சர்வபரித் தியாகத்தின் சாட்சியாய் வாழ்ந்த சுப்பிரமணிய சிவா!

-ரெங்கையா முருகன்

சுதந்திர வேள்விக்கு தன்னையே பலியிட்டுக் கொண்டவர் சுப்பிரமணிய சிவா! சிறை வாழ்கையால் தொழு நோய்க்காளான போதிலும், நாடெங்கும் அலைந்து விடுதலை வேட்கையை விதைத்தார். அவரது இளம் மனைவி வறுமையில் வாடி பெற்ற துன்பங்கள் சொல்லி மாளாது. இன்று அவரது நினைவு நூற்றாண்டு; அவரது தியாக வாழ்வை நினைவு கூறுவோம்;

இரக்தாக்சி வருடம் தை மாதம் இரண்டாம் தேதி இரவு பதினோரு மணி. கண்ணீர் தாரை தாரையாக  கண்களில் வழிகிறது. சிறை வாழ்வு தந்த சீதனமான தொழுநோயின் வாதையால் வலி தாங்க முடியாமல்  பித்து பிடித்தவர் போல அழுது அரற்றுகிறார் .

அல்லும் பகலும் அறுபது நாழியும் – இந்தக்

கொல்லும் வியாதி என்னைக் குத்திக் குடையுதே

பிச்சைக்காரனெனப் பிறர்பலர் சொல்லவோ – இக்

கொச்சை வார்த்தைகளை நான் சுகமெனக் கருதவோ

நாடிநரம்பெல்லாம்  நமன் பற்றி  ஈர்க்கிறான் – அடி

ஓடி வந்துன் பதத்தை உருகிப் பிடித்தேண்டி

குற்றமெது செய்தாலும் குணமுடையோய் நீதான்

பெற்ற தாயாரையோ பிழை பொறுக்க வேண்டாமோ?

நம்பினேன் நம்பினேன் நம்பினேன் நம்பினேன்

அம்பிகையே உனையேதான் அபயமென நம்பிவிட்டேன்.

கலங்காத இவரது உள்ளம் தனது உடலை நோய் தின்று கொண்டிருந்த  காலத்தில் தேவியை சரணடைந்து   உருகும் இந்த காவிய துயர வரிகளுக்குச் சொந்தக்காரர் கோடையிடி சுதந்திரப் போராட்ட வீரர் வத்தலக்குண்டு தியாகச் சீலர் சுப்பிரமணிய சிவா அவர்கள்.

சென்ற நூற்றாண்டில் இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் தமிழகத்தின் மும்மூர்த்திகளாகிய வ.உ.சிதம்பரனாரை கலகக்காரர் என்றும், பாரதியாரை பிழைக்கத் தெரியாத கவிஞனாகவும், சுப்பிரமணிய சிவாவை பைத்தியக்காரராகவும் பார்த்த சமூகம் இது. இந்த மூவருமே திலகர் அணியைச் சார்ந்தவர்கள்.

குறிப்பாக சுப்பிரமணிய சிவம்,  வ.உ.சி. மீது பெரும் பற்று கொண்டவர். 1907-08 களில் இரட்டைக் குழல் துப்பாக்கி தோட்டாக்களாக விளங்கி சுதந்திர சங்கநாதத்தை உச்சஸ்தாயில் எழுப்பி தூங்குமூஞ்சி மாகாணத்தை விழிப்புறச் செய்தவர்கள்.

இந்திய சுதந்திரச் சரித்திரத்தில்  சுப்பிரமணிய சிவா அவர்களுக்கு நிரந்தரமான ஒரு இடம் உண்டு. மெரினா கடற்கரையில் பல பொதுக் கூட்டங்கள் நடத்தியவர். திலகர் கட்டம் என்று பெயரிட்டவர் இவரே. பாரதியார் திருநாளைக் கொண்டாட வழி வகுத்தவர். பாப்பரப்பட்டியில் தனது  கனவு பாரதாசிரமத்தில் தனது நண்பர் வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க ஆசைப்பட்டு நிறைவேறாமல் போனது. 1923 மே மாதம் முதல் நாளில் சிங்காரவேலர் கொடி ஏற்றிய நாளில் மேதினப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர் சிவா.

