தமிழகமும்,இந்தியாவும் இதற்கு முன்பில்லாத நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் நிலையில் திமுக என்ற எதிர்கட்சி ஆக்கபூர்வமாக செயல்பட்டு களம் காண வேண்டும் என்று தமிழக மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால்,அந்த கட்சி இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை! இன்றைக்கு நடக்கும் பொதுக் குழு கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக 82 வயது துரைமுருகனும்,பொருளாராக 80 வயதை தொடவுள்ள டி.ஆர் பாலுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. அந்தக் கட்சி முதியோர்களின் கூடாரமாகவே தொடர வேண்டுமா? என்பது தான் கட்சியில் இருப்பவர்கள் மற்றும் கட்சி அபிமானிகள் மத்தியில் ஒரு விவாதப் பொருளாகியுள்ளது.
ஏற்கனவே தலைவராக உள்ள ஸ்டாலின் தோற்றத்தில் பொலிவாக இருந்தாலும் அவருடைய வயது 67. அவருக்கு பலம் சேர்க்க வேண்டிய பதவியில் உள்ளவர்கள் இவ்வளவு முதியோர்களாக இருந்தால் எப்படி அந்தக் கட்சியை இன்று வேகமாக கொண்டு செலுத்த இயலும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
துரைமுருகன் ஏற்கனவே பல உடல் உபாதைகளால் அல்லல்படுபவர்.அடிக்கடி அப்பல்லோவில் அட்மிட்டாகி சிகிச்சை பெறுபவர்! ஒன்பதாவது முறையாக எம்.எல்.ஏவாக இருப்பவர்.சட்டமன்றத்தில் எதிர்கட்சித் துணைத் தலைவர்.அக் கட்சி ஆட்சிக்கு வந்தால் முக்கிய அமைச்சராகவும் வாய்ப்புண்டு! அப்படியிருக்க, இந்த முதிய வயதில் கட்சியில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவியை அவர் எப்படி சுறுசுறுப்பாக கையாளமுடியும்? எவ்வளவு மாவட்ட ஒன்றிய,வட்டார செயலாளர்களை கையாள வேண்டும்…வழி நடத்த வேண்டும்? சிக்கல்களை தீர்க்க வேண்டும்? நிச்சயமாக இதற்கான ஆற்றலோ, அணுகுமுறையோ அவரிடம் இல்லை. அவரே விலகி நல்ல திராவிட சித்தாந்த பின்புலமுள்ள இளையவருக்கு வழி விட்டிருந்தால் அது கட்சிக்கு பெரிய நன்மையாக இருந்திருக்குமே…!
இன்னொரு வகையில் பார்த்தாலும் இந்த பொதுச் செயலாளர் பதவிக்கு அழகும்,அர்த்தமும் சேர்த்த பேரறிஞர்.அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரிடமிருந்த சித்தாந்த தெளிவையோ, அவற்றை எளிய மனிதனுக்கும் புரியும் வண்ணம் பேசி, திராவிட உணர்ச்சியை தட்டி எழுப்பும் ஆற்றலையோ இவரிடம் எதிர்பார்க்கமுடியாது.
சரி அதை விடுங்கள் இன்றைய மதவாத ஆபத்துள்ள காலகட்டத்தில் பாஜகவிற்கு பதிலடி தரும் வண்ணம் இவர் பேசியது என்ன? இந்த அபாயமான காலகட்டத்திற்கு திமுக போன்ற ஒரு கொள்கை பிடிப்புள்ளவர்கள் நிறைந்துள்ள கட்சிக்கு இவர் பொதுசெயலாளராகும் தகுதி படைத்தவரா? என்பது தான் என் பிரதான கேள்வி!
சட்டமன்றத்தில் கூட இவர் அதிமுகவிற்கு அனுசரணையாகவே பல நேரங்களில் பேசிவருவதையும்,ஆளும்கட்சி உறவில் தன் வியாபார,பொருளாதார நலன்களை உறுதிபடுத்துபவராகவுமே இவர் உள்ளார்!
Also read
பாராளுமன்ற தேர்தலில் பணவிநியோகம் செய்து மாட்டிய வகையில் தப்பித்துக் கொள்ள பாஜகவிடமும் அனுசரணையுடன் நடப்பவராகவே உள்ளார். ஆக,இப்படியானவர்கள் திமுகவின் கொள்கை முடிவை எடுக்கும் ஆகப்பெரிய தலைமை பீடத்திற்கு தகுதியா? அல்லது அதன் சரிவுக்கு சகாயமாக இருப்பாரா? என்று பார்க்க வேண்டும்.
