டாஸ்மாக்கின் விஷ மதுவில் இருந்து விடுதலை கிடைக்குமா?

-சாவித்திரி கண்ணன்

பனை தமிழ்நாட்டின் தேசிய மரம். நமது அடையாளம், பாரம்பரியம், பண்பாடு, வாழ்வாதாரம்…அனைத்தும் பனையே. அதிகாரத்தில் உள்ளவர்களின் பேராசைக்காக மெல்லக் கொல்லும் விஷமான டாஸ்மாக் மதுவை அருந்தி தமிழனம் மாய்ந்தழிவதா? கள் எனும் உணவு நம் உரிமை அல்லவா..? பனை ஏறுவது குற்றமா? சீமானை கைது செய்வீர்களா…?

பனை மரம் மீதேறி சீமான் பனங்கள்ளை எடுத்தது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.  பெரிய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுதி வருகின்றனர் சிலர்! புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும், வி.சி.கவின் ரவிக்குமாரும்,வன்னியரசும் இந்த விவகாரத்தில் சீமானை இன்னும் ஏன் கைது செய்யவில்லை எனக் கேட்கின்றனர்.

பல்லாயிரம் வருடங்கள் பனங்கள்ளை உண்டு வளர்ந்த சமூகத்திடம் அதை உண்ணாதே, இதோ நான் கொடுக்கும் மெல்லக் கொல்லும் விஷமான சீமை மதுவைக் குடி என அரசாங்கம் அழுத்தம் தருகிறது..என்றால், தமிழ் சமூகத்தை இழிச்சவாய் சமூகம் என கருதுகிறார்கள் என்று தான் அர்த்தமாகும். நாம் அதற்கு இடம் தரலாமா?

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியாவில் பல கோடிப் பேர் மது அருந்துகிறார்கள். இதை எந்தக் காலத்திலும், எந்த அரசாலும் முற்றிலும் ஒழிக்க முடிந்ததில்லை.  இவை அளவுக்கு மீறி சமூகத்தை ஆக்கிரமிக்காமல் தடுப்பது தான் ஒர் மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும். ஆனால், நம்மை ஆளும் அரசுகளோ மக்கள் வேண்டாம் என எதிர்த்து போராடினலும் வலுக்கட்டாயமாக டாஸ்மாக் கடைகளை  திரும்பும் திக்கெல்லாம் ஏற்படுத்தி மக்கள் பணத்தையும், ஆரோக்கியத்தையும் ஒருசேர சூறையாடுகின்றன.

டாஸ்மாக்கில் அதிகார மையத்தினரின் பாக்கெட்டை நிரப்புகின்ற அந்த மதுவை IMFL  என அழைக்கிறார்கள். அதாவது, Indian Made Foreign Liquor  என்று பொருளாகும். உண்மையிலேயே சீமை சரக்கை குடித்தவர்கள் டாஸ்மாக் மதுவை சீண்ட மறுக்கிறார்கள். சாக்கடையில் வீசுங்கள் எனச் சீறுகிறார்கள்.

மிக மோசமான தரத்தில் அதிக இரசாயனக் கலவையுடன், அதிக ஆல்கஹால் கலந்து விற்கப்படும் இந்த மது, தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டில் பல லட்சம் உயிர்களை காவு வாங்கியுள்ளது. ஏராளாமான அடித்தட்டு உழைப்பாளிகளை உறிஞ்சி எடுத்து எதற்கும் லாயக்கற்றவர்களாக குப்பையில் வீசி எறிந்துள்ளது. கணக்கற்ற விதவைகளை உருவாக்கி உள்ளது. பல லட்சம் குடும்பங்களை நிராதரவற்ற நிலைக்கு தள்ளி உள்ளது.

48 சதவிகித ஆல்கஹால் கொண்ட இந்தக் கொடூர மதுவின் தரம் குறித்த, எந்த விவாதமும் இங்கு ஊடகங்களில் நடப்பதில்லை. இதை தடுப்பதற்கும் வழியில்லை என்பதாக தமிழ்ச் சமூகம் விழி பிதுங்கிக் கொண்டுள்ளது. ஆனால், இயற்கை பானமான கள் உண்ணும் உரிமைக்கு எதிராகத் தான் எத்தனை குரல்கள் வீரியத்துடன் வருகின்றன…!

