பாரம்பரிய உணவுகள்!

சாவித்திரி கண்ணன்

உலகிலேயே ஒரு விஷயத்திற்கு நாம் உண்மையிலேயே அத்தாரிட்டி என்று சொல்லமுடியும் என்றால் அது நம் உணவுப் பண்பாட்டிற்குத் தான்!
ஏனெனில், உணவு என்பது படிப்பறிவு சம்பந்தப்பட்டதல்ல,அது,பட்டறிவு மற்றும் பாரம்பரியம் சம்பந்தப்பட்டது.

இன்னும் சொல்ல வேண்டுமானால் அது நுண்ணுணர்வு எனும் மெய்ஞானம் சம்பந்தப்பட்டது!

உணவே மருந்தாக அனுசரிக்கக் கூடிய அளவுக்கு பல ஆயிரம் வகை அரிசி ரகங்கள்,சிறுதானியங்கள்,பயிறு வகைகள்,காய்கறிகள்,பழங்கள்,மூலிகைச் செடிகள்…ஆகியவற்றில் என்னென்ன பலன்கள், நோய் தீர்க்கும் அமசங்கள் உள்ளன என்பதை எந்தவித சோதனைக் கருவிகளும் இல்லாமல் அவர்கள் அறிந்து’அனுபவத்திலும் கைகொண்டிருந்தனர்!

இன்று ஒரே ஒரு உணவுப் பொருளில் உள்ள மருத்துவ குணத்தைக்கூட மருத்துவ கருவியின்றி நம்மால் அறிய முடியாது.

உண்ணாமலும், உறங்காமலும் உயிர்வாழும் கலையை வள்ளாலாரால் எப்படி கண்டடைந்து அனுசரிக்க முடிந்ததது! பல நூற்றுக்கணக்கான மூலிகை செடிகளின் மருத்துவ பலன்களையும் அவற்றை உண்ணும் முறையையும் அவர் எப்படி எழுதிவைத்தார். எந்த மருத்துவரிடமும் அவர் பாடம் பயின்றதில்லை! அவருக்கு மட்டுமல்ல,ஆயிரமாயிரம் மனிதர்களுக்கு நம் மரபில் இது கைவரப்பட்டதே!

சுதந்திரத்திற்கு பின்பு இங்கு ஒரு உணவு பஞ்சம் உருவானது வாஸ்த்தவம் தான்! அதற்கு காரணம் கிட்டதட்ட முன்னூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள்சுரண்டிச்சென்றதுமட்டுமல்ல,அப்படிச் சுரண்டுவதற்காக நில உடைமை முறைகளை மாற்றி அமைத்தது தான்! அதாவது,சிற்றரசர்கள், ஜமீந்தார்கள்,மிராசுதார்கள், நவாபுகள்,ராயத்துவாரிகள் ,இனாம்தார்கள்..என்று தனக்கு வரி வசூல் செய்து தரக்கூடிய ஒரு வர்க்கத்தை உருவாக்கியதே!

இதனால் உற்பத்தியில் ஐந்து அல்லது ஆறில் ஒரு பங்கை மட்டுமே விவசாயி வைத்துக் கொள்ள உரிமை கொணடவனாகவும்,மற்றவற்றை அப்படியே தர வேண்டியவனாகவும் இருந்தபடியால்,பல லட்சம் விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறியதாலும், நிலம் கைவிடப்பட்டதாலும் தான் பஞ்சம் உருவானது!

ஆங்கிலேயர்கள் ஒரு புறமும்,அதிகாரத்தைச் சுவைத்த இந்திய மேல்தட்டு வர்க்கம் ஒரு புறமுமாக வலுவாகச் சுரண்டிய சுரண்டலில் இந்தியா 30 க்கும் மேற்பட்ட உணவுப் பஞ்சத்தை சந்தித்தது என்பதை நாம் மறக்கக் கூடாது.

