சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சவால் மிக்க ஒன்றாகும். சாதிவாரிக் கணக்கெடுப்பை சரியாகவும், நேர்மையாகவும் சாத்தியப்படுத்துவதிலே நிறைய சவால்கள் புதைந்துள்ளன. அது எடுத்த பிறகு ஏற்படும் சர்ச்சைகள் என்பது தனி ரகம்! அதே சமயம் மத்திய பாஜக அரசு சில அரசியல் கணக்கை வைத்தே இந்த காய் நகர்த்தலை செய்கிறது;
சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது…? என்ற குரல்கள் அரசியல் தளத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
”பீகார், தெலுங்கானாவில் நடத்திவிட்டார்களே.. தமிழ் நாட்டில் நடத்த என்ன தடை? ஏன் ஸ்டாலின் தட்டிக் கழிக்கிறார்..?” எனக் கேட்கப்பட்டது.
”மத்திய அரசு தான் நடத்த வேண்டும். நாங்களும் நடத்தச் சொல்லி எழுதிவிட்டோம்..”எனச் சொல்லி சமாளித்து வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
ஏன் ஆரம்பத்திலே பிரதமர் மோடி கூட சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராகத் தான் பேசினார். இறுதியில் அவரது கட்சியிலும், ஆர்.எஸ்.எஸ்சிலும் சாதிவாரி கணக்கெடுப்ப்புக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கத் தொடங்கவும் மத்திய அமைச்சரவை கூடி ஆலோசித்து சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆணையிட்டுள்ளது.
எப்படிப் பார்த்தாலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது பலவித சவால்களை தோற்றுவிக்கவே செய்யும்.
இந்தியாவின் பரவலாக சாதிப் பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள் இன்னும் தொடர்கிறது. சாதி கணக்கெடுப்பு பின்தங்கிய பிரிவினரை அடையாளம் கண்டு, வாய்ப்புகளை பகிர்ந்தளிக்கவும், அவர்களை முன்னணிக்குக் கொண்டுவரவுமான உன்னத நோக்கத்திற்கு சாதிவாரி கணக்கெடுப்பு உதவும் என்பது நியாயமான வாதம் தான்! மறுப்பதற்கில்லை.
ஆனால், சாதி வாரிக் கணக்கெடுப்பை துல்லியமாக எடுத்துவிட்டு ஒட்டுமொத்த சாதிகளையும் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், மற்ற பிரிவினர் என்ற நான்கு பிரிவுகளுக்குள் கொண்டு வந்து சமூக நலதிட்டங்கள் வாய்ப்புகளை உரிய பிரிவினருக்கு வழங்கலாம். மாறாக மிக நுட்பமாக சாதி மற்றும் சாதியின் உட்பிரிவுகளுக்குள் நுழைந்து அந்த தகவல்களை பொது வெளிக்கு தந்தால், புதுப் புது சாதி தலைவர்கள் உதயமாகவே அது வழி வகுக்கும்.
ஒவ்வொரு சாதிக் கூட்டத்தையும் வைத்து ஒரு தலைவன் உருவாகி அரசியல் வியாபாரத்தை கன கச்சிதமாகச் செய்வான். தேர்தலுக்கு தேர்தல் தன் சாதிக் கூட்டத்தைக் காட்டி கல்லா கட்டுவான். சாதிப் பெருமைகளை விதந்தோதுவதும், தமக்கு கீழாக உள்ள சாதிகளை ஒடுக்கும் சாதி ஒற்றுமைக்கான அறைகூவல்களும் அரங்கேறும். மொத்தத்தில் சாதி அமைப்புகள் வலுப்பெறவும், நிலை பெறவும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு உதவி விடக் கூடாது என்பதே நல்லோர்களின் விருப்பம். பிறகு சாதி ஒழிப்பு என்பது எப்போதும் சாத்தியமில்லாததாக மாறிவிடும்.
அதாவது சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம் உன்னதமானது. ஆனால், அதன் தாக்கமோ எதிர்பாராத விளைவுகளை உருவாக்கும். மேலும், இத்தகைய கணக்கெடுப்பை விருப்பு ,வெறுப்பின்றி மிக நேர்மையாக செய்ய வேண்டும். ரகசியங்களை வெளியே கசியவிடக் கூடாது. இதைச் செய்யும் ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் உள் நோக்கமின்றி இயங்க வேண்டும். இவை யாவும் சவால்களே!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ’சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தட்டும்’ என பொறுப்பை அங்கு தூக்கி போட்டதற்கு பின்னணியில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. இந்த கணக்கெடுப்புகள் நண்பர்களையும் பெற்றுத் தரும். பகைவர்களையும் உருவாக்கித் தரும்.
உதாரணத்திற்கு வன்னியர்கள் தாங்கள் 10.5 சதவிகிதம் என்று நம்பிக் கொண்டுள்ளனர். அது கணக்கெடுப்பின் இறுதியில் 11 சதவிகிதம் எனத் தெரிய வந்தால், அது அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். அதுவே, ’இல்லை 10 சதவிகிதம்’ எனத் தெரிய வந்தால், அது சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் வழி வகுக்கவும் வாய்ப்புள்ளது. ஆகவே, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உண்மையை மட்டுமே பதிய வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு சாதி வாரி கணக்கெடுப்பை சாத்தியப்படுத்த வேண்டும்.