இந்திய அரசியல் சட்டப்படி கள் என்பது ஒரு உணவு தான். அது தடை செய்யப்பட வேண்டியதல்ல. அதில் ஆல்கஹால் இருக்கிறதா? என்றால், இருக்கிறது. ஆம், 4 சதவிகித ஆல்கஹால் இருக்கிறது. நாம் உண்ணும் உணவில் கூட ஓரளவு குறைந்த ஆல்கஹால் உள்ளது. பழைய சோற்றில் மிதமான ஆல்கஹால் உள்ளது. புளித்த மோர், புளித்த இட்லி,தோசை மாவு, திராட்சை பழரசம் ஆகியவற்றிலும் உள்ளது. இவை எதுவும் சட்டப்படி தடை செய்யப்பட்டதல்ல. அவ்வளவு ஏன்? மருத்துவர்கள் பரிந்துரைக்கின்ற இருமல் சிரப்பு மருந்திலும் ஆல்கஹால் உள்ளது.

ஆகவே, பனங் கள்ளை பார்த்து பயமுறுத்தக் கூடாது. தென்னங் கள்ளைக் காட்டி திகில் உருவாக்கக் கூடாது. சில மேதாவிகள் பக்கம்பக்கமாக கள்ளின் தீமை பற்றி எழுதுகிறார்கள். அதைவிட பத்து மடங்கு வீரியமுள்ள அரசாங்க மது குறித்து இவர்கள் கள்ளமெளனம் சாதிக்கிறார்கள்.

ஆகவே தான், நாம் வலியுறுத்த விரும்புவதெல்லாம் மதுவில் இருந்து கொள்ளை லாபம் ஈட்டும் மனப்பான்மையே மனிதகுலத்திற்கு எதிரானது. இதை கட்டுப்படுத்தி அளவில் வைக்க வேண்டும். அத்துடன் மக்கள் குடிக்கும் மது அதிக தீமை இல்லாததாக இருக்க வேண்டும். மது தயாரிப்பு, விநியோகம் என்பதை மையப்படுத்தாமல் அந்தந்த மண் சார்ந்து மக்களின் பழக்க வழக்கம் சார்ந்து இருப்பதை கூர்ந்து அவதானித்து அவற்றை முறைப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும்.

சில இடங்களில் மது தயாரிப்பு என்பது பழங்களில், தானியங்களில், மூலிகை சாறுகள், தேன் போன்றவற்றின் கலவையில் உருவாக்கப்படுகிறது. இந்த பழத்தயாரிப்பு மது என்பது எந்தெந்த பழங்கள் அந்தப் பகுதிகளில் அதிகம் கிடைக்கிறதோ அதைக் கொண்டு உருவாக்கபடுவதாகும்.

 பீகாரில் இலுப்பை பூவைக் கொண்டு அருமையான இனிமையான மலிவான மது தயாரிக்கிறார்கள் எளிய தலித் மக்கள்! அசாம் போன்று பழங்குடிகள் வாழும் மாநிலங்களில் ரைஸ்பீர் எனப்படும் ஆரோக்கிய மதுபானத்தை தயாரிக்கிறார்கள். கோவாவில் முந்திரி பழத்தைக் கொண்டு ஃபென்னி என்ற மதுபானத்தை தயாரிக்கிறார்கள்.

திராட்சை, ஆப்பிள், முந்திரிப் பழம், பிளம்ஸ், செர்ரி, பெர்ரி போன்ற பழங்கள் தீமை குறைவான ஆரோக்கிய மது தயாரிப்புக்கு மூலமாகும். இது தவிர பார்லி, சோளம், அரிசி போன்ற தானியங்களைக் கொண்டும் சிறந்த மது தயாரிக்க முடியும்! இதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு நம் டாஸ்மாக்கில்  கரும்பு சக்கையில் இருந்து கிடைக்கும் மோலாசஸைக் கொண்டு மெத்தனால், ஸ்பிரிட் கலந்து ஒரு செயற்கை மதுவை – கேடுதரும் மதுவை – வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள்.

தமிழகத்தில் முந்திரி பழங்கள் கேட்பாரற்று பல்லாயிரம் டன்கள் பயனின்றி வீணடிக்கப்படுகின்றன! இதில் இருந்து ஆரோக்கியமான மதுபானம் தயாரிக்க முடியும்! இவை விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் பலன் இல்லாமல் அழிகின்றன. நமது சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வீணாகும் முந்திரி பழத்தை பயன்படுத்தி பழச்சாறு மற்றும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க  வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், இந்த விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். அதே போல தென்னங் கள்ளை விவசாய கூட்டுறவில் தயாரித்து விற்க அதிமுக அரசாங்கத்தில் எடுத்த முயற்சிகளையும் சாராய அதிபர்கள் தடுத்துவிட்டார்கள்.

ஐந்து கோடி பனைமரங்கள் இருந்த தமிழ் நாட்டில் இன்று அது சரிபாதிக்கும் கீழாகி விட்டது. காரணம், பனையை பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்திருப்பதால், பனை மரம் ஏறுவதையே குற்றச் செயலாக அறிவித்து இருப்பதால் பனை வளர்ப்போர் விரக்தி அடைந்து அதனை வெட்டி செங்கற் சூளைகளுக்கு அனுப்பி வருகின்றனர். பனை விவசாயிகளும், பனையேறிகளும் பல போராட்டங்கள் நடத்தி ஓய்ந்துவிட்டனர். நாம் இவர்களை ஆதரிக்காதது தான் காரணம்.

