சட்டமன்ற, நாடாளுமன்றங்களின் மரியாதை  சரிவடைகிறதா?

-க. பழனித்துரை

சுதந்திரம் பெற்ற ஐம்பது ஆண்டு காலத்திற்குள்ளேயே பாராளுமன்றமும், சட்டமன்றமும் அதிகாரங்களை இழக்க ஆரம்பித்து விட்டன. இன்று சட்டமன்றம் ஒரு சடங்காக்கப்பட்டு விட்டது. அதிகாரங்கள் அனைத்தும் அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் சென்று விட்டன; நாம் செய்கின்ற பிழை என்ன? அலசுகிறார், பேராசிரியர் பழனித்துரை;

“நவீனகால மக்களாட்சி” என்ற புத்தகத்தை லார்டு பிரைஸ் எழுதும்போது “சட்டமன்ற வீழ்ச்சி” என உலகத்தில் பல நாடுகளில் சட்டமன்றங்களும் பாராளுமன்றங்களும் வீழ்ச்சியடைவதை  படம் பிடித்துக் காட்டினார்.

அதேபோல் கே.சி.வியர் “சட்டமன்றம்” என்ற  நூலில் ஒன்பதாவது அத்தியாயமாக “சட்டமன்ற வீழ்ச்சி’’ என்ற தலைப்பில் அன்றே ஒரு அத்தியாயத்தை எழுதி  உலகக் கவனத்தை ஈர்த்தார்.

சட்டம் இயற்றுகின்ற எந்த மன்றமும்  சட்டமன்றம் என்ற சொல்லுக்கு பொருந்தும். ஆகவே நாளுமன்றத்தையும் பொதுவாக சட்டமன்றம் எனச் சொல்வது உலக இயல்பாகும்.

கூட்டாட்சி செயல்படுகின்ற  நாடுகளில் மாநில சட்டமன்றங்களும், தேசிய நாடாளுமன்றமும் ஒன்று போல் தான் இயங்குகிறது. அதிகாரங்களை கையாள்வதில் ஒன்று அதிகமான அதிகாரங்களைப் பெற்றிருக்கும் மற்றொன்று குறைவான அதிகாரங்களைப் பெற்றிருக்கும்.  அரசமைப்புச் சாசனத்தில் ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை வைத்து செயல்படும் போது ஒரே சமூகத்திலிருந்து தான் இரண்டு அமைப்புக்களுக்கும் உறுப்பினர்கள் செல்கின்றனர். எனவே, அங்கு சமூகத்தில் இருக்கும் அரசியல் கலாச்சாரத்திற்கு ஏற்ப மன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்கும் என்ற அடிப்படையில் இரண்டையும் ஒன்றாகவே ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.

இந்த இடத்தில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  பாராளுமன்ற மக்களாட்சி முறையை உலகில் கொண்டு வர பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்க நாட்டு அறிஞர்கள் எடுத்த முயற்சி அசாதாரணமானது. அப்படி அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக  இன்னும் தொடர்ந்து விரிவுபட்டுக் கொண்டேயிருக்கிறது .

அந்த மக்களாட்சி என்பது மேற்கத்திய மக்களாட்சி முறை. புதிதாக இதை கடைபிடிக்க வரும் நாடுகள் வெவ்வேறு முறைகளில் அதை நடைமுறைப்படுத்துகின்றனர். ஆனால், மேற்கத்திய நாடுகளிலேயே அந்த முறை தொய்வடைந்து வருகிறது.  அங்கும் மக்களாட்சி உயர்வதும், தாழ்வதும் நடந்து கொண்டுள்ளது. தாழ்கின்ற போது, அதை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றன, மேற்கத்திய நாடுகள்.

