இந்தியாவின் ஆகப் பெரிய ‘அசிங்கம்’ ஒன்று அஸ்தமித்தது! அவர் பெயர் அஜித் பவார். உண்மையில் இவரை ‘POWER’ ரை இடைவிடாது பற்றிக் கொண்டிருந்த ‘பவார்’ எனலாம்! ‘அசிங்கங்களே இங்கு தொடர்ந்து அதிகாரத்தில் கோலோச்ச முடியும்’ என்பதற்கு ஆகப் பெரும் அத்தாட்சியாகத் திகழ்ந்த அஜித்பவார் குறித்து ஒரு அலசல்;
கூட்டணி மாறி,
சந்தர்ப்பவாதி,
கூச்ச நாச்சமற்ற ஊழல்வாதி ,
மானரோஷமற்ற அதிகார விரும்பி..,
துரோகத்தின் தலைமகன்,
கொள்கை கோட்பாடில்லாத அரசியலின் இலக்கணம்
என அஜித்பவாரைச் சொல்லலாம்.
நான்கு முறை மகாராஷ்டிராவின் துணை முதல்வாரான போதும், கடைசி வரை முதல்வராக முடியவில்லை.
அரசியலில் அடி எடுத்து வைத்தது தொடங்கி எப்போதும் அதிகார பதவிக்கென்றே ஆலாய் பறந்தார்.
முதன்முதலில் புனே கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்த போதே ‘கோல்மால்களின் தலைவர்’ என்று பெயரெடுத்தவர்!
இவர் வேளாண் துறை அமைச்சராக இருந்த காலம் தொடங்கி தான் மகாராஷ்டிராவின் ‘விதர்பா’வில் விவசாயிகளின் தற்கொலை ஆரம்பித்தது!
மின்துறை அமைச்சராகி மக்களுக்கெல்லாம் மின் கட்டண உயர்வெனும் ‘ஷாக் டிரிட்மெண்ட்’ தந்தார்.
மண்வளப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது மண் வளத்தை சூறையாடினார்.
சொந்த சித்தப்பாவையே, ”நீ செத்தப்பா” என்று, இவர் வச்சு செய்த துரோகச் சம்பவங்கள் ஏராளம்…!

2019_ல் காங்கிரஸ், என்.சி.பி, சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிடப்படுகிறது. அந்தச் சூழலில் இரவோடு இரவாக கட்சி தாவி, அதிகாலை பாஜக அமைச்சரவையில் துணை முதல்வரானதோடு, ‘என்.சி.பியின் எம்.எல்.ஏக்கள் தன்னையே ஆதரிப்பதாக சொல்லி’ சர்த்பவாரின் முதுகில் குத்தியவர் தான் அஜித்பவார்.
அப்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என கட்டளையிட்டது. போதுமான எம்.எல்.ஏக்களை உஷார்படுத்த முடியாததால், அஜித்பவார் மீண்டும் சரத்பவாரிடம் சரண் அடைந்தார்! உடனே, மகனை கட்டித் தழுவி அரவணைத்து, சிவசேனா அமைச்சரவையில் துணை முதல்வராக்கி அழகு பார்த்தது, சரத்பவாரின் குடும்ப அரசியல்!
நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது தெருவில் உள்ள குப்பைத் தொட்டியை நோக்கிய ஓடும் என்பது போல, மீண்டும் சித்தப்பாவிற்கு துரோகம் இழைத்து 29 எம்.பிக்களை தூக்கிக் கொண்டு ஏக்நாத் ஷிண்டேவின் ஆட்சியில் துணை முதல்வரானார்.

ராமதாஸ் அன்புமணியிடம் கட்சியையும், சின்னத்தையும் பறிகொடுத்தது போல, சர்த்பவாரும் தான் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் பெயரையும், கட்சி சின்னத்தையும் அஜித்பவாரிடம் இழந்தார். தற்போது பாஜகவின் தேவேந்திர பட்னாவிசின் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த இவர் மீது அதி பயங்கர ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாஜகவின் பரிவினால் தண்டனையில் இருந்து தப்பினார்.
இப்படி ஓயாத அதிகார ஆட்டம் ஆடிய அஜித்பவாரை காலம் கபளிகரம் செய்து விட்டது.
இதோ தற்போது விமான விபத்தில் எதிர்பாராமல் அகால மரணமடைந்த அஜித்பவாருக்கு பிரதமர் தொடங்கி பிரதான பதவியில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளும் ஆகா, ஓகோ இவரைப் போல ஆகுமா? என்று அளந்துவிட்டு அஞ்சலி செலுத்துகிறார்கள். இது தான் இன்றைய அரசியல் நிதர்சனம்!
அதே சமயம் அஜித்பவாரின் மரணத்தில் சில மர்மங்கள் புதைந்துள்ளது. இது கொலையாகவும் இருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. பவர் பாபிலிடிக்ஸ்சின் பராக்கிராமங்களில் கொலைகளை மனு தர்மம் நியாயப்படுத்துகிறதாம்!
யார் கண்டது..? மேலுலகத்தில் ஒரு அதிகார யுத்தம் வருமென்றால், அந்த ஆண்டவனையே கவிழ்த்துவிட்டு அவன் ஆசனத்தை அபகரிக்கத் தயங்காதவர் தான் அஜித்பவார்!
சாவித்திரி கண்ணன்
















பொதுவாக ஒருவர் மன்னித்து விட்டால் அவர் செய்த நல்ல அமல்களை பேச வேண்டும். அவர் செய்த பாவங்கள் குற்றங்களின் தண்டனை இறைவனின் தீர்ப்புக்கு உட்பட்டதாகும் என்று சொல்லுவார்கள். ஆனால் இத்தகைய அரசியல்வாதியின் மரணம் அவர் செய்த பாவங்கள் குற்றங்களிலிருந்து விடுதலை பெற்றுத் தந்து விடாது. ஏனென்றால் ஒரு தனி நபர் பாதிக்கப்படும் பொழுது அது அந்த தனிநபரை சார்ந்த விஷயமாகவே போய்விடும். ஆனால் இவரைப் போன்ற அரசியல்வாதிகள் செய்யும் குற்றங்கள், பாவங்கள் ஒரு சமூகத்தையும் சமூக சீரழிவையும் உருவாக்குவதால் அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது உங்கள் கருத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது.