மதவாதிகளுக்கு துணை போகிறதா திமுக ஆட்சி…?

-அ.வை.தங்கவேல்

ஏரியை ஏப்பம் விட துடிக்கும் கூட்டத்திற்கு துணை போகும் அரசு அதிகாரிகள்…! ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்களை கொலை செய்து, ஏரிக்குள் கட்டப்பட்ட கோவிலுக்கு  திருவிழாவாம்..! இதை அனுமதித்திருப்பது திமுக ஆட்சி? பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால் இயற்கை நீராதாரத்தை அழிக்கும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது…?

இது ஏதோ உ.பியில் நடந்ததல்ல, தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியில்!

தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் நீர்பிடிப்பு பகுதிகளான ஏரி,குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும் அதற்கு அரசே பட்டா தந்து ஆதரிப்பதும் தொடர்கதையாகிவிட்டன!

தமிழகத்திலுள்ள முதலைப்பட்டி என்ற சிற்றூரில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரியை மீட்கப் போராடிய காரணத்தினால் ஒரே குடும்பத்தில் தந்தையும், மகனுமாக இருவரை ஆக்கிரமிப்பாளர்கள் வெட்டிக் கொன்றனர்!

ஆயினும்,அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் அன்னலட்சுமி இந்த படு கொலைகளுக்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து போராடி வருகிறார். சமூக நலனுக்கான போராளிகளை வெட்டிச் சாய்ப்பதால் போராட்டங்கள் ஓயாது என்பதற்கு  தற்போதைய நிகழ்வுகளே சாட்சியாகும்.

 

 

திருச்சியில் இருந்து இருபது கி.மீ தொலைவில்,  கரூர்  மாவட்டம்  குளித்தலை  வட்டத்தில் உள்ள இந்த 198.42 ஏக்கர் ஏரியானது, தற்போது  சுமார்  40 ஏக்கராக சுருங்கி காணப்படுகிறது.

ஏரிக் குளங்கள் எல்லாம் உள்ளாட்சிகளின்  நிர்வாகத்திலிருந்து மாநில  பொதுப் பணித்துறை வந்த பிறகு உள்ளூர் மக்களுக்கு ஏரி, குளங்கள் மீதான உரிமை மற்றும் அதிகாரங்கள் பறிபோயின.இதைப் பயன்படுத்தி சமூகவிரோத சக்திகள் அரசியல் செல்வாக்கோடு அதிகாரிகளை சரிக்கட்டி ஏரி நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்துவிடுகின்றனர்!

2003 ஆம் ஆண்டு வாக்கில் இப்பகுதி விவசாய சங்கம் ஒன்று  மேற்படி  198.42 ஏக்கர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில், தொடுத்த வழக்கில்  முழுமையான வெற்றி  விவசாய சங்கத்திற்கு கிடைத்திராத நிலையில், முந்தைய திமுக ஆட்சியில் அரசாணை 168/ 27-003-2000-ஆனது  அரசுக்குப் பயன்படாத நீர்நிலைகளில்  பத்தாண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து  வசிப்போருக்குப் பட்டா வழங்கலாம் என்றது.

இதனால், சுமார் 87 ஏக்கர் ஏரிநிலம் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்தோருக்கு  LandSettlement’D’Formஆகவும், சுமார் 1.10 ஏக்கர் ஏரி நிலம் ஆக்கிரமிப்பு குடியேறிகளுக்கு  வீட்டுமனை பட்டாவாகவும் வழங்கப்பட்டுவிட்டன.

2015-ம் ஆண்டு வாக்கில்  ராமர் என்றழைக்கப்படும்  வீரமலை என்பவர்  ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராய் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கிறார்.