அந்த ஆய்வுத் தன்மை அறிவுத் தன்மை, உண்மைத் தன்மையான அணுகுமுறை நம் நாட்டில் நடைபெறுவதில்லை என்பது தான் நாம் எதிர் கொள்ளும் சவால். நம்மிடம் இருந்த மக்களாட்சியை நாம் ஆய்வு செய்வதில்லை. இவற்றையும் கடந்து இயல்பாக நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. காரணம், நாம் பல நூறு ஆண்டுகாலம் அடிமையாக வாழ்ந்தது தான்.

உலகத்திற்கு வழிகாட்டும் மக்களாட்சி நம் நாட்டிலும் ஒரு காலத்தில் செயல்பட்டுள்ளது என்பதை உத்திரமேரூர் கல்வெட்டில் புரிந்துகொள்ள முடியும். இருந்த போதும் மேற்கத்திய மக்களாட்சி முறை தான் உயர்ந்தது என்ற சிந்தனையில் அனைத்தையும் பார்க்கும் உளவியலில் நாம் உள்ளோம்.

இந்த இடத்தில் தான் வெள்ளைய அறிஞர்கள் வித்தியாசப்படுகிறார்கள். நாம் எதையும் புகழ்ந்தே பழக்கப்பட்டவர்கள். எதிலும் இருக்கக் கூடிய நிறைகுறைகளை உண்மைத் தன்மையில் பார்க்கக்கூடிய கண்ணோட்டம் நமக்குக் கிடையாது. அதன் விளைவு தான் எதையும் அறிவுப் பின்புலத்தில் பார்ப்பதை விட அரசியல் பின்புலத்தில் பார்த்து புகழ்வதையும், இகழ்வதையும் நம் செயலாக வைத்திருக்கிறோமேயன்றி, அறிவார்ந்து கருத்துக் கூறுவதில்லை.

சுதந்திரம் அடைந்த பின் நம் நாட்டில் சட்டமன்றங்களை உருவாக்கிய போது, மேற்கத்திய நாட்டில் சட்டமன்ற வீழ்ச்சி  குறித்து விவாதித்து வந்தனர். அது ஒரு பெரும் அறிவார்ந்த வாதம். அந்த விவாதம் இன்று நமக்குப் பொருந்துவதால் இதை இங்கு எழுதுகிறேன்.

மேற்கத்திய நாடுகளில் சட்டமன்றங்கள் தன் அதிகாரத்தையும், அதன் செயல்பாட்டில் உள்ள திறனையும் இழக்கும் போது இதன் விளைவு என்ன? என்ற கேள்வி எழுகின்றது.  அதற்கான பதில்; எப்பொழுது சட்டமன்றங்கள் தன் அதிகாரத்தை இழக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அமைச்சர்களின் எதேச்சதிகாரம் மேலோங்குகிறது. அதற்கு அதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பு அமைச்சரவைக்கு கிடைக்கிறது. எனவே, அமைச்சர்களின் எதேச்சதிகாரம் மட்டுமல்ல, நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் எதேச்சதிகாரமும் மேலோங்குகிறது. இதன் விளைவாக சட்ட மன்றங்களின்  செயல்பாடுகள் சடங்குகளாக மாற்றப்படுகின்றன. அப்படி அதிகாரத்தை இழந்து செயல்படுகின்றபோதும், சட்டமன்றத்திற்குள்  இடம் பெற நடைபெறும் தேர்தலின் உக்கிரம் குறையவில்லை. அந்தப் பதவிகளைப் பிடிப்பதற்கு செலவிடும் நிதி பலரை வியக்க வைக்கிறது.

சட்டமன்றங்கள் தாழ்வதன் காரணங்களை ஆய்வு செய்கின்ற போது ஒன்று சட்டமன்றங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அடுத்து  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் சட்டங்கள், கொள்கைகள் அனைத்தும் மிகவும் நிபுணத்துவம் கொண்டதாக இருக்கின்றது. அவற்றை மன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ள சிரமப்படுகின்றார்கள். ஆகையால் தான் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்தப் பணிகளை நிபுணத்துவத்துடன் செய்வதை சட்டமன்றச் செயல்பாடுகளில் பார்க்க முடியவில்லை. அந்தப் பணிகளை, அதிகாரிகளும், அமைச்சர்கள் மட்டுமே பார்க்க வேண்டி இருக்கிறது. அமைச்சர்களும் கூட அதிகாரிகளையே நம்புகின்றனர்.

