பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தமிழக போலீசார் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று ஆம்ஸ்டிராங் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என இரண்டுமே சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிட்டும் தமிழக அரசு மறுப்பது ஏன்?
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட போது ஆற்காடு சுரேஷின் தம்பி பொண்ணை பாலு திருவேங்கடம் , திருமலை ,ராமு ,செல்வராஜ் உள்ளிட்ட எட்டு பேர் சரணடைந்தனர். அப்போது ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பலியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
இந்த வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அஞ்சலை, காங்கிரஸ், பாஜக, அதிமுக என பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 10 வழக்கறிஞர்கள், பெண்கள் என மொத்தம் 27 பேர் போலீஸாரால் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வளவு பேரை சம்பந்தப்படுத்தி இந்தக் கொலை நடந்துள்ளது என்பதும், இந்த கொலைக்கு பெரிய அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்தக் கொலையின் பின்னணியில் பணபலமிக்க ஒரு செல்வாக்கான பெருபுள்ளி இருக்கும் வாய்ப்பு இருப்பதான சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது.

இதில் தாமாக சரணடைந்த திருவேங்கடம் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். நாகேந்திரன் சிறையில் உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தார் எனச் சொல்லப்பட்டது. இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீஸார் கடந்த ஓராண்டாக தேடி வருவதாகச் சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது செம்பியம் போலீஸார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் ”இந்த வழக்கை போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை” எனக்கூறி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த தனது சகோதரரின் படுகொலை வழக்கை செம்பியம் போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை.இந்த கொலையில் பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. கொலையில் தொடர்புடைய சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை பிடிக்க தமிழக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்து வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ”இந்த வழக்கில் உடனடியாக 27 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. நீதிமன்றத்தில் விசாரணை சரியான கோணத்தில் தான் நடந்து வருகிறது” என வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, ”இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகவுள்ள ரவுடி நாகேந்திரனுடன் நெருக்கமாக இருந்த தமிழக காங்கிரஸில் முக்கிய பொறுப்பில் உள்ள தலைவரிடம் இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த வழக்கில் கைதான திருவேங்கடம் ஏன் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீஸார் தெளிவுபடுத்தவில்லை. பல உண்மைகளை மறைத்து போலீஸார் அவசரகதியில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என வாதிட்டிருந்தார்.
இருதரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நீதிபதி பி.வேல்முருகன் தனது தீர்ப்பில், ”இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியும், சிபிஐ அதிகாரிகள் அரசியல் குறுக்கீடோ, ஊடக குறுக்கீடோ இல்லாமல் சுதந்திரமாக விசாரித்து 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக இடைக்காலத் தடை கோரியும், சிபிஐ விசாரணை உத்தரவை ரத்து செய்யவும் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா அமர்வில் நீதிபதிகள், “ஹைகோர்ட்டின் சிபிஐ விசாரணை உத்தரவு நீடிக்கும்; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எந்தத் தடையும் இல்லை” என்று தெளிவுபடுத்தினர். இதனை தொடர்ந்து, ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு உத்தரவிட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்து உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ‘ உச்ச நீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சி.பி.ஐ விசாரிக்கக் கோரி’, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி இடையீட்டு மனு தாக்கல் செய்ததுள்ளார். இதைப் போலவே இந்த வழக்கில் கைதாகியுள்ள அஸ்வத்தாமனும் ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரி’ இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஆம்ஸ்டிராங் வழக்கில் தமிழக அரசை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி அறிக்கை விடுத்துள்ளார். அதில், ”தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய கொலை வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அடுத்தடுத்து திமுக அரசு முட்டுக்கட்டைகளை போடுவது கண்டிக்கத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல்வாதிகள் சிலருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை பலிகடாக்களாக மாற்றி விசாரணை வளையம் விரிவடையாமல் தடுக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, சிபிஐ விசாரணையை தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்திருப்பது வரை திமுக அரசின் அனைத்து செயல்பாடுகளும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே உள்ளன” என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
Also read
முன்னதாக சென்ற ஆண்டு, ‘ஆம்ஸ்டிராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சி, நீலம் பண்பாட்டு மையம் ஆகியவை சார்பில் எழும்பூர் முதல் வள்ளுவர் கோட்டம் வரை பேரணியும், போராட்டமும் நடத்தப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, அவரது 2 வயது மகள் சாவித்திரி பாய், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட 1,500 க்கும் மேற்பட்டோர் மீது நுங்கம்பாக்கம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது நினைவிருக்கலாம்.
இந்த வழக்கில் முறையாக விசாரணை நடைபெற்று சமரசமில்லாமல் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் பட்சத்தில் தமிழக அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருக்கும்.
அஜிதகேச கம்பளன்


















Leave a Reply