வாழா -டீன் ஏஜ் கோளாறுக்கு தீர்வு தேடும் திரைப்படம்!

-வசந்த் பாரதி

பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையை அச்சு அசலாக நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்து மிக இயல்பாக காட்சிபடுத்தி உள்ளது படம். அந்த வயதுக்கேயான சேட்டைகள், காதல், மோதல்,போதை பழக்கத்தின் மீதான ஈர்ப்பு, ஆசிரியர் கண்டிப்பு, பெற்றோர் அணுகுமுறை ஆகியவற்றை விறு,விறுப்பாகவும், சுவைபடவும் சொல்கிறது;

கடந்த 2024 வெளிவந்த வாழா மலையாளத் திரைப்படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் படமாக வசூலை வாரி குவித்ததன் வெளிப்பாடாக “வாழா” இரண்டாம் பாகம் எஸ்.ஏ.சாவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளி வந்து இந்த படமும் அரங்கு நிறைந்த காட்சியாய் ஓடிக் கொண்டிருக்கிறது.

மீசை மூளைக்கிற பள்ளி இறுதியாண்டு பருவம். பின்வரிசை இருக்கைகளின் சேட்டைகள், தோல்வியுற்ற தேர்வுகள், மற்றும் ஆசிரியர்களுடனான சங்கடமான என்கவுண்டர்கள், முதல் காதல் மலர்வது மற்றும் அது நசுக்கப்படுவது  என ஒரு தெளிவற்ற சூழலாக இருக்கின்ற பருவம் அது கேரளாவின் ஒரு அமைதியான ஊரில், அஜோ, விஷ்ணு, மூசா, விவேக் மற்றும் கலாம் என்ற ஐந்து பதின்வயது சிறுவர்கள், தாங்கள் தோற்றுபோனவர்கள்  என்று தொடர்ந்து சொல்லப்படுவதைக் கேட்டு வளர்கிறார்கள்.

அவர்களின் பெற்றோர் அவர்களை ‘வாழாக்கள்’ என்று அழைக்கிறார்கள்; இது அடிப்படையில் ‘பயனற்றவர்கள்’ என்று பொருள்படும் ஒரு கொச்சைச்சொல். அது அவர்களுக்கு வலிக்கிறது. ஆனால், அது தங்களை உடைத்துவிட அனுமதிக்காமல், அந்தச் சிறுவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் குறைபாடற்றவர்கள் அல்ல—அதற்கு வெகு தொலைவில் இருக்கிறார்கள்.—ஆனால் அவர்களின் நட்பு உண்மையானது. சிக்கல்கள் நிறைந்தது, மற்றும் இதயப்பூர்வமானது.

 

அவர்களின் தந்தையர்கள், மதிப்பெண்கள் மற்றும் தொழில் வாழ்க்கையில் அதீத ஆர்வம் கொண்ட, வழக்கமான கண்டிப்பான தந்தையர்களாக இருக்கிறார்கள். தங்கள் மகன்கள் கனவு காண்பவர்களாகவோ அல்லது சோம்பேறிகளாகவோ ஆகாமல், பொறியாளர்களாகவோ அல்லது மருத்துவர்களாகவோ ஆக வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதற்கிடையில், அந்தச் சிறுவர்கள் தங்களைத் தாங்களே இழக்காமல், பள்ளியில் எப்படியாவது தேர்வாகி விட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்கிறார்கள்—அவர்கள் விரும்புவதால் அல்ல, மாறாக அவர்களின் பெற்றோர் விரும்புவதால். அழுத்தம் அதிகரிக்கிறது. அவர்களில் சிலர் உடைந்து போகத் தொடங்குகிறார்கள். ஒருவன் மன அழுத்தத்தில் மூழ்குகிறான். மற்றொருவன் தன் அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்குகிறான். மேலும், அவர்கள் அனைவரும் தாங்கள் ஒருபோதும் கேட்காத எதிர்பார்ப்புகளின் பாரத்தை உணர்கிறார்கள். ஒரு சிறிய காதல் கதை இருக்கிறது. ஆனால் அது கூட அவர்களின் புயல் நிறைந்த வாழ்க்கையில் கடந்து செல்லும் ஒரு மேகம் போலவே உணர்த்துகிறது.

கடுமைத் தன்மை வாய்ந்த பெற்றோரின் குழந்தை வளர்ப்பு எப்படி வடுக்களை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுவதிலிருந்து வாழா திரைப்படம் பின் வாங்கவில்லை. ஆனால், அது பெற்றோரின் தரப்பிற்கும்  இடம் கொடுக்கிறது. அவர்களின் அச்சங்கள், வருத்தங்கள், சமூகத்துடனான அவர்களின் சொந்தப் போராட்டங்கள் ஆகியவற்றை காண முடிகிறது.. மெதுவாக, அவர்களில் சிலர் தங்கள் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்—முழுமையாக இல்லை, ஆனால் ஓரளவுக்கு..!

