ஏப்ரல் 22 அன்று பெஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாக்கித்தான் ஆகிய இரு நாடுகளிலும் பற்றிக் கொண்ட பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது..! ஒரு பெரும் யுத்தத்தை நிர்பந்தித்து தேச பக்த வெறியை உசுப்பிவிட நினைக்கும் போக்கு தெரிகிறதே…?
சம்பவம் நடந்த இடத்திற்கு இராணுவத்தினரும், மத்திய பாதுகாப்பு படை (சி ஆர் பி எஃப்) மற்றும் காஷ்மீர் பிரதேச காவல்துறை வருமுன்னரே ஊடகங்கள் இதை பாக்கித்தானின் கைவரிசை என குறிப்பிட்டனர். இந்திய அரசும் பாக்கித்தான் அரசை குற்றஞ்சாட்டியது, டி ஆர் எஃப் எனப்படும் அமைப்பு வெளியிட்ட x பதிவீட்டை மேற்கோள் காட்டி இத்தாக்குதலில் பாக்கித்தான் சம்பந்தபட்டுள்ளது என கூறியது.
அடுத்த நாள் மோடி இந்தியா திரும்பிய பிறகு , பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசித்த பின்னர் சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகள் பாக்கிற்கு எதிராக அறிவிக்கப்பட்டன!
கோடி மீடியாவும் வலதுசாரி நெறியாளர்கள் மட்டுமின்றி , முன்னாள் ராணுவ அதிகாரிகள், முன்னாள் இராஜதந்திரிகள் (former diplomats) முன்னாள் உயர்நிலை அரசு அதிகாரிகள் மற்றும் நடுநிலையாளர்கள் என கூறிக்கொள்வோரும் இத்தகைய அரசின் நடவடிக்கைகளை- சிந்து ந்தி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்ற அரசின் நிலைபாட்டை வரவேற்று சிலாகித்தனர்.
எதிர்கட்சியான காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சியும் ஏன் அனைத்து கட்சிகளும் பயங்கரவாத செயல்களுக்கெதிரான அரசு நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஆதரவு என்ற நிலைப்பாட்டை காரணங்காட்டி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்தி வைப்பதை கூச்சநாச்சமின்றி ஆதரித்தனர்.
சிந்து நதியின் ஏறுகரை பகுதிகளில் (Upper riparian zone) உள்ள இந்தியா கீழ்கரை பகுதியில் ( Lower riparian zone) – பாக்கித்தானில் வாழும் மக்களின் நீராதாரத்தை நிறுத்தி வைப்பது நீதியா ? முறையா? சர்வதேச விதிகளை,மனிதகுல பாரம்பரியங்களை மீறிய செயல் ஆகாதா? என்ற கேள்விகளை காங்கிரஸ் கட்சி ஏன் கேட்க மறந்தது? அல்லது மறுக்கிறது?
காலங்காலமாக ஓடும் சிந்து நதி எத்தனையோ நாகரீகங்களை கண்டுள்ளது , வழி நெடுகிலும் வாழும் மக்களை வாழ வைக்கும் நதியின் வளமையை இந்திய அரசு தடுக்க வேண்டும் என நினைப்பதே பாவமில்லையா? நேர்மையற்ற செயல் இல்லையா?
யாரோ ஓரிரு கயவர்கள் செய்த செயலுக்காக ஒட்டுமொத்த பாக்கில் வாழும் மக்களை கூட்டு தண்டனைக்கு (Collective Punishment) ஆளாக்குவது எந்த ஊர் நியாயம்?
இன்று வரை படுகொலையில் ஈடுபட்ட கயவர்களை இந்திய அரசு கண்டுபிடிக்கவில்லை.
