நாட்டில் எது நடந்தாலும் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது தான் அரசியல்வாதிகளின் இயல்பு. கரூர் பெரும் துயரில் அவரவர் அரசியலுக்கு ஏற்ப ஆதாயத்தை அள்ளத் துடிக்கின்றன அரசியல் கட்சிகள்! இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தவெகவைத் தவிர்த்த மற்ற அரசியல் கட்சிகளில் முன்னணியில் நிற்பது யார்? பாரபட்சமற்ற ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்;
எப்போது எது நடக்கும் என அனுமானிக்க முடியாததே மனித வாழ்க்கை. அதிலும் அரசியலில் எப்போது எது நடக்கும்? சூழல்கள் எப்படி மாறும் என கணிக்க முடியாது. மாறுகின்ற சூழல்களை கூர்ந்து அவதானித்து தனக்குரிய பங்கு பாத்திரத்தை சிறப்பாக முன்னெடுக்கும் அரசியல்வாதி சாதிக்கிறார். அந்த வகையில் கரூர் சம்பவத்தையடுத்த அரசியல் கட்சிகளின் வியூகங்களை, அரசியல் நகர்வுகளை உரையாடல் பாணியில் இங்கு பார்ப்போம்;
”அப்பப்பா இந்த அரசியல்வாதிகளை அனுமானிக்கிறது தான் இருப்பதிலேயே ரொம்ப ரிஸ்க்கானது. எப்ப யார் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு கணிக்க முடியலை..பாஸ்’’
”ஆமா, விஜய்யை யாராலும் கணிக்க முடியலை. பாஜக பக்கம் போவது தனக்கு பாதுகாப்புன்னு விஜய் நினைக்கிறார் என்பது பலரது அனுமானம். ஆனால், பாஜக ஆதரவு என்பது தன் இமேஜையையே பஸ்பமாக்கிடும்னு விஜய் பயப்படுவது போல் தெரியுது. ராகுல் காந்தியின் தொலைபேசி அழைப்பை எடுத்து பேசிய விஜய், அமித்ஷாவின் போனை தவிர்த்து விட்டார். தான் என்ன செய்வது? அடுத்த கட்ட நகர்வை எப்படி தீர்மானிப்பது.. என முடிவெடுக்க இயலாமல் முடங்கி போயுள்ளார் விஜய்’’
” சீமான் திடீர்னு ரூட் மாறுகிறாப்புல இருக்குதே..? ”
”இது நாள் வரைக்கும் திமுகவைத் தான் சீமான் பிரதான எதிரியாகத் தாக்கி வந்தார். இப்ப என்னடான்னா, கரூர் சம்பவத்தில் திமுக ஆதரவு நிலை, பாஜக எதிர்ப்பு நிலை எடுத்து விஜய்யை வறுத்தெடுக்கிறார். அவர் திமுக ஆதரவு நிலை எடுத்தாலும் கூட அதற்கான நியாயங்களை ஏற்றுக் கொள்வது மாதிரி வைக்கிறாரே.. ஒரே குழப்பமாக இருக்குது.”
”அவர் எந்த நிலைபாட்டை எடுத்தாலும், அல்லது மாற்றிக் கொண்டாலும் அதற்கான நியாயங்களை பேசத் தெரிந்தவர். பெரியாரை பெரிதும் ஆதரித்து பேசிவிட்டு, பின்பு கடுமையாக எதிர்த்தவர் தானே”
”அது உண்மை தான். ஆனால், கரூர் நிகழ்வு நடந்தவுடன் விஜய்க்கு ஆதரவாக பேசினார். இப்ப என்னடான்னா தடால்னு மாறிட்டார்…”

”கரூருக்கு நேரடியாக வந்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறியவர் அன்று தன் மனதின் ஆழத்தில் இருந்து பேசிய பேச்சுகள் என்ன?”
”துடைக்க முடியாத பெரும் துயரம் நடந்துவிட்டது. ஏன் நடந்தது, எப்படி நடந்தது என ஆய்வு செய்வதற்கு முன்பு, எதிர்பாராத விபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதில் யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி பெரும் துயரம் நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக தவெகவில் இருக்கக்கூடிய பிள்ளைகள், முதன்மை பொறுப்பாளர்கள், தம்பி விஜய் ஆகியோருக்கு ஆறுதலை சொல்லி கொள்கிறேன். விஜய் அனுபவமில்லாதவர். நாமெல்லாம் தான் அவருக்கு துணையாக இருக்க வேண்டும்.”
