பாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்!

ஓரே ஓரு காரியத்தால் இந்திய மக்களின் 90 % மான நோய்களுக்கு முற்றுபுள்ளி வைத்து மக்களின் ஓட்டுமொத்தஆரோக்கியத்தையும்மீட்டெடுத்துவிடமுடியும்!
அது நம் பாரம்பரிய எண்ணெய் பண்பாட்டை மீட்டெடுப்பது தான்! நான் கேட்டரிங் தொழிலை தேர்ந்தெடுத்ததன் நோக்கமே நம் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை மீட்டெடுப்பது தான்!

’’சாவித்திரி கண்ணா, இந்த செக்கு எண்ணெய்,தூய பசு நெய்,இயற்கை வேளாண்மையில் விளைந்த அரிசி,சிறுதானியங்கள் இதை கொண்டு மட்டும் தான் சமையல்தொழில்செய்வேன்என்றால்கட்டுபடியாகாது. ரீபைண்ட் ஆயில்,டால்டாவைக் காட்டிலும் இவை மூன்று மடங்கு விலை அதிகம்! சமாளிக்க முடியாது’’என்று எல்லோரும் அறிவுரை செய்தனர்.

ஆனால், மற்றவர்களை சிறுகச் சிறுகச் சாகடிப்தன் மூலம் தான் நான் வாழ முடியும் என்றால் அப்படி ஒரு தொழிலே தேவையில்லையே! நம் லாபத்தை சிறிது குறைத்தும், விலையை சற்றே கூட்டியும் இதை கண்டிப்பாக சமாளிக்கமுடியும் என்பது தான் இந்த நான்கு வருட அனுபவமாகும்!

எப்போது நாம் பெட்ரோலிய கச்சாப்பொருட்களிலுள்ள பாரபைன் கலப்பினால் உருவாக்கப்படும் ரீபைண்ட் ஆயில்களையும், வனஸ்பதி எனப்படும் ஒரு போதும் கரையாமல் நம் ரத்த நாளங்களில் தங்கிவிடக்கூடிய மிக ஆபத்தான டால்டாவையும் பயன்படுத்த தொடங்கினோமோ அன்று முதல் நம் ஆரோக்கியத்தின் ஆணிவேரையே அரிக்க அனுமதித்துவிட்டோம்!

ரத்தகொதிப்பு, தலைசுற்றல், நெஞ்செரிச்சல், அஜிரணகோளாறு, கேன்சர்,முட்டுவலி, மாரடைப்பு… என எல்லா நோய்களுக்கும் வித்திடுவது சொந்த மண்ணின் எண்ணெய் வித்துகளை விலக்கிவிட்டு நாம் இறக்குமதி செய்து சாப்பிடும் ரீபைண்ட் ஆயில்களே!

உலகில் வேறெந்த கலாச்சாரத்திலும் பார்க்க முடியாத அளவிற்கு எண்ணெய் வித்துகளை பயிரிடுவதிலும், அதை பயன்படுத்துவதிலும் எல்லையற்ற சிறப்பை பெற்றிருந்த தேசம் தமிழ்தேசமாகும்! ஒவ்வொரு எண்ணெய் வித்திலும் ஒவ்வொருவிதமான சத்துகளும், குணங்களும், மருத்துவக்கூறுகளும் உள்ளதை கண்டறிந்த பாரம்பரியத்தின் வழிவந்தவர்கள் நாம்!

நிலக்கடலை உற்பத்தியிலும், தேங்காய் உற்பத்தியிலும் உலகின் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்தியதேசம்! கடுகு பயிர் இந்தியாவில் 60,36,000 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. ஆனால், நாம் இப்போது நமது சமையல் எண்ணெய் தேவையில், மூன்றில் இரண்டு பங்கை இறக்குமதி செய்துவருகிறோம். அவற்றில் பெரும்பங்கு பெட்ரோலிய கச்சாவிலிருந்து பெறப்படும் ரீபைண்ட் ஆயில்கள்! மற்றவை மரபணு மாற்றப்பட்ட கடுகு மற்றும் சோயாவிலிருந்து பெறப்படும் எண்ணெய்களாகும்!

இதன்விளைவுகளே, இன்று நோயாளி இல்லாத குடும்பத்தை பார்ப்பதே அரிதாகிவிட்டது!

இந்தியா இப்போதும் விவசாயிகளின் தேசம் தான்! இங்கு எண்ணெய் வித்துகளுக்கு என்ன பஞ்சம் வந்துவிட்டது? இங்குள்ள மக்களின் தேவையை பொருட்படுத்தாமல் எண்ணெய்வித்துகளை ஏற்றுமதி செய்வதும், உடலுக்கு கேடு தரும் எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்வதும் சொந்த மண்ணின் மைந்தர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.

இருப்பதிலேயே நல்ல எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் தான்! இதில் விட்டமின் B-6, ஆண்டி ஆக்சிடெண்டான விட்டமின் E, தாதுக்களான மெக்னீசியம், இரும்பு, செம்பு, கால்சியம், துத்தநாகம் அனைத்தும் உள்ளது. இதில் உள்ள ‘Seasmin’ எனும் வேதிப்பொருள் நம் தோளை இளமையாக, பளப்பளப்பாகவைத்திருக்க வல்லது. நல்லெண்ணெய் மரச்செக்கிலிருந்து பிழிந்து எடுத்தால் தான் இந்தப்பலன்களை நாம் பெறமுடியும்! அதிலும் பனைவெல்லம் சேர்த்துப் பிழியும் போது அவ்வளவு ஆரோக்கியமாகும்!