ஆனால், காஷ்மீரத்தில் 12க்கும் மேற்பட்ட, ராணுவத்தினர் சந்தேகிக்கும் நபர்களின் வீடுகள் ராணுவத்தால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது, ஏராளமான இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத செயல்களை எதிர்த்து வீதிக்கு வந்த காஷ்மீர் மக்கள் இன்று இந்திய ராணுவத்தின் ஆணவ நடவடிக்கைகளினால் நொறுங்கி போயுள்ளனர். பா ஜ க ஆளும் மாநிலங்களான உத்தராகாண்ட், ஹரியானா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் ‘சங்கிகளால் ‘ விரட்டப்பட்டுள்ளனர். இது குறித்து மோடி அரசு வாய் திறக்கவில்லை. இக்கட்டான சூழலில் இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வற்புறுத்தவில்லை!
காந்தியை கொன்ற கோட்சேயின் வழி வந்த கட்சியினர் இதை கையிலெடுத்ததில் நமக்கு ஆச்சரியமேதுமில்லை! ஆனால், அண்ணல் காந்தியின் பேரால் அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சி, அன்பின் (love) பெயரால், அஹிம்சையின் பெயரால் இயக்கம் நடத்தும் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் உண்மையை மறைத்துவிட்டு மனிதகுலத்திற்கெதிரான மோடி அரசின் நடவடிக்கைக்கு எப்படி ஆதரவளிக்க முடிகிறது…?
இந்த அநியாயத்திற்கு பெயர் தான் தேச பக்தியா? நாட்டின் பாதுகாப்பா?
1965 காலத்திலோ, 1971 கால கட்டத்திலோ, ஏன் 1998 கார்கில் போரின் போதோ, 2001 பாராளுமன்ற தாக்குதலின் போதோ, 2008 மும்பை தாக்குதலின் போதோ சிந்து நதி ஒப்பந்தத்தை பகடைக்காயாக மாற்றாத இந்திய அரசு இன்று மோடி அரசால் பகடைக் காயாக மாற்றப்படுவது ஏன்?
அதை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதேன்?
காஷ்மீர் பகுதியை மன்னர் ஹரி சிங் இந்தியாவுடன் ‘நிபந்தனையின் அடிப்படையில்’ இணைத்த நாள் முதல் மதத்தின் பெயரால் வம்பு சண்டைக்கு வந்த பாக்கித்தான் அன்று முதல் இன்று வரை அந்த இணைப்பை ஏற்கவில்லை, காஷ்மீரில் ஒரு பகுதியை தன் வசமாக்கி அப்பகுதியை “ஆசாத் காஷ்மீர் என அழைக்கிறது, இந்திய அரசு அப்பகுதியை , பாக்கித்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் (Pakistan Occupied Kashmir) என அழைத்தால் இந்திய வசமுள்ள ஜம்மு காஷ்மீரை இந்தியா வசமுள்ள காஷ்மீர் ( India Occupied Kashmir) என பாக்கித்தான் அழைக்கிறது. ஐ.நா சபையும் மேலை நாடுகளும் காஷ்மீரை சர்ச்சைக்கிடமான பகுதியாகவும், காஷ்மீர் பாக் வசமுள்ள காஷ்மீர் POK என்றும் இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் (Indian Administered Kashmir) என்றுமே அழைக்கின்றன.
காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற போட்டியில் இந்தியாவும் பாக்கித்தானும் தீவிரமாக உள்ள நிலையில் காஷ்மீரில் வாழும் காஷ்மீரிகளின் கருத்தை யாரும் பொருட்படுத்தவில்லை. காஷ்மீர் மக்களின் கருத்தை அறிய முயலும் வாக்கெடுப்பு முறை (Plebiscite) நடைமுறைக்கு வரவே இல்லை!
காலப்போக்கில் தேர்தல் அரசியலும் இந்திய ஆட்சியாளர்களின் அத்துமீறலும், குள்ளநரித்தனமும், இந்திய ராணுவத்தின் வற்புறுத்தலும் காஷ்மீரின் தனிச்சிறப்பை சிதைக்கபெருமளவிற்கு உதவியது. இதில் பாக்கித்தான் மதபோதனை மூலம் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயலுகிறது.