ஊர் ஊராகச் சென்று தமிழக காங்கிரசுக்காக தீராநோயோடு தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருந்த வேளையில் தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்ல ரயில்வே டிக்கெட் எடுத்து ரயிலில் உட்கார்ந்திருந்த வேலையில் ரயில் புறப்படுவதற்கு முன்பாக போலீசார்கள் வந்து ரயிலில் இருந்து இறக்கி விட்டனர்  இவரது நோயைக் காரணம் காட்டி 1923 வாக்கில் ரயில்வே சட்டம் 176 வது பிரிவின்படி நோயால் பீடிக்கப்பட்டிருப்பதால் ரயிலில் பயணம் செய்யக் கூடாது என்று தடை விதித்தனர். வியாதியை சாக்காக்கி, சூழ்ச்சி செய்து இவரது பிரச்சாரத்தை தடை செய்ய முயற்சி செய்த போதும் வெறுமனே கால்நடையாகவும், கட்டை வண்டியிலும் ஊர் ஊராகச் சென்று முன்னை விட தீவிரமாக பயணித்து சொற்பொழிவாற்றியவர்.

வ.உ.சி.க்கு வாய்த்த மீனாட்சி அம்மாள், பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் ஆகியவர்களுக்கு கிடைத்த இல்லற வாழ்வின் சிறு சுகம் கூட சுப்பிரமணிய சிவாவினுடைய மனைவி மீனாட்சி அம்மாவுக்குக்கு இறுதி வரை கிடைக்கவில்லை.

வ.உ.சி, பாரதி, சிவா தியாகங்களுக்கு பின்னால் இவர்களின் மனைவிமார்களின் துயரங்களை நாம் இது வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. உண்மையை அறிந்தால் உள்ளம் பதறும்.

சுப்பிரமணிய சிவா மனதளவில் வேதாந்தத்தில் லயித்து, இகலோக இன்பங்களை வெறுத்து சாதுக்களுடனும், சந்நியாசிகளுடனும் வாசம் செய்து கொண்டு, இல்லற வாழ்வில் இருந்து விலகிய மனநிலையில் இருப்பதை அவரது ராமகிருஷ்ணர் பரமஹம்சர் பற்றி அவர் எழுதிய வரிகளினூடாக தெரிய வருகிறது.

விவாக முயற்சி பலமாக நடக்கிறது. விவாகம் செய்து கொள்ள மாட்டேனென்றால், தாயின் மனம் நோகும். சகோதரர்களுக்கு வருத்தம் உண்டாகும். விவாகம் செய்து கொண்டு விட்டால் மனிதனுடைய புத்தி, சக்தி வெளிப்பட்டு பிரகாசிப்பதற்கு தருணம் ஏற்படாமல் போய்விடுகிறது. இந்த மனப்போக்கில்தான் சிவாவின் உள்ளமும் இருந்திருக்கிறது.

 

சுப்பிரமணிய சிவா தன்னுடைய பதினைந்தாவது வயதில், பதினோறு வயதுடைய மீனாட்சி என்பவரை மணம் செய்கிறார். மனைவியுடன் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இல்லற வாழ்க்கை நடத்துகிறார்.

1908 ம் ஆண்டு சுப்பிரமணிய சிவா, வ.உ.சி.யின் கைக் கருவியாக விளங்கினார் என்று ஆங்கிலேய நீதிபதி பின்ஹேவால் குற்றம் சாட்டப்பட்டார். திருநெல்வேலியில் அரசு நிந்தனை பேச்சுக்காக இருபது வருடமும், சிவாவிற்கு உணவும், இடமும் அளித்து பேச உதவியதற்கு இருபது வருடமும் மொத்தம் 40 வருடங்கள் வ.உ.சி.க்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.

முதல் குற்றவாளியான சிவாவிற்கு பத்தாண்டுகள் தீவாந்தர தண்டனை அளிக்கப்பட்டது. சிவாவினுடைய சிறை வாழ்க்கை காலங்களில் மனைவி மீனாட்சி அம்மாள் தனது இளமையை தொலைத்து விட்டு சிறைக்கும் வீட்டுக்குமாக அலைந்துள்ளார். கடுமையான ஏழ்மை நிலைக்கு மீனாட்சி அம்மாள் தள்ளப்பட்டு வாழ்க்கை ஜீவனம் கழிக்கவே போராடியுள்ளார்.

சுப்பிரமணிய சிவாவும் நான் சன்யாசி. வேதாந்த விசாரணை செய்து வருபவன் என்று கூறிக் கொண்டு தேச பக்தர்களுடனும், சன்யாசிகளுடனும் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தவர். தனது மனைவியை அனேக இடங்களில் அனேக தடவை ஏமாற்றி நழுவி விட மீனாட்சி அம்மையாரும் தொடர்ந்து கணவனை விடாமல் தேடி பட்ட கஷ்டங்கள் நம் கண்களை கண்ணீர் குளமாக்குகிறது.