எல்லா இடத்திலேயும் மதத்தை சாதியை முன்னிருத்துவது போல் இங்கேயும் ஆக்கிரமிப்பாளர்கள் 198.42 ஏக்கர் ஏரிக்குள்  வழிபாட்டு தலம் ஒன்றையும் கட்டுகின்றனர்.  இந்து முன்னனி கொடி பறக்கும் அளவுக்கு ஆக்கிரமிப்புகளுக்கு  மத சாதிய சாயம் பூசப்படுகிறது என்றால், நீதியை எங்கே எப்படி பெறுவது ….?

வீரமலையின் பொதுநல வழக்கானது  அடுத்த கட்டமாக  நீதிமன்ற அவமதிப்பு வழக்காக வேகம் எடுக்கிறது. ஆக்கிரமிப்புகளுக்கும் ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்  என்பதனை உறுதி செய்து கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள், தந்தையை கொன்றுவிட்டால் தனயன்

நீதி கேட்பான் என்பதற்காக, ஜூலை-29, 2019 அன்று காலை 8 மணியளவில், வீரமலையின் மகன் நல்லதம்பியை முதலிலும் அடுத்து  200 மீட்டர் தூரத்தில் அமர்ந்திருந்த வீரமலையையும்  அடுத்தடுத்து கொலை செய்கின்றனர்..!

கொலை செய்யப்பட்ட மகன் நல்லதம்பி, தந்தை வீரமலை.

இயற்கை தனக்காக போரிட யாரை வேண்டுமானாலும் உருவாக்கும். அது ஆண்களாக மட்டுமல்ல, பெண்களாகவும் இருக்கலாம் என்பது போல், வீரமலை & நல்லதம்பி இரட்டை கொலையை மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து சூ மோட்டோ வழக்காக  விசாரணைக்கு எடுத்தது. புதியதாக கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வழிபாட்டு கட்டிடத்தை  அகற்ற உத்தரவும் இட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஊராட்சி மன்ற தலைவர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்து,பதிவாளர் பிரிவில் மறு உத்தரவு வரும் வரை அகற்றக் கூடாது என  இடைக்காலத் தடை உத்தரவும் பெறுகிறார்.

குடும்பத் தலைவர்களை எல்லாம் சொன்று குவித்து விட்டால் 198.42 ஏக்கர்  ஏரியை முழுமையாக சொந்தம் கொண்டாடி விடலாம் எனும் சிந்தனை யாருக்கும் எப்போதும் வரக்கூடாது எனும் நோக்கில் தந்தை இட்டு சென்ற பணியை தொடர்ந்திட, 198.42 ஏக்கர் ஏரியை முழுமையாக மீட்டெடுக்க வேண்டி,  வீரமலையின் மகள் அன்னலட்சுமி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்குகளை  தாக்கல் செய்திருக்கிறார். மேலும், தனது சகோதரர் கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில் உள்ள  ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு, ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். இப்போது அவ்வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்காக, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

இவ்வாறாக வழக்குகள் பல நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிற வேளையில் கடந்த ஆறு வருடங்களாக ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலத்திற்கு திருவிழா நடத்துவதற்கும், மக்கள் கூட்டம் கூடுவதற்கும் அரசு தரப்பில்  அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போதைய குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் திருவிழா நடத்த அனுமதி கொடுத்ததுள்ளார். இது தொடர்பாக அன்னலட்சுமி தொடர்பு கொண்ட போது, கோட்டாட்சியர் பேச மறுப்பதோடு, உரிய முறையில் எழுத்து பூர்வமாக எந்த ஒரு அனுமதி கடிதத்தையும் கொடுக்கவில்லை.

ஏரி ஆக்கிரமிப்பில் எழுந்து நிற்கும் கோவில்! இதற்கு திருவிழா நடத்தி மிச்ச ஏரியையும் விழுங்க திட்டமோ?

இரண்டு வருடங்களுக்கு முன்பு இதுபோன்று திருவிழா சர்ச்சை எழுந்த போது  குளித்தலை RDO  க.புஷ்பாதேவி அவர்கள் ஆரம்ப நிலையிலேயே  மே-24, 2023 கடிதம் மூலம்  எழுத்து மூலமாக அனுமதி வழங்க இயலாது என ஆணையிட்டார்.

