மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த ‘தக்லைப்’ தந்துள்ளதோ, மிகுந்த அதிர்ச்சியை! ஆகச் சிறந்த இயக்குனரும், உலக மகா கலைஞனும் இந்தப் படத்தின் வழியே சினிமா ரசிகர்களுக்கும் , சமூகத்திற்கும் சொல்லும் செய்தி என்ன.? தக்லைப் குறித்து பலரும் பேச மறுக்கும் விசயங்களை கவனப்படுத்தவே இந்த கட்டுரை;
நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, இயக்கம்… இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தத் திரைப்படம் சொல்ல வருவது என்ன என்பது தான் முக்கியம்.
படம் சொல்லும் இரண்டே விசயங்கள்;
வன்முறையைக் கொண்டாடுவது, பெண்ணடித்தனத்தை போற்றுவது. இவை தான்.
முதல் விசயத்துக்கு வருவோம்…
படம் முழுக்க நூற்றுக்கணக்கான கொலைகள், நாயகர்கள் கமல் மற்றும் சிம்பு தலா நூறு கொலைகளுக்கு மேல் செய்கிறார்கள். இவர்களே இப்படி என்றால் வில்லன் மட்டும் தக்காளித் தொக்கா? அவர் நூற்றுக்கு மேல் கொலைகள் செய்கிறார்.
தலையில் – கழுத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, கழுத்தை அறுத்து கொல்வது, கத்தியை தலைக்குள் விட்டு… அய்யோ இதற்கு மேல் வேண்டாம்.
3 விநாடி கற்பனை விளம்பரத்தில் கூட ‘சித்தரிக்கப்பட்ட காட்சிகள்’ என்று வெளியிடுவார்கள். ஆனால், படம் நெடுகிலும் உள்ள இந்த வன்முறைகளை, கொடூரங்களை கொண்டாடுவது போலவே காட்சிகள் அமைத்து இருக்கிறார்கள்…!
ரசித்து கொலை செய்வது, ஸ்டைலாக பிறரை தாக்குவது… இப்படி…!
இது போன்ற காட்சிகள் மக்களிடையே – குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமே!
ஆனால் சினிமாக்காரர்கள், “படத்தைப் பார்த்து வன்முறையில் யாராவது இறங்குவார்களா, கொலை செய்வார்களா?” என்று கேட்கலாம்.
அதற்கு சில சம்பவங்களைச் சொல்லியே ஆக வேண்டி இருக்கிறது.
டெல்லி, ஜகாங்கீர்புரி பகுதியில் ஷிபு என்பவர், கொல்லப்பட்டுக் கிடந்தார். கொலையைச் செய்தது, மூன்று சிறுவர்கள். கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்திருந்தனர்.அந்த கொடூரத்தை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருந்தனர் சிறுவர்கள். காவல்துறை விசாரணையில், “புஷ்பா போன்ற, கேங்ஸ்டர் படங்களைப் பார்த்தோம். கொலை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து, பெரிய டான் ஆக திட்டமிட்டோம்” என அழுதனர் சிறுவர்கள்.
சண்டிகர் நகரில், ஐந்து வயது வயது சிறுமி காணாமல் போய்விட்டார். அந்த சிறுமியின் பெற்றோருக்கு அலை பேசிய ஒருவன். ‘இருபது லட்ச ரூபாய் வேண்டும். இல்லாவிட்டால் சிறுமியை கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டினான். அலை பேசியை டிரேஸ் செய்த காவல்துறையினர் அந்த கடத்தல்காரனை கண்டுபிடித்தனர். சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பதினாறு வயது சிறுவன்!
“சினிமாக்களில் வரும் கடத்தல் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து, இது பணம் சம்பாதிக்க எளிய வழி என நினைத்து செய்தேன்” என்று அழுது புலம்பினான் சிறுவன்.
சேலத்தில் ஆலமரத்துக்காடு என்ற சிறிய ஊர். நாற்பது வயது பெண்ணை சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தனர். விசாரணையில் சிக்கிய முரளி, விஜயகுமார் ஆகிய இளைஞர்கள் “கொலை செய்துவிட்டு தப்பிப்பது எளிது என சினிமாக்களைப் பார்த்து செய்து விட்டோம்” எனக் கதறினர்.
பெரிய திரையில், ரசித்து, ரசித்துக் கொல்வதாகக் காட்டப்படும் காட்சிகள் இளம் மனங்களை எப்படி மனதைப் பாதிக்கும் என்பதற்கு மிகச் சில உதாரணங்களே இந்த சம்பவங்கள்.
இது போன்ற காட்சிகள் ‘தக்லைஃப்’ படத்தில் நிரம்பி இருக்கின்றன.
அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லாத போது, கமல் சில நல்ல படங்களையும் கொடுத்தார்.
நம்மவர்,ஹேராம், அன்பே சிவம்.. போன்ற சில படங்களைச் சொல்லலாம்.
இன்று அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்… ராஜ்யசபா எம்பி.
அவர், இளைஞர்கள் மனதில் வன்முறையை விதைக்கலாமா?
தக்லைஃப் மட்டுமல்ல.. அகில இந்தியாவிலும் தாதா படங்கள் நிரம்பி வழிகின்றன.
அதில் ஒன்றை மட்டும் இப்போது சுட்டிக் காட்ட வேண்டியது அவசியமாகிறது.
கே.ஜி.எஃப் 2 என்ற கன்னட படம், மிகப்பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு பல மொழிகளில் இந்தியா முழுதும் வெளியானது. அதாவது ‘பான் இண்டியா’ படம்.
அதில் ஒரு தாதா, நவீன துப்பாக்கியை வைத்து சி.பி.ஐ. அலுவலத்தையே தகர்க்கிறான். பல காவலர்கள் கொல்லப்படுகிறார்கள். இதைப் பார்க்கும் இளைஞர்களுக்கு, நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ. மீது.. ஏன், காவல் துறை மீதே எப்படி மதிப்பு வரும்?
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, ராக்கியை பிடிக்க உத்தரவிடுகிறார் புதிதாக பொறுப்பேற்கும் பெண் பிரதமர். இதை அறிந்த ராக்கி, பெண் பிரதமரை சந்திக்க நாடாளுமன்றத்துக்கே வருகிறான். வரவேற்பறையில் கால் மேல் கால் போட்டு அமர்கிறான். உடனடியாக பிரமதரிடமிருந்து உள்ளே வரும்படி அழைப்பு வருகிறது. அருகில் இருப்பவரிடம் சிறிது நேரம் வேண்டுமென்றே பேசிவிட்டு பிரதமர் அறைக்குள் நுழைகிறான் தாதா ராக்கி.
அங்கே, பிரதமரின் மேசையில் பூலோக உருண்டை இருக்க, அதை கைகாளால் சுற்றிக்கொண்டே, எடக்கு மடக்காக பிரமதரிடம் பேசுகிறான். அதாவது, ஒரு நாட்டின் பிரதமரை விட, தாதா உயர்ந்தவன் என்கிற எண்ணத்தை விதைக்கும் காட்சி இது.
இதைவிடக் கொடுமையான காட்சி ஒன்று உண்டு.
நாடாளுமன்றத்தில் துப்பாகியோடு புகுந்து, ராஜ நடைபோட்டு வருகிறான், தாதா விக்கி. பெண் பிரதமர் பயந்து நடுங்குகிறார். மெல்ல நடைபோடும் ராக்கி, அங்கே இருக்கும் முன்னாள் பிரதமரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். இந்தியாவின் அரசியல் சாசனப்படி உயர் மதிப்பு பெற்றது நாடாளுமன்றம். அதையே இழிவு செய்வது போன்ற காட்சி இது. நாடாளுமன்ற ஜனநாயகம் மீது விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், சட்டப்படி நாட்டில் உயர் அமைப்பு அது தான். அதையே அவமானப்படுத்தும்படியான காட்சி!
நாடாளுமன்றத்தை விட ஒரு தாதா உயர்ந்தவன் என்பது போன்ற இந்த காட்சிகளால், இளைஞர்கள், சிறுவர்கள் திசை மாற மாட்டார்களா..? தேசத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தும் விசயமல்லவா இது!
இதைவிடக் கொடுமை… இந்த கே.ஜி.பி. 2 படம்தான், கன்னடத்தில் சிறந்த படம் என்று அந்த வருடம் தேசிய விருது பெற்றது. ஊடகங்களிலேயே ஆகப்பெரும்போலோர் இதை உணர்வதாக இல்லை என்பது கூடுதல் வேதனை.
தற்போது தக்லைஃப் குறித்தும்கூட, “இது கதை.. இன்னின்னார் இப்படி இப்படி நடித்து இருக்கிறார்கள்… ஒளிப்பதிவு அப்படி..” என்றெல்லாம் எழுதி, பேசுகிறார்களே தவிர, இப்படம் விதைக்கும் வன்முறை குறித்து எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
மீண்டும் தக்லைஃப் வருவோம்.
இப்படத்தின் இன்னொரு ஆபத்து.. பெண்ணடிமைத் தனம்.
பொதுவாக திரைப்படங்களில் வில்லன் தான் பல பெண்களை அடிமையாக வைத்திருப்பான். இதில் நாயகன், “காதல்” என்கிற பெயரில் ஒரு பெண்ணை “துணையாக” வைத்து இருக்கிறான்.
