கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் உறைந்து கிடக்கிறதாம். அதன் மதிப்பு பல லட்சம் கோடியாம். அப்ப அதை எடுத்து கார்ப்பரேட் கடவுள்களுக்கு தாரை வார்க்காமல் பாஜக அரசுக்கு பசி, தூக்கம் எதுவும் வராதே! மீன்வளம் அழிந்தால் என்ன? மீனவர்கள் எக்கேடு கெட்டால் என்ன..? பாஜக அரசின் பணி இயற்கை வளங்களை சூறையாடுவதே…;
தென் தமிழக கடற்கரையோர மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், புதைபடிவ எரிபொருள் தொகுதிகளின் திறந்தநிலை உரிமம் வழங்குவதற்கான பத்தாவது சுற்று ஏலத்தை (OALP-BID) பிப்ரவரி 2025இல் அறிவித்தது. இந்தச் சுற்றில், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தின் 9,990.96 சதுர கி.மீ. பரப்பு உள்ளிட்ட 25 ஆழ்கடல் தொகுதிகளின் 1,91,986 ச.கி.மீ. கடற்பரப்புகள் ஆய்வு உரிமத்துக்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஜூலை- 31, 2025 வரை தேவையான இடங்களுக்கு விண்ணப்பிக்கும்படி ஏல அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ’’இது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் எந்த கருத்தையும் கேட்கவில்லை. பெருங்கேடு விளைவிக்கும் இந்த திட்டத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்’’ என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த மன்னார் வளைகுடா கடலில் எரிவாயு கிணறுகளை அமைத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்கள், அரியவகை பவளப்பாறைகள், விவசாயம், தென்னை உள்ளிட்ட பல்வேறு தொழில்களும், மக்களும் பாதிக்கும் அபாயம் இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரியைக் கடந்து இலங்கை வரையிலும் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் தொலைவில் மன்னார் வளைகுடா பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்தப் பகுதியில் ஏற்கெனவே 4 ஆயிரத்து சொச்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நமது கடல் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உயிரிப்பன்மய வளங்களைக் கொண்டதாகும். மன்னார் வளைகுடா பவளப்பாறைகள் பகுதி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் தளமாகும். இப்பேற்பட்ட பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதானது பேரதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியை 1974 ஆண்டிலேயே உயிர்கோளப் பகுதியாக அறிவிக்க யுனெஸ்கோ பரிந்துரைத்தது என்பதும், அதன்படி மத்திய அரசு 1989ல் மன்னார் வளைகுடாவை உயிர்கோள காப்பகமாக அறிவித்தது என்பதும் கவனத்திற்கு உரியதாகும். அப்போது முதல் கடல்சார் உயிர்கோள காப்பகமான மன்னார் வளைகுடா தமிழ்நாட்டின் தேசிய பூங்காவாகவும் திகழ்கிறது. இந்த மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 சிறிய தீவுகள் அமைந்துள்ளன. அத்துடன் பகுதியில் அரியவகை பவளப்பாறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை மீன்களின் இயற்கை பேரிடர் காலங்களில் பாதுகாப்பு அரணாக இருப்பதால் தான் மீனவ கிராமங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டிலேயே காவிரிப் படுகையை ஒட்டிய 8,108 ச.கி.மீ. பரப்பிலும், குமரிமுனையைச் சூழ்ந்த மூன்று பகுதிகளில் 27,154 ச.கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோகார்பன் வளங்களை ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஏலம் அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
தமிழகத்தில் சுமார் 1,076 கி.மீ நீளமுள்ள கடற்கரை உள்ளது . 14 மாவட்டங்கள் கடல் தொழிலை சார்ந்து உள்ளன. அந்நிய செலவாணியை ஈட்டுவதில் மீன்பிடித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த திட்டம் செயலாக்கம் பெறும் போது, தமிழ்நாட்டு கடல் பகுதிகள் சர்வ நாசத்தை சந்திக்க நேரும். இதனால், கடலை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது மாத்திரமல்ல, கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து போய்விடும். சுற்றுச் சூழலில் ஈடு செய்ய முடியாத பேரிழப்புகள் ஏற்படும்.

ஹைட்ரோ கார்பனை எடுப்பதற்கு மிகப் பெரிய துளைகள் போட்டுத் தான் எடுக்க முடியும். அவ்வாறு எடுக்கும் போது ஆபத்தான நச்சுத் தன்மையுள்ள கெமிக்கல்கள் உள்ளே செலுத்தி தான் அந்தப் பணிகள் நடக்கும். அத்துடன் பேரிச்சலோடு செயல்படுத்தப்படும் இந்த செயல்பாடுகளால் நில அதிர்வு ஏற்படும். இது அங்கே இருக்கக்கூடிய உயிரினங்களின் உயிர்களை காவு கேட்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது ஆரம்ப நிலையிலேயே ஆமைகள் அதிகமாக இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தனுஷ்கோடி வரையிலான பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கேட்கவே வேண்டாம், மீனவர்கள் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக் கொண்டு பசி, பட்டினியால் வாட வேண்டும் அல்லது இந்தத் தொழிலையே துறக்க வேண்டியதிருக்கும். இதனால் தான் மீனவர்கள் தொடர்ந்து இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர்.
மக்கள் வாழ்வாதரம் அழிவது பற்றி துளியும் வருத்தப்படாமல், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை அலட்சியப்படுத்தி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பலனடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மத்திய பாஜக அரசு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடற்பகுதிகளில் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் ஆழமான கடற்பகுதியில் 95 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் ஹைட்ரோகார்பன் இருப்பை சூறையாட ரிலையன்ஸ், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. ஆகியவற்றுக்கு அனுமதித்திருப்பதாகத் தெரிய வருகிறது.
இந்தியாவில் மக்களின் ஒரே பிரச்சினை என்பது அரசாங்கத்திடம் இருந்து எப்படித் தங்களை தற்காத்துக் கொள்வது என்பதாகவே போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு மக்களுக்கு புற்று நோயை தோற்றுவிக்கும் கொடிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எல்லா எதிர்ப்புகளையும் மீறி செயல்படுத்துவதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
சாவித்திரி கண்ணன்
Leave a Reply