இந்த தகவல்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை வகுக்கவும், எந்தெந்த திட்டங்கள் எந்தெந்த பகுதி மக்களுக்கு கூடுதலாக தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து செயல்படவும் தான் என்பதால், அதை பொதுவெளிக்கு சொல்லாமல் இருக்க வாய்ப்புள்ளதா? எனத் தெரியவில்லை.
இல்லை, இல்லை சாதி குறித்த அத்தனை தரவுகளையும் பொதுவெளிக்கு வைப்போம் என்றால்.., அதற்கான விளைவுகளை எப்படி எதிர்கொள்வது என்பதை முன் கூட்டியே திட்டமிடுவது நன்மை பயக்கும்.
சுதந்திர இந்தியாவின் முதல்‘இந்திய பொது-பதிவாளர்’ ஆர்.ஏ.கோபாலசாமி 1951-ன் அறிக்கையில் கூறியதாவது: “1951-ன் மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது சாதிகள், இனங்கள், இனக்குழுக்கள் போன்றவை பற்றிய கேள்விகளை உள்ளடக்கவில்லை; பட்டியலினச் சாதிகள், பழங்குடியினர், ஆங்கிலோ-இந்தியர்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் நோக்கத்துக்காக ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்ட சில சாதிகள் போன்றவை ‘சிறப்புக் குழுக்கள்’ என்று விளக்கப்பட்டன. இது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன என்பதையும், ஆனால் தொகுக்கவோ வெளியிடவோ படவில்லை என்பதையும் உணர்த்துகிறது.
‘சிறப்புக் குழுக்கள்’ தொடர்புடைய அவசியமான புள்ளிவிவரங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பான விவரங்களும் மட்டும் திரட்டப்பட்டு ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணைய’த்துக்கு மடைமாற்றப்பட்டன.”. சமூக சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கும், விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவதற்கும் இலக்கு வைக்கப்பட்ட கொள்கைகளை செயல்படுத்தவே இவை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதுவே இன்றும் பொருந்தக் கூடுமா? என விவாதிக்கலாம்..!
சாதி என்பது இந்திய சமூகத்தின் ஒருங்கிணைந்த அம்சமாகும், இது சமூக உறவுகள், பொருளாதார வாய்ப்புகள் மற்றும் அரசியல் இயங்குதளம் ஆகியவற்றோடு தொடர்புடையது. ”சாதி உண்மையுமல்ல, பொய்யுமல்ல” என்பார் சமூக ஆய்வாளர் தொ.பரமசிவம்.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான சாதிகளும், அதன் உட்பிரிவான கிளைச் சாதிகளும் இருப்பதால், சாதிகளை தெளிவாக வரையறுப்பது மிகவும் சிக்கலாகும். சாதி கணக்கெடுப்புக்கு சாதிகளைப் பற்றிய தெளிவான வரையறை தேவைப்படும். இது எளிதான காரியம் அல்ல. மக்களும் உண்மையைத் தான் சொல்வார்களா…? என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு வருமானம் குறித்த கேள்விக்கு பெரும்பாலோர் உண்மையான பதிலை சொல்லவே மாட்டார்கள். மறைத்தே பேசுவார்கள். காரணம், இதைச் சொல்வதால் தமக்கு கிடைக்கும் பலன்கள் பறிபோய்விடுவோமா என்ற பயம் தான்.
Also read
தற்போது எடுத்துக் கொண்டாலுமே கூட சில முன்னேறிய சாதியினர் தங்களை பிற்படுத்தோர் பட்டியலுக்குள் நுழைத்துக் கொண்டுள்ளனர். இந்த பொய்மைக்கு அரசியல் அழுத்தங்கள் காரணமாயிருக்க வேண்டும்.
ஆக உண்மையும்,பொய்மையும் கலந்து பெறப்படும் தகவல்கள் குழப்பம், சச்சரவுகள், பிளவுகளுக்கு வழி வகுக்க வாய்ப்புள்ளது. மேலும் தற்போது பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்சும் சாதிச் சங்கங்கள் வழியே தான் தங்கள் இயக்கத்தை பலப்படுத்தி வருகிறார்கள்! அவர்கள் நிச்சயமாக இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் பின்னணியில் தங்களுக்கான சில அரசியல் கணக்கை செய்வார்கள்!
இவை ஒருபுறமிருக்க, கல்வியிலும், வேலை வாய்பிலும் அரசு தன் பொறுப்பையே தட்டிக் கழிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். கல்வி, வேலை வாய்ப்பு இரண்டிலும் தனியார்மயம் தான் வலுப்பெற்று வருகிறது. அரசுப் பணிகள் மிகவும் குறைந்து வருகின்றன. காரணம் அரசாங்கமே அவுட் சோர்சிங், காண்டிராக்ட் லேபர்ஸ் மற்றும் தனியார்மயம் ஆகியவற்றை ஊக்குவித்து பின்பற்றி வருகிறது. அரசிடமே சமூக நீதிக் கண்ணோட்டம் பின் தங்கியுள்ள சூழலில், சாதிவாரி கணக்கெடுப்பு சாதிக்கப் போவது தான் என்ன..? என்ற சலிப்பும் சமூக ஆர்வலர்களிடையே மேலோங்கி வருகிறது.
பார்ப்போம், நல்லதே நடக்கட்டும்.
சாவித்திரி கண்ணன்
Leave a Reply