அதாவது சக்திவேல் தாதா. அவன் மனைவி ஜீவா. இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகள்.
ஆனாலும், சக்திவேலுக்கு இந்திராணி என்கிற நடன மாது மீது மையல்.
இது சக்திவேல் மனைவிக்குத் தெரிந்து, கோபத்தில், தனது தாலியைக் கழற்றிவிடுகிறார். பிறகு சக்திவேலின் மாய்மால பேச்சில் மயங்கி தாலியை அணிந்து கொண்டு அவனுடன் சல்லாபிக்கிறார். அது மட்டுமல்ல, கணவனின் காதலியிடம், “இதோ பார் என் தாலி.. நான் தான் ஒரிஜினல்” என்கிறார்.
அதாவது, ‘கணவன் தவறு செய்தாலும்பரவாயில்லை… தனக்கே முதல் மரியாதை’ என்பதாக எண்ணத்தை வெளிப்படுத்துகிறாள்.
இன்னொரு பக்கம், அந்த “காதலி” இந்திராணிக்கு வருவோம். அவர் சக்திவேலின் காதலி அல்லவா… ஒரு கட்டத்தில் சக்திவேலின் வளர்ப்பு மகனின் காதலி ஆகிவிடுகிறாள்..! அதை நினைத்து நினைத்து குமைந்து போகிறாள்..!
இவர்களுக்குள் உதட்டு முத்த காட்சி, சரசங்கள், ஆபாச நடனங்கள்…!
எப்படி இப்படி எல்லாம் இந்த முதிய வயதில் யோசிக்க முடிகிறதோ கமலுக்கும், மணிரத்தினத்துக்கும்!
Also read
“ரங்கராய சக்திவேல் நாயக்கர்” என்று தேவையில்லாமல் சாதிப் பெயர் ஒட்டுதல் வேறு.
இவை எல்லாவறறையும் விட நமக்கு எழும் கேள்வி இதுதான்…
சாதாரண படைப்பாளிகள் இணைந்து குறைந்த பட்ஜெட்டில் எளிய மக்கள் குறித்த படங்களை அளிக்கிறார்கள். அவை வெற்றி பெறவும் செய்கின்றன.
பெரிய ஹீரோக்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் போன்றோர் ஏன் எப்போதும் தக்குகள், கேங்ஸ்டர்கள், டான்கள் எனப்படும் அடியாள் கூட்டத் தலைவர்கள் பற்றிய படங்களையே அளிக்கிறார்கள்..? சிந்தனை வறண்டு விட்டதா…?
அந்த அடியாட்களின் வாழ்க்கையை நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன…?
ரசிகர்கள் சிந்திக்க வேண்டிய நேரம்.
கட்டுரையாளர்; டி.வி.சோமு
மூத்த பத்திரிகையாளர்
இன்றைய இந்தியச் சினிமாவைலகமே வர்த்தகச்சூதாடிகளிடம் சிக்கி வன்முறை, பாலியல், கொலைகள் கொள்ளைகள் ஒவ்வொரு நாளும் நிகழ வழிகாட்டி வருகிறது.
இதற்கு ஆகும் அரசுகளும் அதிகாரிகளும் துணைநிற்பது அவலம். சென்சார்போர்டு இது போன்ற திரைப்படங்களை தடை செய்யவும் வெளிடவும் அனுமதித்தல் தகாது.
தேர்ந்த திரைக்கலைஞர்கள், இயக்குநர்கள் இந்த வயதில் இத்தகையப் போக்குக்கு இட்டுச் செல்வது பெரும் கேடு. இதில் மானுடத்தின் மனிதம் சீரழியும்.
இதுதான் இந்தியத் திரைப்படத் துறையில் தலையில் ஓத்த விதி போலும்.
ரசனை என்பது பன்றியை வளர்ப்பது போலத்தான்.
ஆரோக்கியமான இலை, தழை, தீவனம் தந்து வளமாகவளர்த்து உண்ணுவது ஒன்று.
வெளியில் தெருவில் அசுத்தமான இடத்தில் மேயவிட்டு மூளைக் காய்ச்சல் பன்றிகளை வளர்த்தெடுப்பது மற்றொரு
இது இரண்டாம் வகை ரசனயையையே இந்த வர்த்தகச்சூதாடிகள் வளர்த்தெடுக்கிறார்கள்.