அதன் விளைவாக அதிகாரிகள் தயாரித்து அமைச்சர்கள் மூலம் கொண்டு வரும் கொள்கைகளை, முடிவுகளை, சட்டங்களை, திட்டங்களை, உண்மைத் தன்மையில் ஆராய்ந்து அலசி கருத்துக்களைக் கூறுவதற்குப் பதில் கட்சியின் கண்ணோட்டத்தில் தலைவர்களின் கண்ணோட்டத்தில் பார்த்து, உறுப்பினர்கள் ஆளும் கட்சியாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும், அதற்காக தலைவரை துதி பாடுவதும், எதிர்க்கட்சியாக இருந்தால் அதை எதிர்ப்பதும் ஆளும்கட்சியை ஏசுவதும் இயல்பாக மாறி சட்டமன்றத்தின் அடிப்படைத் தன்மையே அதன் இயல்பிலிருந்துமாற்றம் பெற்று விடுகிறது. இது உலகில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற செயல்பாடுகள்.

இந்தச் சூழலில் தான் சடங்காக சட்டமன்றங்களை நடத்துவதற்குப் பதில் நாட்களைக் குறைத்து முடிவுகளுக்கு முத்திரை குத்தும் இடமாக பாராளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும் மாற்றி விட்டனர். இதில் நாம் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் அறிவுபூர்வமாக செயல்படுவதற்குப் பதில், சட்டமன்றத்திற்கு வெளியில் நடத்த வேண்டிய நிகழ்வுகளை பாராளுமன்றத்திற்குள்ளும் சட்டமன்றத்திற்குள்ளும் நடத்தும் போது ஒட்டு மொத்த மக்களாட்சியையே கேள்விக் கூத்தாக்குவது என்ற காரணத்தால், சட்டமன்ற பாராளுமன்ற செயல்பாட்டு நாட்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.

இதன் விளைவாக சட்டமன்றத்தின் மீது உள்ள ஈர்ப்பு மக்களுக்கு குறைந்து விடுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் பாராளுமன்ற சட்டமன்றங்களில் செயல்பாடுகளை தொலைக்காட்சி மூலம் மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு வந்த போதும் மக்களுக்கு அதில் ஒருவித சலிப்பே ஏற்படுகின்றது. அதே போல் சட்டமன்ற உறுப்பினர்களின் மதிப்பும் குறைகின்றன.

இதைப் புரிந்து கொண்ட உறுப்பினர்கள், சட்டமன்றத்தை அறிவார்ந்த முறையில் அணுகாமல் தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு அரசுத் துறைகள் மூலம் தீர்வு கண்டு தொகுதி மக்களை மகிழ்விக்கின்றனர். அதையும் செய்ய இயலாதவர்கள் தொகுதி மக்களின் குடும்பங்களில் நடக்கும் அனைத்து துக்க சுப காரியங்களிலும் பங்கேற்று பரிசளித்து மக்களுடன் தொடர்பில் இருந்து மறு தேர்தலுக்கு தயார் செய்து கொள்கின்றனர். இந்த எண்ணிக்கையும் கால ஓட்டத்தில் குறைந்து வருகின்றது.

மேற்கத்திய நாடுகளில் சட்டமன்றங்கள் வீழ்ச்சியை சந்திக்கின்ற போது அதை சரி செய்ய, அறிவியல் பூர்வமாக செயல்பட்டு சீர்திருத்தங்களைக் கொண்டு வருகின்றன.  அதை நிவர்த்திக்க முயல்கின்றனர். ஆனால் நம் நாட்டில் அனைத்தும் சிறப்பாகவே இருக்கிறது என்று, ஆய்வு மனப்பான்மையை ஊக்குவிக்காமல் துதிபாடுவதிலும், ஏசுவதிலும் காலத்தைக் கழிக்கின்றோம் என்பதே நிதர்சனமான உண்மை. அறிவியல்பூர்வ அணுகுமுறையில் தவறுகளை கண்டுபிடித்து திருத்தலாம். துதிபாடுவதில் அதைச் செய்ய இயலாது. அறிவியல்பூர்வமாக செயல்படும் போது அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