பசுமை புரட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட எந்த நெல்லை விடவும், அதிக உற்பத்திதரக்கூடிய சுமார் 300 க்கு மேற்பட்ட பாரம்பரிய நெல்ரங்கள் நம்மிடம் இருந்ததை இந்தியாவின் தலை சிறந்த விவசாயப் பேரறிஞர் ரிச்சாரியா ஆதாரபூர்வமாக எடுத்துச் சொல்லி வீரிய ஒட்டு ரக அரிசி ரகங்களையும்,அவை சார்ந்த ரசாயன உரங்களையும் தவிர்க்கும்படி அன்றைய விவசாய மந்திரி சி சுப்பிரமணியத்திடம் மன்றாடினார்! பலனில்லை!

ஒரு ஏக்கர் நிலத்தில் 12,000 கிலோ நெல் செங்கல்பட்டு மாவட்டத்தில் விளைந்ததாக பிரிட்டிஸ் கெஜட்டில் பதிவாகியுள்ளது! இன்று எந்த ஒட்டுரக நெல்லைக் கொண்டும் ஒரு ஏக்கருக்கு 3,000 கிலோவிற்கு மேல் விளைச்சல் எடுக்க முடியவில்லை! நிலங்கள் மலடாகி,உணவு நஞ்சானது தான் நாம் கண்ட பலன்!

எப்போது வியாபாரப் பேராசை தலை தூக்கியதோ,அப்போது முதல் பண்டங்கள் பரிவர்த்தனையும்,பயிர் பறிவர்த்தனையும் கூடவே நடந்துள்ளது. நம்மிடமிருந்து ம நாடுகளுக்கு சென்றது போல் அங்கிருந்தும் நம் நாட்டிற்கு பல வந்தன!

கேழ்வரகின் தாயகம் உகாண்டா!

உருளைகிழங்கு உருண்டு புறப்பட்ட இடம் ஐரோப்பா!

பிலிப்பபைன்சில் பிறந்து வந்ததே தேங்காய்!

மஞ்சளின் மகிமையை உணத்திய மண் சீனம்!

கொய்யாவை கொய்து வந்தததுபெரு தேசத்திலிருந்து!

அதே போல் இங்கிலீஸ் காய்கறி என்று சொல்லப்படும் கேரட்,பீன்ஸ், முட்டைகோஸ், பீட்ரூட், காளிபிளவர் உள்ளிட்ட பல காய்கற்கள்.. நம் உணவுக் கலாச்சாரத்தோடு  பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்துவிட்டன!

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்,அங்கிருந்துவந்த இந்த இயற்க்கையின் கொடைகளை நாம் நம் உணவு பண்பாட்டோடு இசைவான முறையில் பொருத்திக் கொண்டோமேயல்லாமல் வெளி நாட்டார் போலவே அதை சமைத்து உண்ணவில்லை!

இன்றென்ன நிலைமை? பரோட்டா,நாண்,பீட்சா, பர்க்கர், பிரைடு ரைஸ்,  நூடுஸ்,சமோசா,பப்ஸ், வித விதமான கிரீம் கேக்குகள்…என்னென்னவோ பெயர் தெரியாத உணவுகள்…! எனவே பெயர் தெரியாத வியாதிகளும் சேர்ந்தே வருகின்றன!

விவசாயத்தில் பயன்படுத்தக் கூடாத விஷங்கள் பயன்படுத்தப் படுவது போலவே, சமையலிலும் அஜுண்மோட்டோ, நைஸ் உப்பு, ரீவைண்ட் ஆயில்,டால்டா,மைதா, வெள்ளைச் சீனி,சத்தில்லாத பாலீஸ் செய்யப்பட்ட பாரம்பரியமில்லா அரிசி..போன்றவற்றை பயன்படுத்துகிறோம்! இவை இல்லாத ஒரு உணவு சாத்தியமே இல்லை என்று பாமரத்தனமாக நம்ப வைக்கப்பட்டுள்ளோம்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time