1908 முதல் 1912வரை திருச்சியில் சிறைவாசம். அச்சமயத்தில் ”சச்சிதானந்த சிவம்” என்ற நூலினை எழுதினார். அந்தப் புத்தகத்தினை தனது மனைவிக்கு சமர்ப்பணம் செய்து, எல்லோரும் இந்த புத்தகத்தை வாங்கும்படியும், இதன் மூலம் கிடைக்கும் சிறு வருமானம் எனது மனைவியின் வறுமையை போக்கும் என்றும் கீழ்க் கண்டவாறு பதிவு செய்கிறார்.

“மகான் இயேசு கிறிஸ்துவின் பிரதம சீடர் பீட்டர் என்பவர் ஒரு சர்ச் வாயிலில் …… காலத்தில் அங்கு உட்கார்ந்திருந்த இரண்டு கண்களுமில்லாத ஒரு பிறவி நொண்டி பிச்சை கேட்க, அவர் “வெள்ளியும் தங்கமும் தர என்னிடம் ஏதும் இல்லை. ஆனால், என்னையே உனக்குத் தருகின்றேன் என்று கூறி, அவனை கைபிடித்து தூக்கி விட அவனுக்கு இரண்டு கால்களும் யாவருக்குமிருப்பது போல் அவன் பரம சந்தோசமடைந்து குதித்துக் கொண்டு சென்றான் என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே மாதிரியாக எனது மனைவி சிறைச்சாலையில் கண்டு பேசிய காலத்தில் தான் தினமும் ஏழ்மைத்தனத்தால் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனது வறியநிலைமைக்கு ஓர் உபாயம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள நானும், “என்னிடம் வெள்ளி தங்கம் இல்லை” என்று கூறி, எனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி அவளது துக்க நிவர்த்தியின் பொருட்டு அளிக்கின்றேன் என்பதாக

தான் எழுதிய நூல் எனது மனைவியின் வறுமையை போக்கும் என்று கசிந்துருகி பரிவு காட்டி சமர்ப்பணம் செய்துள்ளார். இந்த செயல் ஒன்றே சிவாவின் மனைவிக்கு பெரும் ஆறுதலாக இருந்திருக்கக் கூடும்.

சுப்பிரமணிய சிவா தேச பக்தியின் மேலீட்டால் சிறை வாசம் செய்ய நேர்ந்த காலத்தில் மீனாட்சி அம்மையார் பட்ட சிரமங்கள் சொல்லி மாளாது. பதினாறு ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகளே இல்லற வாழ்வை நடத்தி தமது 27 ம் அகவையில் மீனாட்சி அம்மாள் ஆறு மாதங்களுக்கு மேலாக பெரும் நோயால் அவதிப்பட்டு இறந்து போகிறார்.

சுப்பிரமணிய சிவா தனது மனைவி மறைந்த வேளையில் “காலஞ்சென்ற ஸ்ரீமதி மீனாட்சியம்மாள்’’ என்ற தலைப்பிலான கட்டுரை தனது ‘ஞானபானு’ இதழில் பதிவிட்டுள்ளார். இந்த ஞானபானு இதழ் ஆரம்பிக்கும் வேலையில் ராஜாங்கத்தாரால் சந்தேகிக்கப்படும் நபராக சிவம் விளங்கியதால் அனுமதி கிடைக்காது என்ற காரணத்தால் தந்து மனைவி மீனாட்சிஅம்மாள் பெயரில் பத்திரிக்கை நடத்த அனுமதி வாங்கி நடத்தியுள்ளார்.

”நமது ஞானபாநு’ வின் பதிப்பாசிரியையும், சொந்தகாரியுமான ஸ்ரீமதி மீனாட்சியம்மாள் சென்ற வைகாசி மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மகா சக்தியில் இரண்டறக் கலந்து கொண்டாளென்ற விசனகரமான சம்பவத்தை நமது வாசகர்களுக்கு தெரிவிக்கின்றோம். இறக்கும் பொழுது வயது 27.