பனங்கள்ளு இறக்கும் உரிமை கேட்டு நடந்த போராட்டம்

பனை தான் தமிழ்நாட்டின் தேசிய மரம். ஆம், நமது அடையாளம், நமது பாரம்பரியம். நமது வாழ்வாதாரம். பனையேறுவது நம் தொழில் உரிமை. பசிக்கின்ற ஏழைக்கு மட்டுமல்ல, பறவையினங்கள் பலவற்றுக்கும் பனையே சரணாலயம்.

அப்படிப்பட்ட பனையை பகை மரமாக பாவித்து, இல்லாத சட்டங்களை போட்டு இன்னல்கள் பல தந்து பனையேறிகளை வேட்டையாடி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பனை வளர்ப்பையே படு பாதளத்திற்கு தள்ளிவிட்டன, மாநிலத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள்!

ஏன் இவ்வாறு செய்தார்கள். பக்கத்தில் உள்ள கேராளவில் கள்ளுக் கடைகள் உள்ளன. மற்ற பல  மாநிலங்களில்  புழக்கத்தில் இருக்கும் இயற்கை பானங்கள் தமிழ் நாட்டை பொறுத்த வரை சர்வாதிகாரமாக மறுக்கப்பட்டு வருகின்றது.

பனங்கள் புழக்கத்தில் வந்தால் அதில் கண்டதைக் கலப்பார்கள். இதனால் விபரீதங்கள், மரணங்கள் ஏற்படும். இன்னும் அதிகமானோர் மதுவை நாடிச் சென்று சீரழிவார்கள்…அது பாதுகாப்பற்றது, ஆபத்தானது..எனச் சொல்கிறார்கள்.

இதைத் தடுப்பதற்கு அரசாங்கமே பாலை கொள்முதல் செய்து ஆவீனை நடத்துவதை போலக் கள்ளை கொள்முதல் செய்து முறையாக பதப்படுத்தி குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும்படி செய்யலாம். அல்லது விவசாயக் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவர்களுக்கு எப்படி செயல்படுவது என வழிகாட்டி கண்காணிக்கலாம். இது ஒன்றும் செய்ய முடியாததல்ல. நல்ல நோக்கமும், மக்கள் நலனில் அக்கறையும் இருந்தால், சாத்தியமே. இதற்கு கட்டுபடியாகக் கூடிய எளிய வரிவிதிப்பு முறையை கையாளலாம்.

அடுத்ததாக பனங்கள்ளுக்காக மரம் ஏறுவது குலத் தொழிலை ஊக்குவிப்பதாகும்…ஒரு இளைஞர் கைகளில் உள்ள புத்தகத்தை பறித்து அவனை பனையேறி ஆக்குகிறீர்களா…? என்கிறார்கள். பனை ஏறுவதுவதை குலத் தொழிலாக பார்த்த காலம் மலையேறிவிட்டது. இன்று எல்லா சாதியினரும் பனை ஏறுகிறார்கள். உடல் உழைப்பு சார்ந்த – உண்ண உணவு தரும் – உன்னதச் செயல்பாட்டை இழிவாகக் கருதுவதும், படிப்பதனால் கிடைக்கும் வேலையே உசத்தி என நினைப்பதும் தான் சனாதன புத்தியாகும்.

இதனால், அதிகாரத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் இது வரை சாராய அதிபர்களிடம் பார்த்து வந்த பெரிய கையூட்டு பணம் இதில் தடைபடும் என்பதால், பல சாக்கு போக்குகளைச் சொல்லி அமல்படுத்த மறுப்பார்கள். மக்கள் வீறு கொண்டு பொங்கி எழுந்து உணவு என்பது எங்கள் உரிமை. அதை தடுக்கும் அதிகாரம் ஆள்வோருக்கு இல்லை என்பதை உணர்த்த வேண்டும்.

மூத்த விவசாயி நல்லுசாமி இதைத் தான் பல்லாண்டுகளாக வலியுறுத்தி வந்தார். சீமான் எடுத்த முன்னெடுப்பை மக்கள் நலன் கருதி தமிழ் நிலத்தில் வாழும் அனைவருமே கட்சிகளைக் கடந்து ஒன்றிணைந்து இதை சாத்தியப்படுத்த வேண்டும். பனை, தென்னை விவசாயிகள் வாழ்வில் இது பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். 2026 தேர்தலின் மைய விவாத பொருளாக இதை செயல்படுத்த வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time