அதிருப்தியாளர்களுக்கு ஆயுதங்கள் கொடுப்பதன் மூலமும் , காஷ்மீர் பண்டிட் மக்களை வெளியேற்ற பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்தும் கலகத்தை தூண்டியது. இந்திய ஆட்சியாளர்களோ எதிர்வினையாக ராணுவத்தை அப்பகுதியில் குவித்து போராடுபவர்களை, கேள்வி கேட்பவர்களை கொன்று குவித்தது.
சுருங்கக் கூறின் ,
காஷ்மீர் என்ற சிறு பகுதி 10 லட்சம் ராணுவத்தினரின் நிரந்தர களமாக மாறியது. காஷ்மீரில் வசிக்கும் மக்களில் ஏழில் ஒருவர் இந்திய ராணுவத்தினராக இருக்கின்றனர். இதற்கு மேல் காஷ்மீர் காவல்துறை மற்றும் சி ஆர்பி எஃப் படைகள் அங்கு உள்ளன!
இந்த நிலைமையை பாக்கித்தான் பயன்படுத்திக்கொண்டு அங்கு நடக்கும் வன்முறையை விடுதலை போராக சித்தரிக்கின்றனர், இந்திய அரசோ போராளிகளை ‘பயங்கரவாதிகள்’ என முத்திரை குத்தி அடக்குகிறது.
பாக்கிஸ்தானின் ஒரு பகுதியான பலுச்சிஸ்தானம் ஆப்கன் எல்லையை ஒட்டிய பகுதியாகும் .
1947ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பாக்கித்தானுடன் இணைக்கப்பட்ட பகுதியான பலுச்சிஸ்தானம், பலூச் மற்றும் பஷ்டூன் பழங்குடியினரை கொண்டது. பாக்கித்தான் ஒன்றிய ஆட்சியாளர்களால் ஒதுக்கப்பட்டு நசுக்கப்பட்டுவந்த இப்பிரிவினர் நீண்ட போராட்டங்களை சந்தித்த பலுச்சிஸ்தான் கிளர்ச்சி பலுச்சிஸ்தான் விடுதலை படை (Baluchistan Liberation Army BLA) யின் தலைமையில் தனி நாடு கேட்கும் சக்தியாக 2004ல் உருவெடுத்தது. இதை எதிர்த்த பாக் ராணுவத்தின் அட்டூழியமும் அடக்குமுறையும், மனித உரிமை மீறலும் நாளுக்குநாள் அதிகரித்தன.
ஆப்கன் போரினால் புலம்பெயர்ந்த பஷ்டூன் இன மக்களும் , பலுச்- பஷ்டூன் இன மோதலையும் பயங்கரவாதத்தையும் மேலும் ஊக்குவித்தன. பாக்., தெரீக் தாலிபானும் பாக் படைகளுக்கு எதிராக களம் இறங்கியுள்ளதால் பலூச் விடுதலை இயக்கம் வன்முறையின் உறைவிடமாக உள்ளது. இந்த குழப்பத்தை இந்திய உளவு அமைப்பான “ரா” பயன்படுத்திக்கொண்டு பாக் அரசிற்கு எதிரான வன்முறையை தூண்டுகிறது என பாக் ஆட்சியாளர்கள் நீண்டகாலமாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ரயில் கடத்தலும் குண்டுவெடிப்பும் 20க்கும் மேற்பட்ட பாக் ராணுவ வீர்ர்கள் கொல்லப்பட்டதிலும் இந்தியாவின் பங்கு உள்ளதாக பாக் குற்றஞ்சாட்டுகிறது.
பலுச்சிஸ்தான் போராளிகளை பாக்கித்தான் அரசு பயங்கரவாதிகள் என்று கூறுகின்றது. அதேவேளையில் அவர்களை இந்திய அரசு ‘ விடுதலை வீர்ர்கள்’ என கூறுகிறது.