சுப்பிரமணிய சிவா தனது மனைவியின் வாழ்வாதரத்திற்காக சிறையில் இருந்த வேலையில் தனக்கு ஏற்ப்பட்ட வேதாந்த விசாரணையை நூலாக தொகுத்து “சச்சிதானந்த சிவம்’’ என்ற நூலினை படித்து யாவரும் அறிந்து வாங்க வேண்டுமாய் தனக்குத் தெரிந்த பி. ஆர். ராமய்யர் அவர்களிக்கு எழுதிய இந்த ஒரிஜினல் கடிதம் வாசிப்போரின் இதயத்தை கனக்க வைக்கிறது. இந்த கடித நகல் கீழ் படம் இணைக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர்                 ஸ்ரீ சத்திதுணை                                  செக்டெம்பர்24

மகாநஜ ஸ்ரீரி மகாகனம் பொருந்திய சீமான் அவர்களுக்கு அனேகநமஸ்காரம். திருநெல்வேலி கேஸில் தெண்டிக்கப்பட்ட சுப்ரமண்ய சிவா என்ற எனது பர்த்தாவானவர் இப்பொழுது நான் அனுபவிக்கும் கஷ்ட நிவாரணத்தின் பொருட்டு இன்ஸ்பெக்டர் ஜெயில் சூப்ரெண்டு துரை அவர்கள் உத்தரவ்வின் பேரில் சேலம் ஜெயிலில் இருந்து ஓர் புஸ்தகம் எழுதினார். நான் அதை இவ்வூர் பி ஆர் ராமய்யர் கம்பெனியில் அச்சிட்டு வெளிப்படுத்தி இருக்குறேன். நான் அனாதையாய் என்னை வைத்து சம்ரெட்ச்னை செய்ய தகப்பனார் சகோதரர் மற்றுமுள்ள சுற்ற்த்தார் யாருமில்லாமல்,  எனது பர்த்தா சிறைவாசம் செய்வதால், எனக்கு ரொம்பவும் கஷ்டம் வந்ததின் பேரில் எனது பர்த்தாவாகிற பரிந்த புஸ்தகம் அச்சிட்டாவது ஜீவனம் செய்யலாமென்று இப்புஸ்தகத்தை அச்சிட்டு இருக்குறேன். சச்சிதானந்த சிவம் என்று இந்த புஸ்தகத்தில் தாங்களுக்கு ஒன்று அனுப்பி இருக்குறேன். அதை பார்த்து தயவு செய்து தாங்கள் என் புஸ்தகத்தை எல்லாரும் வாங்கும்படியான உதவி செய்ய வேணுமாய் நமஸ்கரித்துக் கேட்டுக் கொள்கிறேன்.

தாங்களுடய அபிப்பிராயத்தை ஜனங்கள் தெரிந்தால் என் புஸ்தகம் விலைபடு மென்று நம்புகுறேன். தாங்கள் தர்மப் பிரபுவென்று தாங்களுக்கு எழுதினால் எனது கஷ்ட நிவர்த்தி செய்வது மன்னியில் எனக்கு மாங்கிலிய பிச்சையையும் குடுப்பீர்கள் என்று எழுதி இருக்குறேன். நான் தாங்களுக்கு எழுதுவதர்க்கு தகுதி அற்றவளாய் இருந்து எழுதி இருப்பதை தாங்கள் மூன்று குமாரத்தியுடன் என்னை நான்காவது குமாரத்தியாக பாவித்து தாயில்லாத குழந்தைகளை தகப்பனார் காப்பாற்றுவது போல், ஆறுமற்ற அனாதையாய் பார்த்தாவும் சிறைவாசம் செய்வதால் தர்மப்பிரபுவான தாங்கள் என்னையும் ஒர் குழந்தையாக பாவித்து எனது காரியத்தில் தங்களது கருணை பிறக்குமாறு அனேகம் தடவை பிரர்த்தித்துக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

Meenakshiammal

ஒவ்வொரு தியாகிகளின் வாழ்க்கையில் மனைவியர்கள் பட்ட துயரங்களையும் ஆவணப்படுத்த வேண்டும். தயவு செய்து இக் கால எந்த அரசியல் தியாகிகளுடன் ஒப்பிட்டு விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். சுப்பிரமணிய சிவாவை இந்த நாள் வரை உரிய அளவில் பொதுப் புத்தியில் நாம் கொண்டு செல்லவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வ.உ.சி. ஆய்வு வட்டம் முதன் முதலாக பொதுமக்களிடத்தில் தொகை வசூலித்து காந்திகிராம் பல்கலையில் 2025  ஜூலை முதல் வாரத்தில் சுப்பிரமணிய சிவாவின் தியாகத்தையும், பன்முகத்தன்மையை வெளியே கொணருவதற்காக வ.உ.சி – சுப்பிரமணிய சிவா பெயரில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நல்கை நிதியாக மூன்று இலட்சம் அளித்திருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டுகிறோம்.

கட்டுரையாளர்; ரெங்கையா முருகன்

வரலாற்று ஆய்வாளர்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time