக்கின்ற பெற்றோர் ஆசிரியர் கழக நிதி போன்ற இதர ரசீதுகளை அரசின் தணிக்கை குழுவிடம் காண்பிப்பதில்லை. தணிக்கையும் செய்வதில்லை என்பதே உண்மையாகும்.
இவ்வள்வு அட்டுழியங்கள் அரசு கள்ளூரிகளில் நடந்து கொண்டிருக்கையில் கல்லூரி கல்வி இயக்குனர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பது தமிழக அரசுக்கு இழைக்கின்ற துரோகமாகும்.
பல முறை பல தரப்பட்ட ஆசிரியர் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கவனத்திற்கு இந்த கட்டணக் கொள்ளையை கவனப்படுத்தியும் இது வரை நடவடிக்கை இல்லை. இனியாவது, வருகின்ற கல்வி ஆண்டு முதல், ‘அரசு கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி எவ்வித கல்வி கட்டணத்தையும் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பேனரிலோ, வேறு வகையிலோ வசூலிக்கக் கூடாது. அவ்வாறு வசூலிக்கின்ற கல்லூரி முதல்வர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்ற அரசாணையை அரசு கல்லூரி கல்வி இயக்குனரகம் வெளியிட்டு எச்சரிக்கை செய்வதோடு, கண்காணிக்கவும் வேண்டும்.
பேராசிரியர்.கி.கதிரவன்
Leave a Reply