முற்றும் துறக்கிறார்களா? யார் உண்மையான துறவி?

ந. தெய்வ சுந்தரம்

மடாதிபதிகளெல்லாம் துறவிகளாம்..! அனைத்தையும் துறந்ததாகக் கூறி காவி, கமண்டலத்துடன், ருத்திராட்சிர மாலை அணிந்து, அனைத்தையும் துய்த்து இன்புறுகிறார் சிலர்! நாட்டு நலனுக்காக அநீதிகளை எதிர்த்து, ஆதிக்க சக்திகளை, அதிகார மையங்களை எதிர்த்து, உயிரையே துறக்கிறார் சிலர்! எது உண்மையான துறவு;

தங்கள் குடும்பம், உற்றார், உறவினர்கள், சொத்து, சுகம் அனைத்தையும் ‘துறந்த பின்னரே’ஒருவர் மத பீடங்களான மடங்களின் ‘மடாதிபதிகளாக’ பொறுப்பேற்கிறார் என்பதே பிரபல ஊடகங்களின் வழியே பொது வெளியில் கட்டமைக்கப்பட்ட  ஒரு கருத்து! இது உண்மையா?

இந்து மதங்களின் மடங்கள் மட்டுமல்ல . . .  சமண, புத்த, கிறித்தவ மடாபதிகளைப் பற்றியும் இப்படித் தான் பலரும் நம்புகிறார்கள். குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த மடாதிபதிகள் அல்லது மதத் தலைவர்கள் தங்களது ஒரு குறிப்பிட்ட முதிய வயதில் , தங்களுக்கு அடுத்த ‘மடாதிபதிகளைத் ‘ தேர்ந்தெடுத்து, ‘பதவிப் பிரமாணம்’ செய்து வைக்கிறார்கள்! குறிப்பாக, ‘இளம் வயது உள்ளவர்களைக்  குறிப்பிட்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள்!

முற்காலத்தில் நாட்டை ஆளுகிற ‘சக்கரவர்த்திகள்’ தங்களுடைய ‘பதவிக்கு’ முன்கூட்டியே ‘இளவரசர்களைத்’ தேர்ந்தெடுத்துப் ‘பட்டம் சூட்டுவது போல, மடாதிபதிகளும் ‘இளைய பீடங்களை’ நியமிக்கிறார்கள்! இந்த ‘இளைய பீடங்கள்’ அந்தந்த மதத்திற்குரிய ‘வேதங்கள், தத்துவங்கள், மந்திரங்கள்’ ஆகியவற்றில்  கற்றுத் தேர்ந்தவர்களாக’ இருக்க வேண்டும் என்பது கூட  தற்போது இல்லை. சொத்தை நிர்வகிக்க திறமையானவர்களா..? என்ற அளவுகோலே முக்கியமாக பார்க்கப்படுகிறதாம்.

அடுத்து, இந்த வாரிசுகள் தங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தார்கள் மேல் வைத்திருக்கும் ‘பந்த பாசங்களை’ முற்றிலும் ‘துறக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டாலும் அப்படி இருப்பதில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.

தங்களது எதிர்கால இல்லற வாழ்வைத் ‘தியாகம் செய்ய வேண்டும்,திருமண ஆசை கூடாது  என்றாலும், இவர்கள் ரகசியமாக குடும்பங்களை வைத்துக் கொள்வது நடைமுறையாக உள்ளது.  ஆடைகளாக அந்தந்த மடங்களின் சம்பிரதாயப்படியான காவியோ, வெள்ளையோ ஆடைகளை அணிய வேண்டும். கோட், சூட், ஜீன்ஸ் அணியக் கூடாது!  சில மடங்களில் தங்களுடைய தலைமயிர்களைக் கூட ‘தியாகம்’ செய்ய வேண்டும்.. போன்றவை வெகு மக்களிடம் இருந்து இவர்களை பிரித்து உயர்வாக எண்ண வைக்கிறது.  இவர்கள் மடத்தின் இளவரசர்கள்! இறைவனுக்கு நிகராக இவர்களை ’சன்னிதானம்’ என அழைப்பதும் உண்டு. கடவுளை பல்லக்கில் வைத்து ஊர்வலம் நடத்துவதை போல இவர்களையும் செய்வார்கள்.

