இந்துக்களுக்கு இப்படியும் ஒரு சோதனையா…? இமயமலையில் இருக்கும் பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு இனி இந்துக்கள் சுலபத்தில் பக்தி யாத்திரை மேற்கொண்டு வழிபட முடியாது. ‘இங்கு சனாதனிகளாக இல்லாதவர்களின் சங்காத்தமே கூடாது’ என ஏகப்பட்ட விதிகள் கொண்டு வந்துள்ளார்களாம்..! இதன் பின்னணி என்ன? ;
ஆரம்பிச்சுட்டாங்க, அவங்க அதிகார ஆட்டத்தை!
எழில் கொஞ்சும் இமயமலையில் உள்ள பத்ரி நாத், கேதார்நாத் கோவில்களுக்கு இனி சனாதனிகள் மட்டும் தான் வரலாமாம்!
மற்றவர்களுக்கு மறுக்கப்படுகிறது அனுமதி என்று சொல்லமல் சொல்லி உள்ளனர்.
சனாதன தர்மம் என்பது பிராமண தர்மம் என்ற பொருளிலேயே பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. இதை விவேகானந்தருமே பல இடங்களில் பிராமண தர்மம் என்ற அடைமொழி தந்தே பேசியும், எழுதியும் உள்ளார்.
இந்த மண்ணிலே பன்னெடுங்காலமாக பல நம்பிக்கைகள் பல மதங்களாக இருந்துள்ளன. சாங்கியம், யோகம்,வைசேடிகம், பூர்வ மீமாம்சை..என்று பட்டியல் போடால் நீளும்.
பின்னர் உருவ வழிபாடுகள் பெருகிய போது உருவான மதங்கள் சைவம்( சிவ வழிபாடு), வைணவம் ( பெருமாள் வழிபாடு), சாக்யம் ( சக்தி வழிபாடு), கெளமாரம் ( முருக வழிபாடு), காணபத்யம் ( பிள்ளையார் வழிபாடு) ,செளரம் (சூரிய வழிபாடு) ஆகியவை. இவை எவற்றிலும் சம்பந்தமில்லாததே வேள்விகள், யாகங்கள் நடத்தி வானவர்களை வழிபட்ட வைதீக மதம் எனும் பிராமண மதம்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தான் இத்தனை மதங்களையும் தனித்தனியாக குறிப்பிட வேண்டிய சிரமத்திற்கு மாற்றாக இந்து மதத்தினர் என்ற நாம கரணத்தை நமக்கு சூட்டினர்.
மக்கள் மனதில் உயர்ந்தோங்கி இருக்கும் உருவ வழிபாட்டுணர்வை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளவே வேள்வி, யாகம் வளர்த்த பிராமணர்கள் கோவில்களின் அர்ச்சகர்களாக தங்களை மாற்றிக் கொள்ளும் அவதாரம் எடுத்தனர். அது முதல் அவர்கள் காட்டில் கொட்டோ கொட்டென்று மழை தான். போதாக்குறைக்கு அர்ச்சனை தட்டில் பணத்தை அள்ளிப்போட்டு சாமி, சாமி என்று எல்லோரும் சாஷ்டாங்கமாக காலில் விழுந்தனர்.
அது முதல் இந்து மதத்தின் அறிவிக்கப்படாத ஆண்டைகளாக பிராமணர்கள் இருக்கின்றனர். மற்ற சாதிக்காரர்களை அர்ச்சகர்களாக அனுமதிக்க மறுத்து இரும்புத் திரை போட்டுவிட்டனர். இவ்வளவு அனுகூலங்கள் இருந்தாலும் கூட, இவை போதாது என்று தான் தற்போது சனாதனிகளுக்கு மட்டுமே இவர்கள் சம்பந்தப்பட்ட கோவில்களுக்குள் அனுமதி என்று சண்டித்தனம் செய்கின்றனர்.

தற்போது சனாதனி என்பதற்கு இவர்களின் விளக்கமாவது;
# சநாதன தர்மத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்கள்.
# நெற்றியில் திலகம் இட்டு, மந்திரங்கள் மற்றும் சாலிசாக்களை (Chalisa) உச்சரிக்கத் தெரிந்தவர்கள்.
# இந்து மத ஆச்சாரங்களைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே கோயிலின் உட்பிரகாரங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அப்ப இதுக்கெல்லாம் பரிட்ச்சை வைப்பார்களோ..?

மேலும், இதற்கு கோயில் கமிட்டி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் விசித்திரமானது. ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட இந்த வேத மையங்களின் புனிதத்தைப் பாதுகாக்கவும், பாரம்பரிய கலாச்சார விழுமியங்களைச் சிதையாமல் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என்று முடிவெடுத்தார்களாம்!
இவர்களின் அதிகார ஆட்டத்திற்கு ஆதி சங்கரரை இழுப்பானேன்? ஆதிசங்கரர் எந்த கோவிலையும் தோற்றுவிக்கவோ, அங்கீகரிக்கவோ இல்லை. சிவலிங்க வழிபாட்டை எதிர்த்தவரே ஆதிசங்கரர். அவர் தோற்றுவித்த அத்வைதம் உருவ வழிபாட்டையே எதிர்த்ததன்றோ..?

உருவ வழிபாட்டை கடந்து சென்ற ஆன்மீகவாதியான ஆதி சங்கரர் பிரம்ம சூத்திரத்தின் விளக்கமாகத் தானே அத்வைதம் தந்தார்.
அகம் பிரம்மாஸ்மி – அகமே பிரம்மம்
தத்துவமஸி – நீயே கடவுள்
என்ற உபநிடதத்தில் உள்ளதைத் தானே சனாதனிகள் பின்பற்ற வேண்டும். கோவில்களில் சனாதனிகளுக்கு என்ன வேலை…? கோவில்கள் என்பவை தனக்குள்ளேயே இறைவனைக் காணும் ஆன்மீக ஆழம் அறியாத எளிமையாக மக்களுக்கானது. இறைபக்தி மேலோங்கியுள்ள எவரும் கோவில்களுக்கு வர உரிமையுள்ளது.
சனாதனிகள் மட்டுமே உள்ளே வர வேண்டும் என்பது பிராமண மேலாதிக்கத்தை ஏற்பவர்கள் மட்டுமே இனி கோவிலுக்குள் அனுமதி எனப்படும் அகங்கார உணர்வேயன்றி வேறல்ல…!
தற்போது சாதிகளைக் கடந்த சமூக நீதி உணர்வு மேலோங்கி வருவதால்.. முன்பிருந்த பிராமண மேலாதிக்கம் மெல்ல, மெல்ல தளர்ந்து வருகிறது. அதை தடுக்கும் முன்னெடுப்பாக முதல் கட்டமாக இந்த அதிகார ஆட்டம் தொடங்கியுள்ளது.
இப்படி இந்துக்களை பிராமண மேலாதிக்கத்திற்கு உட்படுத்த முனைவது இந்து மதத்தில் இப்போதுள்ள இணக்கத்தை சீர்குலைப்பதாகத் தான் சென்று முடியும்.
சாவித்திரி கண்ணன்























Leave a Reply