தமிழக அரசை குறை கூறவும், சமூக நீதிக்கு எதிரான சனாதனக் கருத்தை திணிக்கவும் ஆளுநர் நடத்திய மாநாட்டில் 52 துணை வேந்தர்களில் 34 பேர் பங்கேற்று உள்ளனர். இதில் உறுதியான நிலைபாடு எடுக்க முடியாத தமிழக அரசால் உயர் கல்வித் துறையும், துணைவேந்தர்களும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது;
ஆளுநர் தரப்பினரோ, நாங்க திட்டமிட்டபடி நடத்தினோமா? இல்லையா? எங்களை உங்களால் தடுக்க முடியலையே..என்ன மாநில அரசு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்கள் வரவில்லையே தவிர, தனியார் மற்றும் மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர்கள் என 34 பேர் வந்து விட்டார்களே. நாங்கள் பேச வேண்டியதை பேசிவிட்டோம். சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம்.. ஆக, எங்களுக்கு தான் இதில் வெற்றி’’ என்று இறுமாப்புடன் பேசுகின்றனர்.
தமிழகத்தை ஆட்சி செய்கின்ற திமுக தரப்பில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உங்க கூட்டத்தை புறக்கணித்துவிட்டார்களே…ஏதோ கொஞ்ச பேர் தானே வந்தனர். உங்க முயற்சி தோல்வி தான் எனப் பேசுகின்றனர்.
தினமணி, தினத்தந்தி தரும் தகவல்கள்படி 52 பேரில் 34 துணைவேந்தர்கள் கலந்து கொண்டதாகத் தெரிவித்ததோடு, அதற்கு ஆதாரமாக குரூப் போட்டோவும் போட்டு உள்ளனர். ஆனால், சன் டிவியோ எட்டு துணைவேந்தர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக சொல்லியது.
இது ஒருபுறம் இருக்க, ஆளுநர், ’’அரசு துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமைக்கு காவல் துறையைக் கொண்டு முதல்வர் மிரட்டியதே காரணம்” எனப் புகார் கூறியுள்ளார்.
இதற்கு பதறிப் போய் உயர்கல்வித் துறை அமைச்சர், ஆளுநர் நடத்திய மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணித்ததற்கு தமிழ்நாடு அரசு காரணமல்ல. அதில் பங்கேற்பது சட்டத்திற்கு எதிராக அமையும் எனக் கருதி துணைவேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பாகும்…? எனப் பேசியுள்ளார்.
ஆக, ஆளுநர் துணைந்தர்கள் மாநாட்டை நடத்த திமுக அரசு எதிர்க்கவில்லை என்பதை அமைச்சரே பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார். அதே சமயம் அது சட்டவிரோதமானது என துணைவேந்தர்கள் கருதினார்கள் என அமைச்சர் கூறும் போது, நமக்கு எழுகின்ற கேள்வி, அது சட்டவிரோதமானது என துணைவேந்தர்கள் கருதும் போது, தமிழ் நாடு அரசு ஏன் அவ்விதம் கருதவில்லை…?
கருதியிருக்கும் பட்சத்தில் அதை பகிரங்கமாக வெளிப்படுத்தி துணைவேந்தர்களை இந்த சட்ட விரோத மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் எனக் கூறுவது தானே தலைமைப் பண்பு. இன்றைய தினம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பொறுப்பில் முதலமைச்சர் இருக்கிறார் என்ற வகையில் அதை சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சருக்கு இருக்கிறதா? இல்லையா?
ஒரு சட்ட விரோத நிகழ்வை மாநில அரசு ஏன் அனுமதித்தது…? அதற்கான முழுச் செலவுக்கும் ஏன் பொறுப்பேற்றது. மாநில அரசின் அதிகாரிகளும், ஊழியர்களும் அந்த மாநாட்டுப் பணிகளை செய்ய ஏன் அனுமதிக்கப்பட்டனர்…? மக்கள் மனங்களில் இருக்கும் இந்தக் கேள்விகளுக்கு தயவு செய்து பதில் அளியுங்கள்.
தமிழ்நாட்டுக்கும், அரசிற்கும் தலைமை தாங்கும் முதலமைச்சர் இப்படி அவசியமான நேரங்களில் எல்லாம் மெளனச் சாமியாராக இருந்தால் குழப்பம் தான் விளையும்.
தமிழ் நாட்டரசு ஆளுநரை எதிர்ப்பதாக இருந்தால், அதை துணிந்து செய்ய வேண்டும். பம்மி பதுங்கிக் கொண்டு மற்றவர்கள் எதிர்ப்பில் குளிர்காயக் கூடாது. இந்த இரட்டை வேடம் ஆபத்தானது. இந்த தடுமாற்றத்தினால் தான் தமிழ் நாட்டரசின் சேலம் பெரியார் பல்கலைக் கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மூவர் இதில் பங்கேற்று உள்ளனர். திருநெல்வேலி பல்கலைக் கழக துணைவேந்தர் தெளிவு கிடைக்காமையால் புறப்பட்டு சென்று பிறகு பின் வாங்கி உள்ளார்.
சரி, நாம் கேட்கும் கேள்வி என்னவென்றால், ஆளுநர் நடத்திய துணைவேந்தர் மாநாட்டை துணிந்து புறக்கணித்த துணைவேந்தர்களை தமிழக அரசு பாதுகாக்குமா? அல்லது ‘’நாங்கள் ஒன்றும் நீங்க கலந்து கொள்ளக் கூடாது எனச் சொல்லவில்லையே’’ என கைகழுவுமா…?
