பாராளுமன்றத்தில் அரங்கேறும் அரசியல் நாடகங்கள்…!

-சாவித்திரி கண்ணன்

தொகுதி மறுவரையறையாம்! மகளிர் மசோதாவாம்! அவரவர்  நோக்கத்திற்கு ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்! அந்த உள் நோக்கத்தை உடைத்து பார்த்தால், இவர்கள் உள்ளீடற்ற உலுத்துப் போன பிற்போக்குவாதிகள் என்பதைத் தான் இவர்களின் கடந்த காலமும், நிகழ்காலமும் நமக்கு சொல்கிறது;

ஏன் இந்த திடீர் அவசரம்..? 2023 லேயே மகளிர் மசோதா நிறைவேறிவிட்டது. ஆனால், அதை நிறைவேற்ற மறுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு முடித்த பிறகு அமல்படுத்துவோம் என்ற ஆறப் போட்டார்கள். இந்த மூன்று வருஷமாக அந்த இரண்டையும் நிறைவேற்றுவதில் எந்த முனைப்பையும் காட்டவில்லை. தற்போது ஐந்து முக்கிய மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடக்கும் நிலையில் அதிரடியாக பெண்கள் மீது பாஜகவுக்கு அக்கறை பீறிட்டுக் கொண்டு வருகிறது..!

மகளிர் இட ஒத்துக்கீடு மசோதா அரை நூற்றாண்டுக்கும் மேலாக விவாதிக்கப்படுகிறது. கால் நூற்றாண்டாக இது சபையில் அறிமுகப்படுத்தப்பட்ட போதெல்லாம் பல்வேறு சாக்கு போக்குகள் சொல்லி தள்ளிப் போடப்பட்டது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆரம்ப காலத்தில் அதிகமாக எதிர்த்த கட்சி பாஜக தான்.  பெண்கள் ஈடுபடும் அளவுக்கு அரசியல் இங்கு ஆரோக்கியமாக இருக்கிறதா? என்று ஜனசங்கம் காலத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் பாஜகவினர்.

பொதுவாக எல்லா கட்சிகளில் இருக்கும் ஆண்களுமே இந்த மசோதாவை அந்தரங்க சுத்தியோடு ஆதரிப்பவர்கள் அல்ல. ஏனென்றால், இதை 50 வருடங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டத்தில் அனைத்து கட்சிக்கும் பங்குள்ளது.

இல்லையில்லை. இதில் இடதுசாரிகளை எப்படி சேர்ப்பீர்கள்? அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இதற்கு குரல் கொடுக்கிறார்களே என்பீர்கள்?

ஆம், ஒத்துக் கொள்கிறேன். 50 வருடங்களாக மகளிர் இட ஒதுக்கீட்டை ஆதரித்து வருகிறார்கள், இடதுசாரிகள். அவர்களுக்கு இதில் ஆத்மார்த்தமான ஈடுபாடு இருந்திருப்பின் அவர்கள் தங்கள் கட்சிக்குள் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி வாய்ப்புகளை  வழங்கி இருப்பார்கள். குறைந்தபட்சம் ஓரளவேனும் கூடுதல் பெண்களுக்கு வாய்ப்பு தந்திருப்பார்கள்! தரவில்லையே. சரி கட்சி பொறுப்பிலாவது மூன்றில் ஒரு பங்கு உண்டா? 33.3சதவிகிதம் இல்லாவிட்டாலும் 20 சதவிகிதம் உண்டா? கிடையவே கிடையாது.

பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, மம்தா தலைமையிலான திரிணாமுள், ஆம் ஆத்மி, தெலுகு தேசம்..என எந்தக் கட்சியும் பெண்களுக்கு கட்சியில் உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை.

இதை நான் குற்றமாகச் சொல்லவில்லை. யதார்த்தம் இப்படி உள்ளது என்று புரிந்து கொள்ளவே சொல்கிறேன்.

