இந்தியா – பாகிஸ்தான் போர்! தீர்வு தான் என்ன?

-சாவித்திரி கண்ணன்

இந்தியா – பாகிஸ்தான் இடையில் உண்மையிலேயே போர் ஆரம்பித்து விட்டது! திகில் தரும் போர் செய்திகளும், காட்சிப் பதிவுகளும் வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டத்தின் சாட்சியாக நாம் வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்த்துகின்றன…! இதனால் இரு தரப்பிலும் ஏற்படும் இழப்புகள் சொல்லி மாளாது..;

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். அதில் சந்தேகமில்லை. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தியாவை தாக்கிவிட்டு பாகிஸ்தான் பகுதிக்குள் பயங்கரவாதிகள் பாதுகாப்பு தேடிக் கொள்கிறார்கள் என்பதை இந்திய உளவுத் துறை அறிந்து வைத்திருந்த வகையில், தற்போது அவர்களின் இடங்களை குறி பார்த்து தாக்கி வருகிறது.

இந்தியாவில் இருந்து பல டிரோன்கள் பறந்து சென்று பாகிஸ்தானை தாக்குவதும், அங்கிருந்து வரும் டிரோன்களை இந்தியாவை தக்குவதற்கு முன்பே இந்தியா எதிர்தாக்குதல் நடத்தி தடுத்துவிடுவதுமான சூழலை பார்க்கையில் இந்தியா பாகிஸ்தானைக் காட்டிலும் பல மடங்கு வலுவாக உள்ளது என்பது புலப்படுகிறது.

இந்திய ராணுவ வீரர்களின் வீரமும், அர்ப்பணிப்பும், தியாகமும் போற்றத்தக்கது அதில் மாற்றுக் கருத்தில்லை.

ஒரு போர் என்பது இரு அரசின் ராணுவத்திற்கு இடையில் என்றாலும், இதில் கண்டிப்பாக இரு தரப்பின் அப்பாவி மக்களும் கணிசமாக பலியாவது நடந்தே தீரும். அவ்விதமே நடக்கின்றன.. என்பதை சர்வதேச ஊடகங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். மனம் உள்ளபடியே பதைக்கிறது…!

பாக்கிஸ்தானை ஒட்டியுள்ள பஞ்சாப், காஷ்மீர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இரவெல்லாம் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை இந்த கடும் கோடையில் எவ்வளவு துன்பத்தை தரும்..! இரவெல்லாம் இருட்டில் புழுக்கத்தில் மூழ்கி கிடக்க வேண்டும். அதுவும் காற்றுத் தேவைக்காக ஜன்னலகளை திறந்து வைக்கவும் தடை உள்ளது. இதனால், நோயாளிகள், பச்சிளம் குழந்தைகள், முதியோர்,பெண்கள் ஆகியோர் எத்தகைய இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசிக்கும் போது வேதனையே மிஞ்சுகிறது.

இந்தியா- பாகிஸ்தான் பார்டரில் இருக்கும் மக்கள் வாழ்வுடங்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேறி உள்ளனர். போர் முடியும் வரை அவர்கள் அகதிகள் முகாம்களில் தான் இருக்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகங்கள் மட்டுமே பேசப்படுகின்றன. இதுவும் தாய் நாட்டுக்கான தியாகங்களில் ஒன்று தான். அதே சமயம் இவர்களை நாம் நீண்ட நாட்கள் சோதிக்கக் கூடாது. விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும்.

இந்திய தாக்குதலில் சேதமான பாகிஸ்தானில் உள்ள கட்டிடம்.

இதே போல இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டு உள்ளது பெரும் சிரமம் தருவதாகும். அவசர மருத்துவ உதவிக்கு கூட யாரையும் அணுக முடியாது. தற்போதே இப்பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுபாடு உள்ளதாக சொல்லப்படுகிறது. எப்போது தங்கள் வீட்டு கூரையில் குண்டு விழும் என்ற பதட்டத்துடன் வாழ்வது பெரும் துயரமாகும். ஆக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இன்னும் போர் கடுமையடையும் போது விலைவாசி உயரும். நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும்..!