ஆனால், தற்போது பிராண்ட் நல்லெண்ணெய் எக்ஸ்செலர் இயந்திரம் மூலம் சர்க்கரை ஆலைக்கழிவுகள் கலந்து பிழிந்து எடுக்கப்படுகிறது. இதனால் அதன் நற்குணங்களை இழந்து விடுகிறது. ஆயினும் நல்லெண்ணெய் வாசனையை மட்டும் சேர்த்துவிடுகிறார்கள்!

கடலை எண்ணெயில் புரதம் நிரம்பியுள்ளது. தேங்காய் எண்ணெயின் சிறப்பு சொல்லிமாளாது. தேங்காய் எண்ணெய் நம் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றும், இன்றைக்கும் கேரளாவில் தேங்காய் எண்ணெய் தான் பயன்பாட்டில் உள்ளது. தலைமுடியின் கேசத்தை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு நிகர் வேறில்லை. ஆனால், தரமான தேங்காய் எண்ணெய் அரிதாகிவிட்டது.

இந்தத்தலைமுறைக்கு இலுப்பை எண்ணெய் தெரியுமா என்று தெரியவில்லை. நெய்யைப்போல இருக்கும்.அந்த காலத்தில் நெய்க்கு வசதியில்லாதவர்கள் இலுப்பை எண்ணெயில் தான் பலகாரம் செய்வார்கள். ருசிக்கு ருசி!

எண்ணெய்களில் அரசனுக்கு இணையானது அரிசி தவிட்டு எண்ணெய்! இது இப்போது மிக்குறைவான பயன்பாட்டில்தான் உள்ளது. அரிசி விளைச்சலுக்கா நம் நாட்டில் பஞ்சம்? பாரம்பரிய ஞானத்திற்கு தான் பஞ்சம் வந்துள்ளது!
அரிசி தவிட்டு எண்ணெயில் வேறெந்த எண்ணெயிலும் இல்லாத அளவு ஓமேகா – 3 அதிகமாக உள்ளது. இதிலுள்ள ஓரைசனால் இதயத்திற்கு பாதுகாப்பானது. இது அதிக வெப்பத்தை தாங்கக் கூடியது. ஜப்பானிலும், சீனாவிலும் அரிசி தவிட்டு எண்ணெய் தான் அதிகப் பயன்பாட்டில் உள்ளது.

இந்தோனிஷியாவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் மாதாமாதம் 8 லட்சம் டன் என்ற அளவில் இறக்குமதியாகிறத பாமாயில் உடலுக்கு கேடாகும். இதற்கு 30% மானியம் தரும் மத்திய அரசு, இதை ரேஷன் கடையிலும் கொடுப்பது தான் கொடுமை.

கடுகு எண்ணெய் இதயத்திற்கு நல்லது. உடம்பிற்கு குளிர்ச்சி, வட இந்திய மக்கள் குறிப்பாக வடகிழக்கு மாநிலமக்கள் கடுகுஎண்ணெய் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர் .

நம்நாட்டு மக்களை நம் பாரம்பரிய எண்ணெய் பயன்பாட்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளில் அந்நியப்படுத்தி வைத்துவிட்டனர். “ஐயோ, கொழுப்பு, கொலஸ்டிரால் சாப்பிடாதே” என பயமுறுத்தி வைத்து வெளிநாட்டு ரீபைண்ட் ஆயில் மற்றும் பாமாயில்களை பழக்கப்படுத்தி உள்ளனர். விஞ்ஞானத்தின் பெயராலும், நவீன மருத்துவ உலகின் துணைக்கொண்டும் நம் பாரம்பரிய எண்ணெய் பயன்பாட்டை படுகுழிக்கு தள்ளிவிட்டனர். இது திட்டமிட்டசதி.

எண்ணெய்யைபொறுத்தவரை வெளிநாட்டு இறக்குமதி கூடாது என்று நாம் எப்போது முடிவெடுக்கிறமோ அப்போது தான் இந்திய விவசாயமும், இந்திய மக்களின் ஆரோக்கியமும் சுபிட்சம் பெறும்.

எண்ணெய் வித்துகளான எள், நிலக்கடலை, தேங்காய், ஆமணக்கு, இலுப்பை, கடுகு, வேம்பு, புன்னை, பனை, பருத்தி,சூரியகாந்தி, சோயா, அரிசி, சூரியகாந்தி, செம்பருத்தி… எல்லாமே இங்கே விளைகிறது. அவ்வளவும் ஆரோக்கியமானது. இந்திய மண்ணில் விளைந்ததை மட்டுமே சாப்பிடவேண்டும். அது தான் உடல் நலத்திற்கு உகந்தது. விவசாய வளர்ச்சிக்கும் உகந்தது.

இக் கட்டுரை நான் [சாவித்திரி கண்ணன்] எழுதி மே 16 குமுதம் மண் வாசனை இதழில் வெளியானது.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time