”ஆமா, அவர் மட்டுமில்லை, நாம் தமிழர் தம்பிகள் பலரும் விஜய்க்கு ஆதரவாக, திமுகவுக்கு எதிராகத் தான் அலையலையாக பாய்ந்து வந்தாங்க. உடனே அவர் சுதாரித்துக் கொண்டார்.”
”புரியலை . என்ன சுதாரிச்சுக்கிட்டார்..?”
”ஏற்கனவே தன்னோட தம்பிகளை தான் விஜய் கணிசமாக தூக்கிட்டாருன்னு கொஞ்சம் கடுப்பில் இருந்தார். இப்ப உள்ளவங்களையும் நாமே தூக்கி கொடுத்திட்டோம்னு சுதாரிச்சிருக்கலாம்.”
”அதுக்காக தன்னோட பரம எதிரியான திமுக அரசை நியாயப்படுத்தியில்லா இப்பம் பேசிக்கிட்டு இருக்கார்…’’
”கரூர் சம்பவத்தால் விஜய் பலம் பெற்று விடக் கூடாது. விஜய் பலம் பெறுவது தன் ஆதரவு தளத்தை பாதிக்குது. ஆகவே, விஜய்யை எதிர்ப்பது அவரோட கட்சி நலன் சார்ந்த முடிவாகத் தான் தெரியுது.”
”அப்ப அவர் இப்ப எடுத்த முடிவால் அவருக்கான திமுக எதிர்ப்பு ஓட்டு வங்கியை இழக்க மாட்டாரா? இது திமுகவோட அவருக்கு ஒரு மறைமுக டீலீங் இருக்கோன்னு சந்தேகத்தை ஏற்படுத்தாதா?”
”ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆனால், உடனடி நிவாரணத்தை மட்டுமே அவர் யோசிச்சு இருக்கலாம். திமுகவை கடுமையாக எதிர்த்து பேசி அதை மீண்டும் பெற்றுவிடலாம் என நினைத்திருக்கலாம்.”
”பாஜக விஜய்க்கு முக்கியத்துவம் தருவதும் சீமானுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் அல்லவா?”
”அதுக்கு ஏன் இவர் கோபப்படணும்…?”
”சீமான் தங்கள் அணிக்கு வர வேண்டும் என் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்த பாஜக, சீமானை அம்போவென்று விட்டுவிட்டதே..? புது ஆள் விஜய்க்காக பாஜகவினர் வரிந்து கட்டி வாதாடுறாங்களே..? அப்ப கோபம் வராதா?”
”நீ சொல்றதை பார்த்தால் கரூர் சம்பவத்தால் வேறு யாரைவிடவும் தானே அதிக பாதிப்புக்கு உள்ளானதாக சீமான் நினைக்கிறாருன்னு இல்ல சொல்ற…”
”கரூர் சம்பவத்தைக் கொண்டு விஜய்யை வீழ்த்த திமுக எல்லா வியூகங்களையும் வகுத்துக் கொண்டிருக்கு. அதுக்கு அதிகாரம் கைவசம் இருப்பதும் தோதா இருக்கு. இதுல பாஜகவும் தன் பங்கிற்கு ஆதாய அரசியல் செய்ய நினைக்குது. ஸ்டாலின் அதற்கு இடம் தராமல் தனி நபர் ஆணையம் அமைத்ததால் தேசிய மனித உரிமை ஆணையமும் தலையிட முடியாத நிலையை உடனே உருவாக்கிட்டார். போதாக்குறைக்கு நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணை கமிஷன் அறிவிப்பும் திமுக அரசுக்கு சாதகமாய்விட்டது. ஐயோ பாவம், பாஜக. பாஜகவின் கூட்டணி ஆசைக்கும் விஜய் மசிந்து கொடுக்கலை.”