தமிழகத்தில் குற்றங்கள் பெருகி வரும் அதே வேளையில்,  குற்றவாளிகளுக்கு  விசாரணை நீதிமன்றத்தில் விதிக்கப்படும் தண்டனை உயர் நீதிமன்றத்தில்  அப்படியே மாறாது  உறுதி செய்யப்படுவது அரிதாகி விட்டது. ஆனால், வீரமலை மற்றும் நல்லதம்பி இருவரையும்  கொலை செய்த கொலையாளிகள் ஆறு பேருக்கு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், 25-04-2022 அன்று விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை மதுரை உயர்நீதிமன்ற கிளையும் 28-01-2025 அன்று  உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

விசாரணை நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும்,  குற்றவாளிகள் ஆறு பேருக்கு   இடைக்கால நிவாரணம் மற்றும்   ஜாமீன் ஏதும்  வழங்காமல் தண்டனையை விதித்தும், அதை உறுதியும் செய்திருப்பது நம்மை பிரமிக்க வைக்கிறது.

தற்போது ஏரியை காப்பாற்றப் போராடும் அன்னலட்சுமியின் தந்தை  சுழற்சி முறையில் பூசாரியாக இருந்து வந்த,  இந்து சமய அறநிலையத் துறை முதலைப்பட்டி அருள்மிகு அய்யனார் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி,  இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கு  நிலுவையில் உள்ள சூழலில்

இப்போதைய  RDO  சுவாதிஸ்ரீ அவர்கள் மேற்படி வழக்குகள் குறித்து  கவனம் ஏதும் கொள்ளாமல், பாதிக்கப்பட்டுள்ள அன்னலட்சுமி குடும்பத்தின் ஆட்சேபனையை  கருத்தில் கொள்ளாமல், ஆக்கிரமிப்பு செல்லாயி அம்மன் கோவிலுக்கு மே-14, 2025 அன்று திருவிழா நடத்திக் கொள்ள ஏப்ரல், 25, 2025 அன்றைய அமைதி பேச்சில்  பொது நலனுக்கு எதிராக அனுமதி அளித்தார்.

குளித்தலை RDO சுவாதி ஸ்ரீ அவர்கள் தன் கட்டுப்பாட்டில் கட்டுப்பாட்டில் காவல் துறையை வைத்துக் கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்.

இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டி ஏப்ரல்- 28, 2025  அன்று நான் அளித்த  அன்னலட்சுமி மனு மீது நடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி, மாறாக அன்றிலிருந்து குளித்தலை DSP & INSPECTOR  மூலம் தினசரி பதினைந்து, இருபது எண்ணிக்கையிலான  போலீஸாரை முதலைப்பட்டி கிராமத்தில் இறக்கியுள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிகாரியே ஆக்கிரமிப்பிற்கு துணை போகிறார்!

அன்னலட்சுமி குடும்பத்தை வீட்டுக் காவல் சிறைக்குள் வைத்து திருவிழாவை நடத்தி முடிக்க திட்டமிடுகிறார்…!

இரட்டை கொலை வழக்கில் உயர்நீதிமன்ற உறுதி தீர்ப்பு  வந்து மூன்று மாதங்கள் கூட முடிவுறாத நிலையில், ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலத்திற்கு  திருவிழா நடத்திக் கொள்ள, எப்படி அனுமதித்தார் குளித்தலை  RDO  சுவாதி ஸ்ரீ ?

இது தொடர்பாக கரூர் ஆட்சித் தலைவரிடம் இரு முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தனிப்பிரிவுக்கும் இ மெயிலில் விரிவான கடிதம் அனுப்பி அநீதியை தடுத்திட வேண்டுகோள் விடப்பட்டது. யாவும் கிணற்றில் போட்ட கல்லானது.

கட்டுரையாளர்; .வை.தங்கவேல்

சமூக செயற்பாட்டாளர்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time