முதல்வரை, பிரதமரை ஆளுங்கட்சிக்காரர்கள் புகழ்வது, அவையில்  புகழ்ச்சியின் போது மேஜையைத் தட்டுவது, முதல்வரை, பிரதமரை கொச்சையாக விமர்சிப்பது, நக்கல் நய்யாண்டி செய்வது, அதேபோல் எதிர்க்கட்சித் தலைவரை பாராட்டுவது, ஏசுவது இன்னும் கூறப் போனால் சட்டையைக் கிழிப்பது, சேலையைக் கிழிப்பது போன்ற மிக மோசமான செயல்களில் ஈடுபடுவதும், அதன் காரணமாக தரம் தாழ்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு கட்சிகளில் முக்கியப் பதவிகள் தருவதுமான அணுகுமுறைகள் தான் சட்டமன்றங்களை வீழ்ச்சிக்கு உள்ளாக்குகின.

ஒரு காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது. அவர்களுக்கு அரசு அலுவலகங்களில் பெரும் மரியாதை இருந்தது. அவர்களெல்லாம் மக்கள் மீது மாறா நம்பிக்கை கொண்டிருந்தனர். அதேபோல் அவர்கள் திறன் உள்ளவர்களாகவும் சமூகச் சிந்தனை கொண்டவர்களாகவும், சமூகம் மதிக்கும் மனிதர்களாக இருந்த காரணத்தால் அரசின் அதிகாரிகள், அலுவலர்கள் அந்தக் கருத்துக்களை உள்வாங்கி முடிவெடுத்தனர்.

அது மட்டுமல்ல, ஆளுகின்ற கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரச்சினைகளின் உணமைத் தன்மையில் பேசும் போது அரசையும் விமர்சனம் செய்வதுண்டு. அதே நேரத்தில் முடிவுகள் எடுக்கும்போது அரசுக்கு ஆதரவாக இருப்பதுண்டு. இப்படிப்பட்ட உறுப்பினர்களை அரசாங்கம்  விரோதிகளாக பார்ப்பது கிடையாது. அவர்கள் விவாதத்தில் உள்ள  நற்கருத்துக்களை  எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பேச்சுக்களை காத்திரமாக தரவுகளுடன் தயாரித்து அந்தக் கருத்துக்களை  கண்ணியமாக பேசி தங்களின் மாண்பினை உயர்த்திக் கொண்டார்கள். இன்று அப்படிப்பட்டவர்களை காண்பதே அரிதாக ஆகிவிட்டது.

இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ வேண்டுமென்றால் போட்டி போட்டு ஒருவரையொருவர் தாழ்த்துவது அல்ல. முதலில் இதற்கு நம் சிந்தனைச் சூழலை உயர்த்த வேண்டும். நம் சிந்தனைச் சூழலில் சிறுமைக்கு இடம் கொடாது, உயர்ந்த சிந்தனையை உருவாக்கிச் செயல்படும்போது முதலில் நாம் உயர்வோம். அந்த உயர்வில்தான் நாம் சார்ந்திருக்கின்ற கட்சி உயரும். நம் சிந்தனை மாறி, நடத்தை மாறினால் செயல்பாட்டின் தரமும் மாறிவிடும். எனவே சட்டமன்றத்தின் செயல்பாட்டைத் தரம் உயர்த்த நாம் செய்ய வேண்டிய பணி சிந்தனைச் சூழலை மாற்றுவதுதான். அதுதான் இன்றைய தேவை.

க. பழனித்துரை

பேராசிரியர்,

காந்திய களச் செயற்பாட்டாளர்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time