அது சரி. இந்த மடங்களின் நிலை என்ன? இலட்சம் கோடி சொத்துகள் உண்டு! இந்த இலட்சம் கோடி சொத்துக்கு உரிமையாளர்கள் இந்த மடாதிபதிகள்! இந்தச் சொத்து எங்கிருந்து வந்தது? அரசர்களும் நிலப்பிரபுக்களும் தங்களைக் கருத்து ரீதியில் தற்காத்துக் கொள்வதற்காக  . . .  ஆண்டை – அடிமை என்னும் நிலவுடைமைக் கோட்பாட்டைத் தக்கவைப்பதற்காக உருவாக்கியவையே இந்த மடங்கள்! மக்களின் சொத்தைக் கொள்ளையடித்த அரசர்கள் . . .  கொள்ளையின் ஒரு பகுதியை மடங்களுக்குத் ‘தானம்’ செய்தார்கள்! தற்போதும் செல்வந்தர்கள் மடங்களுக்குக் ‘கொடை ‘ அளிக்கிறார்கள்!

அதன் பயனாக,  பழங்காலத்து அரண்மனைகளில் கூட இல்லாத வசதிகள் . . .  ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கூட இல்லாத வசதிகள் இந்த மடங்களில் உண்டு. உலகம் சுற்றக் கோடி மதிப்புள்ள இன்பச் சிற்றுந்துகள் உண்டு! தனி விமானப் பயணங்களும் உண்டு! சில தீவுகளையே ‘விலைக்கு வாங்கி’ தனி சாம்ராஜ்ஜியத்தைக் கூட  நிறுவ முடியும்!

”சந்நியாசம்” வாங்கிக் கொண்டு, இலட்சம் கோடிகள் சொத்துகளின் ‘அரசர்களாக’ மதங்களின் பீடங்களில் அமர முன் வருகிறார்களே இந்த  பீடாதிபதிகள்!’ . . . இதுவல்லவோ ”தியாகம்?”

இந்தத் ‘தியாகங்கள்’ ‘அனைத்தையும் துறத்தல்’ இந்து மதத்தில் மட்டுமல்ல, கிறித்தவ மதம், புத்த மதம், சமண மடம் போன்ற அனைத்து மதங்களிலும் உண்டு! வடிவங்கள் மாறலாம்! அவ்வளவு தான்!

இந்தப் பதிவில் மதங்கள் பற்றியோ, மதங்களின் ‘மடங்கள்’ பற்றியோ நான் விமர்சனம் செய்யவில்லை! இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை விமர்சனம் செய்யவில்லை!  சமூக வரலாற்றில் தனிச்சொத்துடைமை தோன்றி நிலவும் போது உருவாகிய அல்லது உருவாக்கப்பட்ட இந்த  ‘இறை நம்பிக்கை’ ‘மடங்கள்’ போன்றவை சமூக வரலாற்றில் இன்னொரு கட்டத்தில் மறையும்! மறைந்து தான் தீரும்! எனவே, அதுபற்றி விவாதிப்பதற்கான தளங்கள் வேறு!

ஒரே ஒரு செய்தியைத் தான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்! ‘அனைத்தையும் துறத்தல்’ என்பது பற்றிய ஒரு கருத்தே இது! ‘அனைத்து’ என்பதை எவற்றைக் குறித்து நிற்கிறது? இதுதான் எனது ஐயம்!

இவ்வாறு ‘இளவரசர்களாக’ அல்லது ‘சக்கரவர்த்திகளாக’ மாறியவர்களுக்கு இருக்க இடம் இல்லையா? உண்ண உணவு இல்லையா? பயணிக்க ஊர்திகள் இல்லையா? உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? அரசாங்கங்களின் அரவணைப்பு இல்லையா? அது மட்டுமல்ல . . . மடங்களின் சொத்துகளை அபகரிப்பதில் ஏற்படுகிற போட்டி, பொறாமைகள் . . . கொலைகளில்கூ ட முடிவடைகின்றன! பழங்காலத்தில் சக்கரவர்த்திகளை அவர்களுடைய புதல்வர்களே கொலைசெய்துவிட்டுத் தங்களைச் சக்கரவர்த்திகளாகப் பிரகடனம் செய்யப்பட்ட வரலாற்றைப் படித்திருக்கிறோம்! இப்போதும் கூட இதுபோன்ற செய்திகளைப் பல மடங்களில் கேள்விப்படுகிறோம்!

இது தான் ‘அனைத்தையும் துறத்தலா?’

ஆனால், உண்மையில் மேற்கூறியவை எதுவும் இல்லாமல் . . . மக்களுக்காகவே . . . மக்களிடையே வாழ்ந்து . . . அவர்கள் கொடுக்கிற கஞ்சியைக் குடித்துக்கொண்டு . . . கட்டாந்தரையில் படுத்து உறங்கிக் கொண்டு . . . மக்களுடைய உழைப்பிலும் பங்கேற்று . . . மக்களுக்காகவே போராடி . . . இறுதியில் மக்களுக்காகவே . . . அடித்து அல்லது சுட்டுக் கொல்லப்படுகிறார்களே . . . இது ‘அனைத்தையும் இழத்தல்’ என்னும் சொற்றொடருக்குப் பொருள் இல்லையா?