கட்சியில் சீனியர் என்பதாலேயே ஒருவருக்கு முக்கிய பதவி தந்தேயாக வேண்டுமா? என்ற கேள்வி டி.ஆர்.பாலு விஷயத்திலும் வருகிறது. ஆறாவது முறையாக எம்.பியாக உள்ளார். இன்றும் திமுக பாராளுமன்ற குழுவின் தலைவர். டெல்லியில் பாஜக அரசுக்கு எதிராக களமாட வேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் கட்சியிலும் முக்கிய பதவிக்கு ஆசைப்படுகிறார். டி.ஆர்.பாலு ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். கிங் கெமிக்கல்ஸ்,டிஸ்டிலரிஸ்,ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட பல தொழில்களை செய்பவர். துரைமுருகனும் கல்லூரி உள்ளிட்ட காசுபுரளும் தொழிலில் இருப்பவர்! இப்படி பணபலம் உள்ளவர்களுக்குத் தான் இன்று பதவிகள் கிடைக்கும் போல!
கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வருபவர்கள் ஆட்சித் துறை சம்பந்தப்பட்ட பொறுப்புகளில் இல்லாத வகையில் கட்சிக்கு முழு நேரமாக தங்களை கொடுக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கினால் தான் அந்தக் கட்சி வளரும்.
கொள்கை உறுதிப்பாடு,செயலாற்றல்,சிந்திக்கும் திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து கட்சியின் முக்கிய தலைமை பதவி தரப்படுவதில்லை போலும். முதலில் இது போன்ற கட்சிப் பதவிகள் தரப்படுவதாக இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு பொதுக் குழு உறுப்பினர்களின் ஏகோபித்த
ஆதரவில் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் கனிய வேண்டும்!
அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் திமுக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்த போதும் அவர்தம் குடும்ப வாரிசுகளை அதிகாரத்தின் பக்கம் நகர்த்தவில்லை. திமுக பொருளாளராக இருந்தவர்களில் எம்.ஜி.ஆர், சாதிக்பாட்சா ஆகியோரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசியல் வாய்ப்பு தேடவில்லை.
ஆனால், கருணாநிதி தலைவராக இருந்தபோது அவர் மகன் இளைஞரணிச் செயலர், பொருளாளர், மேயர், அமைச்சர், துணை முதல்வர். மற்றொரு மகன் அமைப்புச் செயலர், மத்திய அமைச்சர். மகள் மகளிரணிச் செயலர், நாடாளுமன்ற உறுப்பினர்.
ஸ்டாலின் தலைவராக உள்ள இன்றைய காலத்தில் அவர் மகன் இளைஞரணிச் செயலர். பொதுச்செயலர் துரைமுருகன் மகன் நாடாளுமன்ற உறுப்பினர். பொருளாளர் பாலுவின் மகன் சட்டமன்ற உறுப்பினர். அதிகாரம் படைத்தோரின் குடும்ப வளர்ச்சியே முதன்மை எனும் கொள்கைக்கு மாறிவிட்ட ஒரு கட்சியில் பொதுநலனைத் தேட முயலுதல் வீண்.
It’s reality and the fact. Prasanth only can change.
முதியோர் இல்லமாக மாறுகிறதா திமுக?
வாழ்த்துக்கள்
அருமையான செய்தி
தி.மு.க.வின் முக்கிய பொறுப்புகளுக்கு யார் வரக் கூடாது என்பது முதலில் முடிவு செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு பதவிக்கு வந்தது ஆச்சரியம் கிடையாது. ஏன் என்றால் ஸ்டாலின் முகத்தை பார்த்து செயல்பட வேண்டியவர்கள். ஆனால் இவர்களுக்கு இடையே தாங்கள் ஏன் மதவாத அமைப்பான பா.ஜ.க. என குறிப்பிட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. அ.இ.அ.தி.மு.க.வுடன் மல்லு கட்ட வேண்டும் எனவே தயவு செய்து தேவையில்லாமல் பா.ஜ.க. வை இழுக்க வேண்டாம்
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்காத வரை தி.மு.க. வில் வயதானவர்களை ஒதுக்க வேண்டும் என்றால் அந்த இடத்திற்கு அவர்களின் வாரிசுகள் தான் வருவார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் இந்த முடிவு
எடுக்கப்பட வேண்டிய கட்டாயத்தில்தான்
எடுக்கப்பட்டிருக்கிறது. வரும் சட்டமன்ற
தேர்தலுக்குப்பிறகே தி.மு.க வின் நடவடிக்கைகள் தெளிவுப்பெறும் என நினைக்கிறேன்.