எனவே, ஒரு சில தீவிரவாதிகளின் முட்டாள் தனத்தைக் கொண்டு ஒரு போரை முன்னெடுப்பது அவசியமா…? என்ற கேள்வி மக்கள் அனைவர் மனதிலும் உள்ளது.

ஒரு சுற்றுலா தளத்தில் – அதிலும் காஷ்மீர் முழுமையிலும் ராணுவம் எப்போதுமே குவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் – தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள்..? சுட்டுவிட்ட பிறகு அவர்கள் எப்படி தப்பிக்க முடிந்தது..? இதில் நமது ஒன்றிய அரசு தன்னை சுயபரிசோதனைக்கு உள்ளாக்கி கொள்ளாமல்.. ஆத்திரமும், அவசரமும் கொள்வானேன்..?

நாம் இராணுவத்தை ஆதரிக்கலாம். அது நம் கடமை. ஆனால், எந்தச் சூழலிலும் போரை ஆதரிக்கக் கூடாது. இது காந்திய தேசமல்லவா? புத்தரின் பூமியல்லவா? எத்தனையெத்தனை மகான்களும், சித்தர்களும் தோன்றிய பூமி.

நம் அரசாங்கத்தின் கோபத்தில் நியாயங்கள் இருந்தாலும், ராஜதந்திர முயற்சியில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

காரணம், போர் தொடர்ந்து கொண்டே போனால், அதை தாங்கும் சக்தி மக்களுக்கும் இல்லை. நமது பொருளாதாரத்திற்கும் இல்லை. ஏற்கனவே நமது நாடு பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை முற்றிலும் துண்டித்துக் கொண்டது. பாகிஸ்தான் சந்தையை இந்திய உற்பத்தி பொருட்களே ஆக்கிரமித்து இருந்தன. அந்த அளவுக்கு நமது பொருட்களுக்கு அங்குள்ள சந்தையை நாம் இழந்துவிட்டதன் மூலம் இந்திய வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் கணிசமான இழப்பை பெற்றுள்ளனர். இந்தச் சூழலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் இந்தியா- பாகிஸ்தான் போர் முடியும் வரை இந்தியவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை நின்றுவிடும். இது சுற்றுலாவை நம்பி தொழில் நடத்தும் பல லட்சம் பேரை பாதிக்கும். போர் முடியும் வரை வானூர்த்திகள் வானில் பறப்பதில் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டுமோ? இதனால் பலரும் தங்கள் பயணங்களை தள்ளிப் போட நேரிடும். விமான போக்குவரத்து நிறுவனங்கள் கடும் இழப்பை சந்திக்க நேரும்.

அண்டை நாடுகளான இரு நாடுகளும் சண்டை போட்டாலும் சகோதர நாடுகளே. இந்த அண்ணன் தம்பி சண்டையில் குளிர்காய நினைப்பவர்களுக்கு நாம் வாய்ப்பு தரக் கூடாது.

பாலஸ்தீனர்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலுக்கும், இந்தியாவிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இந்தியா என்பது ஆன்மீக பூமி. அகிம்சை தோன்றிய மண். இது அப்பாவி மக்களை ஒரு போதும் கொன்றொழிக்க சம்மதிக்காது.

இது வரையிலான நமது ராணுவ தாக்குதல்களே சிறந்த அதிர்ச்சி வைத்தியம் தான். இதுவே, பாகிஸ்தானுக்கு போதிய பயத்தை தந்திருக்கும். ’’ஜாக்கிரதை அந்த பயம் இருக்கட்டும்’’ என சொல்லிவிட்டு., சற்று இயல்புக்கு எவ்வளவு விரைவில் திரும்ப முடியுமோ அவ்வளவுக்கு நல்லது.

இந்த விவகாரத்தில் அமைதியை விரும்பும் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு பாகிஸ்தானை எச்சரித்து, பயங்கரவாதத்திற்கு துணை போக மட்டோம் என்ற உறுதி மொழியை உறுதி மொழி வாங்கித் தந்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு அமைதியை விரும்பும் அனைத்து அமைப்புகளும் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

சமாதானமும், சாந்தியும் நிலவ குரல் கொடுப்போம்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time