பெண்கள் ஈடுபடும் அளவுக்கு அரசியல் ஆரோக்கியமாக இல்லை என்பது உண்மையே. அதை ஆரோக்கியமாக மாற்றி விட்டு பெண்களை அரசியலை நோக்கி ஈர்ப்பது என்ற முடிவுக்கு வந்தால், அது ஒரு போதும் சாத்தியப்படாது.  பெண்கள் அரசியலுக்கு வருவதால் அது ஆரோக்கியப்பட்டுவிடலாம் என்று நம்புவதா? என்றால், நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஏனென்றால், இன்று இதை நாம் விவாதிக்கவே முடியாது.

காரணம், பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். அட எப்படி இருந்தாலும் களத்தில் எதிர்கொள்ளத் தயார் என்று வீரியம் கொண்ட தலைமுறை உருவாகிவிட்டது. பெண்களின் வாக்கு வங்கியை கவர்வதற்காகவ்து இன்று மகளிர் மசோதா என்ற ஆயுதம் பாஜகவிற்கு தேவைப்படுகிறது.

அதனால் தான் பிரதமர் மோடி சபையில் உருகி, உருகி பேசினார்;

நாம் ஏற்கனவே இதை தாமதப்படுத்திவிட்டோம். காரணங்கள் எதுவாக இருந்தாலும், யார் பொறுப்பாக இருந்தாலும், இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் இதை தாமதப்படுத்தினால், இட ஒதுக்கீட்டின் இழப்பை, நாட்டின் பெண் சக்தி ஒருபோதும் மன்னிக் காது…என்று டயலாக் பேசினார்.

ஆனால், தொகுதி மறுவரையரை மசோதாவோடு இதையும் இணைத்து பேசுவதேன்?

இதற்கு ஒரே ஒரு சிம்பிள் காரணம் தான். ஆண்கள் பாதிக்கபடாதவாறு அவர்களின் தொகுதி எண்ணிக்கையை உத்திரவாதப்படுத்திவிட்டு பெண்களுக்கு தருவதை தந்துவிடலாம் என்ற தந்திரம் தான். அதாவது, ஒரு பொது நோக்கத்திற்காக எந்த ஒரு சிறு இழப்பையும் ஏற்கத் தயார் இல்லாத மன நிலை!

ஆனால், இந்த தேசம் இன்னும் எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தாங்காது.

இப்ப இருக்கிற எம். பிக்களின் எண்ணிக்கையான 544 என்பதே மிக அதிகம் தான்…! இதை 850 ஆக உயர்த்தினால், அது சபை என்ற இலக்கணத்தையே சிதைத்து சந்தையாகிவிடும்.

சந்தை என்றால் சர்ச்சைக்கும், கூச்சல், குழப்பத்திற்கு பஞ்சம் இருக்காது. இப்போதைக் காட்டிலும் இன்னும் அதிகரிக்கும்.

எம்பிக்களின் எண்ணிக்கை கூடுவதால் மக்களுக்கு நன்மை எதுவுமில்லை.

544 எம்பிக்களை கொண்ட சபையில் எல்லா எம் பிளுக்கும் பேச நேரம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பேசுவதால் பிரச்சனைக்கு தீர்வும் கிடைத்தபாடில்லை.

பாதி எம்பிக்கள் சபைக்கு சரியாக வருவதில்லை. வந்தாலும் விவாதங்களில் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) மாதச் சம்பளம் ₹1,24,000

சம்பளம் தவிர, பாராளுமன்றம் கூடும் நாட்களில் தினசரிப்படியாக ₹2,500.

தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ₹5 கோடி வரை வழங்கப்படுகிறது. ( இது பெரும்பாலும் முறைகேடாக பயன்படுத்தப் படுவதாக பல்வேறு ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.

மிகப் பெரிய பங்களா தரப்படுகிறது. இது சுமார் 1.50 லட்சம் வாடகை பெருமானமுள்ளது. இலவச தொலைபேசி, இலவச விமான பயணங்கள், இலவச ரயில் பயணங்கள்…!

