விழிஞ்சம் துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் ஆகியவை பாதிக்கப்படும் என 10 ஆண்டுகளாக போராடிய மீனவர்களின் எதிர்ப்பை மீறி, இன்றைய தினம் இத் துறைமுகம் பணி முழுமையடைந்து பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு அலசல்;
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதானி விழிஞ்சம் போர்ட் பிரைவேட் லிமிடெட், டிசம்பர் 5, 2015 அன்று அதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. மீனவ மக்களின் கடுமையான தொடர் போராட்டங்களால் அவ்வப்போது பணி நிறுத்தப்பட்ட வகையில் 2023-ல் முடிந்திருக்க வேண்டிய துறைமுகப் பணி தற்போது தான் முடிந்தது. இதனால் செலவும் சுமார் 1000 கோடிகளுக்கும் மேலாக அதிகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இத்துறைமுகத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விரிவாக்கத்திற்காக, மேலும் 9,500 கோடி ரூபாயை அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையின் கீழ் விழிஞ்சம் துறைமுகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மாநில அரசிடமிருந்து மிக அதிகளவிலான முதலீட்டை விழிஞ்சம் துறைமுகம் பெற்றுள்ளது. இதற்கான ரூ.8,867 கோடியில் முதலீட்டில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை கேரள அரசு செலவிட்டுள்ளது..! இதில் தனியார் ஒப்பந்ததாரராக அதானி குழுமம் உள்ளது என்பதால், இது அதானி துறைமுகம் என்றே பரவலாக அழைக்கபடுகிறது. அரசின் முக்கியத்துவம் ஏன் பின்னுக்கு தள்ளப்பட்டது என்பது புதிராக உள்ளது.
விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை ஒரு பக்கம் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் பினராயி விஜயன், மறுபக்கம் அதானி நிற்க, பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் இவர்கள் மூவரும் துறைமுகத்தை ஒரு ரவுண்ட் சுற்றி பார்த்தனர்.
எந்த ஒரு துறைமுகமும் இயற்கையான கடற்காற்றை தடுப்பதால் கடல்கரையோரத்தின் இயல்பான மணல் நகர்வுகளை பலமாக தடுத்துவிடுகிறது. அந்த வகையில் விழிஞ்சம் துறைமுகம் மிகப் பெரிய அளவில் கடல் அரிப்பை உருவாக்குகிறது. இதனால், 40 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 56,000 மீனவர்கள் பெருமளவு வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள் என்பது தான் சோகம். கட்டுமான பணிகளின் போதே 300 மீனவ குடும்பங்கள் தங்கள் நிலத்தை பறி கொடுத்து வெளியேறினர்.
போராடிய மீனவர்களை கிறிஸ்த்துவ பாதிரியார்கள் ஆதரித்தனர். இதனால் இந்த பாதிரியார்கள் மீது பல வழக்குகள் பாய்ந்தன. போராடிய சமூக ஆர்வலர்கள் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டனர். மறுபுறம் அதானி துறைமுகத்திற்கு ஆதரவாக இந்து அமைப்பினர் போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இதற்கான நஷ்ட ஈடு தரப்படுவதை முதலில் ஏற்க மறுத்தனர். பிறகு வேறு வழியில்லை என உணர வைக்கப்பட்டு அமைதிபடுத்தப்பட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பில் நடந்தது போல, பத்தாண்டுகளாக நடந்த கடுமையான போராட்டங்களை ஒடுக்க துப்பாக்கி சூடு, உயிரிழப்பு ஆகியவற்றை இடதுசாரி அரசு முற்றிலும் தவிர்த்து மக்களை வழிக்கு கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்காக கணிசமான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அந்த வகையில் எதிர்ப்புகள் படிப்படியாக குறைந்தன.
இதன் சிறப்பு என்னவென்றால், சர்வதேச கிழக்கு-மேற்கு கப்பல் பாதையிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் அமைந்திருப்பதால், வணிகப் போக்குவரத்தில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடிக்கவிருக்கிறது. இந்தத் துறைமுகம் சர்வதேச (கடல் வணிக) பாதைக்கு அருகாமையில் இருப்பதால் தான் இந்தியாவின் கிரீடமாக கருதப்படுகிறது. விழிஞ்சம் நாட்டின் முதல் பிரத்யேக சரக்கு பரிமாற்ற துறைமுகம். நாட்டின் முதல் தானியங்கி துறைமுகமும் இதுவே. இங்குள்ள கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது என்பதால் சரக்குகளை விரைவில் கையாள முடியும்.
