அறம் இணைய இதழின் ஆறாம் ஆண்டு தொடக்கம் அமர்க்களமாக இருந்தது! நிகழ்ச்சிக்கு வந்திருந்த சமூக அக்கறையும், அறிவுத் தேடலும் கொண்டோர் கூட்டம் அறத்தின் வாசகர்கள் குறித்த பெருமித உணர்வை தோற்றுவித்தது. தமிழ் இதழியல் சூழலில் அறம் தவிர்க்க முடியாத சக்தியாக எழுந்து வருவதை இந்த நிகழ்ச்சி கட்டியம் கூறியது;
5.30 மணி நிகழ்வுக்கு நான்கரை மணி தொடங்கி நண்பர்கள் வரத் தொடங்கிவிட்டனர்.
ஐந்து மணியில் இருந்து நவதானியச் சுண்டலையும், குதிரைவாலி பாயாசத்தையும் சுவைத்தவாறு அரங்கில் கூட்டம் குழுமி ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தவாறு உற்சாகம் களை கட்ட ஆரம்பித்தது…!
சரியாக ஆறு மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் அறம் ஆண்டு விழா தொடங்கியது.
ரத்தினச் சுருக்கமாய் அழகான வரவேற்புரையை காக்கை கூடு பதிப்பாளர் தம்பி செழியன் நிகழ்த்தினார்.
தலைமையுரை ஆற்றிய மூத்த பத்திரிகையாளர் நண்பர் ராஜதுரை அறத்தின் சீரிய பயணத்தையும் நோக்கத்தையும் தனக்கே உரிய பாணியில் எளிமையான வகையில் எடுத்துரைத்தார்.
மூத்த எழுத்தாளர் ச. அருணாச்சலம் தன் உரையை மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்ட பிறகு பீட்டர் துரைராஜ் சற்று விலாவாரியாக அறத்தோடு ஒன்றுபடும் புள்ளிகளையும், வேறுபடும் புள்ளிகளையும் தொட்டுக் காண்பித்து உரையாற்றினார்.
அடுத்ததாக நான் எழுதிய விவசாயம் இன்று நூல் வெளியீட்டில் உழவர் உரிமை இயக்கத் தலைவர் அருள் ஆறுமுகம் வெளியிட தமிழ்நாடு உழவர் கூட்டியகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமாரும், வழக்கறிஞர் சிவகுமாரும் பெற்றுக் கொண்டனர்.

நூலை வெளியிட்ட அருள் ஆறுமுகம் இன்று விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகளை எடுத்துரைத்தார். நூலை பெற்றுக் கொண்ட சுரேஷ்குமார் வேளாண்மை தொடர்பாக அறத்தில் வெளிவரும் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு கல்வியாளர் ஜவகர் நேசனின் அர்த்தம் செறிந்த ஆழமான சிறப்புரை அமைந்தது. கற்பிக்கப்படும் கல்வி மூலமே ஒரு சமூகம் கட்டமைக்கப்படுகிறது என விலாவாரியாக பேசினார்.
அவருக்கு பிறகு இன்றைய அரசியல் சூழல்கள் குறித்தும், அறம் இதழின் செயல்பாடுகள் குறித்தும் நான் பேசினேன். நேரம் முதலில் மெதுவாக அரம்பித்து, போகப் போக என்னுடைய பேச்சில் வேகம் அதிகமாகிப் போனது.

நீதிபதி ஹரி பரந்தாமனின் பேச்சு வழக்கம் போல மிகவும் வெளிப்படையாகவும், நீதித்துறை மாயைகளை கட்டுடைப்பதாகவும் அமைந்தது.
இறுதி நிகழ்வாக கேள்வி – பதில் நிகழ்ச்சியில் வாசகர்கள் பரவலாக பங்கெடுத்துக் கொண்டனர்.
பத்திரிகையாளர் பாண்டியம்மாள் நிகழ்ச்சியை சலிப்பில்லாமல் நேர்த்தியாக தொகுத்து வழங்கினார்.
சரியாக இரவு எட்டரை மணிக்கு நன்றி நவிழ்வை வெகு சுவாரஷ்யமாக இலங்கை வேந்தன் நிகழ்த்தினார்.

நண்பர் செழியன் தன் குழுவினருடன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக வடிவமைத்திருந்தார். பிரஸ் கிளப் மேனேஜர் ஜேக்கப்பும், அவரது தம்பி திருநாவுக்கரசும் நிகழ்ச்சிக்கு மிக்க உறுதுணையாக இருந்தனர். நண்பர் ராஜதுரையின் இளவல்கள் நந்தன் குழுவினர் நல்ல களப்பணியாற்றினர்.
சமூக அக்கறையும், அறிவுத் தேடலும் கொண்ட வாசகர் வட்டத்தை அறம் கொண்டுள்ளது என்பது வந்திருந்த பரவலான வாசகர்கள், நண்பர்கள் பிரசன்ஸ் உறுதிபடுத்தியது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் இயக்க ஆர்வலர்கள், விவசாய இயக்கங்களின் பொறுப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

காந்தியப் பற்றாளர்கள் பிரேமா அண்ணாமலை, ஆசிரியர் மோகன், ரவிச்சந்திரன், கருணாகரன் இடதுசாரி சிந்தனை போக்குள்ள தோழர்கள் வி.கே.கோபாலன், டி.கே.ஜெயராமன், விவசாய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், வி.கே.எஸ்.கே செந்தில்குமார், தேவராஜ், பால் முகவர்கள் சங்கத்தின் சு.ஆ.பொன்னுசாமி, மூத்த பத்திரிகையாளர்கள் தீக்கதிர் குமரேசன், சன் டிவி புகழ் வீரபாண்டியன், வளர்தொழில் ஜெயகிருஷ்ணன், ந.பா.சேதுராமன், தயாளன், தாரை இளமதி, டி.எஸ்.எஸ் மணி, டி.கே.ராஜபாண்டியன், பொன்.மூர்த்தி, மரிய பெல்சின், மலை மோகன், கே.ஆர்.அதியமான், ராயபுரம் ரமேஷ், புதுமடம் ஜாபர் அலி, போட்டோ ஜர்னலிஸ்ட் சிவபெருமாள்.. கல்வியாளர்கள் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் முனைவர் திலகர், பச்சையப்பன் அறக்கட்டளை துரைக்கண்ணு, ரெங்கையா முருகன்..போன்றோர்,

வழக்கறிஞர்கள் அமர்நாத், எம்.எல்.ரவி, சிவஞான சம்பந்தன், கனகரத்தினம் , நண்பர்கள் ஜனகன், செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, சிவகுமார், மாதவரம் குமார், பாலமுருகன் ஐ.ஆர்.எஸ், மு.க.இளம்வழுதி, கதிரவன், ஆசி,கல்லூரி நண்பர் நாராயண்குமார்..என்னுடைய உறவினர்களான மாணிக்கம் மதி, அண்ணன் ஜெயச்சந்திரன்.. நண்பர் ராஜதுரையின் நண்பர்கள் வட்டாரம் ..எனப் பலர் வருகை தந்தனர். நினைவில் இருந்து எழுதுகிறேன், சில பெயர்கள் விடுபட்டுள்ளன.
Also read
எங்கள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இரண்டாம் தளத்தில் மிக அழகான கேண்டின் ஒன்றை தற்போதைய நிர்வாகிகள் உருவாக்கி உள்ளனர். அங்கு இரவு ஒரு எளிமையான டின்னருடன் கலந்து பேசி உரையாடி அனைவரும் பிரியா விடைபெற்றோம்.
சாவித்திரி கண்ணன்















அருமை. நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.. கலந்து கொண்டு முழுமையாக அறத்தின் செயல்பாடுகளை அறிந்து கொண்டேன்
அறம் ஆறாம் ஆண்டு விழா நிகழ்ச்சி குறித்து அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. பங்கேற்க வாய்ப்பில்லை. அடுத்த முறை கண்டிப்பாக பங்கு பெற திட்டமிடுகின்றேன்
நன்றியுடன், R.ஆறுமுகம் AITUC
தவிர்க்க முடியாத சூழலால் அறத்தின் அருமையான நிகழ்வையும் சான்றோர் பலரை சந்திக்கும் வாய்ப்பையும் தவற விட்டு விட்டேன்.
Aramonline.in ன் வாசகனாக தொடர்வதில் மகிழ்கிறேன்.