பகத்சிங், குருதேவ், வாஞ்சிநாதன் போன்ற  இளைஞர்கள் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டங்களில் உயிர் தியாகம் செய்தவர்கள். தங்களது நாட்டுக்காக இவர்கள் தங்கள் குடும்பம், பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் துறந்தவர்கள்! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்கள் நலனுக்காக தங்கள் இன்னுயிரையே துறந்தவர்கள். அதுவும் வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய இளம் வயதில் எதையுமே அனுபவிக்காமல் தங்களையே மக்கள் நலவாழ்வுக்கு அர்ப்பணித்தவர்கள்!

கியூபாவில் மக்கள் புரட்சியில் பெரும் பங்காற்றியவர் சே குவேரா. அதன் பிறகு  கியூபாவில் தனக்கு அளிக்கப்பட்ட அமைச்சர் பதவியைத் துறந்து, பிற நாடுகளின் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் புரட்சியாளர் குவேரா. மற்றொரு நாடான பொலிவியாவின் விடுதலைக்காகப் போராடி உயிரைத் துறந்தார்!

1948-50 களில் இந்தியாவிலும் ஹைதராபத் நிஜாமை எதிர்த்த விவசாயிகளின் புரட்சியில் பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், சொத்து, சுகங்களைத் துறந்து, மக்கள் விடுதலைக்காக போராட்டங்களில் பங்கேற்று உயிர் தியாகம் செய்தார்கள்!

1969-இல் இந்தியாவின் பல பகுதிகளில் உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படுவதை எதிர்த்து ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகப் போராடிய  பத்தாயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டார்கள்! அவர்களின் தலைவரான தோழர் சாரு மஜூம்தார் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலேயே கொல்லப்பட்டார். இவர்கள் அனைவரும் குடும்பம், சொத்து, பதவி, சுகம் போன்றவற்றைத் துறந்து தியாகம் செய்தவர்கள்!

புரட்சியாளர் சாரு மஜும்தார்

எனக்குத் தெரிந்து தமிழகத்திலேயே மேற்குறிப்பிட்ட புரட்சியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றதற்காகக் கொல்லப்பட்டவர்கள் தோழர்கள் அப்பு, கணேசன், சர்ச்சில், சீராளன், பாலன், தமிழரசன், இரவிச்சந்திரன் போன்ற இளைஞர்கள்! இவர்கள் எல்லோரும் தங்கள் படிப்பு, பதவி, குடும்பம், சொத்து போன்றவற்றைத் துறந்து , மக்களுக்காகப் போராடி . . . போராட்டங்களிலேயே உயிர் துறந்தவர்கள்!

தோழர்கள் அப்பு, கணேசன், தமிழரசன்

மேலே நான் கூறிய வரிசையில் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் . . . தங்கள் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், சொத்து, பதவி போன்ற அத்தனையையும் துறந்து போராடி உயிர் துறந்தவர்கள்!

எது ‘அனைத்தையும் இழத்தல்’ ? எது ‘துறவறம்’? தற்போது இருக்கிற வாழ்க்கையை விட வசதியான வாழ்க்கைக்குப் பட்டம் சூட்டிக் கொள்பவர்களா? அல்லது தங்களுக்கு இருக்கிற சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து விட்டு, மக்களுக்காவே வாழ்ந்து உயிர் துறந்தார்களே இவர்கள் வணங்கத்தக்கவர்களா?  இல்லையா? இவர்களின்  வாழ்க்கையை ‘அனைத்தையும் துறத்தல்’ என்பதற்குப் பொருளாகக்  கொள்ளலாம் தானே!

ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்க நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது! ஆமாம், ‘அனைத்தையும் துறத்தல்’ என்னும் சொல்லுக்கும் பின்னாலும் வர்க்கங்கள் . . . வர்க்க  நலன்கள் ஒளிந்துகொண்டிருக்கிறது!

அனைத்து  நாடுகளிலும் . . . அனைத்து மதங்களின் மடங்கள் அல்லது தலைமைப் பீடங்களுக்கு . . . கோடியே கோடி சொத்துகளைக் கொட்டிக் கொடுத்தவர்கள் யார்? அரசர்கள் . . . சக்கரவர்த்திகள் . . . அரசுகள்! ஏன் அவ்வாறு கொட்டிக் கொடுத்தார்கள்? ‘பொது நலனா’? அல்லது ‘வேறு நலன்களா? ‘ சிந்தித்துப் பார்த்தால் விடை கிடைக்கும்!

கட்டுரையாளர்; ந. தெய்வ சுந்தரம்

பேராசிரியர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time