இவை அனைத்தின் மத்தியிலும், அந்தச் சிறுவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள். அவர்களின் நட்பு தான் இந்தக் கதையை ஒன்றாகப் பிணைக்கும் பசை. அவர்கள் சண்டையிடுகிறார்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், மேலும் வளர்கிறார்கள். அவர்கள் அனைவரும் வழக்கமான அர்த்தத்தில் வெற்றியை அடைவதில்லை. ஆனால் அவர்கள் அமைதியைக் காணத் தொடங்குகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த விதிமுறைகளின்படி வாழ்க்கையை வரையறுக்கத் தொடங்குகிறார்கள்.

முடிவு கசப்பும், இனிப்பும் கலந்தது. அதில் மாபெரும் வெற்றியோ, சரியான தீர்வோ இல்லை. ஒரு அமைதியான நம்பிக்கை உணர்வு மட்டுமே. ஒரு வேளை, எல்லாம் சரியாகிவிடும் என்ற ஓர் உணர்வு. மேலும், இறுதிக் காட்சிகளுக்கு இடையில், “வாழா”.  ஒரு பில்லியன் சகோதரர்களின் வாழ்க்கை வரலாறு” படத்திற்கான ஒரு குறும்புத் தனமான முன்னோட்டம், அவர்களின் கதை இன்னும் முடிவடையவில்லை என்று உறுதியளிக்கிறது.

சமீப காலமாய் கேரள திரை உலகில் டீன் ஏஜ் வயது கதை பெரும் பங்கு வகித்து வருவதை காண முடிகிறது. மஞ்சுமால் பாய்ஸ் (2024) படம் ஒரு சக தோழனை பாறை இடுக்கில் இருந்து காப்பாற்றுகிற சாகசத்தை பற்றி கூறியது. .அது கொடுத்த ஒரு உத்வேகம் தொடர்ந்து நண்பர்கள் கூட்டம்  கதை கேரளாவை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. டீன் ஏஜ் பருவத்தில் காதலும் போதையும், கவிதையும் அறிமுகமாகும். இதில் முதல் இரண்டு பிரச்சனையாய் எதிர் கொள்ளாத பதின்ம வயதினரை காண்பது அரிது.

அதிலிருந்து அவர்களை எப்படி மீட்பது என்பதை கேரள திரைப்படங்கள் அறிவுப்பூர்வமாய் அணுகி தீர்வு கூறுகிறது.   சூத்திரவாக்கியம் (2025) என்கிற திரைப்படம் யூஜின் ஜோஸ் சீராம்மல் இயக்கியது. பள்ளி இறுதியாண்டு மாணவர்களை பற்றி பேசியது இதிலும் சரி வாழா-2 படத்திலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் போதைக்கு ஆளாகிற மாணவர்களை தண்டித்து அவர்களை புதைக்குழிக்குள் தள்ளுகிற நாசகார செயலை போலீஸ் செய்யாமல் அந்த வயது கோளாரின் யாதார்த்தை உணர்ந்து மன்னித்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கின்ற நற்பணியைச் செய்கிறார்கள். இது போன்ற பாசிடிவ் மெசேஜ் மலையாள படங்களில் தொடர்ந்து பார்க்க முடிகிறது.

 

வாழா 2 திரைப்படம் வாழா முதல் பாகம் விட்ட இடத்தில் இருந்து தொடராமல் முந்தைய கதையோடு சம்பந்தமில்லாத ஒரு புதிய கதையை கூறுகிறது. ஹஷீர், ஆலன், அஜின் மற்றும் வினாயக் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். அவர்களது நடத்தையும், வகுப்புத் தோழர்களுடனான உறவுகளும் அவர்களை ஆசிரியர்களுடன் அடிக்கடி முரண்பட வைக்கின்றன.

மாணவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், போலீஸ் ஆகிய பிரிவினர் போதை கலாச்சாரத்தை அணுகும் விதம் பற்றி சுவாரசியமாகவும், பொறுப்பாகவும் பேசுகிறது படம்.

இந்த படத்தின் இன்னொரு சிறப்பம்சம் கலர்புல் கனவுகள் நிறைந்த மாணவ வாழ்க்கையில் சந்தோஷங்களே நிரம்பி இருக்கும். பின்பு எதிர்காலத்தில் அவர்கள் பல கஷ்டங்களை காணலாம். இந்த வாழா இன்னும் எத்தனை பாகம் வந்தாலும் சலிக்காமல் பார்க்கபடலாம் என்றே பலரும் கூறுகிறார்கள்!

திரை விமர்சனம்;  வசந்த் பாரதி

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time