”கரூர் சம்பவத்தின் தொடக்கம் முதலே விஜய் தனக்கான அரசியல் கடமை இதில் என்ன என்பதை அறியாதவராகவே உள்ளார். அவர் கண் முன்னே மக்கள் மயங்கி விழுந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை உடனே மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று முதலுதவி தாருங்கள், செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என விஜய் சொல்லி இருந்தால் – மிக நெருக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு மயங்கி விழுந்தவர்கள் எடுத்துச் செல்லப்பட்டு இருந்தால் – பாதிப் பேர் பிழைத்திருக்கவும் வாய்ப்புள்ளது. அவர் கரூரில் ரூம் போட்டு தங்கி நிர்வாகிகளை வழி நடத்தி பொறுப்பு ஏற்று இருக்க வேண்டும். அந்த வாய்ப்பை அவர் கோட்டைவிட்டார், திமுக பயன்படுத்திக் கொண்டது…”
”அப்ப கரூர் சம்பவத்தை ‘கெய்ன்’ பண்ணுவதில் ஸ்டாலின் தான் முன்னணியில் இருக்கார்ன்னு சொல்லு. ராஜதந்திரத்தில் தன் தந்தை கருணாநிதியையும் விஞ்சி, வெளுக்கிறார் ஸ்டாலின்.’’
”யெஸ், நிகழ்வு நடந்த நிமிடத்தில் இருந்து ஒவ்வொரு நகர்விலும் அவருடைய சாணக்கியத்தனம் கண்டு டெல்லி மேலிடமே மிரண்டு போயிருக்கு. படு வேகத்தில் செயல்படுகிறார். தான் அதிகம் பேசாமல் கூட்டணி தலைவர்களை பேச வைப்பதிலும், அதிகாரிகளை பேட்டி தர வைத்தும், ‘மெயின் ஸ்டீர்ம் மீடியாக்கள்’, அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என முன்னெப்போதும் இல்லாத வகையில் தன் ஆதரவுத் தளத்தை ‘ஸ்டிராங்காக்கி’ நிறுவி இருக்கிறார். சீமானைக் கூட தனக்கு ஆதரவாக திருப்ப முடியும்னு காமிச்சிட்டார்’’
![]()
” உண்மை தான். அதே சமயம் கரூர் சம்பவத்தால் த.வெ.கவின் அடிமட்ட நிர்வாகிகள் சிலர் அதிமுக ஆதரவை ஏற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அது தங்களை திமுகவிடம் இருந்து பாதுகாக்கும்னு நினைக்கிறாங்க. ஆக, அதிமுக ஆதாயம் அடைய வாய்ப்பிருக்கலாம் போல நிலைமை போய்க்கிட்டு இருக்கு. போகப் போகத் தான் எதுவும் தெளிவாகத் தெரிய வரும்.”
கரூர் சம்பவம் தொடர்பாக பொதுக் கூட்டங்களில் பேசும் எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுகவை கடுமையாக சாடி வருகிறார். ”கரூரில் கொடூரமான சம்பவத்திற்கு திமுக அரசு தான் பொறுப்பு. தமிழக அரசு உரிய முறையில் பாதுகாப்பு வழங்கி இருந்தால் 41 உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதி என்றுதான் திமுக அரசு செயல்படுகிறது. காவல் துறை முதல்வர் வசம்தான் உள்ளது. காவல் துறைக்கு ஸ்டாலின் சரியான முறையில் உத்தரவு பிறப்பித்திருந்தால், சரியாக பாதுகாப்பு அளித்திருந்தால் 41 பேரை நாம் இழந்திருக்கமாட்டோம். யார் யார் மீதோ பழிசுமத்தி தப்பித்துக் கொள்ளக் கூடாது. ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை ஸ்டாலின் இனியாவது உணர வேண்டும். முதல்வர் கூட்டம் நடத்தினால் ஆளே இல்லாத இடங்களில் கூட சாரை சாரையாக காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு வழங்குகிறார்கள். ஆனால், ஆயிரக்கணக்கானோர் கூடும் எதிர்க்கட்சிகள் கூடும் கூட்டங்களுக்கு ஏன் பாதுகாப்பு அளிக்கவில்லை…” என்ற பழனிச்சாமியின் பேச்சு த.வெ.க தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
Also read
”ஆக, அரசியல் கட்சிகளை பொறுத்த அளவில் எவ்வளவு பெரிய சோக நிகழ்வு என்றாலும், அதில் தங்களின் ஒவ்வொரு நகர்விலும் அவரவரவர் ஆதாயம் அடையவே காய் நகர்த்துவார்கள்.. என்பது எழுதப்படாத விதியாகும். இதை தற்போது வரை விஜய் உணர்ந்தாரா..? என்று தான் யாருக்கும் புரிபடவில்லை.”
சாவித்திரி கண்ணன்















Leave a Reply