இது தவிர பெட்ரோல் அலவன்ஸ் உண்டு.

இப்படி வரிசைபடுத்தி கணக்கிட்டால் ஒரு எம். பிக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ 10 லட்சம் அரசாங்கம் செலவழிக்கிறது.

இது தவிர வாழ்நாள் முழுவதும் ரூ 31,000 பென்சன்.

இவை அனைத்தும் மக்கள் வரிப்பணமே.

இந்தக் கூடுதல் சுமையை மக்கள் ஏன் ஏற்க வேண்டும். அரசுத் துறைகள் அனைத்திலும் வேலை வாய்ப்புகளை பொருளாதாரப் பற்றாக்குறை கருதி ஆட்குறைப்பு செய்யும் அரசு எம்.பிக்களின் எண்ணிக்கையை மட்டும் ஏன் அதிகரிக்க வேண்டும்…?

அரசியல் தொகுதி மறு வரையறை மசோதாவை பெரும்பாலான கட்சிகள் விரும்பவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

இதற்கான வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக 251 வாக்குகளும், எதிராக 187 வாக்குகளும் பதிவாகி உள்ளது.

நல்ல வேளையாக  மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் தான் மசோதா நிறைவேறும். ஆகவே தற்போதைக்கு நாம் தப்பித்தோம். இதை நிறைவேற்ற பாஜகவிற்கு இன்னும் 109 எம்.பிக்கள் தேவைப்படுவதால் நாம் நிம்மதி பெருமூச்சுவிடலாம்.

ஆனால், உண்மையில் தொகுதி மறுவரையால் நாம் பயந்தபடி எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படி பாதிப்பு ஏற்படுத்தும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் வராது.

தற்போது தமிழ்நாட்டிற்கு 39 எம்.பி.க்கள்

தொகுதி மறுவரையறைக்கு பிறகு 59 எம்.பிக்கள்!

நமது பிரதிநிதித்துவம் 7.18% லிருந்து 7.23% ஆகிறது.

தற்போது கர்நாடகாவுக்கு 28 இடங்கள்

தொகுதி மறுவரையறைக்கு பிறகு 42 இடங்கள்.

கர்நாடகாவின் பிரதிநிதித்துவம் 5.15% த்திலிருந்து 5.14% ஆகிறது.

தற்போது ஆந்திராவுக்கு 25 இடங்கள்

தொகுதி மறுவரையறைக்கு பிறகு 38 ஆகிறது.

அதன் பிரதிநிதித்துவம் 4.60 சதவீதத்திலிருந்து 4.65 சதவீதமாகிறது.

தற்போது கேரளாவிற்கு 20 இடங்கள்

தொகுதி மறுவரையறைக்கு பிறகு 30 இடங்கள்.

தற்போது தெலங்கானாவில் 17 இடங்கள்.

தொகுதி மறுவறைக்கு பிறகு 26 ஆகிறது.

உத்திர பிரதேசத்திற்கு 80 இடங்கள்.

தொகுதி மறுவரையறைக்கு பிறகு 120 இடங்கள்.

அதாவது சராசரியாக 50 சதவிகிதம் உயர்கிறது.

இந்த அளவுக்கு எம்.பிக்களின் எண்ணிக்கையை உயர்த்துவது நியாயமில்லை. குறைக்கவும் வேண்டாம், கூட்டவும் வேண்டாம்.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் இயங்குவோம்.எம்பிக்களின் செயல்பாட்டுத் திறன் உயராமல், அவர்களின் எண்ணிக்கை உயர்ந்து என்ன பயன்?

உங்கள் நோக்கம் உண்மையென்றால், தொகுதி மறுவரையறை செய்யாமல் மகளிர் மசோதாவை நிறைவேற்றுங்கள்…!

சாவித்திரி கண்ணன்

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time