அருமையான விமர்சனம் அல்ல எச்சரிக்கை
Very good review. Thanks Somu sir
இந்த படத்தில் ரஜினி or பிரபாஸ் நடித்து இருந்தால் ஆஹா ஓஹோ என்று பாராட்டி இருப்பீர்கள்
Exam. Kaala. KGF
Super
T.V. somu சார் சொல்வது போல் கற்பனை வறட்சியா? வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் நாட்டுக்கு தேவை என்ன என்று சிறிதும் யோசிக்காமல் படம் எடுப்பவர் களை…தோற்கடிக்க வேண்டும்.. கர்நாடகா மட்டுமல்ல..எல்லா மாநிலங்களிலும் தடை செய்ய வேண்டும்..இவர் MP ஆனால் என்னசெய்வார்?நடிப்பதை நிறுத்தி விட்டால்…அதுவே நாட்டுக்கு செய்யும் சேவை..
நீதித்துறையில் ஊழல் உள்ளது என்றால் திரைப்பட தணிக்கை துறையிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது என்பதையே மேற்கண்ட படங்கள் திரையிட அனுமதிப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது
Good straight to the point review without any hype or compromise about director and actors.
வெளிப்படையான விமர்சனம். மற்றவர்கள் சொல்ல தயங்கியதை ஜயா தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறார் . ஒரு வன்முறை படம் கேஜிப் 1000 கோடி , லியோ 600 கோடி வசூல் செய்கிறது என்றால் ரசிகர்கள் வன்முறைக்கு ஆதரவு அளிக்கிறாகள். சமூக மாற்றத்திற்காக படம் எடுதத காலம் போய்விட்டது. இது வணிகத்திற்காக படம் எடுக்கும் காலம். அப்பா வை மகன் கொல்வதும் மகனை அப்பா கொல்வதும் இதுதான் இப்போது உள்ள ட்ரெண்ட். ரசிகர்கள் இதை கொண்டாடுகிறார்கள் என்றால் அவர்களின் மனநிலை எப்படி உள்ளது. நாம் டைரக்டர்களை மற்றும் குறை சொல்லி ஒதுங்கி விட கூடாது. ஒவ்வொரு தனி மனிதரும் இதை பற்றி சிந்திக்க வேண்டும். தனி மனித மாற்றம் சமூக மாற்நம்பிக்கையுடன் பயணிப்போம்.
இந்தப் படம் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் என்ன கருத்தை சொல்ல வருகிறது. ? முக்கியமாக மணி ரத்னம் அவர்கள் சிந்திக்க வேண்டும்
Well said. All film makers should introspect on this and make responsible films
அன்புள்ள கட்டுரை ஆசிரியர் கூறுவது உண்மைதான்.
சினிமாவை தேவையான அளவு ரசிக்கும்
எனக்கே இப்பொது எல்லாம், புதிய படங்களை பார்க்க ஆசைபட்டு அதை பற்றி பேசும்போது, கத்தி,ரத்தம்,துப்பாக்கி, போலீஸ் இருந்தால் படம் பார்க்கலாம் என்று சொல்லும் அளவுக்கு மனம் மாறிவிட்டது
இருந்தாலும் மெய்யழகன் மற்றும் டூரிஸ்ட் பேமிலி போன்ற தரமான படங்களும் ரசிக்க வைக்கின்றன.
அருமையான விமர்சனம் அல்ல எச்சரிக்கை
This film is dedicated to Manirathinam family. The director has shown a way for his wife and his son.
சிறந்த தலைமை வாதிகள் என்றும் சமூக நன்மை வாதிகள் என்றும் பொதுவெளியில் உலவும் சினிமா தலைவர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் திரைப்படங்கள் வாயிலாக நல்ல கருத்துக்களை இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை! ஆனால் வன்முறை என்னும் நஞ்சையும் ஒழுக்கக் கேட்டை சரி என காண்பிக்கும் கயமையையும் நிறுத்துங்கள்! படத்தின் கதைக்கு அவசியமற்றதாயிருந்தாலும் புகை பிடித்தலையும் போதைமருந்து நுகர்தலையும் சாராயம் அருந்துவதையும் படத்திற்கு படம் காண்பித்து இருக்கும் சமுதாயத்தை கெடுத்து குட்டிச்சுவராகிவிட்டு நீங்கள் மட்டும் வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறீர்கள்? பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களை உருவாக்க படாத பாடுபடும் இக் காலத்தில் அவர்கள் கெட்டு சீரழியும் கலாச்சாரத்தை கண்முன் காட்டுகிறீர்கள்! தயவுசெய்து இனிமேலாவது திரையுலக பெரும் புலிகள் பொறுப்போடு செயல்படுங்கள்! காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனோபாவத்தை நீங்களும் கொள்ளவேண்டாம். மற்றவர்களும் ஊட்ட வேண்டாம்.
இவரை சட்ட சபைக்கு அனுப்பினால் நிறைய முத்தக்காட்சிகளை இலவசமாக பார்க்கலாம்.