இதே கோணம்தான் காஷ்மீரிலும் நடக்கிறது, பயங்கரவாதிகள் என இந்தியா சுட்டிக்காட்டுபவர்களை பாக்கித்தான் விடுதலை வீர்ர்கள் என புகழுகிறது. இரு நாடுகளும் அடுத்த நாட்டின் விவகாரங்களில் மூக்கை நுழைத்து பிரச்சினை செய்கின்றனர் , இரு நாட்டு ஆட்சியாளர்களுக்கும் தத்தமது நாட்டிலுள்ள மக்களின் உரிமைகள், அரசியல் வேட்கைகள் பற்றி அக்கறை இல்லை!
இரு நாட்டின் மக்களில் பலரும் இத்தகைய இரட்டை நிலையை (Double Standard) கடைபிடிப்பதால் உண்மை புதைக்கப்படுகிறது, பிரச்சினை திசை திருப்ப படுகிறது, தீர்வுக்கு பதிலாக சீரழிவும். உயிர்பலியும் மேலோங்குகிறது.
இத்தகைய இடியாப்ப சிக்கலில் மோடி அரசு காஷ்மீரை மதக்கண்ணாடி மூலம் அலசி முஸ்லீம்களின் ஆளுமையை நிலைகுலையச் செய்து நிர்மூலமாக்குவதை மனதில் கொண்டே
அரசியல் பிரிவு 370ஐ ரத்து செய்தனர்,
தனிச் சிறப்பை விலக்கி வைத்தனர்.
மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக சிறுமை படுத்தினர், துண்டாடினர்,
ராணுவத்தை குவித்து அனைத்து கட்சியினரையும் சிறையிலடைத்தனர்,
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தனர்,
இண்டர்நெட் இணைப்பிற்கு தடை போட்டனர்.
சிறைகள் நிரம்பியதோடன்றி, வீடுகளே சிறைக்கூடங்களாக மாற்றப்பட்டன!
இத்தனை வெறியாட்டங்களுக்குப்பிறகு, வெளிமாநிலத்தவருக்கு “ குடியிருப்பு” உரிமைகள் வழங்கப்பட்ட பிறகு, மயான நிலையை அடக்குமுறையால் ஏற்படுத்திவிட்டு அமைதி திரும்பி விட்டது, மக்கள் முன்னேற்றத்திற்காக ஏங்குகிறார்கள், வன்முறையும்,பயங்கரவாத தாக்குதலும் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டுவிட்டது
சுற்றுலாவிற்கும், தொழில் துவங்கவும் அனைவரும் காஷ்மீருக்கு வருகின்றனர் என சித்தரிப்பை பரப்பினர், பெருவாரியான இந்தியர்களும் இதை நம்பினர்.
இன்று இந்த சித்தரிப்பு, கொள்கை நிலை , சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.
இது மோடி அரசின் முரட்டு தேசீயக்கொள்கையின் தோல்வி!
இது மோடி அரசின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அணுகுமுறையின் தோல்வி
இது காஷ்மீரின் தனித்தகுதியும், அரசியல் பிரிவு 370 ன் நீட்டிப்புமே பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் என்ற கொள்கை யின் தோல்வி!
இவற்றை கண்டிக்க மறந்த எதிர்கட்சிகள் குறிப்பாக காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய அரசு எடுக்கும் நியாயமற்ற , நேர்மையற்ற சிந்து நதி பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை ஏற்க முன்வந்துள்ளதை எப்படி புரிந்து கொள்வது?
உலக வங்கியின் முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக மீறும் உரிமை எந்த ஒரு நாட்டிற்கும் இல்லை என்றாலும், நதியின் பிரவாகத்தை நிறுத்தவோ, மடை மாற்றவோ இன்று இந்தியாவால் முடியாது. அதற்கு பத்து ஆண்டுகள் பிடிக்கும் எனவே நடைமுறையில் இது ஒரு பிரச்சினையல்ல என்பது வெறும் சால்ஜாப்பு மட்டுமே!
நதிநீரை நிறுத்துவோம் என்ற எண்ணமே,
நோக்கமே மனிதகுலத்திற்கெதிரானது அல்லவா?