ஏனென்றால், நீங்களே உங்களை காப்பாற்றிக் கொள்ள இரட்டை வேடம் போடுகிறீர்கள். கல்வியாளர்களான துணைவேந்தர்களை வெறும் பகடைக் காயாகத் தான் பயன்படுத்த விரும்புகிறீர்கள். இனி, கவர்னர் தரப்பில் அனுப்பபடும் நோட்டீஸ்களை எதிர்கொண்டு போராடி தப்பிக்க அவர்கள் நிறைய மெனக்கெட வேண்டி இருக்குமே…!
இதெல்லாம் திமுக ஆட்சித் தலைமையின் திட சித்தமின்மையால் வரும் விளைவேயாகும்.
தெளிவு, துணிவு அதில் உறுதிப்பாடு தமிழக ஆட்சித் தலைமைக்கு இருந்திருக்கும் பட்சத்தில் ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிரான போட்டி அரசாங்கம் நடத்துவதற்கு ஒப்பாகும். மாநில அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்பவும், சமூக நீதிக்கு எதிரான சனாதன கருத்தியலை கல்வியில் திணிக்கவும் ஆளுநர் செய்கின்ற நிகழ்ச்சி தமிழ் நாட்டரசுக்கும், மக்களுக்கும் விரோதமானது. ஆகவே அரசும், அரசு சார்ந்த அமைப்புகளும் இதை புறக்கணிக்கிறோம்…என்று ஆட்சித் தலைவரான முதலமைச்சர் அறிவித்து இருக்க வேண்டும்.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஆளுநருக்கு எதிராக அறிக்கைவிட வைப்பாராம். சி.பி.எம் கட்சித் தொண்டர்கள் சாஸ்திரி பவனுக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதாக வேண்டுமாம். திமுக கட்சியும், அரசும் ஆளுநருக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட தூக்கி போடமாட்டார்களாம். நாளையே அவர் தேனீர் விருந்திற்கு அழைத்தால் அலறியடித்துக் கொண்டு ஓடி அப்பா, பிள்ளை அமைச்சர்கள் சகிதம் கலந்து கொள்வார்களாம்…! இதையெல்லாம் எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும் எனத் தெரியவில்லை.
ஆட்சித் தலைமையில் உள்ளவர்கள் எந்த மெனக்கிடலும் இல்லாமல் – ஆளுநருக்கு எதிரான மற்றவர்களின் போராட்டத்திலும், தியாகத்திலும் குளிர்காயக் கூடாது. முக்கியமாக வாலை ஓரிடமும், தலையை வேறிடமும் காட்டி, இரட்டை வேடம் ஆடுவது உங்கள் பிழைப்பு தொடர உதவலாம். ஆனால், தமிழ்நாடு நாசமாகிவிடும்.
இப்படித்தான் செம்மொழி தமிழாய்வு மையத்தின் தலைவராக தமிழக முதல்வர் இருக்கிறார். ஆனால், அதன் துணைத் தலைவராக இருக்கும் சுதா சேஷய்யனோ தமிழ் நாட்டரசின் பகுத்தறிவு கொள்கைக்கு எதிராக புராண, இதிகாச ஆராய்ச்சி மையமாக அதனை மாற்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். முதலமைச்சரோ, அதை வேடிக்கை பார்ப்பதற்கு மேல் வேறு எதையும் செய்ய முடியாதவராக இருக்கிறார்.
இதே போல தற்போது பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் இனிமேல் ஆளுநர் வேந்தர் இல்லை என்றாலும் முதல்வர் செயல்பாடு இல்லாதவராக இருக்கும்பட்சத்தில் தமிழ் நாடு காணப் போகும் பயன் தான் என்ன? அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அரிவாள் இருந்தென்ன..? வெறுமே பாஜகவை எதிர்ப்பது போல பாசாங்கு செய்வதில் பயன் தான் என்ன? பாஜகவிடம் இருந்து திமுக தங்களை பாதுகாக்கும் என நம்பியல்லவா மக்கள் உங்களுக்கு அதிகாரம் தந்தனர்.
இது போன்ற கோழைத்தனமான அணுகுமுறை மக்களிடம் ஆட்சிக்கு நல்ல பெயரையோ, நம்பிக்கையையோ பெற்றுத் தராது முதலமைச்சர் அவர்களே!
சாவித்திரி கண்ணன்
சனாதனம் என்ற யானையை தடவிப் பார்த்து ஆளுக்கொரு வியாக்கியானத்தை ஆங்கிலேயனின் கைத்தடிகள் அப்பாவிகள் காதில் லாகவமாக சொருகி வருகிறார்கள், ஊழலை மறைக்க சனாதன எதிர்ப்பு கேடயம், காமராஜரை தோற்கடித்தது சனாதன எதிர்ப்பாளர்கள் தானே
பஜாக எதிர்ப்பு என்பது திமுகவுக்கு துளியும் நம்பிக்கை கிடையாது.
எதிர்ப்பு என்பது திமுகவின் அடிமை கட்சிகளான கூட்டனி கட்சிகளுக்கு மட்டுமே…
கூட்டணி தர்மம் எனும் சகித்தும் சுவைத்தும் அடிமையாக வாழ்வதில் இன்பம் கண்டவை திமுக கூட்டணி கட்சிகள்.
வரும் தேர்தல் மிக சரியான பாடமாக அமையும்