உலக நாடுகளுக்கு சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ள இந்தியா இதுவரை கொழும்பு, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைத் தான் நம்ப வேண்டியிருந்தது. அதாவது, இந்தியாவிலிருந்து சிறிய கப்பல்களில் பொருள்களை இந்த நாட்டுத் துறைமுகங்களுக்குக் கொண்டு சென்று அங்கிருந்து சரக்குக் கப்பல்களில் ஏற்றி அனுப்பும் நிலையே இருந்தது. இதன் விளைவாக இந்தியாவிற்கு பல்வேறு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை போக்கும் வகையில் விழிஞ்சம் துறைமுகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியா ஆண்டுதோறும் 220 மில்லியன் டாலர் செலவை சேமிக்க முடியும் என நம்பப்படுகிறது.
தற்போது ஆழ்கடல் சரக்குப்போக்குவரத்து துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ள தால் இனி 20 ஆயிரம் கண்டெய்னர்களைக் கொண்ட எந்த சரக்குக் கப்பலும் இலங்கைக்கு செல்லாமல் இந்தியாவுக்கு நேரடியாக வரலாம். இந்த துறைமுகத்தால் சுமார் 5,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது எனச் சொல்லப்படுகிறது.
இந்த துறைமுகம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நமது நீண்ட கால கனவு நினைவாகி உள்ளதாகவும், இதை எதிர்க்கும் சர்வதே லாபியை முறியடித்து கேரள அரசுடன் ஒருகிணைந்து நின்ற அதானிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசு விழிஞ்ஞம் துறைமுகத்துக்காக கடுமையாக உழைத்துள்ளது. விழிஞ்ஞம் துறைமுக அனுமதிக்காக இடது ஜனநாயகம் முன்னணி கூட்டணி அரசு முயற்சித்தது. 2007-ல் விழிஞ்ஞம் இன்டர்நேஷனல் ஷிப்பிங் லிமிடெட்-ஐ (வி.ஐ.எஸ்.எல்) நோடல் ஏஜென்சி ஆக்கினோம். 2010 ஆம் ஆண்டு டெண்டர் நடவடிக்கைகளுக்கு முயற்சித்தோம். அப்போது சீனா கம்பெனி வந்ததாக சிலர் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது மத்திய மன்மோகன் சிங் அரசு அனுமதி அளிக்கவில்லை. இதை அடுத்து 212 நாட்கள் நீண்ட மக்கள் போராட்டத்தை நடத்தினோம். அதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு மீண்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாம் ஒன்றாக முயற்சித்து அதன் பலனாக இந்த துறைமுகம் நமக்கு கிடைத்துள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘’முதல்வரிடம் (பினராயி விஜயன்) நான் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இந்தியா கூட்டணியின் வலுவான தூண். சசிதரூரும் இங்கே அமர்ந்து இருக்கிறார். இன்றைய நிகழ்வு பலரின் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறது. மத்திய அரசு மாநில அரசினுடைய ஒத்துழைப்புடன் சாகர் மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களுடைய உட்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. அதன் காரணமாகத் துறைமுகத்தினுடைய இணைப்பும் அதிகரித்துள்ளது. மிக முக்கியமாகக் கடல்வழி சார்ந்த பொருளாதாரத்தினுடைய வளர்ச்சியாக இருக்கும். அதானி என்ற ஒரு காரணத்திற்காகவே இந்த துறைமுகத்திற்குக் கம்யூனிஸ்ட் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். கேரளாவை ஒரு வளர்ந்த இடத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஜெய் பாரதம் ஜெய் கேரளம்” எனப் பேசினார்.
முதல்வர் பினராயி விஜயன் கூறியது: இது புதிய துறைமுகம் திறப்பு விழா மட்டும் அல்ல. இது புதிய யுகத்தின் தொடக்கம். இதன் மூலம் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் சரக்கு போக்குவரத்து உலகளவில் வலுவடையும். விழிஞ்சம் நாட்டின் முதல் பிரத்யேக சரக்கு பரிமாற்ற துறைமுகம். இங்கு சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட ஏஐ கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு செயல்பாட்டில் உள்ளது. இங்கு மாதத்துக்க 1 லட்சம் சரக்கு கன்டெய்னர்களை கையாள முடியும்’’ என்றார்.
அஜிதகேச கம்பளன்
மாமியார் உடைத்தால் மண் குடம். மார்க்ஸிஸ்ட் ஆட்சி மீனவர் வாழ்வாதாரம் சுற்று சூழலை நாசம் செய்தாலும் மீடியா கம்யூனிஸ்ட்கள் ஜோராக சப்பைக்கட்டு போடுகிறார்கள் அதானி தான் ஆல் பவர்புல்