ஒரு ஜனநாயக நாடு என கூறிக்கொள்ளும் ஒரு அரசு எவ்வாறு சர்வதேச விதிகளை மீற எத்தனிக்கிறது.
வரும் காலங்களில் பிரம்மபுத்திரா ந்தி யின் கீழ்கரை நாடுகளான இந்தியாவும் வங்க தேசமும் மேற்கரை நாடான சீனாவிற்கு “ இந்த உரிமையை “ வழங்குமா?
ஏன், கர்நாடகம் காவேரி தண்ணீரை நிறுத்துவேன் என்று கூறினால் தமிழ்நாடு ஏற்குமா?
அணு ஆயுத மோதலும் , சுற்றுச்சூழல் சீரழிவினால் ஏற்படும் பேரழிவும் மனித குலத்தை அழிக்கும் இன்றைய சூழலில் ந்தி நீரை ஒருதலையாக நிறுத்துவதும் மனித குல விரோதச்செயலே என்பதை எப்பொழுது காங்கிரஸ் தலைவர்கள் உணர்வார்கள்?
தேர்தல் அரசியலை மனதிற்கொண்டு மென்மையான இந்துத்துவ அணுகுமுறையை காங்கிரஸ் கட்சி கடைபிடித்து தன் செல்வாக்கையிழந்ததை இந்த நாடு கண்டிருக்கிறது .
நதி நீரை முடக்குவோம் என்ற கொள்கை அறிவிப்பை ‘தேச பாதுகாப்பு’ என்பதின் பெயரால் ஆமோதிப்பது வாய்மை அல்ல, நேர்மையும் அல்ல!
இந்த உண்மை அறிந்தும் கண்ணை மூடி கடந்து போகும் காங்கிரஸ் கட்சி காஷ்மீர் பிரச்சினைக்கு என்ன தீர்வை வைத்திருக்கிறது?
காஷ்மீரை பொறுத்தமட்டில் ‘தோலிருக்க சுளையை முழுங்கும்’ காங்கிரசின் அணுகுமுறை என்ன விளைவை கொடுத்தது என நாடறியும் . காஷ்மீர் மக்கள் நேரு காலமுதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதே வரலாறு!
அணு ஆயுதங்கள் வைத்துள்ள இரு நாடுகளும் கட்டுப்பாட்டை (restraint) கடை பிடிக்க வேண்டும் என மோடிக்கு உணர்த்தப்பட்டதால், இந்திய அரசியல் தலைமை லாவகமாக இது குறித்து (பதிலடி கொடுப்பது குறித்து) முப்படைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டதாக அறிவித்து “ஜகா” வாங்கியுள்ளது!
வலதுசாரி ஊடகங்களின் போர் வெறி கூப்பாட்டை மடைமாற்ற சாதிவாரி கணக்கெடுப்பை மோடி அரசு அறிவித்துள்ளது.
Also read
பயங்கரவாத்த்தை எதிர்கொள்ள இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் உலக நாடுகளும் அமெரிக்காவும் பாக்கிஸ்தானை இந் நிகழ்விற்காக ‘ கண்டனம் ‘ செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத செயல்களுக்கு பாக்கிஸ்தானும் பலியாகிறது என்பதில் உலக நாடுகளுக்கு ஐயமில்லை.
அணு ஆயுத நாடுகளான இந்தியாவும் பாக்கிஸ்தானும் மோதல் நிலையிலிருந்து பின்வாங்கி ததத்தமது நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் நிலை யறிந்து தேவையறிந்து பிரச்சினைகளை பேசிதீர்க்க முன்வரவேண்டும் . அதற்கான அரசியல் துணிவு இரு நாடுகளுக்கும் இருக்கிறதா என்பதைவிட பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக இல்லை என்பதே இன்றைய நிலையாக இருக்கிறது.
இந்துக்களின் தேசீயம் என்பது இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டது என்ற உண்மையை உரத்து பேச வேண்டிய காங்கிரஸ் பம்மி பதுங்குவது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குகிறது எனலாம்!
ச.அருணாசலம்
Leave a Reply